Wednesday, May 17, 2006

9. THE COMPANY OF WOMEN

மொழி : ஆங்கிலம்
வெளியான ஆண்டு : 1999
வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhi
புத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்
--------------------------------------------------------------

















நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு இவரைப்பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்கும்)

எனவே நேரடியாகப் புத்தகத்திற்கு வரலாம். குஷ்வந்த் சிங்கின் புத்தகங்கள், பெரும்பாலும் அரசியல், மதங்கள் போன்ற விஷயங்களை விமர்சனம் செய்வதாக அமைந்திருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்புத்தகம் அரசியலை மட்டும் விட்டு விட்டு, காதல், காமம், மதங்கள், நம் கலாச்சாரம் என பலவற்றைத் தாக்கி இருக்கின்றது.

இது ஒரு நாவல். மோகன் குமார் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை மூன்று பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் ஆகி 12 வருடங்களுக்குப்பிறகு, மனைவியையும் 2 குழந்தைகளையும் விவாகரத்து மூலமாகப் பிரியும், டெல்லியில் வாழும் சுமார் 40 வயதான ஒரு தொழிலதிபர் மோகன்குமார் என்பதாகத் தொடங்குகிறது கதை. மனைவியின் பிரிவுக்குப் பிறகு கிடைக்கும் தற்காலிகத் துணைகளின் மூலமாக, எப்படி தன் தனிமைக்கும், பாலுணர்வுகளுக்கும் மருந்து தேடிக் கொள்கிறார் என்பதாகக் கதை தொடர்கிறது.

இடையில், தன் இளமைப்பருவத்தைப் பற்றி மோகன் குமாரே சொலவது போல் அமைத்திருக்கிறார் ஆசிரியர். 20 வயது வரையில் இந்தியாவில் தன் ஒரே உறவான தந்தையுடன் வாழும் மோகன், தன் திறமையால் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்து செல்கிறார். அங்கே அவருக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக நிகழும் மாற்றங்கள் என்று பல விஷயங்களை அடுக்கிச்செல்கிறது கதை.

அங்கே அவர் முதன்முதலில் உடலுறவு கொண்ட கருப்பினப்பெண், பாகிஸ்தான் நாட்டுப் பெண் என்று பலருடனான தன் அனுபவங்களை வெட்டவெளிச்சமாக விளக்கி நாடு திரும்புகிறார் மோகன். பிறகு திருமண வாழ்க்கை, முதலிரவு, தேன் நிலவு, குழந்தைகள் என்று சரளமாக ஓடுகிறது கதை.

மீன்டும் மணமுறிவுக்குப் பிறகான நிகழ்காலத்தில் வரும் பெண்கள், அவர்களுடனான உறவு, மும்பையில் உறவு கொள்ளும் ஒரு விலைமாது, கடைசியாக எய்ட்ஸ், மரணம் என்பதாக முடிகிறது கதை.

சரி! இனி கதையைக் கொஞ்சம் வெளியிலிருந்து அலசுவோம். பாலுணர்வைத் தூண்டக்கூடிய பகுதிகள் புத்தகம் முழுதுமே உண்டு! இந்தப் புத்தகத்தை எழுதும் போது குஷ்வந்த் சிங்கிற்கு 80 வயதுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இப்புத்தகத்தின் முகவுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

"As a man gets older, his sex instincts travel from his middle to his head. What he wanted to do in his younger days, but did not because of nervousness, lack of response of oppurtunity, he does in his mind"

உன்மைதான்!

சரளமான ஆங்கிலம். நான் படித்தப் புத்தகங்களில் மிக எளிமையான ஆங்கிலத்தைக் கண்டது இதில்தான்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக, எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன என்று சொல்லி இருக்கிறார். 20 வயது வரை படிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்த ஒருவன், சில மாதங்களிலேயே தன்னை விட ஒரு வயது மூத்த கருப்பினப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்பது முகத்திலடிக்கும் உண்மையாக இருந்தது.

யாஸ்மீன் என்னும் பாகிஸ்தான் பெண்ணுடனான் அவன் உறவு கொஞ்சம் வித்தியாசமானது. இவன் வயது இருபதுகளின் ஆரம்பம்! அவள் வயது முப்பதுகளின் முடிவு! கல்லூரி வகுப்பில் மதங்களைப் பற்றிய விவாதத்தில், இந்துத்துவத்தைத் திட்டிப் பேசும் இந்தப் பெண்ணுடன் மோதலில் தொடங்கும் இவன் அனுபவம், காதலில் அல்ல, காமத்தில் முடிகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு மோகன் தரும் தீர்வு மிகவும் வித்தியாசமானதுதான்!

விவாகரத்திற்குப் பிறகு, தனக்குத் தற்காலிகத் துணை வேண்டும் என விளம்பரம் கொடுக்க, வரிசையாக வந்து சேர்கிறார்கள் சரோஜினி என்கிற ஒரு பேராசிரியரும், மோலி என்கிற ஒரு பெண்ணும்!

பெண்களுடனேயே வாழ்ந்து முடிக்கும் மோகனின் இன்னொரு புறமும் வித்தியாசமாகவே இருக்கிறது! குழந்தைகளிடம் அன்பு, வியாபாரத்தில் வெற்றி, தோட்டத்தில் சிறு நீர் கழிப்பது, தகப்பனார் மீதான மாறாத அன்பு, தினம் செய்யும் சூரிய நமஸ்காரம், காயத்ரி மந்திரம், அடக்க முடியாத உடல் இச்சை என்று மோகன் என்ற தனி மனிதனின் பன்முகத்தன்மையைக் காட்டி இருக்கிறார் குஷ்வந்த் சிங்.

படிப்பது கொஞ்சமாவது பயன்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தைத் தவிர்க்கலாம். Just for Fun என்று நினைப்பவர்களும், எந்தப் புத்தகத்திலும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்ற(என் போல்) நம்பிக்கை இருப்பவர்களும் இதைப் படிக்கலாம்.

-சேரல்

Tuesday, May 16, 2006

8. INTERPRETER OF MALADIES

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர்.

புத்தகம் : Interpreter of maladies
ஆசிரியர் : Jhumpa Lahiri (வங்காள எழுத்தாளர்)
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.235

சிறப்பு : 2000ம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் மற்றும் நான் சம்பாதித்து முதலில் செய்த செலவு
------------------------------------------------------------------------------















வழக்கம்போல், ஆசிரியரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, உங்களைச் தெரிந்துகொள்ள விடாமல் செய்ய, நான் விரும்பவில்லை.

11 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பொதுவாக, எந்த மொழியிலுமே நான் சிறுகதைகள் படிப்பதில்லை. சரி, புலிட்சர் பரிசு வாங்கிய ஒரு புத்தகத்தைப் படித்தோம் என்ற பெருமையாகச் சொல்லிக் கொள்ளத்தான், இப்புத்தகத்தை வாங்கினேன். இன்னொரு காரணம், இதன் அருமையான, வித்தியாசமான தலைப்புதான் - "பிணிகளை விளக்குபவர்". எனக்குப் பிடித்த, சில கதைகளைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.



























Halder என்ற ஒரு கதையில், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருத்தி , ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், எப்படி எல்லாம் நடத்தப்படுகிறாள் என்று நன்றாக சொல்லி இருப்பார். தமிழில்கூட இதுபோல பலகதைகள், நான் வார இதழ்களில் படித்து உள்ளேன். சாகித்திய அகாடமி விருது வாங்கிய ஒரு தமிழ் எழுத்தாளர்கூட, இதுபோல ஒரு கதை எழுதி இருக்கிறார். ஆனால், எல்லா கதைகளிலும் ஒரே முடிவுதான்; சொல்லப்படும் சூல்நிலைகள்தான் வித்தியாசப்பட்டன. அனால், இந்த Halder கதையில், அப்பெண் யாரோ ஒருவனால் கற்பமாக்கப்பட்டபின்கூட, கதை முடியாமல் இருப்பதுதான், ஆசிரியரின் எழுத்துத் திறமை. புத்தகத்தின் ஆசிரியர் என்ற ஒரு பெண், இன்னொரு பெண்ணை நன்கு புரிந்து எழுதி இருந்தார்.

இன்னொரு கதையில், அமெரிக்காவிற்கு வாழ்க்கைப்பட்டு போன, அதிகம் படிப்பறிவு இல்லாத ஒரு பெண்ணின் மனநிலையை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்த கதை, புத்தகத்தின் தலைப்பிலேயே அமைந்த "Interpreter of maladies" என்ற கதைதான். ஒரியா மொழி தெரியாத ஒரு டாக்டரிடம், ஒரியா மொழி பெயர்ப்பாளராக பணியாற்றும், மொழிகள் தெரிந்த ஓர் ஏழையின் கதை இது. இப்போது புரிகிறதா, தலைப்பின் அர்த்தம்? தமிழில், எஸ்.ராமகிருஷ்ணனின் தலைப்புகள் போல, சும்மா நச்சுன்னு! டாக்டரிடம் வேலை இல்லாத நேரங்களில், சுற்றுலாப் பயணிகளுக்கு மொழிபெயர்த்து சம்பாதிக்கிறான். நாற்பது வயதிலும், மனைவியின் முழங்காலைக்கூட பார்த்திராத, ஓர் அப்பாவிக் கணவன் அவன்.

அவனுக்குள் பல நாட்களாக காமம், வடிகால் தேடி தழும்பி வழியக் காத்திருக்கும் நேரத்தில், சுற்றுலா வரும் ஒரு தம்பதிக்கு பூரி ஜெகன்நாதர் கோவிலைச் சுற்றிக் காட்டுகிறான். பேச்சுவாக்கில், அப்பெண் தனது கணவனுக்கு ஏற்கெனவே துரோகம் செய்தவள் எனவும், இவன் மனைவி இருந்தும் சந்யாசி எனவும் தெரிய வருகிறது. இருவரும், தங்களுக்குள் ஒருமுறை உடலுறவு கொள்ள தீர்மானிக்கிறார்கள். சந்தர்ப்பமே கிடைக்காமல், கனவுகளிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டு, 100 நாட்கள் தாண்டி ஓடும் பல தமிழ் திரைப்படங்களைப் போல் அல்லாமல், செக்ஸ் என்பதில் பல்வீனமாய் இருந்தாலும், அதைவிடப் பல பலவீங்கள் மனிதனிடம் உண்டு. அப்பலவீனங்களின் முன், நடைமுறையில் செக்ஸ் என்ற பலவீனம் தோற்றுத்தான் போகிறது என்ற அற்புதமான உண்மையைச் சொற்களில் சொல்லாமல், காட்சிகளில் சொல்லி, கதையை முடிக்கிறார் ஆசிரியர். பிணிகளை விளக்குபவன் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறான். இவன் பிணிகள் மட்டும் யாருக்கும் விளக்கப்படாமல் போகின்றன.

Interpreter of maladies - ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிவசப்பட வைக்காத ஓர் அமைதியான புத்தகம்.

-ஞானசேகர்

Monday, May 08, 2006

7. TEN DAYS THAT SHOOK THE WORLD

புத்தகம் : Ten days that shook the world
ஆசிரியர் : John Reed
மொழி : ஆங்கிலம்
--------------------------------------------
ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளர் (புத்தக ஆசிரியர்தான்), ரஷ்யப் புரட்சி காலத்தில், லெனின் தலைமையில் ஆட்சி அமையும் வரையுள்ள பத்து நாட்களில், ரஷ்யாவில், குறிப்பாக பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களில் என்ன நடக்கிறது என்பதைத் தனது பத்திரிக்கைக்கு அனுப்ப செய்தி சேகரிக்கும்போது ஏற்படும் அனுபவங்களே இப்புத்தகம்.

ஆசிரியர் முதல் பாதி பெட்ரோகிரேட் நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை விளக்குகிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எனக்கு ஒன்றும் ஞாபகமில்லை. இரண்டாம் பாதியில் மாஸ்கோ நோக்கி பயணிக்கிறார். இதில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட அடையாளச் சீட்டில், அவரைப்பற்றி ரஷ்ய மொழியில் எழுதியிருக்க, இவர் மொழிதெரியாத படைவீரர்களிடம் மாட்டிக்கொள்ள, இவரைச் சந்தேகத்தின் பேரில் கொல்லப்போவார்கள். அப்புறம் ரஷ்ய மொழி தெரிந்த ஓரு ஆள் காபாற்றுவார்.

ஒரு பட்டதாரி வாலிபனுக்கும், ஒரு படிக்காத விவசாயிக்கும் நடக்கும் லெனின், கன்யூனிஸம் பற்றிய வாக்குவாதங்கள் ஒரு பக்க அளவிற்கு அனல் பறந்தது. புத்தகம் முழுவதும், லெனின் ஒரு ஜெர்மானியர் என்ற வாதம் அடிக்கடி தலைதூக்கியது.

"கன்யூனிஸம் என்ற கொள்கை, ஓர் இடத்தில் துளிர்விட்டால் போதும்; அண்டை நாடெல்லாம் பரவிவிடும். அதேபோல், ஓர் இடத்தில் அழிந்தால் போதும்; அண்டை நாட்டில் எல்லாம் அழிந்து போகும்"
என்றும்,
"ஒரு நாடு பொருளாதார மறுமலர்ச்சி காணாமல், அரசியல் மறுமலர்ச்சி காண முற்பட்டால், ரஷ்யா போல துண்டாகித்தான் போகும்"
என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இரண்டாம் கருத்தைப் புரிந்து கொள்ளத்தான் இப்புத்தகம் படித்தேன்.

ரஷ்யாவைப் பற்றி எனது முதல் புத்தகம் இது. ஆள் பெயர் எது, இடப்பெயர் எது, அமைப்புப் பெயர் எது என்று நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் போனேன். முழுக்க முழுக்க பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களையே சுற்றிவரும் இக்கதை, எப்படி உலகையே உலுக்கியது என்பது என் சிற்றறிவுக்கு விளங்காமல் போனதும் உண்மைதான்.

-ஞானசேகர்

Tuesday, May 02, 2006

6. THE ALCHEMIST

புத்தகத்தை வெளியிட்டோர் : Harper Collins Publishers, New Delhi (இந்தியாவில்)
புத்தகம் வெளியான ஆண்டு : 1988 ( எந்த மொழி என்று தெரியவில்லை)
1993 (ஆங்கிலத்தில்....)
1998 (இந்தியாவில்)
புத்தகத்தின் விலை : 195 ரூபாய்கள்
--------------------------------------------------------------------------------
வெகு சில ஆங்கிலப் புத்தகங்களையே படித்த அனுபவமுள்ள நான், இந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்ய தகுதியானவன் என்று எனக்கு தோன்றவில்லை. என்றாலும் எனக்குப் பிடித்துப் போய்விட்ட இந்தப் புத்தகம், என் போன்ற ரசனை உள்ளவர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தைப் பற்றிச் சில கருத்துகளை மட்டும் எழுதுகிறேன்.

புத்தகத்தை எழுதியவர், Paulo Coelho. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் Alan R. Clarke.

Paulo Coelhoவைப் பற்றி....
-------------------------------------



















பிரேசிலில் வாழ்ந்து வருகிறார். தத்துவார்த்தமான கதைகளை எழுதி பெயர் பெற்றவர். இன்னும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே செல்லவும்....
http://www.paulocoelho.com.

புத்தகத்தைப் பற்றி.....
-----------------------------
















இது ஒரு நாவல். எந்த காலத்திய கதை என்பது சொல்லப்படாத, தேவைப்படாத ஒன்று. கொஞ்சம் யதார்த்தத்தை மீறி, தத்துவங்களோடு பின்னிப்பிணைந்து செல்லும் கற்பனைக்கதை இது.

ஸ்பெயின் நாட்டில் வாழும் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், தன் கனவில் வந்த புதையலைத் தேடி எகிப்தில் இருக்கும் பிரமிடுகளுக்குச் செல்கிறான். இதுதான் கதையின் சுருக்கம். ஆனால் 176 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதைக்குள் மனித வாழ்க்கையையே அலசி ஆராய்ந்து விடுகிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு பகுதியை முடிக்கும்போதும் எத்தனையோ கேள்விகள், எத்தனையோ பதில்கள், நமக்குள். விடை தெரிந்திராத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் அதே வேளையில் பல புதிய கேள்விகளும் கருக்கொள்கின்றன.

தன் பயணத்தின்போது அந்தச் சிறுவன் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள் அவனைப் பல விதத்திலும் பாதிக்கிறார்கள், நம்மையும்தான். இடையில் வரும் மாயாஜாலம் போன்ற பகுதிகளைக் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

இதைப் படித்த பிறகு பாதுகாப்பான, அமைதியான, ஆபத்துகளற்ற, சுவாரஸ்யங்களற்ற நம் வாழ்க்கை முறை மீது கோபமே ஏற்படுகிறது. நம் மீது திணிக்கப்பட்ட இந்த விஷயங்களிலிருந்து மீண்டு வருவது எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியவில்லை.

யதார்த்தத்தை மட்டுமே விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகத்தில் அதிகமாக எதுவும் கிடைத்துவிடாது என்றும் சொல்லலாம். ஆனால், கொஞ்சம் கற்பனையை ஓரமாகத் தள்ளிவிட்டு உள்ளிருக்கும் விஷயங்களை மட்டும் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்குக் கிடைக்க நிறைய இருக்கிறது.

-சேரல்