Saturday, October 30, 2010

69. FOLLOWING FISH

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

கடல்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
- வைரமுத்து (தண்ணீர் தேசம்)


-----------------------------------------------------------------------
புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)
ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin books
முதற்பதிப்பு : 2010
விலை : 250 ரூபாய்
பக்கங்கள் : 167 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------------

சுயமாக சமையல் செய்யவேண்டிய காட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது மீன்குழம்பும் மிளகுரசமும் மட்டும் வைக்கக் கற்றுக்கொண்டவன்; வருடத்திற்கு ஒருமுறை இரவெல்லாம் பயணித்து வங்கக்கடல்போய் மீனும் இறாலும் மட்டுமே சாப்பிட்டுவிட்டுத் திரும்புபவன்; கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு - முட்டம், தனுஷ்கோடி, கேரளாவில் வாஸ்கோடகாமா முதலில் கால்பதித்த கப்பாடு போன்ற கிராமங்களைத் தனியாகவே சுற்றித் திரிந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை முதலில் பார்க்கும்போது புரட்டிப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. சின்ன மீனிலிருந்து பெரிய படகுவரை பட்டியலிடப்பட்டிருந்த பொருளடக்கத்திலும் உள்படங்களிலும் ஈர்க்கப்பட்டு வாங்கிவிட்டேன்.

மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், கூர்ச்சரம் (Gujarat) என இந்தியக் கடற்கரையோரங்களில் ஆசிரியர் மேற்கொண்ட பயணங்களை ஒன்பது கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார். இவரின் முதல் புத்தகம்.



ஹில்சா என்ற மீனைத்தேடி கொல்கத்தாவில் அலையும் முதல் அனுபவத்தைப் படிக்கும்போது, புத்தகம் முழுவதும் சாப்பாட்டு விசயமாகவே இருக்குமோவென்று பயந்துபோனேன். இரண்டாம் கட்டுரையில் இருந்துதான் பயம்போனது. பச்சையாக மீனைச் சாப்பிடும் மருத்துவச் சிகிச்சை பற்றியது அது. இந்த ஒரு கட்டுரை மட்டும் கடல் சம்மந்தப்பட்ட இடத்தில் இல்லாமல், உள்நாட்டில் - ஹைதராபாத்தில் ஆஸ்துமாவிற்குச் சிகிச்சையாக மீனின் வாய்க்குள் மருந்தை வைத்துத் தரும் பரம்பரை வைத்தியர்களைப் பற்றிப் பேசுகிறது. சுத்த சைவ உணவுக்காரர்கள் உட்பட 35000 பேர் முன்பதிவு செய்து வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் இவ்வைத்தியத்தின் ரகசியத்தை அறிய முயன்று அவ்வைத்தியர்களை ஆசிரியர் நெருங்கி பேச்சு கொடுக்கும் இக்கட்டுரை மர்மம் கலந்த நம்பிக்கை.

மூன்றாவது கட்டுரையில் தமிழகம். இயற்கை திரைப்படம் வெளியான அன்று திருநெல்வேலியில் பம்பாய் திரையரங்கில் பார்த்தேன். 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' வைரமுத்துவின் வசீகர வரிகள் என்னை முதல்நாள் முதல்காட்சி டிக்கட் வரிசையில் நிற்க வைத்தன. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கொத்துக்கொத்தாக இருபது முப்பது என்று டிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். தனது மண்ணைத் - தனது கடலைத் திரையில் பார்த்துக் கொண்டு அவர்கள் காட்டிய அப்பாவித்தனமான பிரமிப்பை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மணப்பாடு பற்றிய எனது நினைவுகளைப் புதுப்பித்துப் போனது இக்கட்டுரை. புனித சவேரியார் இவ்வூரில் இருந்துதான் கிழக்குக் கடற்கரையில் பிரசங்கிக்க ஆரம்பித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு துண்டு இவ்வூரில் இருப்பதாகவும் படித்தேன். ஓரூர் எதற்காக பெயர்பெற்றிருக்கிறதோ, அதல்லாமல் வேறொன்றில் அதை ரசிக்கும் பக்குவம் கிடைக்கப்பெறுவது கொஞ்சம் கடினம். சில ஊர்களை அப்படிக் கடினப்பட்டு சிலபேர் புரிந்து வைத்திருப்பார்கள். அது ஒரு தவம்!

கேரள அரசின் சுற்றுலா கையேட்டில்கூட இடம்பெற்றிருக்கும் கள்ளுக்கடைகளைப் பற்றியும், அதில் பரிமாறப்படும் மீன்கறி பற்றியும் ஒரு கட்டுரை. ஆழ்கடலில் வேகமாக நீந்தும் ஒரு மீனைத் தேடித் போகிறது இன்னொரு கட்டுரை. மங்களூர் புகழ் மீன்குழம்பைக் கடைகடையாகத் தேடி அலைகிறது ஒரு கட்டுரை. கடலையும் மண்ணால்மூடி கடற்கரைகளையும் ஆக்கிரமித்திருக்கும் மும்பை, ஆதிகலைகளுள் ஒன்றான கப்பல் கட்டுதல் செய்யும் கூர்ச்சர நகரமொன்று இப்படி பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது புத்தகம். ஒரிசா மீன்குழம்பு ருசிகண்ட எனக்கு, அந்நிலப்பரப்பு இப்புத்தகத்தில் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.

நெய்தலும் நெய்தல் நிமித்தமுமே புத்தகத்தின் கருவாக இருந்தாலும், மக்களை மிக நெருங்கி அவர்களின் வாழ்வோட்டத்தை விவாதித்திருப்பது புத்தகத்தின் பெரிய பலம். தங்கள் தெய்வம் மும்பாதேவியை மும்பைக்குப் பெயராகக் கொடுத்து அந்நகரின் விளிம்புகளில் அடையாளம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மீனவர்களின் இன்றைய நிலை, கேரளாவில் கள்ளுக்கடைகளுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்று நிறைய விசயங்கள். என்னை மிகவும் கவர்ந்தது கோவா பற்றியது. சுற்றுலா என்ற பெயரில் கடற்கரைகளை இழந்துவரும் பரிதாப நிலை; பாரம்பரிய மீன்பிடித்தொழிலைச் சுற்றுலா மாயையில் இழந்து கொண்டிருக்கும் அபாயம். நான் தனியாக கோவா சென்றிருந்தபோது, பனாஜி (Panaji) பேருந்து நிலையத்தில் ஒருவன் என்னைக் கேட்டான். "Kashmir to Kanyakumari Andhra Tamil Nadu Kerala Karnataka Hindi English all states all languages beach view sir which one you want sir?". முறைத்தேன். "Girls boys both are available sir".

இந்தியாவின் கடலோர மக்களின் வாழ்க்கை முறைகளை, ஒரு பகுதியினரை இன்னொருவருடன் ஒப்பிட்டிருப்பதும் அருமை. தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஆதிமனித இனம் மெல்ல மெல்ல நிலம் நோக்கிப் பெயர்ந்ததில், இன்னும் ஆதித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகள் கண்டிப்பாக ஆவணப்படுத்தப் படவேண்டியவை.

"இந்த அம்புக்குறி காட்டும் கடற்கரைக்கும் அண்டார்க்டிகாவின் விளிம்பிற்கும் இடையே நிலமேதும் இல்லை" - இப்படியொரு செய்திப்பலகையை, சோம்நாத் (Somnath) நகரின் கடற்கரைக் கோயில் ஒன்றில் கண்டதாக ஆசிரியர் இப்புத்தகத்தை முடிக்கிறார். புத்தகத்தில் படிக்கும்போதே பரவசப்பட வைக்கும் இவ்வாசகம். இதேபோல் நேரடியாகப் பார்த்தபோது கிடைத்த சிலிர்ப்பைப் பக்குவமாக வாசகனுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.

தன்னை நாடுபவர்களையும் சார்ந்திருப்பவர்களையும் சம்மந்தமே இல்லாமல் எங்கோ இருப்பவர்களையும் தன்மட்டில் ஓர் ஒழுங்கிற்குள் கட்டாயப்படுத்தும் கடல்படிப்போம்!

அனுபந்தம்:

1. அந்தப் பழம்பெரும் தமிழ்ப்பதம் மறக்கடிக்கப்பட வேண்டிய அனைத்துச் சூழ்நிலைகளும் எல்லா மூலைகளில் இருந்தும் உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த ஆங்கிலப் புத்தகம் மூலம்தான் அப்பதத்தின் அர்த்தம் தெரிந்தது. அப்பதம் 'ஈழம்'.

2. பதினைந்து வயதுக்குட்பட்டவனாக நான் இருந்தபோது தாத்தாவுடன் குளத்திற்குச் சென்று வேட்டியைவைத்து அயிரை மீன் பிடித்து வந்து அட்டகாசமாகச் சமைத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் கொடுத்து, குறைந்தது நான்கு வேளைகளாவது அயிரையை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு இருக்கிறோம். பதினேழோடு தாத்தா நிரந்தரமாகப் பிரிந்து போனார். எப்போதாவது எட்டி எட்டிப் பார்த்து மொத்தமாக மூழ்கிப் போனது குளமும். அயிரையைப் பார்த்தே ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட எனக்குள்ள கவலையெல்லாம், குளம் என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்கத் தெரியாமல் திணறப்போகிறமோ என்பதுதான்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Sunday, October 17, 2010

68. திருநங்கைகள் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- வள்ளுவம்


நாமெல்லாம்.... நாமன்னா.... நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.
- ஆய்த எழுத்து திரைப்பட வசனம்


ஆண்மை என்கிற வார்த்தைக்குக் குழந்தைகளைப் பெறும் தகுதியுள்ளவன் என்கிற விதத்தில் எங்கும் அர்த்தம் கொடுக்கப்படவில்லை. எடுத்த காரியத்தில் திடசிந்தனை, கொண்ட நோக்கத்தில் குழப்பமில்லாத தன்மையுடன் உயர்வடைவதற்குத்தான் ஆண்மை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, கிடா மீசை வைப்பதோ, பத்து மனைவிகளைக் கட்டிக் குழந்தைகளைக் கொடுப்பதற்குப் பெயரா ஆண்மை? அந்த மாதிரியான ஆண்மை எனக்கு வேண்டியதில்லை. இதையும் மீறிப் பெண் தன்மையுடன் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
- நர்த்தகி நடராஜ் ('கனவின் பாதை' புத்தகம் - மணா - உயிர்மை பதிப்பகம்)


--------------------------------------------------------
புத்தகம் : திருநங்கைகள் உலகம்
ஆசிரியர் : பால் சுயம்பு (தினத்தந்தியில் துணையாசிரியர்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : அக்டோபர் 2009
விலை : ரூ.150
பக்கங்கள் : 277 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------

இவ்வருட ஆரம்பத்தில் ஞாநி அவர்களின் 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் படிக்கும்போதுதான், இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறுநீரக மண்டலத்திற்கும் பெண்ணுடலில் வெவ்வேறு துவாரங்கள் என்று தெரியும். ஆணுடலைத் தாங்கி ஆண்மனதுடன் சிந்திக்கத் தெரிந்த எனக்கு இது பெரிய ஆச்சரியம்தான். இதேபோல் யாரோவொரு பெண் இவ்விரு மண்டலங்களும் ஆணுடலில் ஒரே இடத்தில் முடிவதை அறிந்து அதிசயிக்கலாம். ஆணோ பெண்ணோ இன்னொரு பாலினரை அறிவு அல்லது உறவு ரீதியாக அறிந்துகொள்ள முற்படும்போது மனிதவுடலில் இயற்கை புதைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்க வைக்கலாம். இந்த இருபாலினருக்கும் பொதுவான ஆச்சரியத்தையும், கேள்விகளையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும் இயற்கையின் இன்னொரு படைப்பு பால்பிறழ்வுகள்.

ஆண் அல்லது பெண் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத Congenital Adrenal Hyperplasia, இருபால் உறுப்புகளையும் கொண்ட Hermaphroditism, குரோமசோம் அடிப்படையில் ஆணாகவும் உடலமைப்பில் பெண்ணாகவும் அமையும் Androgen Sensitive Syndrome என்று பால்பிறழ்வுகளில் பலவகைகள். இவர்களில் குறிப்பிடத்தக்க வகையினரான ஆணுடலையும் பெண்மனத்தையும் பெற்றிருக்கும் மாற்றுப் பாலினத்தவரே திருநங்கைகள் என்று அறியப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிப் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களில், மற்றவர்களுடன் பகிந்துகொள்ளும் அளவிற்கு நான் புரிந்துகொண்ட புத்தகம் - திருநங்கைகள் உலகம்.



சுருக்கமாகச் சொன்னால், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அல்லது அந்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் திருநங்கைகள் இருபது பேரின் வாழ்க்கைச் சுருக்கம். தங்களைத் திருநங்கையாக உணர்ந்த நாள்முதல் அதனை வெளிக்காட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகளும், குடும்பத்தின் கட்டுப்பாடுகளும், சமூகம் தந்த அவமானங்களும், தன்னைப் போன்றவர்களை அடையாளம் கண்டு, அங்கீகாரம் கிடைக்கும்படி வாழ்ந்துகாட்டி ஜெயித்தவர்களின் கதைகள்.

முதல் பக்கங்களில் அழகம்மை என்ற திருநங்கையை உதாரணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறையை விளக்குகிறார் ஆசிரியர். ஆணாகப் பிறந்த அழகப்பன், தனக்குள்ள பெண்மனதை உணர ஆரம்பித்து, குடும்பமும் சமூகமும் வெறுத்து ஒதுக்க, மும்பைக்குப்போய் தன்போன்றவர்களுடன் அழகம்மையாக அடைக்கலமாகிறார். அங்கு ரீத் எனும் சடங்குமூலம் மூத்த திருநங்கை ஒருவரால் மகளாகத் தத்தெடுக்கப்படுகிறார். உரோமம் பிடுக்கும் சிம்டா கருவி, தண்டுப்பணம், தந்தா என்ற கடைகேட்டல் என்று திருநங்கைகளின் வித்தியாசமான உலகையும் சொல்லாடல்களையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அதில் அதிரவைக்கும் ஒருவிசயம், நிர்வாணம் எனப்படும் தாயம்மா அறுவை சிகிச்சை. ஆண்தன்மையை நீக்குவதற்காக ஆணுறுப்பை வெட்டியெடுக்கும் சிகிச்சை. மயக்க மருந்தே இல்லாமல் இரத்தத்தையும் வலியையும் நேரடியாக உணரவைக்கும் சிகிச்சை. இறந்து போனால் காளிக்குச் சமர்ப்பணம்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 20 திருநங்கைகளின் தனிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சி இப்படிக்கு ரோஸ், திருநங்கைகள் வாக்குரிமைக்குக் குரல்கொடுத்த பிரியாபாபு, கல்கி (sahodari.org), இந்தியாவின் முதல் மாடலிங் திருநங்கை ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்னை மிகவும் பாதித்தவர் நூரி. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்ட மூன்றாவது எய்ட்ஸ் நோயாளி அவர். தற்போது சென்னையில் SIP memorial home நடத்திவருகிறார். புத்தகத்தின்படி 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். சு.சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி தொடர்கதையில் சுயம்பு என்ற பாத்திரம் இவரே.

திருநங்கைகளுக்குச் சாதாரணமாக வாடகை வீடு கிடைப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துவதில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் எம்.ஏ. படிப்பைப் பாதியிலேயே விட்டவரும் உண்டு. இவர்களைப் புதிய அனுபவத்திற்காக நெருங்கி உடல்ரீதியில் தொடர்புகொண்டு ஏமாற்றுபவர்களும் இச்சமுதாயத்தில் உண்டு. மெரீனா கடற்கரையில் நூரி அவர்களின் பாலூற்றும் சடங்கைப் பார்த்து ஆயிரம் ரூபாய் தட்சணை கொடுத்த வில்லன் நடிகர் நம்பியார் போன்றவர்களும் இதே சமுதாயத்தில் உண்டு.

பெரும்பாலும் திருநங்கைகள் விசேசங்களில் சமையல் செய்பவர்களாகவும், ஒப்பாரிக் கலைஞர்களாகவும், கரகாட்டம் - மயிலாட்டம் - ஒயிலாட்டம் - கணியான் கூத்து என்று கிராமியக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பிரிவுகளும் மதக்கோட்பாடுகளும் வட-தென் இந்தியப் பகுதிகளில் வித்தியாசப்படுகின்றன. முகலாயர்கள் காலத்தில் ஆரம்பித்த முக்காடு பழக்கம், அரவான் சரித்திரம் என்று பல தகவல்கள் ஆங்காங்கே கட்டங்களில் எட்டிப்பார்க்கின்றன.பாலுறுப்பு மாற்றலுக்குத் தாயம்மா சிகிச்சைக்குப் பதிலாக SRS (Sexual Reassignment Surgery) போன்ற நவீன சிகிச்சைகள் சென்னைக்கே வந்துவிட்டன. சகோதரன், தாய் (TAI - Tamil Nadu AIDS Initiative)ன் மனசு போன்று திருநங்கைகளுக்காகச் செயல்படும் அமைப்புகளும் பலவுள்ளன.

இவர்களின் பிறப்பிற்கு விதி, கர்மவினை, சாபம், சென்மபாவம் என்ற எதுவும் காரணமில்லை. என்றோ இரண்டு Xகளில் ஒன்றை Yயாக்கி பெண்ணிலிருந்து ஆணை உண்டாக்கியதுபோன்ற இயற்கையின் குரோமசோம் விந்தைகள்தான் இவர்களும். பாலியல் திரிபைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான அனுதாபத்தையோ, அடக்குமுறையையோ இல்லாமல் சகமனிதன் என்ற அங்கீகாரம் மட்டுமே இவர்கள் கேட்பது. ஈரலைக் கெடுக்கும் ஹார்மோன் ஊசிகளுடன் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ள, நம்மில் சிலருக்கு இருக்கும் Transphobiaவை உடைத்தெறிய இதுபோன்ற புத்தகங்கள் கண்டிப்பாக உதவும். ஆங்காங்கே பரவிக்கிடக்கும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, திருநங்கையாகப் பிறப்பதற்கான அறிவியல் காரணங்களை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அனுபந்தம்:

1. அரவானி என்ற குறிப்பிட்ட மதம் சார்ந்த புராண மரபுடன் பெயரிடப்படுவதைத் தவிர்த்து,ஆணும் பெண்ணும் கலந்த திருநங்கை என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார் நர்த்தகி நடராஜ்.

2. பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற புதினம் படித்தேன். படிக்கலாம். சந்தியா பதிப்பகம். 50 ரூபாய்.

3. மராத்தி மொழியில் 'NATARANG' என்றொரு திரைப்படம் உண்டு. பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)