Sunday, July 21, 2013

106. ஆளண்டாப் பட்சி

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆளண்டாப் பட்சி (புதினம்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன் (http://www.perumalmurugan.com/)
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2012
விலை :  195 ரூபாய்
பக்கங்கள் : 247 (தமிழ் எழுத்துகள் போல‌)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
தூரத்து உறவினர் ஒருவரின் திருமணம் எனக்குப் பக்கத்தில் நடந்ததால் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரத்திற்குச் சென்றிருந்தேன். தமிழகத்துத் தென் மாவட்டம் ஒன்றில் பிறந்து, வாலிப வயதில் வசதியான வீட்டை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியேறி, 50 வருடங்களுக்கு மேலாக மராட்டிய மாநிலத்துக் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வரும் முதியவர் ஒருவரைச் சந்தித்தேன். தாய்ப்பூமியை விட்டு வைராக்கியத்துடன் விலகிக் கிடக்கும் அம்மனிதன் தாய்மொழி பேசுபவர்களுடன் பேசவே விரும்பவில்லை. சுத்த சிங்க மராட்டியராக மாறிப் போய் இருந்த அவரிடம், சுத்தத் தமிழில் பேசினேன். எனது பேச்சுத் திறமை அத்தனையும் உபயோகப்படுத்தியும் அந்த 50 வருடத்து இறுக்கம் தளர்ந்து வளையவே இல்லை. தாய்ப்பூமி நினைவுகளை எந்தவொரு நிலையிலும் திரும்பிப் பார்க்க அவர் விரும்பவில்லை. பேச்சினிடையே தாய்மொழியில் ஒரு பழமொழி சொன்னார்: 'வாழ்ந்து கெட்டவனை வழியில் சேர்க்க மாட்டார்கள்; சாதி கெட்டவனைச் சனத்தோடு சேர்க்க மாட்டார்கள்'. துளி கண்ணீர் கூட வர விரும்பாத அவர் கண்களை நோக்கும் திறனற்று பேச்சை முடித்துக் கொண்டேன். கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்!

பிறந்த பூமியில் இருந்து வேரோடு பிடுங்கிக் கொண்டு போய், திரும்பவே விரும்பாத தூரத்தில் கால் ஊன்றிக் கொள்ளும் யாவருக்கும் பின்னாலும் அசை போடக் கூட அனுமதிக்காத மர்மம் இருக்கத்தான் செய்கிறது. வறுமையின் பிடியில் துர்மரணம் கண்டு, புலம் பெயரும் ஒரு குடும்பத்தைப் பற்றி பேசும் பதேர் பாஞ்சாலி பற்றி இதே தளத்தில் பேசி இருக்கிறோம். சொந்த பந்தம் எட்டிப் பார்க்காத தூரதேசமாய், ஒடக்கான் மொட்டிடாத அனாதிக்காடா இருந்தாலும் பரவாயில்லை எனப் புலம் பெயரும் குடும்பங்களுக்குப் பின் வறுமை துர்மரணம் அவமானங்கள் அடக்குமுறைகள் குற்றங்கள் என காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
(http://www.noolulagam.com)

சேலம் ஜில்லா திருச்செங்கோடு தாலுகா காட்டுப்பட்டி மணக்காட்டில் வசிக்கும் ராமசாமி மகன் முத்தண்ணன் குடும்பம் இடம்பெயரும் கதைதான் ஆளண்டாப் பட்சி. ஆள் + அண்டா + பட்சி. உம்மைத்தொகை அல்ல. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நாட்டுப்புறக் கதைகளில் வரும் பிரம்மாண்ட பறவை ஒன்றின், நாமக்கல் வட்டார சொல்வழக்கு. அப்பறவையின் சில பண்புகள் கதைமாந்தர்கள் பலரின் செயல்களுடன் ஒத்திருப்பதால், இப்பெயர் வைத்ததாக முன்னுரையில் சொல்கிறார் ஆசிரியர். சமீபத்தில் நான் மிகவும் ரசித்த தலைப்பு இது.

முத்தண்ணன் பொழங்குகிற சாதி. பொழங்காத சாதியைச் சேர்ந்த குப்பனைக் கூட்டிக் கொண்டு, தன் பூர்வீகச் சொத்தைக் காசாக்கி மடியில் கட்டிக் கொண்டு, மாட்டு வண்டியில் பயணமாகிறார்கள். ஏதாவது ஒரு தூரத்து மண்ணில் சொந்தமாக‌ இடம் வாங்கி, குடும்பத்தையும் கூட்டி வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணிக்கிறார்கள். திக்கற்ற ஏழைக்கிங்கு அந்தச் சாமியை விட்டால் கஷ்டத்தில் கைகொடுக்க யாரிருக்கா? அந்தச் சாமி மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, பிழைக்க இடத்தைச் சாமியே காட்டும் என்று சகுனங்களை எதிர்பார்த்து பயணிக்கிறார்கள். ராசிபுரம் குருசாமிப்பாளையம் திருச்செங்கோடு கொல்லிமலை என நாட்கணக்கில் நீள்கிற‌து பயணம். தங்கள் பிற‌ப்பில் ஒட்டிக் கொண்ட சாதிகளை மறந்த இவ்விரு மனிதர்கள் பிழைக்க இடம் தேடும் நீண்ட பயணமும், அதற்குக் காரணமான கசப்பான குடும்பத்துச் சம்பவங்களும், புதிய மனிதர்களிடையே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சாயாவனம் போல புதிய இடத்தைத் திருத்துவதும், சில கிளைக்கதைகளும் தான் இப்புதினம்.
(http://www.perumalmurugan.com/)
நீர் விளையாட்டு, பீக்கதைகள், வேப்பெண்ணெய்க் கலயம் போன்ற ஆசிரியரின் சிறுகதைத் தொகுப்புகளைப் படித்திருக்கிறேன். பெரும்பாலும் முடிவு என்று ஏதொன்றையும் முடிவு செய்ய முடியாமல் முடியும் அவரின் நடை எனக்குப் பிடிக்கும். எக்கதையிலும் காலம் தெளிவாக இருக்காது. ஆளண்டாப் பட்சியும் அப்படித்தான். ஒரு ரூபாய்க்கும் குறைவாக கூடையும், 17 ரூபாய்க்கு ஒரு குழி நிலமும் விற்ற காலத்தில் கதை நடக்கிறது. இவர் கதைகளில், கிராமத்து மக்களின் வாழ்வோடு தொடர்புடைய சில பாரம்பரிய தகவல்களும், சில வித்தியாசமான வழக்குச் சொற்கள் பயன்படுத்துவதையும் அதிகம் காணலாம். இப்புதினத்தில் செந்தேள், கள் பற்றி வரும் தகவ‌ல்கள் ஓர் உதாரணம்.

நான் ரசித்தவை:
பிடித்த மனிதர்கள்:
1) கணவனுக்கும் காட்டாமல் கன்றிப் போன மார்களுடன் வலம் வரும் முத்தண்ணன் மனைவி பெருமா
2) கதையில் எங்குமே தலை காட்டாமல் பூச்சாண்டி காட்டும் சுப்புக் குறவன்
3) பொன்னாயாப் பாட்டி

பிடித்த பகுதிகள்:
1) பெரியாரின் பேச்சு கொடுத்த உத்வேகத்தில், சாமியும் இல்லை பேயும் இல்லை என, கோடாங்கியைக் குப்பன் பயம் காட்டும் பகுதி.
2) நாயுடன் நல்லபாம்பு சண்டை.
3) சானார் தெருவில் சாதி மறைத்து, பனையேறிக் கள்ளெடுக்கும் வித்தை கற்று, சாதிக் கட்டுப்பாட்டிற்காக அதை உபயோகிக்காமல் இருக்கும் முத்தண்ணன்.

ஒரு டரியலான வசனம்: "..... எங்காலத்துல எல்லாம் தாலிதான் ஒருத்தனுக்கு. அண்ணந்தம்பி ஆரா இருந்தாலும் புருசந்தான். ஆறு புள்ளப் பெத்தேனே ஆறும் உங்கப்பனுக்கேவா பொறந்தது? அதாருக்குத் தெரியும். மேல போறவன் கொடுத்த பொறப்பு. எதோ ஆசப்பட்டு வந்தான்னா அமுக்கமா உள்ள கூட்டிட்டுப் போயி எல போடறத உட்டுட்டு ஏறிக்கிட்டு வந்துட்டா. எல்லாம் நாகரீகம் பெருத்துப் போன காலமாயிருச்சப்பா. அடி ஆ
யா, இன்னமே உம்புருசன்..... போ, தங்கத்துல அடிச்சு வெச்சத மூடிப் பத்தரமாப் பாத்துக்காயா".

இடப்பெயர்வு என்ற பயணநிலைதான் இப்புதினம். பயணித்துப் பாருங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Saturday, July 20, 2013

105. சாபம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாபம் (சிறுகதைகள்)
ஆசிரிய‌ர் : சல்மா
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2012
விலை : 110 ரூபாய்
பக்கங்கள் : 142
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
(http://www.wikipedia.org)

சிறுகதைகள் பற்றியோ, கவிதைத் தொகுப்புகள் பற்றியோ பெரும்பாலும் நான் இங்கு எழுதுவதில்லை; எழுதவும் தெரியாது. சமீபத்தில் ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பற்றி எழுதலாம் என முனைந்தால், தம்பி சேரல் ஏற்கனவே எழுதிவிட்டார். மனதுக்கு மிக அருகில் நெருங்கும், சில சமய‌ங்களில் எதார்த்தத்தை உட்கிரகிக்கத் தடுமாற வைக்கும் சில சிறுகதைகளைப் படிக்கும் போது, அவற்றைப் பற்றி ஏதாவது எழுதிவிடத் தோன்றும். சமீபத்தில் படித்த, சல்மா அவர்களின் சாபம் என்ற சிறுகதைகள் தொகுப்பும் அப்படித்தான்.

மொத்தம் 11 சிறுகதைகள். 5 கதைகளைப் பிடித்த வரிசையில் குறித்து வைத்திருக்கிறேன். எல்லாக் கதைகளும் ஓர் இஸ்லாமியப் பெண் பார்வையில் சொல்லப்படுகின்றன. இரயிலில் முகம் தெரியாத ஆண்களுக்கு இடையே இரவுப் பயணம், கணவன் இல்லாத நாட்களில் அடிக்கடி சிணுங்கி பேச மறுக்கும் தொலைபேசி அழைப்பு, முதிர்கன்னி நிலைக்குச் சற்று முன் திருமணம் செய்து பித்தாகிப் போக வைக்கும் முதலிரவுகள், குழந்தைப்பேறு இல்லையென மருத்துவத்தால் கைவிடப்பவள் சந்திக்கும் இரவுகள், மொட்டைக் கடுதாசிகள் என முழுக்க முழுக்க பெண்ணுலகில் சஞ்சரித்து வந்த அனுபவத்தைத் தருகின்றன இக்கதைகள்.
(http://www.noolulagam.com)
அக்கதை சாதியைச் சவுக்கால் அடித்தது என்றோ, இக்கதை பெண்ணியப் பெருமை பேசியது என்றோ, ஒரு சொட்டுக் க‌ண்ணீர் தந்தது ஒரு கதை என்றோ, தூக்கம் தூக்கிப் போட்டது இன்னொரு கதை என்றோ எனக்கு எழுதத் தெரியாது என ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் எழுதினால், கதைகளைத் தான் எழுத வேண்டும் என்பதால், ஒரு சோறு பதம் பார்க்க, நான் ரசித்த ஒரு பத்தியை உங்கள் வாசிப்பிற்கும் தருகிறேன்.

உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும் மறைந்த மேலான சுதந்திரத்தை அடைந்திருந்தாள். பயத்தின் கரங்களிடமிருந்து விடுபட்டுப் பரவசத்தின் எல்லைகளுக்குள் பயணிக்க ஆரம்பித்தாள். பயத்தில் வெறுத்து ஒதுக்கிய இரவுகள், விருப்பமானவையாக மாறித் தன்னைத் தவிக்கவைக்கும் அதிசயத்தை அதீத வியப்புடன் யோசித்தாள். இன்றைய இரவுக்காகவும் தன் உடலைப் புணர வரும் அந்த உருவத்திற்காகவும் விரகத்தில் தகிக்கும் உடலைப் படுக்கையில் கிடத்துவதற்காகவும் இரவு ஒரு பறவைபோலக் கதவுக்கு மேலாகப் பறந்து வரும் அதிசயத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

நான் அதிகம் ரசித்த கதைகள்: சாபம், இருள்
நான் ரசித்த குறியீடு: 'சாபம்' கதையில் தெருத் தெருவாகப் போய் மோர் கேட்கும் பெண்கள்

- ஞானசேகர்  
 (http://jssekar.blogspot.in/)