Sunday, December 01, 2013

116. THE PREGNANT KING

பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம் தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு இங்கு தாய்வேஷம்
-‍ அவ்வை சண்முகி திரைப்படப் பாடல்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Pregnant King (புதினம்)
ஆசிரியர்: Devdutt Pattanaik (http://devdutt.com)
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு: 2008
பக்கங்கள் : 349
விலை: ரூபாய் 350 
வாங்கிய இடம் : Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி அன்று டிவியில் உலவிக்கொண்டு இருந்தபோது விஸ்வரூபம் திரைப்படத்தின் ஒரு காட்சியைச் சற்று நின்று பார்த்தேன். பெண் நளினத்துடன் வலம்வரும் கமலஹாசனை முழங்காலிட வைத்து சித்தரவதை செய்கிறார்கள். ஒருசமயத்தில் தன் ஆண்பலத்துடன் விஸ்வரூபமெடுத்து சண்டையிடுகிறார். காட்சி முடிந்தவுடன் விளம்பர இடைவேளையில் கமலஹாசன் தோன்றினார். இக்காட்சியின் வித்து நமது இதிகாசங்களில் இருந்து தனக்குக் கிடைத்தாகச் சொன்னார். பெண்ணாக வாழ சபிக்கப்பட்ட அர்ச்சுனன், தனது சாபம் முடிந்தவிட்ட காலம் தெரிந்தவுடன், தன்னைத் துரத்துபவர்களைத் தன் ஆண்பலத்துடன் திருப்பி அடித்த கதையைச் சொன்னார். பள்ளியில் படித்த பாஞ்சாலி சபதம், திரைப்படத்தில் பார்த்த கர்ணன், புத்தகங்களில் படித்த அரவான் என்று எனக்கு தெரிந்த இந்துமத இதிகாசக் கதைகள் மிகவும் குறைவுதான். இந்துமதத்தின் இதிகாசங்கள் பழமையானவை; கடினமான ஆழமான பொருளுடையவை. அதில் மகாபாரதம் மட்டும் எடுத்துக் கொள்வோம். அதிலும் பால்மாற்றக் கதைகளைக் கவனிப்போம். கமலஹாசன் சொன்னது போன்ற ஆண்-பெண் பாலின மாற்றங்களைப் பேசும் சில முக்கியமான கதைகளை, என்னைப் போல பரிட்சயமில்லாதவர்களின் புரிதலுக்காக கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.

1. சிகண்டி. திரௌபதியின் அக்காள். துரோணரைக் கொல்ல ஓர் மகனையும், குருவம்சத்தைப் பிரிக்க ஓர் மகளையும் எதிர்பார்த்திருந்த துருபதா மன்னனின் மகள். அவளை மகனாகவே அறிவித்து, பாவித்து, அரியணையில் அமர்த்துகிறார். யுத்தத்தர்மப்படி பெண்கள் போர்க்களம் புகக்கூடாதெனினும், கிருஷ்ணரின் ஆலோசனைப்படி துரோணரைக் கொல்ல மகாபாரதப் போரில் பங்கேற்கும் சிகண்டி, ஆணுடை தரித்த பெண்.

2. அர்ச்சுனன். ஊர்வசியால் சபிக்கப்பட்டு தன் ஆண் அடையாளங்களை இழந்து பெண்ணாக வலம்வருகிறான். விராடனின் மகள்மீது அர்ச்சுனன் காதல்வயப்பட, அர்ச்சுனன்மீது விராடனின் மகன் காதல்வயப்பட, ஒரே நேரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் வலம்வரும் அர்ச்சுனன், அந்நேரத்தில் இரண்டுமே இல்லை. பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து மாறுவேடத்தில் வலம்வந்த அந்தப் பதின்மூன்றாம் வருடத்தில் அர்ச்சுனன், திருநங்கை.
3. கிருஷ்ணர். பாண்டவர்கள் போரில் வெல்ல 36 புனித அம்சங்கள் கொண்ட ஓர் ஆணைக் காளிக்கு உயிர்ப்பலி கொடுக்க வேண்டும். வாழும் காலத்தில் தனக்காக வருத்தப்பட யாருமில்லை; இறந்தபின் தனக்காக அழும் ஓரு மனைவி வேண்டும் என பலியாகத் தயாராகிறான் அரவான்; அர்ச்சுனனின் மகன். எப்பெண்ணும் முன்வராத நிலையில், கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து மனைவியாகிறார். அரவான் பலியானபின், பெருங்குரலெடுத்து அழுகிறாள் மோகினி. அரவான் திரைப்படத்தின் பலிகொடுக்கும் கதைக்கும், அரவானிகள் என்ற பெயருக்கும், கூத்தாண்டவர் கோவிலின் சடங்குகளுக்கும் மூலமான இக்கதையில் கிருஷ்ணர் ஆண்; மோகினி பெண்.
(http://avirandom.files.wordpress.com/ கிருஷ்ணர் சிகண்டி அர்ச்சுனன்)
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று சில புரிதல்களைத் தனித்தனியாகவே இயற்கை வைத்திருக்கிறது. பிரசவவலியை ஓர் ஆணால் உணர முடியாது போல. பெண்ணாக இருந்து கொண்டு ஆணாக வலம் வருவதின் துயரம் கிகண்டிக்குத் தெரியும். பெண் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அர்ச்சுனன் என்ற ஆணுக்குத் தெரியும். மனைவி உணர்வுகள் எப்படி இருக்கும் என்று கிருஷ்ணர் என்ற ஆணுக்குத் தெரியும். தாயாக உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அறிந்த ஆண் யாரையாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் தாயாகவும் தந்தையாகவும் உணர்ந்த ஆண் யாரையாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? புத்தகத்திற்குள் போகலாம்.

The Pregnant King. கருவுற்ற அரசன். தனது மனைவிகள் கர்ப்பமடைய யாகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பானத்தைத் தவறுதலாகப் பருகி, ஓர் ஆண் மகவைப் பிரசவிக்கும் ஓர் அரசனின் கதை என்கிறது புத்தகத்தின் பின்னட்டை. 'நான் ஓர் ஆணா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆண்களைப் போல எனது உடலுக்கு வெளியே ஓர் உயிரை உண்டாக்கி இருக்கிறேன். ஆனால் பெண்களைப் போல எனது உடலுக்கு உள்ளேயும் ஓர் உயிரை உண்டாக்கி இருக்கிறேன். இதனால் எனக்கு ஆவதென்ன?' என்ற வரிகளுடன், கருவுற்ற வயிற்றுடனும் மீசையுடனும் அமர்ந்திருக்கும் ஓர் அரசனின் படமும் பின்னட்டையில் இருக்கிறது. மகாபாரதக் கதைகளையும், குஜராத் மற்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் சில நாட்டுப்புறக் கதைகளையும் களமாகக் கொண்டு ஆசிரியர் செய்திருக்கும் புனைவுதான் இப்புதினம். உயிர்க்கருவைச் சுமக்கும் ஓர் அரசன் சுமக்கும் கதைதான் இப்புதினத்தின் கரு என்றாலும், இக்கருவை உண்டாக்கிய ஆசிரியரைப் பற்றி முதலில் கருத்து சொல்லிவிட்டு, இப்புதினத்தின் கருக்கலைப்பு இல்லாத எனது கருத்தைப் பிறகு பேசலாம்.


Dr. Devdutt Pattanaik. தேவ்தத் பட்டநாயக். மருத்துவம் படித்தவர். இந்துமதப் புராணங்களை ஆய்வு செய்வதில் ஆர்வமுடையவர். இந்துமதப் புராணங்களின் கதைகளையும், அவற்றில் சொல்லப்படும் சடங்குகளையும், அடையாளச் சின்னங்களையும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தும் நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இன்னும் அதிகம் அறிய, அவர் எழுதியிருக்கும் புத்தகங்களின் பட்டியலைப் பாருங்கள். தமிழில் விகடன் பிரசுரம் வெளியிட்ட எளியவடிவ‌ மகாபாரதப் புத்தகம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் இவர் வரைந்தவையே. அது சரி, கடவுளுக்குச் சம்மந்தமே இல்லாத நான் ஏன் இப்புத்தகத்தைப் பற்றி எழு
துகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்புதினத்திற்கு வெளியே எதையும் படித்து அதிக தகவல்கள் சேகரிக்கவில்லை; உண்மையும் புனைவும் பிரித்தறிய முயலவில்லை. எனக்கு இதுவும் இன்னொரு புதினம்; மாய எதார்த்தம். ஆற்றுப்படை எனது பணி.

அவிழ்த்துவிட்ட கேசம், சிவப்பு சேலை, வளையல், மூக்குத்தி, சிறுபானை, கிளி, கரும்புத்தோகை, மஞ்சள் என்று பெண்ணுக்கான 14 அடையாளச் சின்னங்களுடன் அமாவாசையில் கோவிலுக்குள் வீற்றிருக்கிறாள் இளேஸ்வரி. அதன்பிறகு ஒவ்வொரு நாளாக, நிலவின் பிறை வளர வளர, பெண்ணுக்கான அடையாளச் சின்னங்க‌ள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு, ஆணுக்கான 14 அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்படுகின்றன. முதல்நாளில், அவிழ்த்துவிடப்பட்ட கேசத்திற்குப் பதில் மீசை. மறுநாள் சிவப்பு சேலைக்குப் பதில் வெள்ளை வேட்டி. மறுநாள் பானைக்குப் பதில் வில். மறுநாள் கிளிக்குப் பதில் மயில். மறுநாள் கரும்புத் தோகைக்குப் பதில் ஈட்டி. மறுநாள் மஞ்சளுக்குப் பதில் சாம்பல். இப்படியாக 14 நாட்கள் கழித்து பௌர்ணமியில் இளேஸ்வரன் ஆகிறாள் இளேஸ்வரி. அடுத்த 14 நாட்களில் படிப்படியாக இளேஸ்வரி ஆகிறார் இளேஸ்வரன். இளேஸ்வரியாக இருக்கும் போது ஆண்களும், இளேஸ்வரனாக இருக்கும் போது பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களைத் தந்தையாக்குபவர் இளேஸ்வரன். பெண்களைத் தாயாக்குபவள் இளேஸ்வரி.


அஸ்தினாபுரியைக் குரு வம்சமும், யாக்னசேனர்கள் பாஞ்சாலத்தையும், யாதவர்கள் மதுராவையும் ஆண்டுவந்த‌ மகாபாரதக் காலத்தில் வல்லபியைத் துருவாச வம்சம் ஆண்டுவந்தது. தனது தேசத்தின் பாதியைக் குரு வம்சம் அபகரித்துப் போனபின், ஆறு மகன்களையும் கொன்றுவிட்டு, எல்லா மனைவிகளையும் விரட்டிவிட்டு, குரு வம்சத்தைப் பிரிக்க ஓர் மகளையும், துரோணரைக் கொல்ல ஓர் மகனையும் வேண்டி, கன்னிகழியாத புது மனைவியுடன் இளேஸ்வரி+ரனைத் வேண்ட‌, குருசேத்திரப் போருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் வல்லபிக்கு வரும் பாஞ்சால மன்னன் துருபதாவுடன் ஆரம்பிக்கிறது புதினம். மனுதர்மத்திற்கு எதிராக ஒரு பிராமணனைக் கொல்ல வரம் கேட்கும் துருபதாவிற்கு, வார்த்தைகளில் விளையாடி வரமளிக்கிறார் சிவனின் சாந்தரூபமான‌ சங்கரனார். அன்றிரவே சூல் கொண்ட புது மனைவியின் குழந்தைதான் சிகண்டி (=ஆண்மயில்). இஃதில்லை யான் கேட்டதென்று, பிறகு சித்தர்கள் இருவரை வைத்து துருபதா யாகம் நடத்தி, அக்கினியில் இருந்து பிறக்கும் ஆண் பெண் இரட்டையர்களில் ஒருத்திதான் திரௌபதி. புதினத்தை ஆரம்பித்து வைக்கும் இக்கிளைக் கதையிலேயே மிரண்டு போனேன். 

(http://devdutt.com)
வல்லபியின் மன்னனுக்கு ஆட்சியைத் துறந்துவிட்டு, சன்னியாசம் போக விருப்பம். வாரிசான மகனுக்கோ வேட்டையில் விருப்பம். அவனோ பதினெட்டாம் வயதில், கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்குப் பின், தந்தையாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் மடிந்து போவான் என்று காலம் கணிப்பவர்கள் எச்சரிக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும் ஒருத்தி மணக்கிறாள். அவன் இறந்தபின், ஒரு பெண் ரிஷியாவதையும் அரசாள்வதையும் தர்மசாத்திரம் தடுக்கும் மரபுகளை மீறி, ஆணுக்கான அரசச் சிம்மாசனத்தில் அமர்கிறாள். மகுடம் சூட்டும் விழாவில், நெற்றித் திலகத்தை அவள் தொப்புளுக்கு நேர் மேலே இடும்போது, கருவாக அறிமுகமாகிறார் இப்புதினத்தின் கரு. கருவிலிருக்கும் அந்த ஆண்மகவுதான் யுவனாஷ்வா. மொத்தம் 8 அத்தியாயங்களில் சிறு சிறு கதைகளாக அமையும் இப்புதினத்தில், முதல் 37 பக்கக் கதைச் சுருக்கம்தான் இதுவரை சொன்னேன். இதற்கு மேல் கதை சொன்னால் கரு கலைந்துவிடும்.

தகுதியான ஆண் வாரிசு இல்லாமல், தகுதி இருந்தும் பதவி துறந்து சன்னியாசம் போகும் தாத்தா. மரபுப்படி தகுதியற்று ஆட்சியில் இருக்கும் அம்மா. யுவனாஷ்வா அடுத்து ஆட்சியில் அமரவும், போர்க்களம் புகவும் அவனிடம் வல்லபி என்ன எதிர்பார்க்கும் என நீங்களே யூகித்து இருப்பீர்கள். ஆம், ஓர் ஆண்மகவிற்குத் தகப்பனாக வேண்டும். இந்த யுவனாஷ்வாதான் அத்தகுதி பெற அடுத்தடுத்து பல மனைவிகள் மணக்கப் போகிறார். தனது மனைவிகள் கர்ப்பம் தரிக்க, சோசியமும் மருத்துவமும் பலனளிக்காமல் போக‌, திரௌபதி பிறக்க உதவிய அதே இரண்டு சித்தர்களை வைத்து யாகம் நடத்தப் போகிறார். கல்லையும் கர்ப்பமாக்கும் அந்த யாகத்தின் பானத்தைத் தவறுதலாகக் குடிக்கப் போகிறார். புதினத்தின் பக்கங்களை இரண்டாகப் பிரித்தால், பானத்தைக் குடிப்பதுவரை முதல் பாதி. மசக்கை பிரசவம் வளர்ப்பு வாரிசுரிமை என இரண்டாம் பாகம்.


இப்புதினத்தின் காலத்தைச் சொல்லவும், சில சம்பவங்களுக்குச் சாட்சியாகவும் மகாபாரத்தை அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பெண்ணாளும் வல்லபியைத் தர்மனின் பட்டாபிஷேகத்திற்கு அழைக்க மறுக்கிறார்கள். பீஷ்மரைப் போ
 பெண்களைக் கடத்தி வந்து மணமுடிக்கக் கூடாதென தாயிடம் அறிவுரை பெறுகிறார் யுவனாஷ்வா. வனவாசம் போன பாண்டவர்கள், அம்மைத்துனர்களைத் தேடிப் போன பாஞ்சாலர்கள், துவாரகாவில் துறைமுகத்தைப் பாதுகாக்கப் போன கிருஷ்ணர் என சுயம்வரத்திற்கு எல்லோரும் வராமல் போக, மிக எளிதாக முதல் மனைவியை அடைகிறார் யுவனாஷ்வா. வாரிசு இல்லாததால் குருசேத்திரப் போரைப் புறக்கணிக்கிறார் யுவனாஷ்வா. தர்மனைக் கொல்ல துரியோதனனும், பீமனைக் கொல்ல பீஷ்மரும், துரோணரைக் கொல்ல துருபதாவும், கர்ணனைக் கொல்ல அர்ச்சுனனும் படைகளுடன் நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் முன், வல்லபியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக‌ குழந்தை இல்லாத ஏழைப் பிராமணத் தம்பதிகள் படையெடுக்கிறார்கள்.

யுவனாஷ்வாவின் மன‌நிலையுடன் வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு அற்புதமான எளியநடையில் கதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். எந்தவொரு இடத்திலும் மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கவில்லை; புண்படுத்தவில்லை. நடந்த நிகழ்ச்சிகளைத் தனது கருவிற்கு உடலாக்கி இருக்கிறார். காம சாத்திர அறிவுரைப்படி அருந்ததி பார்த்தபடி நடக்கும் முதல் முதலிரவு சம்பவத்தில் விரசமும் இல்லை; கடைசியாக இயற்கைக்கு மாறாகப் புணருவதில் அருவருப்பும் இல்லை. யுவனாஷ்வாவை மட்டுமே வாசகனைத் தொடர வைத்திருப்பதில் ஆசிரியர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கிறார்.


இப்புதினம் இக்கதை மூலம் என்ன சொல்ல வருகிறது? சிவனுக்கும் சக்திக்கும் பணிப்பெண்கள் 64 பேர். 
வ்வொருவரிடம் ஒரு புதிர் இருக்கும். பெரும்பாலான புதிர்களை விடுவிப்பவர்கள் அரசர் ஆகிறார்கள். எல்லாவற்றிற்கும் விடை தெரிந்தவர்கள் சக்கரவர்த்தி ஆகிறார்கள். மகாபாரதக் காலம் வரை, பரதன் மட்டும் தான் ஒரேயொரு சக்கரவர்த்தி. யுவனாஷ்வா தகப்பனா, தாயா என்பதுதான் 65வது புதிர். எமனின் வரவு செலவுக் கணக்கில் குளறுபடிகள் தவிர்க்க, பூமியில் ஒரு பாலில் பிறந்தவர்கள் அதே பாலில் மட்டுமே இறந்தபின் அனுமதிக்கப்படுவார்கள்; பாகுகாமி கோவில் பூசாரிகள் மட்டும் அதற்கு விலக்கு. ஆண் பெண் என்பது வெறும் அடையாளச் சின்னமா? வெறும் சதைப்பிண்டமா? மனித குலத்தில் ஆணின் விதி அவனது வம்சாவழியில்; பெண்ணின் விதி அவள் உடலில். ஆண்-பெண் கணவன்-மனைவி மகன்-மகள் தந்தை-தாய். எந்தப் பாத்திரத்தில் மனித இனம் அதிக மகிழ்ச்சி காண்கிறது என்பதைத் தனது கதைமாந்தர்கள் மூலம் பல பரிமாணங்களில் உணர்த்துகிறார் ஆசிரியர். மாதவிலக்கு நின்று வெகுநாள் ஆனபின்னும் கருவுறும் ஒரு பெண். பாலுறுப்புகள் வளரும் முன் பிறந்து, ஆணா பெண்ணா என்று தாய்க்கே தெரியாத ஒரு குழந்தை. ஆணுடம்பில் பெண்ணாக உணரும் திருநங்கை.  தன் ஆண்தன்மையை ஒரு பெண்ணுக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு, கடனைத் திரும்பிப் பெற முடியாமல் 30 வருடங்களாகப் பெண்ணாகத் தவிக்கும் ஓர் ஆண். இன்னொரு ஆண் மூலம் குழந்தை பெறும் ஓர் ஆண். தன் பிள்ளை தன்னை அம்மா என்றழைக்க ஏங்கும் ஓர் ஆண். ஓர் ஆணைத் தாயாகக் கொண்ட ஓர் ஆண். ஒரு பெண்ணைத் தந்தையாகக் கொண்ட ஒரு பெண். ஆண் பெண் என்ற இருநிலைகளைத் தவிர, இடைப்பட்ட நிலைகளை அங்கீகரிக்கும் விழிப்புணர்வு இக்காலத்தில் அதிகரித்து வரும் நற்சூழல் நிலவுகிறது. இப்புதினத்தின் முடிவும் அதுவே!

சில நேரங்களில் வார்த்தைகள் உதவுவதில்லை. இலக்கணப்படுத்தி வாக்கியங்கள் ஆக்குகிறோம். சில நேரங்களில் உரைநடை வாக்கியங்களும் உதவுவதில்லை. கவிதைப் பாடல்கள் ஆக்குகிறோம். எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடங்காத உணர்வுகளை என்ன செய்வது? தலைமுறைகளின் அறிவைப் பாடல்கள் மூலம் பாதுகாக்கும் பாணர்கள், புதினத்தின் சில மர்மங்களை யுவனாஷ்வாவிற்குப் புதினத்தின் கடைசியில் விளக்கும் போது, யுவனாஷ்வா கேட்கிறார்: 'இ
தை ஏன் எனக்கு முன்னரே சொல்லவில்லை'. பாணர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள் சொல்வதைக் கேட்டு சிரிக்காத ஒரு மனிதன் இப்போதுதான் கிடைத்ததால்'. 

Culture cannot twist the truth of nature. Every civilization needs its delusion. நீண்ட நாட்களுக்குப் பின் என்னை ஆச்சரியப்படுத்திய இந்த ஆங்கிலப் புதினத்திற்கு, எனது விருப்பப் பட்டியலில் நான்காவது இடம் தந்திருக்கிறேன்.

நான் ரசித்த கதாபாத்திரங்கள்:

1. யுவனாஷ்வா
2. பாகுகாமி 
3. சோமவதி
4. ஷீலாவதி
5. சிமாந்தினி
6. அரவான் (Iravan)
7. நீலகண்ட பைரவி

நான் ரசித்த உரையாடல்கள்:

1. பெண்ணாக இருப்பது பற்றி விவாதிக்கும் யுவனாஷ்வா, அர்ச்சுனன்
2. பால் மாற்றம் செய்து கொள்ள, பெண்ணுடம்பின் நன்மைகளையும் தீமைகளையும் மாறி மாறி விவாதிக்கும் ஸ்துனகர்ணன், சோமவத்.

பால் பிறழ்வுகளில் இப்புதினம் திருநங்கைகள் பற்றியும் பேசுவதால், அவர்களோடு தொடர்புடைய எனது பிற பதிவுகள்:

1. திருநங்கைகள் உலகம் 
2. வாடாம‌ல்லி 
3. அக்காவின் அண்ணன் 

அனுபந்தம்:

‍‍‍----------------
1. இளேஸ்வரி/ரன் கதையில் ஒவ்வொரு சுழற்சியும் நிலவின் சுழற்சிக்கு ஆகும் 28 நாட்களுடன் ஒத்துப் போவதைக் கவனித்தீர்களா? நிலவின் சுழற்சியும் பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் ஒத்துப் போவதைக் கவனித்தீர்களா? இதையெல்லாம் ஏற்கனவே ஒரு புத்தகத்தில் சொன்னேனே, அதையாவது கவனித்தீர்களா?

- ஞானசேகர்

(http://jssekar.blogspot.in/)