Wednesday, June 10, 2009

37. குறுஞ்சாமிகளின் கதைகள்

என் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள்

-------------------------------------------
புத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்
ஆசிரியர் : கழனியூரன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2007
விலை : ரூ 80

-------------------------------------------






















கழனியூரன்:

கழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். துவக்கப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறவியல் சார்ந்த 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணனோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர். அவரோடு இணைந்து பல நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியங்கள் குறித்தான களப்பணியிலும், எழுத்துப்பணியிலும் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருப்பவர்.

குறுஞ்சாமிகளின் கதை:

குல சாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இதழில் இக்கதைகள் 'சனங்களின் சாமி' என்ற பெயரில் தொடராக வந்திருக்கின்றன. திருநெல்வேலியைச் சுற்றியிருக்கிற கிராமங்களில் வணங்கப்படுகிற குறுஞ்சாமிகளின் கதைகள் நம்மை மீண்டும் கிராமங்களை நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்தச் சாமிகள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்களாகவே இருக்கிறார்கள். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களுக்கான தெய்வங்களாக, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற கடவுள்களாகவே இந்தக் குறுஞ்சாமிகள் இருக்கிறார்கள்.


















தன்னைப் போன்ற மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மாண்டு போன வீரன், அதர்மத்துக்குப் பலியான பெண், தவறுதலாக கொல்லப்பட்ட ஒரு மனிதன் இவர்களைப் போன்றோரே பின்னாளில் கடவுள்களாக மாறி, ஒரு பகுதி மக்களால் குல தெய்வமாக வரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்கள். கழனியூரன் தொகுத்திருக்கும் இந்தக்கதைகள், ஆன்மீகம் குறித்தான பல சர்ச்சைகளை நம்முள் தூண்டிவிடுகின்றன. இன்று இது போன்ற குறுஞ்சாமிகளின் வழிபாடு என்பது வெகுவாகக் குறைந்து போய், ஒரு சாரார் மட்டுமே செய்கின்ற செயலாக மாறிவிட்டிருக்கிறது. அதுவும் நகரத்து மக்களுக்கு இது போன்ற ஒரு மரபோ, தங்கள் வேர்கள் குறித்த ஒரு ஞானமோ பெரும்பாலும் இருப்பதில்லை. வரலாற்றின் பின் பகுதியில் வந்து சேர்ந்துவிட்ட பெருங்கடவுள்களை வழிபடுவதே இப்போது எங்கும் காணக்கிடைக்கிறது.

மூதாதையரை வணங்கும் பண்பாடு, உலகின் மூத்த நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இருந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது இன்று படிப்படியாக அழிந்து போய்விட்டது என்றே சொல்லலாம். தென் தமிழகத்தில் வழங்கப்படுவது போல இந்தக் குறுஞ்சாமிகளின் வழிபாடு மற்ற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்பது என் கருத்து.

கதைளைச் சொல்வதோடு, அதில் பின்னிப்பிணைந்திருக்கும் அக்காலத்து மக்களின் வாழ்வு முறை, நம்பிக்கைகள், கலாச்சாரம், அவர்களின் கோபம், ஆசைகள், வீரம், காதல் என்று பல செய்திகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பட்டினி கிடந்தவனின் சாமியும் மழையிலேயே நனைந்தது; வெயிலிலேயே காய்ந்தது; பட்டினியும் கிடந்தது. சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள், இம்மக்களின் அன்றாடப் பசி தீர்க்கும் பொருட்களாகவே இருந்திருக்கின்றன. சாமிகளின் உருவங்கள், பெரிய கலை வேலைப்பாடுகள் இன்றி கைக்குக் கிடைத்த பொருளகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாட்டுச்சாணத்தின் மேல் நான்கைந்து அருகம்புல்லை வைத்து உருவாக்கப்பட்டு விடுகிறது ஒரு தற்காலிக சாமி. இந்த வழக்கம் தமிழகக் கிராமங்களில் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அதிசயங்கள், பிற்காலச் சேர்க்கைகளாகக் கொள்ளப்படலாம். கதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டும் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பிற்சேர்க்கையாக தான் மெற்கொண்ட களப்பணிகள் குறித்தும், குறுஞ்சாமிகளின் கதைகள் தேடியலைந்த கதையையும் எழுதி இருக்கிறார் கழனியூரன். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடக்கூடிய ஒரு கதையை தெரிந்து கொள்ள இவர் பட்டிருக்கும் வேதனைகள், இவர் கொடுத்திருக்கும் உழைப்பு, இவர் செலவிட்டிருக்கும் நேரம், நிச்சயமாக பெரும் மரியாதைக்கு உரியவை. கற்பனையில் உதித்துவிடக்கூடிய கதைகளைக் காட்டிலும் உயிரோட்டமும், வாழ்க்கையும் கலந்திருக்கும் இக்கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு நம் வேர்கள் குறித்தான ஒரு அறிமுகப் பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-சேரல்

Saturday, June 06, 2009

36. யூதர்கள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!


எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறிஸ்து (விவிலியம்)

Israel was probably the most confusing place in the world to do so. It is the place to lost yourself as a Jew.
- Thomas Loren Friedman (From Beirut to Jerusalem)


-------------------------------------------------------------
புத்தகம் : யூதர்கள்
ஆசிரியர் : முகில்
பக்கங்கள் : 260
விலை : 100 ரூபாய்
பதிப்பகம் : கிழக்கு

-------------------------------------------------------------

ஒரு பிரபல கண் மருத்துவமனை. நண்பனின் தந்தைக்குக் கண்ணில் லேசர் சிகிச்சை. 4 மணி நேரங்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலைமை. என் வயதொத்த வசீகரமான ஒருத்தி, அதே வராண்டாவில் அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட எங்களின் நிலைமைதான் அவளுக்கும். அப்படிப்பட்ட நிலையிலும் வைத்தகண் திருப்பாமல், வசீகரமான என்னைப் போன்றவர்களைக் கூட பார்க்காமல், கருப்பு அட்டைக்குள் இருந்த வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தாள். இப்படித்தான் என்னை முதல் பார்வையிலேயே வசீகரித்தது முகில் அவர்களின் இப்புத்தகம்.












இரண்டே இரவுகளில் படித்து முடித்துவிட்டேன். இப்புத்தகத்தை என் வீட்டில் பார்த்த பக்கத்து வீட்டுப்பெண் சொன்னாள், அவளது கல்லூரியில் ஒரு சுற்றுசுற்றிய புத்தகம் என்று; குறிப்பாக கிறிஸ்த மாணவர்கள். உண்மைதான். உலகம் நமக்கு எத்தனையோ விசயங்களைச் சொன்னாலும், நாம் எல்லாவற்றிலும் சுவாரசியம் காட்டுவதில்லை. நமக்குள் இருக்கும் அந்த மிக நுண்ணிய வடிகட்டியைத்தான் Super Stories என்று எனது முந்தைய புத்தக அறிமுகத்தில் சொல்லி இருந்தேன்.

அப்படி ஒரு வடிகட்டிதான் என்னையும் இழுத்தது.
5000 வருட யூதர்களின் சரித்திரத்தை நுட்பமாக கால வரிசையில் விளக்கும் புத்தகம். முதலில் யூதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சகோதரர்களுக்கும் என்னதான் பிரச்சனை? முப்பெரும் கண்டங்களும் சந்திக்கும்
- மனிதர் வாழும் பூமியின் மையமாகக கருதப்படும் - முப்பெரும் மதங்கள் தோன்றிய - மனித இனத்தின் மிகப் பெரிய போர் (சுமார் 150 ஆண்டுகள்) நடக்க காரணமான - எங்கேயோ இருக்கும் இந்த சேகர் ஆண்சிசுக்கொலை என்று கவிதை படைக்க காரணமான எருசலேம் எப்ப எப்ப மற்றும் இப்ப யாருக்குச் சொந்தம்? படித்துப் பாருங்கள்.

யூதேயா, எரிக்கோ என்ற இடங்கள் பொதுவான விவிலிய வார்த்தைகள். இதுபோன்ற விவிலிய இடங்கள் பற்றிய வரைபடம் தேடி நான் 10 வருடங்களுக்கு முன்பு அலைந்தேன். 50 ஆண்டுகள் முந்திய விவிலியம் ஒன்று கிடைத்தது. அதில் இருந்த வரைபடங்களும், மக்களின் புகைப்படங்களும் இப்புத்தகம் படித்து முடித்ததும் கொஞ்சம் வித்தியாசமாகவும், தெளிவாகவும் தெரிந்தன.

அரபு நாடுகளுக்கு இடையே சம்மந்தமில்லாமல் ஒட்டிகொண்டிருக்கும் உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் தோன்றிய விதம் பரிட்சயமில்லாதவர்கள் கண்டிப்பாக இப்புத்தகம் படியுங்கள். தேசம் பிறந்த முதல் நாளே யுத்தம். இன்றைய உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவுத்துறை. ஆணுறை அசிங்கம். இன்றுவரை ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை. 2000 வருடங்களாக இடிந்துபோன கோவிலின் ஒற்றைச் சுவருடன் அழுதுவரும் மக்கள்.

Green House Effet வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்த புத்திசாலித்தனம். என்றோ ஒருநாள் இறைத்தூதர் வருவார் என எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் மக்கள். இஸ்ரேல் நாடு, யூத மதம், யூத மக்கள், ஹீப்ரு மொழி என்று பிரித்துப் பார்க்கமுடியாத ஒரு நிலப்பரப்பு.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலின் ஆட்சியாளர்களின் வரிசையும், நிகழ்வுகளும் இப்ப எனக்கு அத்துப்பிடி. கொஞ்சம் அமெரிக்காவும்.

ஒலிம்பிக் படுகொலைகள் பற்றி இந்தப் புத்தகமும் சொல்லாததில் ஒரு சிறுவருத்தம். Lorry Collins இன்னொருவருடன் எழுதிய O Jerusalem புத்தகம் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லவும்.
ஒரு தமிழ் திரைப்படத்கின் பாடல்வரி இப்படி: "ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை கொல்லாதே". ஓரினத்தின் வலியைத் வள்ளுவனின் தமிழன் கூடவா உதாசீனப்படுத்துகிறான்?

- ஞானசேகர்

Thursday, May 07, 2009

35. From Beirut to Jerusalem


பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!


We feel we are stuck in an impossible situation and nobody has any solutions. It is like we are in a dark tunnel, and when we look around the only light we see is the train that is coming at us.

- Amnon Rubinstein

When I am weak, how can I compromise? When I am strong, why should I compromise?

- A typical tribal logic

Me and my brother against our cousin. Me, my brother and my cousin against the stranger.

- An Arabic proverb

----------------------------------------------
புத்தகம் : From Beirut to Jerusalem
ஆசிரியர் : Thomas Loren Friedman
பக்கங்கள் : 576
விலை: ரூ.595/-
பதிப்பகம்: Anchor Books

----------------------------------------------




















இரண்டு வருடங்களுக்கு முன், இதே தளத்தில் The Lexus and the Olive tree என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தபோது, இப்புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். என்னைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அது நினைவிருக்கலாம்.

1979 முதல் ஆறு ஆண்டுகள், லெபனான் உள்நாட்டு யுத்த காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து எழுதப்பட்ட புத்தகம் இது. மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மேற்காசிய நாடுகள் என்ற அறியப்படும் மூன்று கண்டங்களும், முப்பெரும் மதங்களும் இணையும் நிலப்பரப்பில் நடக்கும் பிரச்சனைகள்தான் இப்புத்தகம்.

வரலாறுகள் எழுதத் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரச்சனைகளுடன் பயணிக்கும் இந்நிலப்பரப்பைப் பற்றி 1882ல் Zionism கொள்கை(உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள், தமது பூர்வீகமான இன்றைய இஸ்ரேலை நோக்கிக் குடியேற ஆரம்பித்தல்) அறியப்பட்டதில் இருந்து 1994 வரை சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றிப் பட்டியல் மட்டும் கொடுத்துவிட்டு, நேரடியாக விசயத்திற்கு வந்துவிடுகிறது இப்புத்தகம்.

சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேல் என்ற நாடு எப்படித் தோன்றியதில் இருந்து நடந்த நிகழ்வுகளைக் கூறுகிறது இப்புத்தகம். நிகழ்வுகள் என்றால், நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன் - லெபனான் பிரச்சனைகள் அல்ல. அதற்கு பழைய செய்தித்தாள்களே போதுமானவை. ஆசிரியர் பார்த்த, கேள்விப்பட்ட, பேட்டிகண்ட நிகழ்வுகளின் தொகுப்பு. காலவரிசையில் இல்லாமல் இடவரிசையில் சொல்லப்பட்ட புத்தகம்.

ஸெமாக் தெருவின் கைதி, கம்பளக்காரர், திருவாளர் இரண்டு சதவீதம் என்று உள்ளூர் பட்டப்பெயர்களுடன் சில தலைவர்கள் அறிமுகப்படுத்தப்படும் விதமும், சதாம் உசேனின் பெயரில் ஒருபாதியை வானொலியில் அறிவித்து நீக்கியது போன்ற செய்திகளும், அப்பெயர்களின் பின்னணியும் நிச்சயமாக நல்ல தகவல்கள். உலகம் முழுக்க பல பிரச்சனைகள் இருக்க, இஸ்ரேல் பிரச்சனையில் மட்டும் பெரும்பாலான நாடுகள் சுவாரசியம் காட்டுவதை Super Stories என்ற தத்துவத்தை வைத்து விளக்கிய விதமும், மொத்த லெபனான் பிரச்சனையையும் Levantine என்ற ஒற்றை வார்த்தையில் விளக்கிய எளிமையும் ஆசிரியரின் மிகப்பெரிய திறமை.


















மத்திய கிழக்கு பிரச்சனைகளுக்கான முப்பெரும் காரணங்களை ஆசிரியர் முன்வைக்கும்போதும், அவர் அனுபவித்த மற்றும் கேள்விப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்தி சொன்னபோதும் ஒரு நல்ல புத்தகத்தைத்தான் படிக்கி்றேன் என உணர்ந்தேன்.

வழக்கம்போல் ஆசிரியரின் எழுத்தில் மெல்லிய நகைச்சுவையும் கூடவருகிறது. உதாரணமாக, ஒரு தலைவரின் மனைவியைப்பற்றி சொல்கிறார்:

"இவள் ஒருத்தி போதும்; எந்த ஓர் ஆணும் பெய்ரூட் (Beirut) நகர வாழ்க்கையைச் சகித்துக் கொள்வான்".

ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக ஒரு செய்தியைச் சொல்வது ஆசிரியரின் வழக்கம் (என்னைப் போலவே). அது பெரும்பாலும் ஒருவர் சொன்ன கருத்தாகவோ, செய்தி ஊடகங்களின் வாசகமாகவோ, நாடக உரையாடல்களாகவோ இருக்கும். இண்டிபதா (Intifada) பற்றி சொல்லும் கட்டுரைக்கு முன்னுரையாக, "ஜெருசலேமுக்கும், டெல் அவிவுக்கும் (Tel Aviv) இடையே கல்லெறியும் தூரம்தான்" என்ற விளம்பரத்தை இஸ்ரேலிய சுற்றுலா வளர்ச்சித்துறை நீக்கிய செய்தியைச் சொல்லுவார். இதுபோன்ற அழகியலும், பரந்த உலக அறிவும், நகைச்சுவையும் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.உங்களுக்கு இண்டிபதா பரிட்சயமாக இருந்தால் கண்டிப்பாக நகைத்திருப்பீர்கள்.

உடலுறவு கொள்ளாமல் குழந்தை கேட்கும் தம்பதியரை மேற்கோள்காட்டி, இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆசிரியர் முன்வைக்கும் தீர்வுகள் ஆழமான சிந்தனைகள். மத்திய கிழக்கின் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் வார்த்தைகளை அழுத்தி அடிக்கோடிட்டு வைத்திருக்கி்றேன், புத்தகத்திலும். 2300 வருடங்களுக்கு முன் குடியரசு புத்தகத்தில் பிளேட்டோ சொன்ன அதே மாதிரி தலைவன் தான்; ஆனால் முகத்தில் அடிப்பதுபோல், அவனுக்கு ஒரு மோசமான கெட்டவார்த்தை.

லெபனானையும், இஸ்ரேலையும் இப்புத்தகம் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஏமன், சிரியா, ஜோர்டான், ஈராக் போன்ற நாடுகளும் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன. உதாரணமாக, யாசர் அராபத் ஜோர்டானில் இருந்து பெண்வேடமிட்டு தப்பிவந்ததற்கு அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக இருந்ததும், எங்கோ நடக்கும் ரஷ்யப் புரட்சியும், உலகப் போரும் எப்படி பாலஸ்தினத்தைக் குத்திப்பார்த்தன என்பதெல்லாம் காலவரிசை புத்தகங்கள் விளக்குவதில்லை. இந்த இடவரிசை புத்தகம் சொல்கிறது. மொத்தத்தில் இது ஒரு தசாவதாரக் கதை; எல்லாக் கமலகாச நாடுகளையும் புரிந்துகொள்வது படிப்பவரின் ஆர்வத்தைப் பொருத்தது.

காட்டின் அடிப்படை விதிகள்கூட பின்பற்றபடாத ஒரு நகரத்தைப் பற்றி, ஒரு மனித இனத்துக்கு நடுவே ஓர் அந்நியனாக தொலைந்துபோகும் அனுபவம் தரும் ஒரு நாட்டைப் பற்றி,மனிதன் வாழும் உலகின் மத்தியில் நடக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளை என்னைப்போல் 12 பக்க Indexயையும் சேர்த்து படித்துவிட்டு,மிகப்பெரிய ஒரு புதிரைப் புரிந்துகொண்ட பெருமிதத்தில்,அழும் சுவரில் செல்போன் வைத்து அழும் யூதனுக்காகவும், நாடின்றி அலையும் பாலஸ்தீனனுக்காவும் மனிதன் என்ற முறையில் ஏதாவது செய்வோம்,நம் காலடியில் மிதிபட்டுக் கொண்டிருக்கும் சகதமிழனை நாடேற்றியபிறகு.

"வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால் நாம் வரலாற்றில் இருந்து ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்" என்று மதன் சொன்னதுமட்டும் நீடித்தால், நாட்டுக்குநாடு எல்லையில் நின்றுகொண்டு சுவர்கட்டும் வேலையில்தான் எல்லாமனிதர்களும் ஈடுபட வேண்டியிருக்கும்.

பின்குறிப்புகள்:

1) நான் முதலில் சொன்னதுபோல, இப்புத்தகம் பிரச்சனைகளின் ஆரம்பப்புள்ளியில் இருந்தது தொடங்குவதில்லை. இஸ்ரேலில் இருந்துதான் தொடங்குகிறது. நமக்கு எல்லாம் பரவலாக தெரிந்த முனிச் ஒலிம்பிக் படுகொலை பற்றி ஆசிரியர் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை. இரு சகோதரரர்கள் ஆரம்பித்து வைத்த ஆரம்பப்புள்ளி பற்றி ஒரு சூப்பர் புத்தகம் தமிழில் படித்தேன். அடுத்த விமர்சனம் அதுதான்.

2) மற்றபடி ஈரான்,ஈராக்,குவைத்,சவூதி பற்றிப் படிக்க பா.ராகவன் அவர்களின்"ஆயில்ரேகை" கும்மு புத்தகம்.

3) பாலஸ்தீன பிரச்சனை மட்டும் படிக்க என்.சொக்கன் அவர்களின் ஹமாஸ் புத்தகம்.

4) மத்திய கிழக்கைப் பற்றி நான் படித்த புத்தகங்களில் சொல்லப்படாத ஒருவிசயம் உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க. அதுதான் Quartet.

5) இதே பிரச்சனையை மையமாகக் கொண்ட ஒரு புத்தகம் தமிழிலும் உண்டு. நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் சார். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன்.

6) இப்பதிவே ரொம்ப பெரிதாக போய்விட்டதால், ஆசிரியர் சொன்ன நிகழ்வுகளில் ஒன்றைப் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

- ஞானசேகர்

Friday, April 24, 2009

34. தேர்ந்தெடுத்த கதைகள்

'எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி இரைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்து ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடி வாங்கி இருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண்.

என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.'

- கி.ராஜநாராயணன்


---------------------------------------------
புத்தகம் : தேர்ந்தெடுத்த கதைகள்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியிட்டோர் : அன்னம்
வெளியான ஆண்டு : 2007
விலை : ரூ.100

---------------------------------------------

கரிசல் காட்டுக்காரர் கி.ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த பதினான்கு சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு இப்புத்தகம். கி.ரா.வின் எழுத்து பற்றி எல்லாம் நான் ஒன்றும் பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை.

இதில் இருக்கிற கதைகள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன. அடிப்படையில் எல்லாமே கரிசல் மனிதர்களின் வாழ்க்கைப் பின்புலத்தை ஆராயும் விதமாகவே அமைந்திருக்கின்றன. எளிமையான வாழ்க்கையை வாழும் மனிதர்களின் உணர்வுகளைச் சொல்லும் கதைகள் இவை.

பத்தாம் வகுப்பிலோ, பதினொன்றாம் வகுப்பிலோ தமிழ்த் துணைப்பாடத்தில் பாடமாக நான் படித்த 'கதவு' சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பத்தாண்டுகளில் நம் வாசகத்தன்மையில் நடந்துள்ள மாற்றம் இது போன்ற கதைகளைப் படிக்கும் போது புரிகிறது.

'திரிபு' என்றொரு சிறுகதை. ஒரு குழந்தையின் மனநிலையில் ஏற்படுகிற மாற்றத்தை ஆராய்கிறது. எப்படி இவரால் இவ்வளவு துல்லியமாக விவரிக்க முடிகிறது என்றொரு ஆச்சரியம் நம்மோடு தொற்றிக்கொள்கிறது.

வயோதிகக் காலத்து நட்பு சொல்லும் பழைய காதல் அனுபவம் பற்றிப் பேசுகிறது 'அரும்பு' என்னும் சிறுகதை. எல்லா மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு முதல் காதல் அனுபவம் இருக்கத்தான் செய்கிறது என்று யதார்த்தம் சொல்லித் தருகிறார் கி.ரா.

தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறை பற்றித் தெளிவாகச் சொல்கின்றன இந்தக் கதைகள்.

சிவப்புச் சிந்தனைகளைப் பூடகமாக ஆங்காங்கே சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

'கரிசல்க்காட்டில் ஒரு சம்சாரி' என்றொரு கதை, சிறுகதை வடிவில் இல்லாமல் ஓர் ஓட்டமாக ஒரு சம்சாரியின் கதையைச் சொல்லிக் கொண்டே போகிறது. இந்த உத்தியே மிகவும் புதுமையாய் இருந்தது.

கி.ரா. வின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், என் போன்ற கி.ரா.வை அதிகம் வாசித்திராத வாசகர்களுக்கு இன்னுமொரு படியாக இருக்கும்.

-சேரல்

Saturday, March 28, 2009

33. அடியாள்

--------------------------------------------
புத்தகம் : அடியாள்
ஆசிரியர் : ஜோதி நரசிம்மன்
வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ 75
--------------------------------------------


















நண்பன் ஞானசேகர் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகம் இது.

புத்தகங்களை அவசரகதியில் படித்து, வேகமாக முடிப்பது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பது என் கருத்து. படிக்கும்போதே ஆழமாக சிந்திக்கும் வாய்ப்பைப் புத்தகங்கள் வழங்குகின்றன என்றே எண்ணுகிறேன். ஆனால், இந்தப் புத்தகத்தை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன், இடையிடையே தீர்க்கமான சிந்தனைகளுடனே.

'இருமுறை சிறை சென்று மீண்டவரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. அடியாள் கூட்டம், சிறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகள், இவர்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாகச் சிதறப் போகிறது. எச்சரிக்கை!' என்ற வாசகங்களோடு நம்மை வரவேற்கிறது புத்தகம்.

ஆம். இப்புத்தகத்தின் ஆசிரியர் இரண்டு முறை சிறை சென்று மீண்டுள்ளார். ஒருமுறை அடியாளாக ஓர் அரசியல் அடிதடிக்காகவும், மறுமுறை ஒரு போராளியாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவும் சிறை கண்டுள்ளார். இரு முறை சிறை சென்ற அனுபவங்களையும், அங்கே தான் கற்றுக்கொண்ட விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், தன் பின்புலம் இவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் இவர். வன்முறை மீதான காதல், சமுதாயத்தின் நிழல் மனிதர்களுக்குள் இருக்கும் சில நல்ல குணங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டு அரசியல் அடியாளாகிறார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தேர்தல் முடிவு இவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தோடு துவங்குகிறது புத்தகம்.

சட்டப்பேரவை தேர்தலில், இவர்கள் தொகுதியில் இவர்களின் கட்சியும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இரண்டு கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றியும் தோல்வியும் கண்டிருக்க, இரு தரப்புக்கும் ஏற்பட்ட சண்டையில், எதிர்ககட்சியாட்களின் வீடுகளை அடித்துச் சேதப்படுத்துகிறார்கள் இவர்கள். மேலிடத்தின் உத்தரவுப்படி இவர்களைத் தேடத்தொடங்குகிறது காவல்துறை. சில நாட்கள் ஓடி ஒளிந்து, பின் சரணடைந்து விசாரணைக்காவலில், கடலூர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் இவர்கள்.

இறுதிவரை இவர் எந்தக் கட்சி என்பதைச் சொல்லா விட்டாலும் வருட விவரங்களை வைத்து அனுமானிக்க முடிகிறது. அது இவர் சொல்ல வருகிற விஷயங்களுக்குத் தேவையில்லாதது என்பது படிக்கின்ற போது புரிகிறது.

முதன்முறையாக சிறைக்குச் செல்பவனின் உணர்வுகள், பயம், ஆச்சர்யம், சிறை அறிமுகப்படுத்தி வைத்த வித்தியாசமான மனிதர்கள், சிறை வழக்கங்கள், சிறையில் நடக்கும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், சிறையின் சூழ்நிலை என்று பல விஷயங்களைச் சொல்லிப் போகிறார்.

பின் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து, சில காலங்கள் அந்த அரசியல் வட்டாரத்தோடு வாழ்ந்துவிட்டு, பின் தனக்கான களம் இதுவல்ல என்று புரிந்துகொண்டு, தன் ஆதர்ஷ புருஷனிடம் (அந்தக் குழுவின் தலைவர்; இவர்களுக்கான எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்ட பெரும்புள்ளி) சொல்லிக்கொண்டு அங்கிருந்து விலகுகிறார். இந்த மாற்றத்துக்குக் காரணமானவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் எழுத்துகள்.

விலகியபின் தமிழர் தேசிய இயக்கமே அவருக்கான புகலிடமானது. பழ நெடுமாறனைத் தன் தலைவனாகக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்கிறார் ஆசிரியர். சிறுவயதில் இருந்தே தான் ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் ஆசிரியர். சிறையில் பெற்ற அனுபவங்கள் அவரின் இந்த எண்ணத்தை வலுப்பெறச்செய்தன. பின் திருமணம், சிற்றிதழ், குழந்தை, என்று உருண்டோடுகிற வாழ்க்கை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தின் மூலம் 2008ல் இவரை மீண்டும் சிறையில் வைத்து அழகு பார்க்கிறது. இம்முறை புழல் சிறை!

அங்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் கடலூரில் பெற்றவற்றை விட மாறுபட்டவையாக இருக்கின்றன. சகல விதமான வசதிகளோடு இருக்கின்றது புழல் சிறை. (வெளியில் இருந்து பார்த்த எனக்கே அந்த உணர்வு ஏற்பட்டது உண்மை!)

புத்தகத்தை வாங்கியவுடன் எனக்குப் புதுமையாகத் தோன்றிய விஷயங்கள் பின்னிணைப்பில் இருந்த 'கைதிகளின் உரிமைகள்', 'கைதிகளைப் பார்க்க விரும்புபவர்கள் அளிக்க வேண்டிய விண்ணப்பம்', 'முதல் தகவல் அறிக்கைப் படிவம்' இவைதான்.

புத்தகம் முழுவதும் சிறைகள் பற்றிய பல புதிய விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். 'பரோலில்' வருவதற்கான விதிமுறைகள், கைதிகளைச் சிறை விட்டு சிறை மாற்றும் 'கமான்' வழக்கம், சிறைக்கைதிகளைப் பார்ப்பதற்கான சம்பிரதாயங்கள் போன்ற அறிமுகமில்லாத செய்திகளை நம் முன் வைக்கிறார்.

செய்த குற்றங்களுக்காக வருந்தும் குற்றவாளிகள், செய்யாத குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள், காவல் துறையால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்கள் என்று பலவிதமான கைதிகளைக் கொண்டிருக்கிறது சிறை வளாகம்; கைதிகளின் மேல் தங்கள் கோபங்களுக்கான வடிகால் தேடும் காவலர்கள், சிறைக்குள் தங்கள் வியாபாரத்தை நடத்தும் சில காவலர்கள், கைதிகள் மீது இரக்கம் காட்டும் சிலர் என்று வித்தியாசமான காவலர்களையும் கொண்டிருக்கிறது.

தமிழகக் குற்றவியல் பதிவேடுகளில் இடம்பிடித்த முக்கியமான குற்றவாளிகள் சிலரையும் இவர் சந்தித்திருக்கிறார். 1998ல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவர், அந்த நிகழ்வு பற்றிச் சொல்லும்போது பெரும் அலைகளைக் கிளப்புகிறது நம் மனதில்.

போராட்டத்தில் ஈடுபட்டபோது தொடரப்பட்ட வழக்கில் வெளிவந்த இவர், தன் முதல் அடிதடி வழக்கிலிருந்து இன்னும் விடுதலையாகவில்லை. 'வாய்தா'க்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம் நீதித்துறையின் மந்தமான் செயல்பாட்டிற்கு இதை ஒரு உதாரணம் என்றும் கூடச் சொல்லலாம்.

புத்தகத்தில் என்னை மிகவும் வியக்க வைத்த அம்சங்கள், ஆசிரியரின் உற்று நோக்கும் தன்மை, உணர்ந்து கொள்ளும் பக்குவம், தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் பகுத்தறிவு! இப்படிப்பட்டவர் அரசியல் அடியாளாக இருந்திருக்கிறார் என்பது கொஞ்சம் நெருடினாலும், அவருக்கு அது ஒரு பெரிய அனுபவமாக அமைந்ததென்பதே உண்மை.

இந்தப் புத்தகத்தை இவர் எழுதியதற்கான நோக்கத்தைப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் தெளிவாகத் தருகிறார்.

விடுதலையான பின் தன் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் இவர் வேண்டிக்கொள்வதெல்லாம் சிறையில் இருந்து வந்தவர்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதாரண வாழ்க்கை வாழும் உரிமையை வழங்க வேண்டும் என்பதே. அந்த மாற்றம் நம் மனத்தில் விரைவில் தோன்றட்டும்.

பின்குறிப்பு:

ஆசிரியர் ஜோதி நரசிம்மன் தற்போது பத்திரிகையாளராகவும், மனித உரிமை ஆர்வலராகவும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான போராளியாகவும் இருந்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ படித்தவர்.

- சேரல்

Saturday, March 21, 2009

32. மிதமான காற்றும் இசைவான கடலலையும்

--------------------------------------------------
புத்தகம் : மிதமான காற்றும் இசைவான கடலலையும்
ஆசிரியர் : தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : தமிழினி
வெளியான ஆண்டு : 2006
விலை : ரூ 150

--------------------------------------------------

'பூ' திரைப்படம் பார்த்த பின் அதன் மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பித் தேடத் தொடங்கினேன். 'உப பாண்டவம்' போன்ற தீவிர தேடல் இல்லை என்றாலும், இவர் எழுத்துகள் மீதான பார்க்காத காதலும் அடங்காமலே இருந்தது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தாரிடம் இவரது இந்தச் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது.

'நேருக்கு நேரான வார்த்தைகளில் நிகழ்வுகளை ஊடறுத்து மனங்களின் அடுக்குகளுள் தத்தளிக்கும் வாழ்வை இழுத்து வந்து கேள்விக்குள் நிறுத்தும் கதைகள்'

'கேலியும், சிரிப்பும், விளையாட்டுமாய், வறுமையைக் கடந்து செல்லப் பழகிவிட்ட ஒரு வாழ்வைப் பூச்சின்றிப் பேசும் கதைகள்'

இந்த வரிகள்தான் புத்தகத்தின் பின் அட்டையில் இடம்பிடித்திருந்தன.

உண்மைதான்! சமூக அளவீடுகளில் பின் தட்டில் வாழ்கிற மக்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.

கற்பனையைக் கொஞ்சம் வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, யதார்த்தத்தின் கைப்பிடித்து அழைத்து வருகிறார். 32 சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில், முதல் 13 சிறுகதைகள் என்னுள் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. சிறு நிகழ்வுகளை ஊடறுத்துக் காட்டும் விளக்கக் கதைகளாகவே அவை எனக்குத் தோன்றின. ஆனால், அதன் பின் வந்த கதைகள், வாழ்வியல் அடிப்படைத் தத்துவங்களை எளிய மனிதர்கள் மூலம் பேசத்தொடங்கிவிட்டன.

இந்தக் கதைகள் பொதுவாக, தென் மாவட்டங்களையே கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி செய்யும் மனிதர்களின் வாழ்க்கை, கணவன் மனைவி இடையேயான மனப்போராட்டங்கள், ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் இவற்றைச் சுற்றியே நகர்கின்றன கதைகள்.

சாயம் பூசாத நிஜ வாழ்க்கை, பல இடங்களில் நம்மைத் திகைக்க வைக்கிறது. எண்ணெய்ப்பசை மின்னும் முகங்களில் கொஞ்சம் புன்னகையையும் ஓட்ட வைத்துப் போகும், தீக்குச்சி அடுக்கும் பெண்களைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஒரு போராளியாக, கவிஞனாக இருந்தவனை, தான் படித்த புத்தகத்தின் 26ஆம் பக்கத்திலயே வருடக்கணக்கில் நிறுத்தி வைத்துவிட்ட குடும்ப வாழ்க்கையைச் சாடுகிறது '26 ஆம் பக்கத்து மடிப்பு' என்ற சிறுகதை.

தனக்கென்ற கனவுகளையும், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் கொண்டலையும் ஒருத்தியின் வாழ்வில் வருகிறான் 'குதிரை வண்டியில் வந்தவன்'; அவள் மீது மிகப் பிரியமாக இருக்கிற கணவன். ஆனாலும் எதிர்பார்ப்புகள், சின்னஞ்சிறு ஆசைகள் உடைக்கப்படுகிற போது அவள் சிதைந்து போகிறாள். இருவருக்கும் இடையேயான உணர்வுகளைச் சொல்லிப்போகிறது இச்சிறுகதை.

தன் பரம்பரை வாளோடு சிறு வயதிலிருந்தே பேசிக்கொண்டு வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்கிறது 'வாளின் தனிமை'. தென் மாவட்டங்களில் ஊடுருவி இருக்கும் சாதீய நோயின் பின்புலத்தையும் விளைவுகளையும் ஆராய்கின்றன, 'சொல்ல வருவது' மற்றும் 'ஒரு பிரம்பு ஒரு மீசை' சிறுகதைகள்.


வாழ்க்கையைப் படைப்பாக்கும் போது மட்டுமே அதில் உயிரோட்டம் இருப்பதாகப் படுகிறது.

'கதைகளைவிட வாழ்க்கை மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக அச்சமும் வியப்பும் ஊட்டுவதாக - கதைகளைப் பார்க்கினும் சுவாரஸ்யமானதாக முக்கியமானதாக இருப்பதாக நினைத்த ஒரு நாளில் கதைகள் என்னிடமிருந்து சொல்லாமலே விடைபெற்றுச்சென்றன' என்ற முன்னுரையில் இடம்பெற்ற தமிழ்ச்செல்வனின் இந்த வரிகள் சத்தியமானவை என்றே தோன்றுகிறது.

பின் குறிப்பு 1:

'பூ' திரைப்படத்தின் மூலக்கதை 'வெயிலோடு போய்' ஆறு பக்கங்களுக்கே நீள்கின்ற ஒரு சிறுகதை. ஒரு சிறுகதையையோ, புதினத்தையோ திரைப்படமாக்கும் வித்தை இயக்குனர் சசிக்கு இலாவகமாக வருகிறது. புதுமைப்பித்தனின் 'சித்தி' எனும் புதினத்தை 'உதிரிப்பூக்கள்' என்ற பெயரில் படமாக்கினார் இயக்குனர் மகேந்திரன். புதினத்தின் பாத்திரங்களையும், கதையின் களத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தன் போக்கில் கதையை மாற்றிக்கொண்டார். இயக்குனரின் 'முள்ளும் மலரும்' திரைப்படமும் இப்படி அமைந்ததே! அதே போன்று தான் சசியும் இந்தக் கதையை இலாவகமாக கையாண்டு ஒரு தரமான திரைப்படத்தை வழங்கியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களே சிறுகதையில் கிடையாது. குறிப்பாக கதாநாயகனின் தந்தை பாத்திரத்தைச் சொல்லலாம்.

பின் குறிப்பு 2:

32 சிறுகதைகளே கொண்ட இந்தத்தொகுப்பே இவர் தன் வாழ்க்கையில் இதுவரை எழுதியிருக்கிற எல்லா கதைகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

பின் குறிப்பு 3:

இந்த வலைப்பூவின் நோக்கம் நாங்கள் படித்த நல்ல நூல்களையும், நல்ல படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துவதே! இந்தப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் அந்த சந்தோஷம் எனக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

- சேரல்

Monday, February 16, 2009

31. From Third World To First

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

I preferred to climb on the shoulders of others who had gone before us - Lee Kuan Yew

------------------------------------------------
புத்தகம்: From Third World To First (The Singapore Story : 1965 - 2000)
ஆசிரியர்: லீ குவான் யூ (சிங்கப்பூரின் முதல் பிரதமர்)
விலை: 35 USD
பக்கங்கள்: 700

------------------------------------------------

ஐந்து வருடங்களுக்கு முன், குமுதத்திலோ அல்லது ஆனந்த விகடனிலோ நடிகர் விவேக் அவர்களின் பேட்டி ஒன்றில், உழைப்பின் உன்னதம் உணர மேற்கோள் காட்டப்பட்டபோதுதான் எனக்கு இப்படி ஒரு புத்தகம் அறிமுகமானது. பல இடங்களில் விசாரித்தும் இப்புத்தகம் கிடைக்கவில்லை. ஒருமுறை Landmarkல் பார்த்தபோது விலை 1500 ரூபாய்க்கு மேல் இருந்ததால் வாங்கவில்லை. வெளியூரொன்றின் நூலகத்தில் பார்த்தபோது, அவசர அவசரமாக ஐந்து நாட்களில் படித்து முடித்த புத்தகமாகிவிட்டது. பதிப்பகத்தாரைக்கூட குறித்துக் கொள்ளவில்லை, அப்படி ஓர் அவசரம். விவிலியத்திற்குப் பிறகு நான் படித்த தடிமனான புத்தகம் இது!

எப்படி வீடு கட்டுவது, எப்படி எந்திரம் பழுது பார்ப்பது, எப்படி புத்தகம் எழுதுவது என்று உங்களுக்குச் சொல்ல பல புத்தகங்கள் உள்ளன. ஆனால், எப்படி ஒரு நாட்டை உருவாக்குவது என்றும், எப்படி நாட்டு மக்கள் வாழ வழி செய்வது என்றும் சொல்லித்தரும் புத்தகத்தை நான் பார்த்ததில்லை. இது எனது இப்பதிவின் ஆரம்பம் அல்ல. புத்தகத்தின் முதல் பத்தி! ஆம், 1965ல் மலேசியாவில் இருந்து எந்தவொரு இயற்கைவளமும் இல்லாமல் பிரிந்துவந்த 640 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு, ஆசியாவின் பணக்கார நாடான கதைதான் இப்புத்தகம்.

1966ல் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும்போது, ஓர் உயர் அதிகாரியின் தெளிவில்லாத பேச்சால், இனக்கலவரம் ஆரம்பிக்க ஆசிரியர் சமாதனப்படுத்தும்போது, "புறாவுக்கெல்லாம் போரா?" என்றுதான் தோன்றியது. இந்தியா மற்றும் எகிப்து நாடுகளிடம் இராணுவ உதவி கேட்கும்போது, நேரு மற்றும் நாசர் மறுத்து அனுப்பும் பதில்களை எதிர்பார்த்ததே என்று கூறும்போது, ஆசிரியரின் மனபலத்திற்குச் சபாஷ்.

சூரிச், பிராங்க்ஃபர்ட், நியூ யார்க், லண்டன், சான் ஃபிரான்ஸிஸ்கோ, சுவிஸ் நகரங்களுக்கு இடையே சிங்கப்பூரைத் திணித்து பணவர்த்தகத்தை 24 மணிநேர சேவையாக மாற்றும் யுக்தியை முக்கால் பக்கத்தில் வர்ணிக்கும்போது பிரமித்துப்போய் மீண்டும் மீண்டும் படித்தேன். சிங்கப்பூரைப் ஃபைனான்ஸியல் சென்டராக மாற்ற மேற்கொண்ட இதுபோன்ற நடவடிக்கைகள் அருமையான திட்டமிடுதலாக இருக்கும். தனக்கு மிக அருகில் இருக்கும் மிகப்பெரிய போட்டியான ஹாங்காங்கைப் பற்றி இப்படி கூறுகிறார் ஆசிரியர்: "In Hong Kong, what is not expressly forbidden is permitted. In Singapore, what is not expressly permitted is forbidden".

மலாய், மான்டரின், தமிழ் என பலமொழி பேசும் மக்களின் மொழிப்பிரச்சனையை, சிங்கப்பூர் எப்படி தீர்த்துக்கொண்டது என்று படித்தபோது, சிங்கப்பூர் ஆட்சியாளர்களின் தெளிவான அணுகுமுறை அருமை. 'தேசியமொழி' என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இப்புத்தகத்தின் 'Many Tongues, One Language' என்ற பகுதியை ஒருமுறை படிப்பது நல்லது.

ஆசிரியர் பிரதமரானவுடனும் கூட, வீதிகளில் வந்து சுத்தம் செய்த விசயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். யூனியன் தலைவரான சுப்பையா என்ற தமிழரைப் பற்றி சொல்லும்போது, அவரின் கண்ணைக் கிண்டல் செய்யாமல் ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். ஓர் ஆட்சியாளரை ஆர்க்கெஸ்ட்ரா குழுத்தலைவருடன் ஒப்பிடும்முறையை நான் பல புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்; இப்புத்தகத்திலும்.

புத்தகத்தின் இரண்டாம் பாதி, சிங்கப்பூர் உலக அங்கீகாரம் பெற பிற நாடுகளுடன் கொண்ட நட்புறவைப் பற்றியது. இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது, நேரு முதல் நரசிம்மராவ் வரை பெரும்பாலும் எல்லா பிரதமர்களைப் பற்றியும் கூறுகிறார். புத்தகம் எழுதப்பட்ட அந்தக் காலத்தில்கூட (1990) மன்மோகன்சிங், சிதம்பரம் அவர்களை ஆசிரியர் தனியே புகழ்ந்துள்ளார். ஆசிரியருக்கு நேரு கொடுத்த முதல் விருந்தும், இந்திராகாந்தி பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இப்புத்தகம் படிக்கும்போது, 'A view from the outside' புத்தகத்தில் சிதம்பரம் அவர்கள் சொன்னது ஞாபகம் வந்தது: "சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய மாதிரியை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது".

-ஞானசேகர்