Thursday, November 19, 2009

52. பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

Not to have seen the cinema of Roy would mean existing in the world without seeing the sun or the moon.

- Akira Kurosavoa

------------------------------------------------------------------
புத்தகம்: பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: 90 ரூபாய்
பக்கங்கள்: 151

------------------------------------------------------------------

சத்யசித் ரே இயக்கி முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali). வங்காள மொழி (Bengali). 1955 ம் ஆண்டு. மேற்கு வங்காள மாநில அரசு தயாரித்த திரைப்படம். அதன் பொன்விழா ஆண்டிற்குப்பின், அம்மாபெரும் படைப்பைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகமே இது. இயக்குனர் மகேந்திரன் அவர்களின் 'நடிப்பு என்பது' அடுத்து நான் படித்த சினிமா பற்றிய புத்தகம் இது.

பழைய தெரிந்தவர்களின் தழும்புகள் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளும் பக்குவம். லோனாவாலா நகரின் குளிரின் நடுவே நீர்வீழ்ச்சியின் காலடியில் கேட்கும் தவளை சத்தம். எறும்புகளோடு வரிசைதவறியோடும் கோடை வெக்கை. நல்லதங்காளின் கேசம்போல் மிதக்கும் கிணற்றுப்பாசி. இப்படி பல தருணங்களில் எஸ்ரா சொன்ன அனுபவங்களைத் தேடிப்போய் ரசித்திருக்கிறேன். உலகின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு வீட்டுச் சன்னலருகில் இருக்கும் தொலைபேசிக்கு அழைத்து இரண்டு நிமிடங்கள் பேசிமுடிக்கும் அவசரமான தட்டை உலகத்தில், வீட்டின் சன்னலில் இருந்து உலகைத் தொடங்கும் அற்புதப் பால்யப்பருவ நினைவுகளை வருடிச் செல்லும் எழுத்து அவருடையது. நான் கவனிக்காத ஏதோ ஒன்றை எஸ்ரா கவனித்திருப்பார்; அல்லது இப்படியும்கூட கவனிக்கலாம் என்றாவது சொல்லியிருப்பார். இந்த நம்பிக்கைதான் இப்புத்தகம்.



எனக்கு இப்படத்தை அறிமுகப்படுத்திய நபர் அல்லது ஊடகம் பற்றி எனக்கு நினைவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வாரங்கள் காத்திருந்து இப்படத்தின் குறுந்தகடு Landmarkல் வாங்கினேன். வெவ்வேறு தருணங்களில் படத்தைப் பார்த்துவிட முயன்றேன். 30 நிமிடங்களுக்கு மேல் முடியவில்லை. மிகமிக மெதுநடை. கிடப்பில் கிடந்த குறுந்தகடை ஆறுமாதங்களுக்கு முன்புதான் மீண்டும் எடுத்து, நண்பன் ஒருவனுடன் முழுவதும் பார்த்து முடித்தேன். படம்முடியும்வரை பேசிக்கொள்ளவில்லை. அதன்பிறகு சில காட்சிகளை மீண்டும் ஓட்டிப்பார்த்து, நீண்டநேரம் அப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்து கைக்கெட்டிய உன்னத படைப்பின் திருப்தியில் தூங்கிப்போனோம்.

கதாநாயகன், கதாநாயகி இல்லாத கதையில் யாரைச்சுற்றி கதை சொல்வது? படம்பார்த்த எல்லோரும் தேர்ந்தெடுக்கும் பாத்திரம், துர்கா. ஓர் ஏழை பெற்றோரின் மூத்தமகள் துர்கா. அவளின் தம்பி அப்பு. அக்குடும்பமே கெதியென அவர்களுடன் வாழ்ந்துவரும் ஒரு பாட்டி. ஒரு மேற்கு வங்க கிராமத்தில் வறுமைப்பிடியில் கசக்கிப் பிழியப்படும் இக்குடும்பம், துர்காவின் இறப்பிற்குப்பின் காசியில் குடியேறுவதே கதைச்சுருக்கம்.



1955லேயே காட்சியமைப்பில் அழகானதொரு வித்தியாசம் காட்டியிருக்கும் படம். ஒரு செடியின் உயரத்தை வைத்து காலவோட்டத்தைச் சொல்லும் உத்தி. சன்னலின் வழியாக ரயில் பார்க்கும்போது துர்காவின் கண்களில் மின்னும் பால்யப்பருவத்தின் ஆனந்தம். மிட்டாய்க்காரனைத் துரத்திக் கொண்டோடும் பிள்ளைப் பருவத்தின் ஏமாற்றங்கள். துர்கா இறந்தபின் மழையில் நனைய மறுக்கும் அப்புவின் குழந்தைப்பருவ மரண அனுபவம். முகத்தை அறுப்பதுபோல் நாணலின் ஊடே ஓடும் காற்றின் இசை (இசையமைப்பாளர் பண்டித் ரவிஷங்கர்). மனிதப்புழக்கம் இல்லாமல்போக பாம்படையும் வீடு. யாரும் அதிகம் பேசுவதில்லை; அழுவதுமில்லை. இந்தியக் கிராமங்கள் நகரம் நோக்கி நகர்வதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ஓர் அற்புதத் திரைப்படம். தவறாமல் பார்க்கலாம்.

எஸ்ராவின் இப்புத்தகத்தைச் சென்ற மாதம்தான் படித்தேன். ஒரு பார்வையாளன் என்ற நிலைக்கு அடுத்தக் கட்டத்திற்குக் கூட்டிப் போனது இப்புத்தகம். இதைப் பால்யத்தின் திரைப்படம் என்கிறார் எஸ்ரா. துர்கா என்ற சிறுமி ஏன் இத்தனை நெருக்கமாகிப் போகிறாள்? ஒவ்வொருவர் வாழ்விலும் சிறுவயதில் பார்த்த யாரோ ஒரு சிறுமியை நினைவுபடுத்துகிறாள் துர்கா. துர்காவைப் போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைப்பட்டு அழுதிருக்கிறார் எஸ்ரா. நானும்தான். (அக்கா Complex பற்றி எனது தளத்தில் ஒரு சிறுகதை எழுத ஒருவருடமாக முயன்றுகொண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் படிக்கலாம்)

துர்கா இறந்த துக்கத்தில் இருக்கும் ஓர் எளிய பார்வையாளனைத்தாண்டி, அவள் உயிரோடிருந்தால் என்னவாயிருக்கும்? அப்புவின் உலகம் எப்படி மாறியிருக்கும்? இவையாவையும்விட ஊரைவிட்டு வெளியேறிச் சென்ற குடும்பங்கள் யாவின் பின்னாலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் எஸ்ரா. கண்ணுக்குத் தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவது மட்டுமல்லாது, ஓர் இரவே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தைத் துர்கா என்பவள் வெளிப்படுத்துவதை எஸ்ரா சொல்லித்தான் கலையின் அழகியல் புரிகிறது.



எஸ்ராவின் தேடுதல் திரையோடு முடிந்துவிடவில்லை. படத்தின் மூலநாவலான விபூதிபூசணின் பதேர் பாஞ்சாலியையும் படித்திருக்கிறார்! நாவலைத் திரைப்படுத்தும்போது செய்யப்பட சமரசங்களையும் சொல்லியிருக்கிறார். எந்த இடங்களில் காகிதம் சிறப்பானதென்றும், எந்த இடங்களில் திரை சிறப்பானதென்றும் இரண்டிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் அழகாக சொல்லியிருக்கிறார். தங்கர் பச்சானின் கல்வெட்டை அழகியோடும், ஒன்பது ரூபாய் நோட்டுகளையும் நான் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ச.தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்', சசியின் 'பூ'வானதை நண்பர் சேரலாதன் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

நாணலை மாடுகள் மேய்ந்துவிட மாதக்கணக்கில் படப்பிடிப்பு ஒத்திப்போடப்பட்ட - ஒரிஜினல் பிரிண்ட் தீவிபத்தில் அழிந்துபோக நகலில் வலம்வந்துகொண்டிருக்கும் - துர்கா பெரிய பெண் ஆவதற்குள்ளும் ஆதரவற்ற பாட்டி இறப்பதற்குள்ளும் படத்தை முடிக்கப் பாடுபட்ட - ஒருபடத்தைத் திரைக்குப்பின் ரசித்துப் பார்க்க எஸ்ராவின் இப்புத்தகம் உதவும்.

'இந்தியாவின் வறுமையைக் காசாக்குகிறார் சத்யசித் ரே' என்ற கருத்து பரவலாக உண்டு. படம்பார்த்துவிட்டு சொல்லுங்கள். இப்படத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் புதியவர்கள் என்பதால், சினிமாவின் நுட்பம் பரிட்சயமாக நாட்கள் ஆனதாகவும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுநடைக்கு அதுதான் காரணம் எனவும் ஒருமுறை இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

படம் பாருங்கள். புத்தகம் படியுங்கள். எஸ்ரா கேட்டதை, நான் கேட்டதை, நீங்களும் கேட்பீர்கள் - "எங்கே இருக்கிறாய் துர்கா?".

-ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, November 12, 2009

51. பிரமிள் படைப்புகள்

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

--------------------------------------------------
புத்தகம் : பிரமிள் படைப்புகள்
தொகுப்பாசிரியர் : கால சுப்ரமணியம்
பதிப்பகம் : அடையாளம்
விலை : ரூ210
பக்கங்கள் : 472
முதற்பதிப்பு : டிசம்பர்-2003

--------------------------------------------------

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது…’

மிக அதிகமான முறைகள் மேற்கோள் காட்டப்பட்ட பிரமிளின் வரிகள் இதுவாகத்தான் இருக்கும். எனக்கும் பிரமிள் அறிமுகமானது இவ்வரிகளில்தான். முதல் முறை வாசித்தபோதே, கடற்கரை மணலென மனதில் அப்பிக்கொண்டது. திரும்ப திரும்ப அசைபோடும் போதும் சொல்லவொனாத குதூகலம் தருவதாய் இருந்தன அவரின் வரிகள். அதற்குப் பின்பு அவரின் எழுத்துகளை அதிகம் வாசிக்கும் வாய்ப்பு அமையாத நிலையில், அவரின் இந்த (கவிதையல்லாத) தொகுப்பு நண்பர் சாணக்கியனிடமிருந்து எதேச்சையாகக் கிடைத்தது.



கவிஞர்களின் உரைநடைக்கென்று தனிப்பட்ட உருவமொன்று உண்டு. என்னதான் மறைக்கப்பார்த்தாலும் ரயில் வண்டியிலிருந்து கையசைக்கும் குழந்தைப் பட்டாளம் போல நம்மைப் பார்த்து புன்னகைத்து கடந்து செல்லும் அந்த கவிதை நடை. அவதானிப்புகளை விட அழகியலே அதிகமாகத் தென்படும். அப்படியே மடித்து மடித்து எழுதினால் உரைநடைக் கவிதையில் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் பிரமிளின் படைப்புகளைப் படிக்கும் வரையில். இவ்வளவு தீவிரமாக சிறுகதை உலகில் இயங்கிய ஒருவர், கவிதையும் கவிதை சார்ந்தும் அறியப்பட்ட அளவுக்கு உரைநடையில் அறியப்படவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது.

ஒரு கவிஞராக என் மனதினுள் நான் ஏற்படுத்தியிருந்த அத்தனை பிம்பங்களையும் உடைத்து நொறுக்கிவிட்டு, ஒரு சிறுகதையாசிரியராக ஒரு புதியதொரு பிம்பமாக மனதினுள் படிகிறார் பிரமிள். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு ரகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சமே கொஞ்சம் காதல் என்று சில கதைகள் இருந்தாலும், சமுதாயத்தின் மீதான கோபமும், கூர்மையான விமர்சனமும் சாட்டையடியாக பல இடங்களில் வெளிப்படுகின்றன. “கோடரி“ சிறுகதையில் அரசமரம் ஒரு குறியீடாக வருகிறது. பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே பகடையாடப்படும் அரசமரம் ஒரு பிரிவினரால் கோடரி வீச்சுக்கு ஆளாகி ஊர் இரண்டுபடுகிறது. கதையின் மையச்சரடு இதுதான். 1967 ல் எழுதப்பட்ட இக்கதை, பல ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்த பல இனக்கலவரங்களின் குறியீடாக அமைகிறது. சில விஷயங்களில் மக்கள் மாறுவதே இல்லை என்பது கசப்பான உண்மை. இனி பிரமிளின் வரிகளில் எனக்குப் பிடித்த பகுதியொன்று,

அன்று மாலை அச்சந்தி ஜனசந்தடியற்றுப் போயிற்று. மரம் தறி பட்டதில் கொதிப்படைந்த பெரும்பான்மையினரின் குடி நருக்கமான தெருவொன்றில் ஒருவன் சைக்கிள் விபத்தில் சிக்கி காயத்தோடு ஆஸ்பத்திரிக்குப் போனான். அவன் மனிதர்களால் தாக்கப்பட்டதான வதந்தியாயிற்று. இந்நிகழ்ச்சி. ஒவ்வொருவனும் தன் விரோதி இனத்ததை ஒற்றை மனிதனாக உருவகப்படுத்தினான். எவனும் அன்று அவன் இனத்தின் உருவகமாயினான். எவன் பாதிக்கப்பட்டாலும் அவன் இனமே சீறும் - அஞ்சும். இனத்தின் பெயர் மனிதனில் வந்து படிந்தது. அது மட்டுமல்ல, சில கூட்டத்தினர் வெவ்வேறு வகையான உத்தேசங்களுடன் செய்தவை இன அடிப்படையில் காரணம் கொண்டன. இதனால் அவர்களுடன் இன அடையாளத்தால் ஒற்றுமை கொண்டவர்கள் பெருமைப்பட்டனர். தன்னைவிடப் பிரம்மாண்டமானதுடன் ஒரே முத்திரையினால் ஒன்றுபட்டதில்தானே அப்பிரமாண்டமென ஒவ்வொரு துளியும் இறுமாந்தது. ஆனால், அதுவும் இன்னொரு பிரமாண்டத்துக்கு எதிரிடையானதுதான். பாவம், அந்தத் துளி தனித்து, அந்த எதிரிடையான பிரமாண்டத்தின் களத்தில்தான்என இறுமாந்த தனது பிரம்மாண்டத்தின் பெயரில், ஆனால் ஒற்றைத்துளியாகவே சிந்தக்கூடும் எனக் காணவில்லை, சிந்திவிழும் கணம் வரை

- பக்கம் 26 - பிரமிள் படைப்புகள்

எழுத்து வடிவின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். ஒருபக்கக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், ஜனரஞ்சகக் கதைகள், தொடர்கதை, நாடகங்கள், பாவனை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள்,ஆங்கில நாவல்கள் என எதுவும் இவர் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவற்றோடு நின்று விடவில்லை. தேர்ந்த ஓவியராகவும், களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் விளங்கியிருக்கிறார். அவரின் ஓவியங்கள் சிலவும் இத்தொகுப்பில் இடையிடையே இணைக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்த முயற்சி என்று எதையும் ஒதுக்கி விடமுடியாது. அத்தனையிலும் அப்படி ஒரு உழைப்பு பொதிந்து கிடக்கிறது. நட்சத்ரவாசி நாடகத்தின் நுண்மை நம்மை வியக்கவைக்கிறது. அத்தனை கதாபாத்திரங்களுக்கும், ஒவ்வொரு சின்னசின்ன அசைவுகளும் கூட எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிவைத்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியாக ஒரு எழுத்துநடையையே வைத்திருக்கிறார். குறிப்பாக அவரின் அறிவியல் புனைகதைகளைச் சொல்ல வேண்டும். ”உங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பா? இருக்கவே இருக்கிறது HAC3000 சூப்பர் கம்ப்யூட்டர்” என்கிறது ”அசரீரி” சிறுகதை. காதலைச் சேர்த்து வைக்கும் சூப்பர் கம்ப்யுட்டர் கொஞ்சம் ஜனரஞ்சகக் கதைக்கான கருவாகத் தெரிந்தாலும், ஒரு சுவாரஸ்யமான அறிவியல் புனைகதை இது. 90 களின் தொடக்கத்தில் இதுமாதிரி சில அறிவியல் புனைவுகள் எழுதியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் சுஜாதாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக அறிவியல் புனைவுகளைக் கையாண்டதாக நினைவிலில்லை.

ஒரு மாயத்தன்மைக்கான கூறு இவரின் பெரும்பாலான கதைகளில் புதைந்திருக்கிறது. அதுவே கதைக்கு ஒரு விதமான எதிர்பார்ப்பு நிலையைக் கொடுத்து கடைசி வரை நம்மை அதே ஈடுபாட்டுடன் அழைத்துச் செல்கிறது.

குறியீடுகளை அவற்றிற்கே உரிய லாவகத்துடன் பயன்படுத்தும் வித்தை தெரிந்திருக்கிறது இவருக்கு. அதன் உச்சமாக வருகிறது “லங்காபுரி ராஜா” என்ற சிறுகதை. இலங்கைப் பிரச்சனையின் உக்கிரத்தையும் அதன் ஆழத்தையும் ஒரு உடும்பைக் குறியீடாகக் கொண்டு விவரிக்கிறார். இலங்கைப் பிரச்சனை தொடர்பான படைப்புகளை அதிகம் வாசித்திருக்கா விட்டாலும், இப்படைப்புக்கு அப்பட்டியலில் தனித்ததொரு இடமிருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

பல சிறுகதைகளில் தென்படும் அந்த நான்-லீனியர் கதைசொல்லும் உத்தியைப் புரிந்து கொள்ளத்தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. மற்றபடிக்கு ஒரு ஆர்ப்பாட்டமில்லாத ஆழமான வாசிப்பனுபவம் தருபவை பிரமிள் படைப்புகள். சொல்லிக்கொண்டே போனால் எல்லா கதைகளைப்பற்றியும் சொல்லவேண்டும். அதனால் மிச்சத்தை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

இந்நூலின் முன்னுரையிலிருந்து ஒரு வரி.
நோக்கமில்லாமலே ஓர் அக்கறையான வாழ்க்கை வரலாறு [இத்]தொகுப்புக்குள் புதைந்து கிடக்கிறது. கதைகளைப் பிரமிளாகவும் பிரமிளைக் கதைகளாகவும் கண்டுகொள்ள இந்நூல் உதவும்
படித்து முடிக்கையில் உண்மையென்றே பட்டது.

பிரமிள் என்ற பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை அவரை இன்னும் பலரிடம் கொண்டு சேர்ப்பதே. அப்பணியைச் செவ்வனே தொடங்கி வைத்துள்ளனர் அடையாளம் பதிப்பகத்தார். இப்பதிவினால் இன்னும் சிலருக்கு அந்த அறிமுகம் கிட்டுமானால், தேர் வடம் பிடித்த திருப்தி எனக்கும் ஏற்படுகிறது.


விருபா இணையதளத்திலிருந்து ஆசிரியரைப்பற்றி



இலங்கையின் திருக்கோணமலையில் 20.04.1939 இல், தருமராசன்-அன்னலட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து, தமிழ் நாட்டு எழுத்தாளராகவே வாழ்ந்து, 1971 இலிருந்து சென்னையில் தனது பெரும்பாலனா வாழ்நாளைக் கழித்தவர். புற்றுநோய்ப் பாதிப்பால், தமிழ்நாட்டில் வேலூரை அடுத்த கரடிக்குடி என்னும் ஒரு சிறு கிராமத்தில் 06.01.1997 இல் அடக்கம் பெற்றார்.

இவர், தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், விதவிதமாகத் தன் பெயரை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும், முதன்மையான விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் பிரமிள் விளங்கினார். படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகிற்கு அதுவரையில்லாத பரிமாணத்தையும் அளித்தன. ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்பு வாழ்க்கை 1960 இல் சென்னையில் இருந்து வெளிவந்த "எழுத்து" பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய பிறகு, புதுக்கவிஞராகவும், விமர்சகராகவும் மாற்றம் கொண்டு, உயர்ந்தபட்சக் கற்பனைத் திறனும் உள்ளூடுருவும் பகுப்பாய்வுச் சக்தியும் கொண்ட எழுத்தாளராக அவரை நிலை நிறுத்தியது.

- Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Tuesday, November 03, 2009

50. Everybody loves a good drought

இந்த ஐம்பதாவது புத்தகத்தைப் பற்றிய பதிவை இடுகிறவர் நண்பர் ஞானசேகர். அவருக்கும், தம்பிகள் Beemorgan மற்றும் ரேஜோவாசன் இவர்களுக்கும் என் நன்றிகள் சேரட்டும். நேற்று தான் நண்பர் கிருஷ்ணபிரபு புத்தகம் வலைப்பூவுக்கு Scrumptious blog award என்ற விருதை வழங்கினார். அவருக்கும் நன்றிகள் பல.

-சேரல்



இருட்டிலே வாங்கினோம்
இன்னும்
விடியவேயில்லை


------------------------------------------------
புத்தகம் : Everybody loves a good drought - stories from India's poorest districts
ஆசிரியர் : P. Sainath
வெளியீடு : Penguin books
முதற்பதிப்பு : 1996ம் ஆண்டு
விலை : 399 ரூபாய்
பக்கங்கள் : 470

------------------------------------------------

Globalizing Inequality என்ற தலைப்பில் பேசப்பட்ட மிகச்சிறந்த உரையை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் கல்வெட்டு பிரேம்குமார். பாலகும்மி சாய்நாத். முன்னாள் குடியரசு தலைவர் வி.வி. கிரியின் பேரன். India Together என்ற சமூக நோக்குள்ள இணையப் பத்திரிக்கை நடத்தி வருபவர். இவர் எத்தனை சர்வதேச விருதுகள் வாங்கியிருக்கிறார், கிராமங்களில் வாழும் நாட்களைப் பற்றி நீங்கள் இணையத்தில் படித்துக் கொள்ளலாம்.



ஆட்சி பிடிக்க பீடி தேவையா? மாணவர்களைவிட வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இரண்டுமடங்கு அதிகமிருக்கும் பாடம் எங்காவது கேட்டிருக்கிறீர்களா? ஒரே தாய்-தகப்பனுக்குப் பிறந்த அண்ணன் தம்பி இருவர் வெவ்வேறு சாதிகளின் கீழ் பிரித்துப்போடும் அரசியல் சாசனம், சாத்தியம் என எப்போதாவது குறைந்தபட்சம் சந்தேகித்து இருக்கிறீர்களா? செவிலியர்களைவிட மருத்துவர்கள் அதிகமிருந்த இந்தியாவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 23000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மாட்டுவண்டி உபயோகம் இல்லாத கிராமப் புறங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். மூன்றே வருடங்களில் புதுக்கோட்டை மாவட்டம் 71.78 சதவீதத்தில் இருந்து 100% கல்வியறிவு அடைந்ததா? எல்லாக் கேள்விகளுக்கும் போனமாதம் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இன்றைக்கு 'ஆம்'.

சுதந்திர இந்தியாவில் ஏழைக்குடிமகன்களின் வாழ்வுதரம் எந்த அளவுக்கு உயராமல் இருக்கிறதெனவும், தங்களின் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்குத் திணறுகிறார்கள் எனவும் இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து Times of India இதழுக்கு பி.சாய்நாத் அவர்கள் எழுதிய கிட்டத்தட்ட 70 பத்திகளை 10 அதிகாரங்களின் கீழ் தொகுத்திருப்பதே இப்புத்தகம்.'கிராமப்புற இந்தியாதான் ஒரு பத்திரிக்கையாளனின் சொர்க்கம்' என சொல்லும் ஆசிரியர் எதை எழுத வேண்டும், எதைக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார். எந்த அரசியல் கட்சியையோ ஆட்சியையோ தாக்கவில்லை. 'இயற்கைப் பேரழிவுகளையும் கொள்ளை நோய்களையும் தவிர்த்து தினவாழ்க்கையை அணுவணுவாக அளந்திருக்கும் புத்தகம்' என்று பாட்ரிக் பிரன்ச் (Patrick French) அவர்கள் புகழ்ந்திருப்பது மிகையில்லைதான்.

சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அரசு இயந்திரம் செய்யும் காமெடிகள் வறியவனை எப்படிப் பாதிக்கிறது எனப் பேசுகிறது முதல் அத்தியாயம். ஒரிசாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஹாரியார் (Khariar) என்ற உயர்ரக பசுக்களைக் கலப்பினம் செய்து பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் சமன்விட்டா (Samanwita) என்றொரு திட்டம். இரண்டு ஆண்டுகள், இரண்டு கோடி ரூபாய்களுக்குப் பிறகு ஹாரியார் என்ற ஓர் இனமே சுவடில்லாமல் அழிந்துபோக, தீவனத்துக்காக பயிரிடப்பட்ட சுபாபுல் (Subabul) மரங்கள் தோப்புத்தோப்பாக வெட்டித்தள்ளப்பட்டன. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள் எல்லாம் ஏற்கனெவே உபரியாகப் பால் உற்பத்தி செய்து கொண்டிருந்த பகுதிகள்!

மலைவாசி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ஏதாவது திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சாலையே தேவைப்படாத ஒரு சமூகத்திற்கு 17.44 லட்ச ரூபாயில் சாலை போட்ட கதையும், அண்ணன் - தம்பிகளை வெவ்வேறு சாதிகளின் கீழ் கொண்டுவரும் அரசு கோப்புகளின் எழுத்துப்பிழைக் கதையும் முதல் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன. சுகாதார மற்றும் கல்வித் தரங்களைப் பேசுகின்றன அடுத்த இரண்டு அத்தியாயங்கள்.

நிலக்கரிச் சுரங்கம், துப்பாக்கிப் பயிற்சி, அணை, சரணாலயம், ஏதோ பண்ணை, சாலை என்று ஏதோவொரு காரணத்தால் வாழ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு அந்நியனாக்கப்படும் அகதிகளைப் பற்றியது ஓர் அதிகாரம். புதிய இடத்தில் சாதிச்சான்றிதழ்கூட இல்லாமல் தவிக்கும் அவலம். தீடீரென கடற்படையின் துப்பாக்கிப் பயிற்சி நடைபெறுவதற்காக, ஒரு மலைகிராமம் தலைக்கு ரூபாய் 1.50 வாங்கிகொண்டு தற்காலிகமாக வெளியேற வேண்டும். இதேநிலை ஒரு கடலோர மாநகரில் சாத்தியமில்லை என நினைக்கும்போது, ஓர் ஏழை எப்படி நசுக்கப்படுகிறான் என்பது தெரிகிறது. பீகாரின் மொத்த நீர்ப்பாசன பட்ஜெட்டைவிட 3 மடங்கு அதிகமான செலவில் ஓர் அணை. தண்ணீரே இல்லாத அதன்மூலம் பலனடைவது ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே!

நம்ம ஊர் பனையேறிகள், கள்ளச்சாராயம், ஊர் விட்டு ஊர் போய் ஏதோவொரு கான்ட்ராக்டரின் கீழ் வேலைபார்க்கும் மக்கள், துண்டால் மூடி விரல்களால் விலை பேசும் தரகர்கள், வட்டிக்குப் பணம் தருபவர்கள், விவசாய நிலங்களைப் பிடுங்கி அதிகவிலை பேசும் வியாபாரிகள், சண்டைக்கோழி தந்திரங்கள் என்று பல பத்திகள். புத்தகத்தின் பெயரில் கூட ஓர் அத்தியாயம். வறுமைக்கோடு திர்மானிக்கப்படும் முறையிலுள்ள குளறுபடிகள் பற்றி தனியாக ஒரு பத்தியுண்டு.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் வரும் சாயல்குடி, அன்னவாசல், திருக்காட்டுப்பள்ளி, கந்தர்வக்கோட்டை, தச்சன்குறிச்சி, திருவாடானை, குடுமியான்மலை போன்ற இடங்களும் இப்புத்தகத்தில் அலசப்பட்டுள்ளன. இராமநாதபுரம் தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றி ஆசிரியர் சொல்லியிருப்பவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். வைகையணை எப்படி இம்மாவட்டத்தைப் பாதித்ததெனவும், தண்ணீர் வியாபாரம் எப்படி சூடு பிடித்ததெனவும் நன்றாக எழுதியிருக்கிறார்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மக்கள் ரயிலுக்குள் புகுந்து கழிவறையில் தண்ணீர் திருடிய சம்பவம் உங்களுக்கெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. ஆசிரியர் ஒரு பத்தியே ஒதுக்கியிருக்கிறார். அச்சம்பவம் பாலசந்தரின் 'தண்ணீர் தண்ணீர்' திரைப்படத்தின் பாதிப்பில் நிகழ்ந்ததெனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். காவிரித் தண்ணீரைக் குழாய்கள் மூலம் புதுக்கோட்டை நகருக்குக் கொண்டுவந்த காலக்கட்டங்களில் நான் அங்கு வாழ்ந்ததனால் எனக்கு நெருக்கமான பத்தியிது. திண்டுக்கலில் குடத்தை வைத்து பஸ் மறியல் செய்தது கூட இப்படத்தின் பாதிப்பெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை வறட்சிப் பகுதிகளாக மாநில அரசு அறிவித்தால் அவை மத்திய அரசின் மேற்பார்வையில் வரும்; அப்பகுதி வருமானம் கைக்குவராது என்ற காரணத்திற்காக பெரும்பாலான வறட்சிப் பகுதிகள் மாநில அரசுகளால் விட்டுக்கொடுக்கப் படுவதில்லை. இப்புதிய செய்தியில் நான் மிரண்டு போனேன்.

லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்: 'ஒரு நல்ல சமூகப் படைப்பு என்பது, பிரச்சனையையும் அதற்கான தீர்வையும் அழகியலுடன் சொல்வது'. புத்தகத்தின் ஒன்பது அத்தியாயங்கள் பிரச்சனைகளுடன், கடைசி அத்தியாயம் அதற்கான தீர்வுகளுடன். வறியவனை வலியவன் அடித்தால் வலியவனை வல்லூறு அடிக்கும். ஆசிரியர் சொல்லும் வல்லூறும் வறியவனே!

உழைப்பாளிகள் நடத்தும் கல்குவாரி சுற்றுச்சூழலைப் பாதிக்கிறதெனப் பொய் வழக்கு தொடர்ந்த கான்ட்ராக்டர்கள்; நீதிமன்றம் வரை சென்று வென்றுவந்த குடிமியான்மலைக்காரர்கள்! அறிவொளி இயக்கம் மூலம் பெண்களின் கல்வியறிவை வளர்த்து கள்ளச் சாராயம் தடுத்த புதுக்கோட்டை மாவட்டப் பெண்கள்! காடுவெட்டிகளைப் பொறிவைத்து பிடிக்கும் பீகார், ஒரிசா மற்றும் மத்திய பிரதேச மக்கள்! ஆணுக்கிணையாக சைக்கிள் புரட்சி செய்த எங்களூர் புதுக்கோட்டைப் பெண்கள்! இன்னும் பல. புதுக்கோட்டை கலெக்டர் ஷிலா ராணி சுங்கத், ராம்நாடு மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் பற்றியும், வெற்றிநிலவன் எனப்படும் ஜெயசந்தர் மற்றும் முத்து பாஸ்கரன் கவிஞர்கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். புத்தகத்தின் கடைசியில் 5 பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் நன்றிக்கான பெயர்களைப் பார்க்கும்போது, இத்தனைபேர் சம்மந்த்தப்பட்ட ஒரு புத்தகம் படித்த திருப்தி!

புத்தகம் முழுவதும் பல நல்ல தகவல்கள் உண்டு. ஒரு பதமாக ஒரு லண்டன் இதழில் வெளியான செய்தி: The plague was marching ahead as it was occurring in a region where millinos worship an elephant-headed god who rides a rat.

பீடி என்ற வார்த்தைக்கு ஆசிரியரின் அழகியல்: Botanists call it Dyospyros Melanoxylon. Manufactures call it beedi. Traders call it profits; politicians call it power and the poor call it survival.

வீழ்ந்தே கொண்டிருக்கும் சகமனிதனின் வாழ்க்கை வரலாறு!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Wednesday, October 21, 2009

49. குருதிப்புனல்

----------------------------------------------------------
புத்தகம் : குருதிப்புனல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
விலை : ரூ 90
பக்கங்கள் : 237

----------------------------------------------------------

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகளை நான் இதற்கு முன் வாசித்ததில்லை. இந்த ஒரு புதினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவரைப் பற்றிய கருத்தைச் சொல்வது எத்தனை சரியாக இருக்குமெனத் தெரியவில்லை. அனாயாசமான எழுத்தோட்டம் இப்புதினத்தில் இருக்கிறது. இ.பா.ஒரு தேர்ந்த கம்யூனிச வாதி என்ற எண்ணம் மேலெழுகிறது. இந்தப் புதினம் கம்யூனிசப் பின்புலத்தில் அமைந்ததால் கூட அப்படி இருக்கலாம். யதார்த்த நிகழ்வுகளை வைத்து, தர்க்க வாதங்களை நிகழ்த்தி, பல தத்துவார்த்தங்களையும் பேசுகிறது இப்புதினம்.



முதலில் புதினத்தின் பின்புலத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1968ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அப்பொழுதைய தஞ்சை மாவட்டத்தில் (இப்போது நாகப்பட்டினம் மாவட்டம்) கீழ்வேளூர் வட்டத்தில் கீழ வெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களின் மீது அடக்குமுறையை கையாண்ட நிலக்கிழார்கள், அதன் ஒரு படியாக குடிசைக்குள் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும், குழந்தைகளையும் எரித்துக் கொன்றனர்.

இச்சம்பவம் சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. கம்யூனிச நாடுகள் இதைக் கண்டித்து அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்து, அண்ணா முதல்வராக இருந்த காலமது. விசாரணைக் கமிஷன், வழக்கு, போராட்டம் எனத்தொடர்ந்த இச்சம்பவத்தின் விளைவுகள் இன்னும் சில உயிர்களைப் பலிவாங்கிப் பின் ஒன்றுமில்லாமல் போயின.

இச்சம்பவத்தின் பாதிப்பில் இ.பா. எழுதிய இப்புதினம், கணையாழி இதழில் தொடராக வெளிவந்தது. வேறெந்த பத்திரிகையும் இதை வெளியிடத் தயங்கின என்பது இங்கு கவனிக்கத்தக்கது. புத்தகம் முழுவதுமே திராவிட இயக்கங்களின் அரசியல் மீதான தாக்குதல் நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நடவடிக்கைகளும் சில இடங்களில் விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில், இப்புத்தகம் வெளியான போது, இது கம்யூனிச இயக்கத்தவர்களால் எதிர்க்கப்பட்டதென்றும், சமீப காலகட்டத்தில்தான் இது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் இ.பா.அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்குள்ளெழுந்த ஆச்சரியம், இ.பா.வின் எழுத்துத் தைரியம் மீதானதே! எப்படி இவரால் இத்தனை உணர்ச்சி பூர்வமான விஷயத்தைப் பற்றி, எதிர்ப்பு குறித்த, அச்சுறுத்தல் குறித்த எந்தப் பயமும் இல்லாமல் எழுத முடிந்தது? இவர் டெல்லியில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்றாலும், அந்த ஆச்சரியத்தை என்னால் கைவிடமுடியவில்லை.

கதை பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். சமூகப் பொருளாதார, சாதி அடிப்படையிலான கோர சம்பவமாக நடந்த இந்நிகழ்வை, பாலியல் சார்ந்து, ஃப்ராய்டியன் போக்கில் நடந்தேறியதாகக் கொண்டு இப்புதினத்தைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். இதற்கான பொறி, இந்நிகழ்வின் மூலகர்த்தாவாக இயங்கிய மிராசுதாரின் ஆண்மைத்தன்மையைப் பற்றி மக்களிடையே நிலவிய செய்தி, வதந்தி, விஷயம் என்கிற ஏதோ ஒன்றுதான் என்கிறார் இ.பா. இது அவரது கற்பனை என்றோ, இதுவே உண்மை என்றோ நாம் கொள்ளத்தேவையில்லை; அதை நிரூபிப்பதற்கான எந்தக் கட்டாயமும் நமக்கில்லை. சமூகத்தில் நடக்கிற கொடுமைகளை, மனித இனத்துக்குச் சவாலான நிகழ்வுகளைப் பதிவு செய்வது படைப்பாளியின் கடமை. அதை எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் ஆசிரியர். ஃப்ராய்டியன் சிந்தனைகளுடன் இவர் இதை அணுகியதே கம்யூனிச இயக்கத்தின் எதிர்ப்புக்குக் காரணம் என்பதாக நானறிகிறேன்.

ஆண்மைத்தன்மை இழந்த ஒருவனின் மன உளைச்சலுக்கு, ஒரு கிராமமே பலியான கதை இந்தக்குருதிப்புனல். ஊர் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார். இது வரலாற்றைப் பதிவு செய்கிற ஒரு முயற்சி என்கிற வகையில் முக்கியமடைகிறது.

இக்கீழ்வெண்மணிக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பதினெட்டு வயது வரையில் இந்த வரலாறு எதுவும் எனக்குத் தெரியாது. பின் செவிவழியாகவும், புத்தகங்கள் வழியாகவும் கொஞ்சம் அறிந்த எனக்கு, இன்னும் பல தகவல்களைத் தருவதாக இருக்கிறது இப்புதினம்.

டெல்லியில் வாழ்ந்து கீழவெண்மணியில் வாழும் முடிவுடன் வந்துவிட்ட தன் நண்பனைக் காண வரும் இன்னொரு நண்பன்; இவர்களிருவரும் சந்தர்ப்ப வசத்தால், ஆதிக்க வர்க்கத்துக்கெதிரான ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் ஈடுபட நேர்கிறது. இந்தச் சம்பவங்களைச் சுற்றிச் சுழல்கிற கதை, பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தன் உச்சகட்டமாகக் கொண்டிருக்கிறது.

மெத்தப்படித்த, அறிவு, ஞானம், சமுதாயப்போக்கு, இவற்றைக்குறித்து சிந்திக்கிற இவ்விரு நண்பர்களுக்கிடையே நடக்கும் விவாதங்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை. இருவரின் மனநிலையையும் எந்தத் தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். நண்பர்களுக்கிடையே தோன்றக்கூடிய பொறாமை, இயல்பாக மனிதனுக்கேற்படும் காமம், அடிமைப்படுத்தியவனின் மீதான வன்மம், இயற்கை தனக்கேற்படுத்திய குறைக்காக மற்றவர்களைக் கொடுமைப்படுத்தும் ஒரு மனிதனின் குரூரம் என்று பலவிதமான உளவியல் சமாச்சாரங்களை இயல்பாகச் சொல்லிவிட முடிகிறது இவரால்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தின் நிலையும் கதையின் போக்கில் சொல்லப்பட்டுவிடுகிறது. பேருந்துப் பயணக்காட்சியொன்றில் நிகழும் உரையாடல்களை வைத்து இவர் சொல்லும் ஒரு செய்தி என்னைப் புன்னகைக்க வைத்தது. 'நம் மனிதர்கள் பேசுகின்ற விஷயங்களை மூன்றே வகைக்குள் அடக்கிவிடலாம்; ஒன்று பக்தி பற்றி பேசுவார்கள்; அல்லது அரசியல் பேசுவார்கள்; அல்லது சினிமா பற்றிப் பேசுவார்கள்; பக்தி அறமாகவும், அரசியல் பொருளாகவும், சினிமா காமமாகவும் தான் இப்போது புலப்படுகிறது. எப்படியும் தமிழர்கள் திருக்குறளைக் கைவிடுவதில்லை' என்பதாகச் சொல்லி இருப்பார். இப்போது இவர் சொன்ன எல்லாவற்றிலும், பொருளும், காமமும் மட்டுமே இருப்பதாக எனக்குப்படுகிறது.

எந்தப் படைப்பும் உன்னதமாவது, அது எழுதப்பட்ட நோக்கத்தைப் பொறுத்ததே! ஒடுக்கப்பட்ட ஓரினத்தின் வரலாற்றில் சோக அத்தியாயமாக இடம்பெற்றுவிட்ட இக்கொடூர சம்பவத்தை இனிவரும் சந்ததிக்குச் சொல்லிச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டதால் இப்புதினமும் ஓர் உன்னதப் படைப்பாகிறது.

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Wednesday, October 14, 2009

48. அகல் விளக்கு

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

------------------------------------------------------
புத்தகம் : அகல் விளக்கு
ஆசிரியர் : மு.வரதராசன்
விற்பனை : பாரி நிலையம்
விலை : ரூ100
பக்கங்கள் : 412
கிடைத்த இடம் : தஞ்சை இரயில் நிலையம்

--------------------------------------------------------

இது சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.

ஆரம்ப காலத்தில் புதினம் என்ற எழுத்து வடிவம் சங்க காப்பியங்களின் நீட்சி என்று கருதப்பட்டதாலோ என்னவோ, புதினம் என்றாலே கண்டிப்பாய் நீதிபோதனைகள் இருக்கும். ஓரிரு வரிகள் அல்ல பக்கம் பக்கமாய் கூட சில இடங்களில் இருக்கும். மக்களுக்கு நீதி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதே புதினங்களின் கதிமோட்சமாக கருதப்பட்டது. தமிழில் முதல் புதினம் வெளிவந்து 100 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருந்தாலும், இந்த புத்தகமும் அத்தகைய கருத்திலிருந்து அதிகம் மீண்டுவிடவில்லை.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இருவர். பால்ய நண்பர்கள். எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாய் கதைசொல்லியின் வாழ்வு அமைக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வாழக்கூடாததற்கு இன்னொருவனின் வாழ்வு. இந்த இருவர் வாயிலாக தன் கருத்துக்களையும் வெளிப்படுத்தியவாறே கதைசொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

தெளிந்த நீரோடை மாதிரி கதை. திடுக்கிடும் திருப்பங்களோ அதிரடி காட்சியமைப்புகளோ இல்லாமல் சென்றாலும் சுவையாகவே செல்கிறது.

கதைக்காக என்பதை விட, சமூக நிலைக்காக என்பதுதான் மிகப்பொருத்தம். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது? மக்களின் மனநிலை, நம்பிக்கைகள், கல்வி, காதல், நட்பு, கைம்பெண் குறித்த பார்வை எப்படி இருந்தது? திருவிழாக்கள் நடந்த விதம்? கல்லூரிகள் எப்படி இருந்தன? என்று சுவாரஸ்யமாய் பல கேள்விக்குறிகளுக்கு விடையளிக்கும் காலக்கண்ணாடி இந்த விளக்கு.

உதாரணத்திற்கு ஒன்று..

பள்ளிக்காலத்தில் நமக்கு அனாமத்தாக சில அஞ்சல் அட்டைகள் வரும். நமக்கெல்லாம் கூட தபால் வருதான்னு ஒரு குதூகலம் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.

"இது அருள்மிகு __ __ __ சாமியின் அருள்பெற்றது. நீங்கள் பரீட்சையில் பாஸாகனுமா? நினைத்தது நடக்கனுமா? இன்னும் 10 பேருக்கு இந்த அஞ்சலட்டை எழுதி அனுப்பவும். இல்லையேல் ரத்தம் கக்கி சாவாய்" என்கிற ரேன்ஞ்-சில் எழுதியிருக்கும். என் நண்பர்கள் பலரும் கர்ம சிரத்தையாக அதனை 10 பேருக்கு அனுப்புவதைப் ப ார்த்திருக்கிறேன். ரத்தம் கக்குவதைப் பற்றிய பயம் உள்ளுர வந்திருந்தாலும் நான் இதுவரை எழுதியதில்லை :)

இது இன்னைக்கு நேத்துதான் நடக்குதுன்னு நினைத்திருந்தேன். மு.வ சொல்லித்தான் தெரியுது நம்ம மக்கள் 50 வருசம் முன்னாடி கூட இப்படித்தான் இருந்திருக்காங்க. ஒரு பழக்கம், தவறானதுன்னு தெரிந்தாலும் கூட மக்கள் மனங்களை விட்டு அகல இவ்வளவு காலம் ஆகுமா? மக்களின் இறைபக்தியை சில்லறை வணிகமாக்கும் இந்த மாதிரி உத்திகள் எல்லா காலத்திலும் எப்படி வெற்றி பெறுகின்றன? இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள். உண்மையில் கதையைவிட இந்த மாதிரி கிளைகளில் நம்மை யோசிக்க வைக்கும் கேள்விகளுக்காக நிச்சயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

வாழ்க்கைப் பயணத்தில் தினம் தினம் ஆயிரம் பயணிகள் நம்மோடு பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரையுமே நாம் தெரிந்துகொள்வதில்லை. ஆயினும், ஒருசிலர் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகின்றனர். யோசித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் ஒரு பால்ய சினேகிதன் இருந்திருப்பான். கொடுக்காப்பள்ளி அடிப்பதிலிருந்து கணக்கு வாத்தியாரிடம் அடிவாங்குவது வரையிலும் உங்களுடனேயே இருந்திருப்பான். அவனுடன் ஊர் சுற்றி அலைந்திருப்பீர்கள். பொல்லாத கதைகள் பேசி திரிந்திருப்பீர்கள். பள்ளிக்குப் பின்பு அவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துப் பார்க்க உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்ததுண்டா? கண்டிப்பாய் அவனைப்பற்றிய நினைவுகளை கிளறிச்செல்லும் இப்புத்தகம்.

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Monday, October 05, 2009

47. கன்னா பின்னா கதைகள்

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்..பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்

- சுஜாதா

------------------------------------------------------------
புத்தகம்: கன்னா பின்னா கதைகள்
ஆசிரியர்: ரா.கி.ரங்கராஜன்
வெளியீடு: அல்லயன்ஸ்
ஆண்டு: 2007
விலை: ரூ. 60
பக்கங்கள்: 180
கிடைத்த இடம்: தஞ்சை ரயில் நிலையம்

-------------------------------------------------------------
இவை நிஜமாகவே கொஞ்சம் கன்னா பின்னாவான கதைகள்தான்.

நான் படிக்கும் ரா.கி.ரங்கராஜனின் முதல் படைப்பு இது. பெரிய அளவு எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாமல்தான் நேற்றிரவு ரயில் பயணத்தில் வாங்கினேன். தொடங்கிய பிறகு என்னால் கீழே வைக்கமுடியாத அளவுக்கு துள்ளலான நடை இந்த இளைஞருக்கு.

முழுக்க முழுக்க கடிதங்கள்தான். கடிதங்களினூடாக காதல் மொக்கவி்ழ்கிறது. படிக்கச் சலிக்காத நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது. காலத்தைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகள் ஏதுமில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் என்று கொண்டால் ஒத்துவருகிறது. பழைய கருப்பு வெள்ளை சினிமா படக்காதல் மாதிரி கற்பனை செய்து கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

இதனைச் சிறுகதைகள் என்று சொல்லலாமா? ம்ம். சரி.. சிறுகதைகள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு சிறுகதையும் பொதுவில் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஒரு யுவதி பழக்கமில்லாத ஒரு இளைஞனுக்கு எழுதும் கோபமான ஒரு கடிதத்துடன் தொடங்கி அதற்கு பதில், பதில் பதில் கடிதங்களால் சில சமயங்களில் ஒருசில அவசரத் தந்திகளோடு சுபம் போட்டு முடிவடைகிறது. படிக்கும் போது நம்மையுமறியாமல் ஒரு புன்னகை படர்வதை தவிர்க்கமுடியாது. நான் சில இடங்களில் வாய் விட்டு சிரித்து ரயிலில் வினோதப் பார்வை சம்பாதித்த சம்பவங்களும் நடந்தேறின.

சுவையான காதல், சுவாரஸ்யமான காதல், குறும்பான காதல் என்று விதவிதமாய் காதல் கடிதங்கள். உடனே இது காதல் புத்தகம் என்று முடிவுகட்டி மற்றவர்கள் ஓடிவிடத்தேவையில்லை. அத்தனை குறும்புடன், அங்கதச்சுவை மிளிர அனைவரும் ரசிக்கலாம் இந்தக் கடிதங்களை. காதல் அல்லாத குறும்புக் கடிதங்களும் தட்டுப்படுகின்றன.

மொத்தம் 18 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதைக்கும் இவர் பெயர் சூட்டும் அழகே அலாதியானது. 'காதல் பைனாகுலரில் தெரியும்', 'சிவகாமியின் சப்தம்', 'பூனை பிடித்தவள் பாக்கியம்', 'மீரா கே பிரபு' என்று நீளுகிறது இந்தப் பட்டியல். படித்து முடித்தபின் தலைப்பை மீண்டும் யோசிக்க வைக்கிறது.

ஒரு சில கடிதங்கள் ரொம்பவும் நாடகத்தனத்துடன் சலிப்பைத்தருபவை போலிருந்தாலும், மற்ற கடிதங்கள் அதனை ஈடு செய்துவிடுவதால் படிக்கச்சலிக்கவில்லை. ஒரு சில உத்திகள் திரும்பத்திரும்ப பல கடிதங்களில் பயன்படுத்தப்பட்டு கொஞ்சம் பழகிய தன்மையை தந்துவிடுவதால் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை. இத்தனை கடிதங்கள் எழுதுகையில் இதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

நீங்கள் எந்தவொரு மனநிலையில் இருந்தாலும், இந்த புத்தகத்தைப் படிக்கலாம் என்று தாராளமாய் சிபாரிசு செய்கிறேன் :) நிச்சயம் சில சந்தோஷ கணங்கள் உங்களுக்குண்டு.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து ஆசிரியரைப்பற்றி:

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வாரஇதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறுது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன.

ரங்கராஜன் 'சூர்யா', ' ஹம்சா', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்யெர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்- என பலதரப்பட்ட எழுத்துக்களைத் தந்தவர். ஒவ்வொரு புனைப்பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர் போல் எழுதிய மேதாவி. இந்த பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்
- கல்கி


-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Thursday, September 10, 2009

46. பெய்தலும் ஓய்தலும்

எனக்கு வண்ணதாசன் கதைகளில் அவர் கதாபாத்திரங்களுக்கு இடும் பெயர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பெயர்கள் முன் கேட்டு அறியாதவை, அல்லது அந்தப் பெயர்களைக் கேட்டமாத்திரத்தில் மனதில் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகிவிடுகின்றது. இந்தப் பெயர்கள் உருவாக்கும் கிளர்ச்சிகளே கதையின் வாசிப்பை நெருக்கமாக்கி விடுகின்றன

-எஸ்.ராமகிருஷ்ணன்


------------------------------------------
புத்தகம்:பெய்தலும் ஓய்தலும்
ஆசிரியர்:வண்ணதாசன்
வெளியீடு:சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு:2007
விலை:ரூ 60
பக்கங்கள்:136

------------------------------------------

தமிழ்ச்சிறுகதை வட்டத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு புள்ளி வண்ணதாசன். வண்ணதாசன் எனும் பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி எனும் பெயரில் கவிதைகளும் எழுதி வரும் திரு.கல்யாணசுந்தரம் திருநெல்வேலியில் வாழ்கிறார். இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான திரு.தி.க.சி இவரது தந்தை என்பது குறிக்கத்தகுந்தது.



சுமார் 40 ஆண்டுகாலமாக தமிழ் எழுத்துலகில் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக இருந்து வரும் வண்ணதாசன் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் பெய்தலும் ஓய்தலும். வெகு நாட்களாக நான் தேடியலைந்த வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்பு நண்பர் பிரவின்ஸ்காவிடமிருந்து கிடைத்தது. அது வேறு புத்தகம். அதைப் படித்து முடிக்குமுன்னர் சென்ற வாரம் லேண்ட் மார்க்கில் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருந்தபோது இத்தொகுப்பு கிடைத்தது.

'எழுதிக்கொண்டே வருவார்; கை வலித்தால் கதையை முடித்துவிடுவார்' என்று வண்ணதாசனின் எழுத்தைப் பற்றி ஒரு விமர்சனம் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மையோ என்று கூடத்தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்துபடிக்கையில் சிறுகதையின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. உச்சகட்டத்தில் மட்டும் செய்தியை வைத்துவிட்டு, முந்தைய பக்கங்களை வெறும் வார்த்தைகளை இட்டு நிரப்பும் வேலை இவர் கதைகளில் இல்லை. ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு விவரணையிலும் அழகும், யதார்த்தமும் பெருகிக் கிடக்கின்றன.

'வண்ணதாசன் எழுத்தில் ஓடும் ஆறு' என்று எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இத்தொகுப்பைப் படிக்கையில் எனக்கு இந்த நான்கு வார்த்தைகளின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத்தொடங்கியது. அப்படி ஓர் அசாத்திய ஓட்டம். எங்கும் தேங்காமல், எப்போதும் இப்போது பிறந்ததுபோன்ற புத்துணர்வோடு ஓடுகின்றன எழுத்துகள். ஆற்றின் பிரவாகம் கதைகளெங்கும் காணக்கிடைக்கிறது. ஆற்றுக்குத் தொடக்கம் ஏது? முடிவு ஏது? ஆறு என்றதும் கரையும், காற்றும், கரையோர மரமும், பாலமும், நீர்ச்சுழியும் மனதில் வந்து போகின்றன. ஆறு என்பது ஆறற்றதும் சேர்ந்ததுதானே!

இத்தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கதைகள் மனிதர்களின் பழைய நினைவுகளைக் கிளறுபவையாக இருக்கின்றன. பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்து சந்தோஷிக்கும், அல்லது துக்கப்படும் இயல்பு நம் எல்லோரிடமும் தானாகவே வந்தமைந்து விடுகிறது. மீண்டும் நினைத்துப் பார்த்துச் சிரிக்க அல்லது அழுவதற்கான நிகழ்வுகள் என்று எல்லோரிடமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தக் கதைகளின் அமைப்பு நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வோடு தொடங்குகிறது; நினைவுகளினூடே பயணித்து கொஞ்சம் பழைய நாட்களைத் தேடிப் பார்த்து விட்டு மீண்டும் இன்றைய நாளில் வந்து உச்சமடைகிறது. இந்தப்பாணியை பல கதைகளில் என்னால் பார்க்க முடிந்தது. சிறுகதைக்கான உத்தியில் இது ஒரு நல்ல முறை.

எல்லாக்கதைகளிலும் 'நான்' தான் பிரதானப் பாத்திரமாக இருந்து கதையை வழிநடத்துகிறது. இந்த 'நான்' ஒருவேளை வண்ணதாசனே தானோ என்ற சந்தேகம் பல இடங்களில் கிளர்ந்தெழுகிறது. பாத்திரத்தின் வயது, சூழ்நிலை இவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது இந்த உணர்வு மேலிடுகிறது. ஆசிரியரும் நான் என்ற பாத்திரத்தின் மீது தன் எண்ணங்களைத் திணிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எல்லாப்பாத்திரங்களின் மீதும் கூட ஆசிரியரின் ஆதிக்கம் இருக்கும் அல்லவா?

இந்தக் கதைகளின் பொதுவான இன்னொரு அம்சம், மிகச்சாதாரணமாக நாம் தினசரி பார்க்கக்கூடிய மனிதர்களின் கதைகள் இவை. எப்படி எல்லோருக்கும் புரட்டிப் பார்க்க சில நினைவுகள் உண்டோ, அதே போல எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளவென்று சில கதைகளும் இருக்கும். உணர்ச்சிகள் கொட்டிக்கிடக்கும் கதைகள். அந்தக் கதைகளைத்தான் தான் அறிந்து கொண்ட, தான் உணர்ந்துகொண்ட வழியில் எழுதியிருக்கிறார் வண்ணதாசன்.

கதையின் முதல் வரியே கதைக்குள் நம்மை இட்டுச்சென்றுவிடும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

'சுந்தரம் எப்போதும் இப்படித்தான். எப்போது அழுவான் என்று சொல்ல முடியாது....'

'இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை....'

'இந்தத் தடவையும் மாரிச்சாமியைப் பார்க்க முடியவில்லை...'

'என்ன பேசப்போகிறேன் என்பதை இன்னும் தீர்மானிக்கமுடியவில்லை. அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது...'

'இப்போதெல்லாம் ஒருத்தரைப் பார்த்தால் இன்ன்னொருத்தர் ஞாபகம் வந்து விடுகிறது...'

'அழைப்பு மணியை அழுத்தியாகி விட்டது. யார் திறப்பார்கள் என்று தெரியவில்லை...'

'உங்களை யாரோ கூப்பிடுகிறார்கள் - அனுஷா என்னிடம் சொல்லும்போது நான் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன்...'


இந்த வரிகளைக் கொஞ்சம் ஆழ்ந்து படித்துப் பாருங்கள். இவற்றுக்குள்ளேயே எத்தனையோ கதைகள் இருப்பதாகத் தோன்றவில்லை? இப்படித்தான் வரிக்கு வரி கதைகளை வைத்து ஆச்சரியப்படுத்துகிறார் ஆசிரியர்.

பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் எஸ்ராவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே அல்லவே! பெயர் ஒரு குறியீடு; ஒரு நினைவு; ஒரு நிஜத்தின் படி; இந்தக் கதைகளில் வரும் பெயர்களும் என்னோடு தொற்றிக்கொண்டுவிட்டன. சிவஞானம், பி.ஷரோன் சிறுமலர், மீரா, லீலாக்கா, குணசீலன் சார், இசக்கி, நாச்சியார், கிருஷ்ணம்மா இந்தப் பெயர்களையும் மனிதர்களையும் பிட்டத்தில் ஒட்டிக்கொள்ளும் ஆற்றுமணல் போல தட்டி உதிர்த்துவிட முடியுமா என்ன?

நான் மேற்சொன்ன விஷயங்கள் வண்ணதாசனின் ஒட்டுமொத்தக் கதைகளுக்கும் கூடப் பொருந்தலாம். அந்தத் தெளிவு இன்னும் எனக்கு வரவில்லை. இன்னும் இவர் எழுத்தை நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.

தொகுப்பின் முன்னுரையை மட்டும் பத்து முறைகளுக்கு மேல் படித்திருப்பேன். அத்தனை ஆழமான வரிகள். ஒரே ஒரு உதாரணம், இன்றைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் போக்கில் வருகிறது இந்த வரி "நசுங்கிய காலியாக்கப்பட்ட பற்பசைக் குழாய்களைப் போலாகிவிட்டன வயதானவர்களின் முகங்கள்"

இந்தப் பதிவினை முடிக்க, எஸ்ராவின் விரல்களைக் கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்கிறேன்...

"
'யானையைக்கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து'


என்று வண்ணதாசன் எழுதியிருக்கிறார். இதுதான் அவர் படைப்புகளை ஏன் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று கேட்கும் வாசகனுக்கான நிரந்தர பதில். கண்ணில் படும் பருண்மைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். மண்புழுக்களைப் பற்றி அக்கறை கொள்ள ஈரமான மனதும், ஆழ்ந்த கவனமும், சக உயிர்களின் மீதான அன்பும் வேண்டும். அது வண்ணதாசனிடம் நிறையவே இருக்கிறது"


-சேரல்
(http://seralathan.blogspot.com/)