Saturday, November 24, 2012

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்


-------------------------------------------------------------------------
புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்
ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை
முதற்பதிப்பு : நவம்பர் 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்) 
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
நதிகளின் வாழ்வில் பல்வேறு நிலைகள் பற்றி நடுநிலை வகுப்புகளில் புவியியலில் படித்திருப்போம். பிறந்தவுடன் மலை பள்ளத்தாக்கு என்று சமவெளியை அடைவதற்காகப் பயமறியாது குதித்தோடும் இளமை நிலை. மணலும் கனிமங்களும் சேகரித்துக் கொண்டே சமவெளியில் ஒய்யார நடைபோடும் பக்குவநிலை. கடலடைந்த பின் கடலலை எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் தள்ளாடும் முதுமை நிலை. இம்மூன்று நிலைகளில் முதுமை நிலையில் அதிகப்படியான சுமைகளைக் சேர்க்க‌ கடல் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஒரு முகட்டை (காவிரிக்குத் திருச்சி போல‌) மையமாக வைத்து பல தடங்களில் கடலடைந்து டெல்டாவைப் பரப்புகிறது. இளமையில் தான் சேகரித்த வண்டலை எல்லாம் முதுமையில் டெல்டாவில் கொட்டி வளப்படுத்துகிறது.

பிறந்த இடமும் வருடமும், முடியும் இடம், கடந்து வந்த பாதைகள், உடன் வந்தவர்கள், விட்டோடியவர்கள், சந்ததிகள் என நதிகளுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. மனிதனுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கே படாதபாடு படும்போது, நதிகளின் கெதியை எப்படி தெரிந்து கொள்வது? செயற்கைக்கோள்கள். செய‌ற்கைக்கோள் படங்களின் நிறச்செறிவை வைத்து, அவ்விடத்தில் இருப்பது நீரா, காடா, மலையா, நீருக்குள் காடா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் இன்றைக்கு உள்ளன. அதன்பிறகு வயதைக் கண்டுபிடிக்க இருக்கின்றன கார்பன், ப்ளூரின் என்று விதவிதமான முறைகள்.

(http://www.noolulagam.com)
செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல். ஆசிரியர் புவியியல் விஞ்ஞானி. துணை வேந்தர், காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், திண்டுக்கல். தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் தான் கண்டுபிடித்த விசய‌ங்களில் ஒரு சாதாரண‌ வாசகனுக்குப் புரியும் விசயங்களே இக்கட்டுரைகள். காவிரி, வைகை, தாமிரபரணி, புதுக்கோட்டை வெள்ளாறு, தேவக்கோட்டை மணிமுத்தாறு என்ற ஐந்து நதிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர். வாழ்க்கை வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள காவிரியை எடுத்துக் கொள்வோம்.
தலைக்காவிரி கொகேனெக்கல் மேட்டூர் என ஓடி திருச்சியை முகடாகக் கொண்டு டெல்டாவைப் பரப்பி கொள்ளிடம் என்ற பெயரில் ஓடி வங்கக்கடலில் கல‌ப்பதுதான் காவிரியின் தற்போதைய தடம். (பிரதான பாதையில் இருந்து விலகி கடல் கடக்க ஓடும் வழிகளைத் தடம் எனக் கொள்வோம்) புத்தகம் என்ன சொல்கிறது என்றால், இது காவிரியின் 19வது தடம். இதற்கு முன் 18 வித்தியாசமான தடங்களில் காவிரி கடல் அடைந்திருக்கிறது. காவிரி டெல்டாப் பகுதிகளில் ஓடும் குடமுருட்டியாறு பழவனாறு பழம்காவிரி போன்ற தடங்களில் ஒரு காலத்தில் காவிரி கடல் சேர்த்திருக்கிறது. அதே போல் காவிரி விட்டுப் போன ஒரு தடத்தில்தான் இன்று புதுக்கோட்டை வெள்ளாறு ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் காவிரியின் பாதையிலேயே திருச்சி இல்லை என்கிறது புத்தகம்! திருச்சி காவிரிக்கு 3வது பாதை. மேட்டூரில் இருந்து திருக்கோவிலூர் வழியே கடலூர்ப் பகுதிகளில் அமைகிறது 2வது பாதை. அப்போதுதான் அரிக்கமேடு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. ஆச்சரியமே காவிரியின் 1வது பாதையில் தான் இருக்கிறது. கொகேனெக்கல் வாணியம்பாடி ஆம்பூர் வாலாஜாப்பேட்டை அரக்கோணம் வழியாக திருவள்ளூர்ப் பகுதிகளில் அமைகிறது 1வது பாதை. கடல் அடைய காவிரி உபயோகித்த தடங்கள் என்னென்ன தெரியுமா? காவிரி விட்டுப்போன அத்தடங்களில் தான் இன்றைக்கு அடையாறும் கூவம் ஆறும் ஓடிக் கொண்டிருக்கின்றன! கூவம் ஒரு காலத்தில் வளமிக்க நதி. வங்கக்கடலில் 2 கிலோமீட்டருக்குக் கொட்டிக் கிடக்கும் வண்டலும், திருவள்ளூர்ப் பகுதிகளில் காணப்படும் கற்படுகைகளும் சான்றுகள்!

கொகேனெக்கலை அச்சாகக் கொண்டு கடிகாரமுள் திசையில் காவிரி இரண்டு முறைகள் ஏன் பாதை மாறியது? ஒவ்வொரு பாதையிலும் தெற்கிலிருந்து வட‌க்காக‌ பதினெட்டு முறைகள் ஏன் தடம் மாறியது? அடுத்து பாதை அல்லது தடம் மாறுமா? மாறினால் எப்படியெல்லாம் ஓடும்? இதையெல்லாம் தெரிந்து வைத்து என்ன பயன்? கடல்தாக்கம் மற்றும் வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், தமிழகத்தின் பண்டைய கடலின் எல்லைகள், அதிலிருந்த துறைமுக நகரங்கள், புத்தகம் படித்துப் பாருங்கள். இதே போல்தான் மற்ற 4 ஆறுகளின் வாழ்க்கை வரலாற்றையும் விளக்குகிறார். நான் சுருக்கிச் சொல்வதால் ஏதோ புனைவு போல தோன்றும் இவ்விசயங்கள் எல்லாம் அறிவியல் பூர்வமாகவும், அரிக்கமேடு போன்ற பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள் சின்னங்கள் மூலமும், திருக்கோவிலூர் போன்ற கல்வெட்டுகள் மூலமும், பெரிய புராணம் போன்ற‌ தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் விளக்குகிறார் ஆசிரியர். 

(http://www.mapsofindia.com)
சில விசயங்கள்: 
1) 1100 ஆண்டுகளுக்கு முன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கர்களுடன் போருக்குச் செல்லும் போது காஞ்சிபுரத்திற்கு வடக்கே ஒரு பெருநதியைக் கடந்ததாகக் கலிங்கத்துப் பரணி சொல்கிறது. அப்படி ஏதாவது நதி இப்போது இருக்கிறதா? 
2) கடல் மதுரை வரை வந்து தாக்கியதாகவும் மன்னன் சுந்தரபாண்டியன் ஒரு செண்டை எறிந்ததால் கடல் பின்வாங்கியது எனவும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய திருவிளையாடல் புராணம் சொல்கிறது. ப்பூ என்று ஊதினால் நீரோடும் கதையெல்லாம் நாடோடி மன்னன் படத்தில் பாலையா சொன்னால் ரசிக்கலாம். ஆனால் நடைமுறையில் மதுரைக்குப் பக்கத்தில் கடல்?
3) கொள்ளிடத்தில் தண்ணீர் குறைவாக ஓடும் போது வட மருங்கில் ஓடுமாம். கவனித்து இருக்கிறீர்களா?
4) அறந்தாங்கி மற்றும் தேவக்கோட்டையில் இருந்து கடல் நோக்கிச் செல்லச் செல்ல மேற்கு நோக்கி கரை கொண்ட பிறைவடிவ‌ குளங்கள் அதிகமாக இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
5) பொன்னையாறு, திருச்சி தில்லை நகர், தஞ்சாவூர் வல்லம், திருநெல்வேலி வல்லநாடு - பெயர்க்காரணம்?
6) மேற்கிலிருந்து ஒழுங்காக கிழக்காக ஓடும் போது, திருநெல்வேலியில் சற்று நெளிந்து வடக்காக ஓடும் தாமிரபரணியைப் புவியியல் ரீதியில் ஒரு அபூர்வ நதி என்கிறார். டெல்டாவே இல்லாமல் பக்குவநிலை மட்டுமே கொண்ட நதியாம். அதன் வெள்ளப் பாதிப்பு திருநெல்வேலியில் மட்டும் அதிகம் இருப்பதேன் தெரியுமா?

காவிரியைக் குழாய்கள் மூலம் பல கிலோ மீட்டர்கள் இழுந்து வந்து தாகம் தீர்க்கும் எங்கள் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சின்ன காட்டாறு, ஒரு காலத்தில் காவிரியின் 7வது தடம்! நீங்கள் பார்க்கும் ஒரு குளம் கூட ஒரு நதியின் புதையுண்ட பாதையாக இருக்கலாம். இப்புத்தகம் படியுங்கள். நீங்கள் பார்க்கும் தமிழகமும், 6500 கிலோ மீட்டர்கள் வடக்கே நகர்ந்து வந்து இன்னும் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும் இன்னும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் தெரியும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், புவியியல் துறை சார்ந்தவர்களும் கண்டிப்பாகப் படிக்கலாம். இப்புத்தகம் சொல்லும் ஐந்து ஆறுகளுடன் தொடர்புள்ள ஊர்க்காரர்களுக்கும், சென்னை அறந்தாங்கி வேதாரண்யம் நெய்வேலி கடலூர் கம்பம் பட்டுக்கோட்டை மன்னார்குடி ஜெயங்கொண்டம் காரைக்குடி திருக்கோவிலூர் ஊர்க்காரர்களுக்கும் ஆச்சரியங்கள் இப்புத்தகத்தில் நிறைய இருக்கின்றன.

கொகேனெக்கலில் புதையுண்ட காவிரியை வெளிக்கொணர சோழ இளவரசன் ஒருவன், அங்கு போய் காவிரியில் குதித்து உயிர்த் துறக்கிறான். அவனின் தியாகத்தில் மனமுருகி கிழக்கே ஓடிக்கொண்டிருந்த காவிரி தெற்கே திரும்பி திருச்சி வழியாக சோழ நாட்டைச் செழிக்கச் செய்கிறது. காவிரி இரண்டாம் முறை பாதை மாற இப்படி ஒரு புராணக் கதையை ஆசிரியர் சொல்கிறார். நதிகளுக்கும் பல்லுயிர்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்கள் அதிகமான நம் தலைமுறைக்கு இக்கதை ஏதோ சொல்வது போல் தெரிகிறதா, இப்புத்தகத்தைப் போல‌?

- ஞானசேகர்

98. தூங்காமல் தூங்கி


ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி
சுகம் பெறுவது எக்காலம்
-------------------------------------------------------------------------
புத்தகம் : தூங்காமல் தூங்கி
ஆசிரிய‌ர் : Dr.S.மாணிக்கவாசகம் MBBS.DA.
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2008
விலை : 65 ரூபாய்
பக்கங்கள் : 128 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்) 
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். ஆசிரியரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கடையின் புத்தகக் குவியல்களில் எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கிக் கிடக்கும். ஆனாலும் முதலில் பார்க்கும்போது, அட இப்படியும் ஒரு புத்தகமா என்ற ஆச்சரியத்துடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும் வசீகரம் சில புத்தகங்களுக்கு அமைந்துவிடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் எனக்கு இப்புத்தகம். ஆசிரியர் 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவர். அயல் மனித முகங்கள் மேல் மனிதாபிமானம் காட்டும் தொழில். வாழ்வின் பெரும்பகுதியை அறுவைச் சிகிச்சை அரங்கிற்குள்ளேயே கழித்துவிட்டவர். தொழில் சார்ந்த அவரது அனுபவங்களே இப்புத்தகம்.

தூங்காமல் தூங்கி. Memories of an Anaesthesiologist. ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை.

நோயாளியை மயக்க நிலைக்குக் கொண்டு போய் மீண்டும் கண் விழிக்க‌ வைக்கும் வரை கூடவே இருந்து கண்பாவை, நாடித்துடிப்பு, சுவாசம், உடல்நிறம், இரத்த அழுத்தம், காயத்திலிருந்து வெளியேறும் இரத்தம், அதை ஈடுசெய்ய மருந்துகள் போன்ற விசயங்களைக் கவனித்துக் கொள்ளும் தனது தொழிலில் மறக்க முடியாத மனிதர்கள்-அனுபவங்கள் பற்றியது இப்புத்தகம். தொழில்நுட்பம் முன்னேறிவிட்ட இக்காலத்தில் இவை எல்லாவற்றையும் கணினியே பார்த்துக் கொள்ளும்போது, மருத்துவன் அறுவைச் சிகிச்சை அரங்கிற்கே செல்லத் தேவையில்லை. அறுவைச் சிகிச்சையில் என்ன செய்யப் போகிறோம் என முன்கூட்டியே மருத்துவர் நோயாளிக்கு வீடியோ படம் காண்பிக்கும் காலம் இது. வாசகனை அறுவைச் சிகிச்சை அரங்கு வரை அனும‌தித்து, தூக்கம் உணவு தண்ணீர் குடும்பம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு, அனுபவ அறிவுடனும் மருந்துகளுடனும் போராடிய மருத்துவ உலகை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.

குளோராபார்ம் டாக்டர் என்று தெரிந்தவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர், தான் தன் தொழிலில் சந்தித்த முதல் மரணம் முதல் சிசேரியன், குடலிறக்கம், குடலடைப்பு, விரைவீக்கம், குடல்வால், கத்திக்குத்து, ஆணுறுப்பு மேல்தோல் நீக்கம், தைராய்டு கட்டி, எலும்புமுறிவு போன்ற‌ அறுவைச் சிகிச்சைகள் கண்ட நோயாளிகள் வரை பலரைச் சிறுகதைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.

- ஞானசேகர்

Monday, October 22, 2012

97. S M S எம்டன் 22-09-1914


'இதோ பார் கண்ணா... இதுதான் சமுத்திரமாம்... இங்குதான் எம்டன் வந்தானாம்... பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்... செல்லம்...'
- சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)
ஆசிரிய‌ர் : திவாகர்
வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : 2008
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 374 (தோராயமாக 37 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை 'சூரியன் மறையாத நாடு' என்று பெருமை பிரிட்டனுக்கு உண்டு. அந்த அளவிற்கு அது தனது காலனிகளை உலகம் முழுவதும் பரப்பி வைத்திருந்தது. இன்றைக்கு இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பைத் தங்கள் காலனிகளின் ராணி என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள். பிரிட்டிஷாரின் ஏரி என்று சொல்லப்படும் அளவிற்கு இந்தியப் பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. அந்த அளவிற்குக் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது இரண்டாம் உலக‌ப் போர் காலத்தில் ஜப்பான் குண்டு வீசப் போவதாக மக்களிடையே வதந்தி பரவியதை மதராசபட்டணம் அந்தநாள் போன்ற திரைப்படங்களில் பார்த்திருப்பீங்கள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே அப்படி ஒன்று மெட்ராஸ் மாநகரில் நடந்திருந்தது. முதல் உலகப் போர் ஆரம்பித்து சில நாட்களில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்று குண்டுமழை பொழிந்தது. சூரியன் மறையாத நாட்டின் ஏரியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் கண்ணாமூச்சி காட்டிய அக்கப்பலின் பெயர் எம்டன்; SMS எம்டன்.

SMS என்றால் ஜெர்மானிய மொழியில் Seiner Majestat Schiff என்றும் ஆங்கிலத்தில் His Majestic Ship என்றும் பொருள். கிழக்கின் அன்னம் என்ற புனைப்பெயரும் உண்டு. கிழக்குக் கடலில் அறுபதிற்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் வேவுக் கப்பல்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிவிட்டு, 1914ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி இரவு 9:20 மணி முதல் 9:30 வரை, பத்தே நிமிடங்கள், கடற்கரையில் இருந்து ஒண்ணரை மைல் தொலைவில் இருந்து மெட்ராஸ் நோக்கிக் குண்டுகளை வீசியது எம்டன். 130 குண்டுகள். 5 பேர் பலி. மெட்ராஸ் துறைமுகமும் இன்றைய தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையும் இலக்குகள். சென்னை உயர்நீதிமன்ற வ‌ளாகத்தினுள் ஒரு குண்டு விழுந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருந்த செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன் படித்தபோதுதான் எம்டன் எனக்கு அறிமுகம் ஆனது. அந்த நினைவுத்தூணைக் காணவில்லை என்ற செய்தியை இந்த ஆண்டு படித்தேன்.

இரவில் பொதுமக்கள் வீதியில் நடமாட வேண்டாம். வீட்டுக்குள்ளே எரியும் விளக்கின் ஒளி வெளியே தெரியக் கூடாது. எம்டனுக்குப் பயப்பட வேண்டாம். இப்படி அரசாங்கம் ஒலிப்பெருக்கியில் மெட்ராஸ் தெருக்களில் கத்தியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மெட்ராஸை விட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். விதவிதமான வதந்திகள். புதுச்சேரி அருகே எம்டனைப் பார்த்து டாட்டா சொன்னதாக சிலர் கூறினர். கல்கத்தா கிளப் ஒன்று பிரிட்டிஷாரைத் திணற வைத்த எம்டனின் வீரதீர செயல்களைப் பாராட்டி அதன் கேப்டனுக்குக் கௌரவ உறுப்பினர் பட்டம் கொடுக்க முன்வந்தது. அன்று எம்டனால் மெட்ராஸைச் சுலபமாக அழித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பின்வாங்கிப் போய்விட்டது. அதற்குச் சரியான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. அக்கப்பலில் ச‌ண்பகராமன் என்ற ஒரு டாக்டர் பணிபுரிந்ததாகவும் பின்னாளில் ஒரு வதந்தி பரவியிருக்கிறது. அதை ஜெர்மன் மறுத்துவிட்டது. இந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு திவாகர் அவர்கள் எழுதி இருக்கும் வரலாற்றுப் புதினம்தான் S M S எம்டன் 22-09-1914.



சண்பகராமனுக்கு ஆசிரியர் தனது புதினத்தில் வைத்திருக்கும் பெயர் சிதம்பரம். மெட்ராஸ் மாநகர டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அருகில் மயிலாபுரியில் (மயிலாப்பூர்) சிதம்பரம் வீடு. எம்டனுக்குள் மிக்க மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட வெளியாள் என்ற பெருமையுடன் எம்டனில் மாட்டிக் கொள்ள, மெட்ராஸ் மீது குண்டு போடாமல் புதினத்தின் 51வது பக்கத்திலேயே தடுத்து விடுகிறார். எந்த ஒரு மர்மத்தைப் புதினத்தின் பின்னட்டை சொன்னதோ, அந்த மர்மம் அத்தோடு முடிகிறது. இனிமேல் படிக்க என்ன இருக்கிறது என மூடி வைக்க நினைக்கும் வாசக‌னுக்கு அடுத்தடுத்து பல மர்மங்களைக் கொடுத்து திறந்தே வைத்திருக்கப் பணிக்கும் புதினம் இது.

புதினத்தின் கதைகளை மூன்றாகப் பிரிக்கலாம். கடலோடும் எம்டனுக்குள் நடக்கும் கதை ஒன்று. அதில் மாட்டிக் கொண்ட சிதம்பரத்தைக் காப்பாற்ற போராடும் குடும்பம், மாட்டிவிட போராடும் சிலபேர் என கரையில் நடக்கும் கதை இரண்டு. கதை மாந்தர்கள் டைரியில் இருந்தும் ஓலைச் சுவடிகளில் இருந்து வாசிக்கும் இராஜராஜ சோழன் பற்றிய கதை மூன்று. மெட்ராஸ் குண்டு வீச்சு முதல் 50 நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியக் கப்பலொன்றால் மூழ்கடிக்கப்படுவது வரை பயணிக்கிறது, எம்டன் சம்மந்தப்பட்ட முதல் கதை. பிரிட்டனின் பெருங்கடற்படையை உலக மக்களிடையே கேலி பேச வைத்த‌ எம்டன் சென்ற பாதையில் நம்மையும் கூட்டிப் போகிறது புதினம். எம்டனின் கேப்டன், துணைக் கேப்டன், சீன உதவியாள், அடிபட்டுக் கிடக்கும் டாக்டர் என்ற உண்மைப் பாத்திரங்களுக்கு இடையே நுழைந்து, எம்டனின் திசையைத் தன் புத்திசாலித்தனத்தால் தனக்குச் சாதகமாகத் தீர்மானிக்கும்படி சிதம்பரம் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

இந்திய நிலக்கரியின் தரம் குறைவு. எம்டனில் 3 புகைப்போக்கிகள். செப்டம்பர் 20ம் தேதி புரட்டாசி (மகாளய) அமாவாசை; 22ம் தேதி மெட்ராஸ் டி ஐ சி லாங்டன் பிறந்தநாள். வைசிராயின் வளர்ப்பு மகள் உயரம் தாண்டுதல் வீராங்கனை. இவை போன்ற சின்னச் சின்ன தகவல்களைக் கதையை நகர்த்தப் பயன்படுத்தி இருப்பது அருமை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் எம்டன் மூழ்கடிக்கப்பட்ட பின் மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் சிறப்பு விருந்து முடியும் வரை புத்தகத்துடனேயே வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு எம்டனைச் சுற்றி பல முடிச்சுகளைப் பின்னியிருப்பதும் அருமை. அதற்காக பல சரித்திர விசயங்களைத் தேடிப் போய் திரட்டி இருக்கும் ஆசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நான் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததில்லை. எம்டன் புதினத்தில் இராஜராஜ சோழன் பற்றிய மூன்றாம் கதை ஆரம்பிக்கும் போது அவர் எப்படி இறந்திருப்பார் என்ற மர்மத்தை நோக்கியே புதினம் நகரும். எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தால், அவர் அரியணை ஏறியவுடன் கல்கி முடித்து விட்டதாக‌ சொன்னார்கள். பொன்னியின் செல்வன் புத்தகத்தை இராஜராஜ சோழனோடு முழுக்க சம்மந்தப் படுத்துவது போல் என் புத்தியில் எப்படி பதிந்தது என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன், அவரின் மகன் இராஜேந்திரச் சோழன், பேத்தி அங்கம்மா என்று ஒவ்வொரு தலைமுறையாக மர்மங்களுடன் பயணிக்கிறது புதினம்.

புத்தகம் முடித்தபின் எனக்குச் சில சந்தேகங்கள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
1. எம்டனில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நோபிள் என்ற பெண், உண்மையிலேயே வைசிராய் ஹார்டிங்கின் வளர்ப்பு மகளா, இல்லை ஆசிரியரின் புனைவுப் பாத்திரமா?
2. ஒரு சண்டையில் எந்திரத் துப்பாக்கி உபயோகப் படுத்துவார்கள். AK47? அது முதல் உலகப் போர் சமயத்தில் உபயோகத்தில் இருந்ததா?
3. சண்பகராமன் என்றொருவர் எம்டனில் இருந்திருக்கவில்லை என்கிறது புத்தக முன்னுரை. சென்னை கிண்டியில் காந்தி மண்டப வாளகத்தில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சண்பகராமனுக்குச் சிலை இருப்பதாகப் படித்தேன். வேறெந்த தகவலும் இப்போது என்னிடம் இல்லை.

இந்தியா எதுவென்றே ஒரு தெளிவான புரிதல் இருந்திராத‌ காலத்தில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் என்ற சக்தியால் தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது போல சித்தரிக்கும் பகுதிகளும், சிவபெருமான் யோகா அரசக்குடும்பம் போன்ற விசயங்களை அளவுக்கதிகமாகக் கொண்டாடும் பகுதிகளும் எனக்குப் பிடிக்கவில்லை. எம்டனை எடுத்துவிட்டால் ஓர் ஆன்மீகப் புத்தகம் போன்ற பிரம்மை இருந்தது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படிக்கும் போது இப்படி தோன்றாமல் இருக்கும்படி, புத்தகம் சுவாரசியமாக இருந்ததில் மகிழ்ச்சி.

ஒரு நல்ல காரியத்தைச் செய்த ஒரு நல்ல நாளில் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என முடிவு செய்து வாங்கிய புத்தகமிது. நான் சென்னை வந்து 4 மாதங்கள் தான் ஆகின்றன. அடிக்கடி மெரீனா போய் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது மிதந்து போகும் கப்பல்கள் எல்லாம் எம்டன் போலவே தெரிகின்றன. திடீரென வானத்தில் இருந்து மினிக்கிக் கொண்டு கலங்கரை விளக்கம் மேல் பறந்து போகும் விமானங்கள் எல்லாம் குண்டுகள் போல் தெரிகின்றன. இரகசியங்களை எனக்குச் சொல்லாமல் அலைகள் கேலியாகச் சிரிக்கின்றன.

சென்னை கடற்கரை மேல் எனக்கிருக்கும் பிடிப்பு இன்னும் அதிகமாகும்படி ஒரு நல்ல வரலாற்றுப் புதினத்தைத் தந்தமைக்கு ஆசிரியருக்கு டோய்ச் மொழியில் 'டங்கே'.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

96. சோளகர் தொட்டி

Power tends to corrupt and absolute power corrupts absolutely.
- Lord Acton

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சோளகர் தொட்டி
ஆசிரிய‌ர் : ச‌.பாலமுருகன்
வெளியீடு : எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)
முதற்பதிப்பு : டிசம்பர் 2010 (முதல் 5 பதிப்புகள் வனம் வெளியீடு (2004-2006); 6ம் பதிப்பு விடியல்)
விலை :  120 ரூபாய்
பக்கங்கள் : 240 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

சோளகர் என்றும் சோளவர் என்றும் அழைக்கப்படும் மலையின மக்கள் தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் உள்ள கர்நாடக எல்லை ஓரத்தில் அதிகம் வாழ்கின்றனர். வேட்டையாடுவதற்கு ஏற்ற அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் இவர்தம் கூரைக் குடிசைக் குடியிருப்புகள் உள்ளன. காட்டு இலாகாவினரின் கட்டுப்பாடுகள் இவர்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலுக்கு இப்போது வாய்ப்பளிக்கவில்லை. காட்டு மரங்களை வெட்டுவதற்கும் தேன் எடுப்பதற்கும் வனத்திற்குள் வழி காட்டுவதற்கும் காட்டு இலாகாவினர் சோளகர்களை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். சோளகர்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் லிங்காயத்தார் எனச் சொல்லும் ஒருவகை மலையின மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகின்றன. இவர்களின் தொழில்களுக்கு லிங்காயத்தார்களே வாய்ப்பளிக்கும் வசதி உள்ளவர்களாக இருப்பதால் பெரும்பாலும் சோளகர்களின் குடியிருப்புகள் இவ்வாறு அமைகின்றன. சொந்தமாக விளைநிலங்களோ உழவு மாடுகளோ இல்லாத சோளகர்கள் கூலி விவசாயிகளாக லிங்காயத்தாரிடம் வேலை செய்கின்றனர்.

பெங்களூர் பகுதிகளில் இருந்து ஒரு காலத்தில் போருக்குப் பயந்து ஓடி வந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் லிங்காயத்தார்கள், வேறு இனத்தாரைத் தங்கள் வீடுகளில் அனுமதிப்பதில்லை; வெளியிடங்களுக்குப் போகும்போது வேறெங்கும் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை. சைவ உணவு உண்ணும் லிங்காயத்தார்கள், அசைவ உணவு உண்ணும் சோளகர்களைத் தீண்டத் தகாதவர்களாகவே நடத்துகின்றனர். லிங்காயத்தார்களின் கால்நடைகள் நோய்வாய்ப் ப‌ட்டாலோ, இறந்து பட்டாலோ அவற்றைச் சோளகர்கள் எடுத்துச் செல்கிறார்கள். 1994ல் நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடான டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்ட 'தமிழ‌க மலையின மக்கள்' என்ற புத்தகம் சோளகர்களைப் பற்றி சொல்லும் சில குறிப்புகள் இவை.
 

ச.பாலமுருகன் அவர்களின் சோளகர் தொட்டி. சோளகர்களின் வசிப்பிடத்திற்குத் தொட்டி என்று பொருள். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் வன எல்லையில் இருக்கும் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட குடிசைகளைக் கொண்ட ஒரு சோளகர் தொட்டிதான் பாலமுருகன் அவர்களின் களம். மொத்த புதினத்தைச் சரிபாதியாக பிரித்து இரண்டு பாக‌ங்களில் கதை சொல்கிறார். அறுவடைக்குப் பின் காய வைத்து எடுக்கப்பட்ட ராகி தானியக் கதிர்கள் வாசனையை நுகர்ந்து தொட்டிக்குள் நுழையும் பெரிய கொம்பன் யானையை விரட்டுவதற்காக அந்த இரவில் தூக்கம் தொலைக்கும் சோளகர்களை அறிமுகப்படுத்தி ஆரம்பமாகிறது புதினம். தலைவனை விட்டுக் கொடுக்காத கூட்டு வாழ்க்கை, திருமண முறை, வழிபாட்டு முறைகள் என விரிகின்றது புதினம். பூர்வீகத் தொழிலான வேட்டையைச் சுதந்திர நாட்டின் சட்டங்கள் தடுப்பதையும், தப்பித் தவறி மாட்டிக் கொள்பவர்கள் காவல் துறையிடமும் உயர் சாதியிடமும் அப்பாவித்தனமாக ஏமாற்றப் படுவதையும், ஒரு குடும்பம் பட்ட கடனை மொத்த தொட்டியும் ஏற்றுக் கொண்டு உழைப்பதையும் பதிவு செய்கிறார்.

பீனாச்சியின் நாதம், தப்பையின் தாளம், பாட்டுப் பாடிக் கொண்டே இரவு முழுதும் கண் விழித்து விலங்குகளை விரட்டுகிறார்கள். கொத்தல்லி கோல்காரன் பட்டக்காரன் என்ற தொட்டியின் முக்கியஸ்தர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். மணிராசன் கோவிலில் மூதாதையர்களின் ஆவிகளுட‌ன் பேசுகிறார்கள். சோளகர் - லிங்காயத்தார் உறவை ஒரு புராணக் கதை மூலம் விளக்குகிறார். தேனெடுத்தல் வேட்டையாடல் என்ற தங்கள் பூர்வீகத் தொழிலைத் தடை செய்யும் அரசு, அதே வேலைகளுக்காக அரசால் சோளகர்கள் பயன்படுத்தப் படுவதையும் பதிவு செய்கிறார். சோளகர் தொட்டிக்குள் நம்மையும் ஒருவராக‌ உணர வைக்கும் புதினத்தின் ஆரம்பப் பகுதிகளை வைகை எக்ஸ்ப்ரஸில் படித்தேன். அட்டைப் படத்தைப் பார்த்து முகம் சுழித்த சகபயணிகளுடன் திருச்சியில் இருந்து எழும்பூர் வருவதற்குள் 70 பக்கங்களுக்கு மேல் படித்திருந்தேன். ஆனால் புதினம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தவுடன் அவ்வளவு எளிதாகப் பக்கங்களைக் கடக்க முடியவில்லை. கடைசி 40 பக்கங்களைத் தனிமையில் படித்து முடித்த இரவில் கனத்த மனத்துடனும் தலைவலியுடனும் நான் தூங்கத் தாமதமானது.

சந்தனக்கட்டை வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக கர்நாடக அதிரடிப் படைகளும் வனத்துறைகளும் காவல்துறைகளும் பழங்குடியின மக்கள் மேல் நடத்திய வன்கொடுமைகளே ச.பாலமுருகனின் புதினக்கரு. வனத்துக்கு வெளியே மக்களைத் தலை குனிந்து வணங்கச் செய்யும் வெள்ளைக்காரத் துரைகள், வனத்திற்குள் வந்தால் சோளகனின் தோளில் சமமாகக் கை போட்டு வேட்டைக்குப் போகும் காலமும் இருந்தது. அப்படிப்பட்ட சோளகர்கள் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத வீரப்பன் என்ற மனிதனுக்காக‌ வனத்துடனான தங்கள் பாரம்பரிய தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப் படுகிறார்கள். சோளகர்கள் வீரப்பனுக்கு உதவி செய்பவர்கள் என அதிரடிப் படை கேம்ப்களில் அடைக்கப்பட்டு மாதக்கணக்கில் சித்ரவதைகளுக்குப் பிறகு, ஆண்கள் பெரும்பாலும் புதுத்துணி அணிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். உடல் பசி எடுக்கும் போதெல்லாம் சோளகத்திகள் குதறப்படுகிறார்கள். பழங்குடியினருக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் வீரப்பனுக்குப் பிறந்தவை எனவும், பெண்கள் எல்லாரும் வேசிகள் எனவும் வசைக்கப் படுகிறார்கள். கணவனே தன் சொந்த மனைவியைத் தொடாமல் பயபக்தியுடன் இருக்கும் மாதேஸ்வரன் மலையில்,.....

ஒரு குடும்பம் எப்படிப்பட்டது என்பது அது தம் பெண்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது. ஒரு சமூகம் எப்படிப்பட்டது என்பது அது தம் சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் எல்லா அரசுகளும் எல்லா இடங்களிலும் சிலருக்குச் சில சமயங்களில் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கொடுக்கின்றன. அவ்வதிகார வர்க்கம் சிறுபான்மை மக்கள் மேல், குறிப்பாக பெண்கள் மேல் வன்முறை செலுத்தி அவர்கள் வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிட்டு பதக்கங்களுடனும் பரிசுகளுடனும் வாழப் போய்விடும் கொடுமையை ஆவணப்படுத்தியதில் ச.பாலமுருகன் தனித்து நிற்கிறார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு வாச்சாத்தி வன்கொடுமைகளுக்குத் தீர்ப்பு வந்ததால் ஏதோ வாச்சாத்தி மட்டும்தான் என நினைக்க வேண்டாமென சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். கடல் தாண்டி நம் காலடியில் நடப்பதாக நாம் சொல்லும் கொடுமைகள் எல்லாம், நம் தலைக்கு மேலேயே நடப்பதைச் சான்று சொல்லும் இந்தச் சோளகர் தொட்டி கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய புதினம். முழுக்க முழுக்க பழங்குடியினர் பற்றிய புதினம் வேறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பைபிள் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும், சுத்தத் தமிழில் இருக்கும் உரையாடல்களைத் தவிர வேறேதும் குறைகளில்லை.

அனுபந்தம்:
----------
இந்த ஜீலையில் சென்னையில் நடந்த 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் (தலைவர் என நினைக்கிறேன்) அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில துளிகள்:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் அடிப்படை உரிமையான பேச்சுரிமை கூட மலைவாழ் மக்களுக்கு நிராகரிக்கப் படுகிறது. ஒரு ஃபாரெஸ்ட் ஆபிஸர் முன் அவர்கள் பேசினால், 'எங்க முன்னாடி பேசுற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சா?' என்ற பதில் கிடைக்கும்.

2. இன்று மலையில் பூர்வ குடிகள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டு, மலை மொட்டையடிக்கப் படிகிறது. அவர்கள் இருந்த இடத்தில் ரிசார்ட்டுகளும் சுற்றுலா மாளிகைளும் பணப்பயிர்த் தோட்டங்களும் இருக்கின்றன. உதகமண்டலம் குன்னூர் கொடைக்கானல் போன்ற இடங்களில் மலைவாழ் மக்களிடம் இப்போது துளி நிலம் கூட இல்லை. எல்லாம் பிடுங்கப்பட்டுவிட்டன. நீலகிரி ஏலகிரி ஏற்காடு போன்ற மலைகள் இப்போது திராவிடக் கட்சிக்காரர்களுக்குச் சொந்தம்.

3. உப்பு உடை இந்த இரண்டிற்காக மட்டுமே மலை இறங்கித் தரைக்கு வந்து கொண்டிருந்த‌ மலைவாழ் மக்கள், எல்லாவற்றிற்கும் தரையைச் சார்ந்திருக்கச் செய்யும் ஓர் அடிமை நிலையை உண்டாக்கியதுதான் சுதந்திரம் மற்றும் அறிவியலின் எச்சம்..

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Friday, September 14, 2012

95. பீக்கதைகள்


திண்ணியத்தில்
தின்ன வைத்தார்கள்
மலத்தை.
குமட்டுகிறது.
ஒருவரிகூட
எழுதவில்லை நான்.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)

I may not be born again; but if it happens, I will like to be born into a family of scavengers; so that I may relieve them of the inhuman, unhealthy and hateful practice of carrying night soil.
- Mohandas Karamchand Gandhi 
------------------------------------------------------------
புத்தகம் : பீக்கதைகள்
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன் (http://www.perumalmurugan.com/)
வெளியீடு : அடையாளம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2004 
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 136 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்) 
------------------------------------------------------------
அம்மா தாய்வீடு வந்து தலைப்பிரசவ சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தவுடன் என்னைத் தூக்கிக் கொண்டு புகுந்த வீடு அழைத்துப் போகப்பட்ட அன்று தாய்வீடு தூக்கம் தொலைத்த கதையை என் அம்மாச்சி இப்படி சொல்வாள்: "இத்தன நாளு ஏன் பேரப்புள்ள இருந்த வீடு சட்டுன்னு வெறுச்சோடி போகவும் நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு. ஒரு பீத்துணியக் கூட விட்டுட்டுப் போகாம இப்புடி புள்ளயத் தூக்கிட்டு போய்ட்டாளே". பீத்துணியிலும் பாசம் கண்ட ஒரு தலைமுறைக்கு முதல் பேரக் குழந்தையாக நான் வலம் வந்த அக்கதையை இன்றைக்கு எழுத முடிந்த என்னால், இதற்கு முன்னால் நாலு பேருக்கு முன்னால் சொல்ல முடிந்ததில்லை. காரணம் 'பீ' என்ற சொல். இந்தச் சங்கடம் எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் உண்டு. பெண்ணின் கருவில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் தாயுடன் வைத்திருக்கும் ஆரம்பகாலக் கதைகள் எல்லாம் வயிற்றுப்போக்கு சிறுநீர் மலம் சளி போன்ற கருப் பொருள்களைக் கொண்டவையே. ச்ச்சீ. அசிங்கம். அசுத்தம். அநாகரீகம். அப்படிச் சொல்லக் கூடாது. அதை அப்படி மாற்றிச் சொல். அவையல்கிளவி இடக்கரடக்கல் குஃறொடரன்மொழி மங்கலவழக்கு என்று இலக்கணம் வகுத்துக் கொடுக்கிறது சமூகம். அவற்றை அப்படியே பேசுபவனுக்கு நாகரீகமற்றவன் என்று பெயரிடுகிறது. பீ என்ற சொல் இல்லாமல் என் முதல் பத்திக் கதையை எப்படி சொல்வது? ஒரே கட்டிலில் புரண்டு கூட படுக்க முடியாமல் பக்கவாதத்தில் ஒரு பக்க உடல் அழுகி புழுப்பிடித்து இறந்து போன கதையைப் பீ, மூத்திரம் என்ற சொற்கள் இல்லாமல் எப்படி சொல்வது? ஓரங்கட்டப்படுபவை சொற்கள் மட்டுமல்ல; அவற்றின் பின்னே மனிதகுலம் வைத்திருக்கும் கதைகளும்தாம். அவற்றை வெளிக்கொணர முயலும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் பெருமாள்முருகன். 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற அவரின் முந்தைய புத்தகம் கொடுத்த தெளிவான சிந்தனைதான், இப்புத்தகம் படிக்கவும் அதைப் பற்றி எழுதவும் செய்யும் நாகரீகத்தைத் தந்ததெனக் கூறுவேன்.

(www.nhm.in)
பீக்கதைகள். பீயும் பீ சார்ந்தனவும் உரிப்பொருள்களாக அமைந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு. பீ, மலம், ஆய், கக்கூஸ், கழிவறை, மல்லு, பேழ்றது, வெளிக்கி, எருவி, நரகல், கக்கா, பீக்காளான் போன்ற வார்த்தைகள் விரவிக் கிடக்கும் கதைகள். எல்லாக் கதைகளிலும் பீ தான் உரிப்பொருள் என்று முன்னரே தெரிந்து போனாலும், சலிப்பில்லாமல் வாசிக்கச் செய்யும் எழுத்து நடையும் அதன் மூலம் வாசகனின் பார்வையைத் தன் கரு நோக்கி இழுத்துச் செல்லும் வித்தியாசமான கதைக்களங்களும் இக்கதைகளின் மாபெரும் பலம். கிராமங்களில் வாய்வழியாக உலாவரும் பீயை மையமாக‌க் கொண்ட கதைகள் அல்லாமல், சமகாலச் சூழலில் பீயை மையமாக்கி இருப்பதும் அருமை. ஒரு சின்னப் பையனின் இயற்கை உபாதையை இச்சமூகம் எவ்வாறு அலட்ச்சியப் படுத்துகிறது, என்கிறது ஒரு கதை. தேநீர் குடித்தால் தான் வெளிக்கிப் போகும் என்று நம்பும் பலரில், வீம்புக்காக‌ தேநீர் குடிக்காமல் அடக்கி அல்லல்படும் ஒருவனின் கதை. கிராமத்தில் முதலில் கழிவறை கட்டி அதைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் ஒரு கிழவி, தன் கிணத்துத் தண்ணீரை யாரும் பயன்படுத்தி விடக் கூடாதென மலம் கலக்கும் ஒருவன், பீயள்ளுபவன், கட்டணக் கழிவறைகளில் சீக்கிரம் வெளிவரச் சொல்லி கதவு தட்டுபவனாக வேலை பார்ப்பவன், புனிதமாக மதிக்கப்படும் சாமிக் கிணற்றில் பேண்டவன் போன்றவர்கள் தான் கதைகளின் பாத்திரங்கள். மிகவும் பரிட்சயமான வழக்கமான சில விசயங்களில் பீயை உரிப்பொருளாகப் புகுத்தி வித்தியாசமான‌ பார்வையில் கதை சொல்லும் விதம் அருமை. உதாரணமாக, நகரத்து நெருக்கடியைக் கதவில்லாக் கழிவறைகள் மூலம் திறந்து காட்டும் கதை. கிராமத்துக் காடுகரைகளில் வெளிக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருத்தி நகரத்திற்குக் கல்யாணம் கட்டி வந்தபின், கழிவறை என்ற வினோதத்துடன் பகல் பொழுதைப் பயந்து பயந்து தனிமையில் கழிக்கும் ஒரு கதை. அக்கதையில் வரும் 'இரு உள்ளங்கைகளையும் விரித்துக் கொண்டு மண்டை ஓட்டு வடிவம் எடுத்திருந்தது பீவாங்கி' என்ற வரி அழகு. அக்கதைக்கு எதிர்மாறாக, கழிவறைகளில் வெளிக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருத்தி, கிராமத்திற்குக் கல்யாணம் கட்டி வந்தபின், காடுகரைகளில் ஒதுங்கப் பணிக்கப்படும் துயரம் சொல்கிறது இன்னொரு கதை. கம்யூனிஸம், மாய எதார்த்தம், சாமி, சாதி என்று பல தளங்களில் பீயைத் திணித்துப் பார்க்கின்றன கதைகள். 'பொன்னாள எனக்குத்தான் மொதல்ல கட்டிக் குடுக்குறதா இருந்தாங்க. கிழவியைக் கட்டியிருந்தால் வயதான காலத்தில் அங்கே இங்கே அலையாமல் இருந்த இடத்திலேயே பேண்டு கொள்ளலாம்' என்று ஊரில் கழிவறை வைத்திருக்கும் ஒரே கிழவியைப் பார்த்து ஒரு கிழவன் ஏங்கும் கதை ஒன்று. வாக்கியங்களுடனேயே தொடர்ந்து வரும் எளிய நகைச்சுவையும், சமூகப் பார்வையும் எல்லாக் கதைகளும் கொண்டிருக்கின்றன. எந்தக் கதையிலும் பீ வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. பீயை வைத்து இவ்வளவு சமூகப் பிரச்ச‌னைகளை அலச முடியும், மாய எதார்த்த முறையில் அருமையான‌ கதை சொல்லக்கூட பீயைப் பயன்படுத்தலாம் - நிரூபித்துக் காட்டுகிறது இப்புத்தகம். சந்தனச் சோப்பு என்ற சிறுகதையை ஆசிரியரின் அனுமதியுடன் யாராவது குறும்படமாக எடுக்கலாம் என்று வலைப்பதிவர் ஒருவர் பரிந்துரை சொன்னார். நான் வழிமொழிகிறேன். நான் ரசித்தவை: பிடித்த கதைகள்: கடைசி இருக்கை, சந்தனச் சோப்பு, பீ, புகை உருவங்கள் பிடித்த பாத்திரங்கள்: கடைசி இருக்கை, சந்தனச் சோப்பு என்ற கதைகளில் வரும் சிறுவர்கள் திருமலை நாயக்கருக்கு எதிராகப் புரட்சி செய்த ஒருவனைக் கழுதை மேல் அமர வைத்து, மலக்கரைசல் கொண்ட பானை ஒன்றை அவன் தலை மேல் வைத்து, முகத்தில் சிந்தி வழியும் கழிவுடன் மதுரை நகரில் வலம் வரச் செய்ததாக‌ச் சரித்திரக் குறிப்பு உண்டு. தவறு அல்லது எதிர்ப்பு செய்யும் கூலி விவசாயிகளைப் பண்ணையார்கள் மலம் மூலம் தண்டிக்கும் வழக்கம் சுதந்திரத்திற்கு முன் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்திருக்கிறது. 2002ல் திண்‍‍‍ணியம், 2003ல் ஊரப்பனூர், 2010ல் மெய்க்கோவில்பட்டி, 2012ல் திருவக்கரை என்று மனிதன் கழிவை மனிதனையே உண்ண வைக்கும் கொடுமைகளை நான் வாழும் காலத்திலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன். பீ. அசிங்கத்தின் அடையாளம். அவமானச் சின்னம். அதனால் தான் ஆதிக்கவெறியின் அடக்குமுறையின் உச்சக்கட்ட ஆயுதமாகப் பீ பய‌ன்படுத்தப் படுகிறது. பீ என்பது அப்படிப்பட்ட ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் வரை, அதற்குச் சமூகம் தந்திருக்கும் பிம்பமும் நிலைத்திருக்கும். அவையெல்லாம் இல்லாமல் போகச் செய்யும் சாத்தியமில்லாத ஒரு சமூகத்தில் நாம் இப்போது இருக்கிறோம். அப்படியொரு சமூகம் சாத்தியப்படும் வரை பீக்கதைகள் போன்ற படைப்புகள் கண்டிப்பாக வரவேற்கப் படவேண்டும். இப்புத்தகம் தன்னைக் 'கீழிறக்கி' விடுமோ என நண்பர்கள் அஞ்சியதாக‌ ஆசிரியர் கூறுகிறார். இப்பதிவு என்னைக் 'கீழிறக்கி' விட்டதா என்ன? இரண்டு பேருக்கும் பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும். - ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Sunday, August 05, 2012

94. அலகிலா விளையாட்டு


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
- கம்பராமாயணத்தின் முதல் பாடல்

-------------------------------------------------------------------------
புத்தகம் : அலகிலா விளையாட்டு (புதினம்)
ஆசிரிய‌ர் : பா.ராகவன்
வெளியீடு : இலக்கியப்பீடம் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2005
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 166 (தோராயமாக 36 வரிகள் / பக்கம்) 
சிறப்பு : இலக்கியப்பீடம் இதழ் நடத்திய அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2003ம் ஆண்டுக்கான பரிசு பெற்ற சமூகப் புதினம்
-------------------------------------------------------------------------

தேடல். மனித வாழ்வின் இருப்பிற்கான ஒரே ஆதாரம் தேடல் என்ற செயல். விடிந்தால் உத்தியோகம், தேதிக்குச் சம்பளம், வேளைக்குச் சாப்பாடு, விழுந்து புரளத் துணை, சிரித்துக் காட்ட குழந்தை குட்டி, அவ்வப்போது சந்தோசம், அளந்து அளந்து பூரிப்பு, கஷ்டமே வந்தாலும் ஆற்றிக் கொள்ள யாரோ ஒருவரின் மடியோ தோளோ, அது, இது என்று தேடப் பணிக்கப்படும் மனிதனுக்கு, இம்மை மறுமை என்று இன்னொரு வாழ்க்கையும் இருப்பதாக சொல்லி, என்றுமே அழியாத ஆன்மா, அனைத்திலும் விளையாடும் பரம்பொருள், அது, இது என்று இன்னும் தேடச் சொல்கிறது ஆன்மீகம். வாழ்வின் பல்வேறு படிநிலைகளில் இப்படி எதையெதையோ தேடித் தேடி, சில தேடல்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைப்பதில் என்று தெளிந்து, மரணத்தைத் தேடி இமயமலை வந்திருக்கும் 70+ வயது முதியவர் ஒருவர் தன்னிலையில் த‌ன் கதை சொல்வதே இப்புதினம்.

இரண்டு வேளை சோறாவது கிடைக்கும் என்ற பட்சத்தில், திருச்சினாப்பள்ளி பிராமணச் சிறுவன் ஒருவன் திருவையாற்றில் வேதப் பாடசாலையில் சேர்க்கப் படுகிறான். அவனும் கால் வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று வேதம் கற்றுக் கொண்டதைக் காட்டிலும் பசியை ஜெயிக்கக் கற்றுக் கொள்கிறான். தொழிலதிபர்கள் புண்ணியம் என்ற பெயரில் செய்யும் பணவுதவியில் அப்பாடசாலையை நடத்திவரும் வாத்தியாரின் குடும்பம் அடுத்தடுத்து பல சோதனைகளைச் சந்திக்கிறது. வாத்தியார் நம்பிய வேதத் தத்துவங்கள் அவரைக் கைவிட்டு விடுகின்ற‌ன. அவர் நம்பிய பரம்பொருள் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர் நம்பிய மனிதர்களும் அவரது கன‌வுகளை உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். தகப்பனுக்கு நிரந்தர வேலை கிடைத்து மூன்று வேளைச் சாப்பாடு உத்தரவாதம் ஆனபின் பாடசாலைக் குடுமிக்கு விடை கொடுத்துவிட்டு கிராப்பு வைத்து வழக்கமான பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறான்.

படித்த வேதம் வாத்தியாரின் குடும்பத்தை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தி இருப்பதைப் பார்த்து வருந்துகிறான். தன்னை வாழ்வித்துக் கொண்டிருக்கிற ஒருவனைப் பொருட்படுத்தாமல் உதைத்துத் தள்ளிய வேதம் என்ற‌ ஆன்ம தத்துவத்துக்கு அப்படியென்ன முக்கியத்துவம்? தன்னைப் பொருட்படுத்துபவனைப் பொருட்படுத்தாத ஒரு விசயம் எப்படி உயர்வானதாக இருக்க முடியும்? மனிதன் நம்பிக்கை வைக்கிற விசயங்களே அவனைக் கைவிடும் என்றால் வாழ்வுக்கான பற்றுக்கோடுதான் என்ன? தீவிரமான நம்பிக்கைகள் நம்ப முடியாதவற்றைச் சாதிக்கும் என்கிற நவீன மனவியல் கண்டுபிடிப்புகளின் அர்த்தம் என்ன? இப்படி நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும் இடைப்பட்ட நிலையில் ஆன்மா பரம்பொருள் என்று தேட ஆரம்பிக்கும் அவன், அரசாங்க வேலை துறந்து மெட்ராஸ் திருவையாறு திருவானைக்காவல் மைசூர் ஹௌரா கயா என்று சுற்றி இமயமலையைக் கிட்டத‌ட்ட எழுபதாம் வயதில் அடைகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்கள் எல்லாவற்றையும் தன்னையே மையமாக வைத்து சிந்திக்கும் அவரின் வாழ்க்கைதான் இப்புதினம். வாழ்க்கையின் அர்த்தமே வாழ்ந்து தீர்ப்பது என‌ எல்லாவற்றின் வசத்திலும் தன்னை அளித்துவிட்ட ஒருவரின் கதையிது. இலக்கை அடையுமுன் வற்றிவிடக் கூடிய இயல்புள்ள சிற்றோடையின் பயப் படபடப்பு சொல்லும் படைப்பிது.

'அலகிலா விளையாட்டு' புதினம் யோசிக்க வைக்கும் இலக்கிய வகையைச் சார்ந்தது. புத்தகத்தின் முன்னுரையும் இதைத் தான் சொல்கிறது. இப்புதினத்தில் கதை சொல்வது என்பது கதைசொல்லியின் யோசிப்பே. இந்து வேதங்கள் அவற்றையே நம்பி இருப்பவர்களை ஏன் காப்பதில்லை என பதிமூன்று வயதில் யோசிக்க ஆரம்பிக்கிறார். வேதங்கள் உயர்ந்தவைகள் என்றால் கஞ்சிக்கு வக்கற்றவர்கள் மட்டுமே அதைப் படிக்க வருவதேன் என யோசிக்கிறார். தேசம் துண்டாகி தனது சித்தாந்தத்தில் தோற்றுப் போன காந்தியைப் பார்த்தபின், கொஞ்சம் மிஞ்சியிருந்த தத்துவங்களின் மீதான நம்பிக்கையைக் காமராசரின் தேர்தல் தோல்வியோடு தூக்கி எறிகிறார். பவுத்தப் பிக்குகளின் நட்பு கிடைத்தபின், உருவமே இல்லாத ஆன்மாவும், தொப்பையும் வில்லும் வாளும் வேலும் வைத்திருக்கும் பரம்பொருளும் தேவைதானா என யோசிக்கிறார். வாழ்க்கைக்கு உதவக் கூடியதாகத் தத்துவங்கள் இல்லாதபோது யுகம் யுகமாக ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என யோசிக்கிறார்.

புத்தருக்கு ஞானமும் காந்திக்கு அகிம்சையும் போல ஒவ்வொருவருக்கும் ஆன்மா என்பது பொருள் வேறு. அவரவர் சித்தாந்தங்களில் பரம்பொருள் என்ற ஒன்றைத் தேடி அலைந்து, அதை அடைந்தார்களா இல்லையா என்பதை வைத்து அவரவர் சித்தாந்தங்களை எப்படி நாம் அளக்க முடியும்? பரம்பொருளை அடைந்த நிலையை அளக்கும் நிரந்தர அளவுகோல்தான் என்ன? மற்றவர் பரம்பொருளை அடைந்தாரா இல்லையா என்றே சரியாகத் தெரியாதபோது அவர்களின் சித்தாந்தங்களை அளக்க நாம் யார்? கஞ்சிக்கே வழியில்லாத போது சித்தாந்தங்களைக் கட்டிக் கொண்டு திரிவதில் ஏது பயன்? எல்லாம் துறந்தவர்களுக்கே வாழ்வியல் தத்துவங்கள் புரியாத போது சாமானியன் அவற்றைக் கடைப்பிடிக்க எப்படி எதிர்பார்க்க‌ முடியும்? வாசகனையும் கூடவே யோசிக்கச் சொல்கிறார்.

நான் ரசித்தவை:
பாத்திரம் -> லங்கிணி பூரணி
ப‌குதி -> கோபால கிருஷ்ண ஹெக்டேயின் குருகுலத்தில் இருந்து வெளியேறும் நிகழ்ச்சி
சிந்தனை -> 1) பலனை எதிர்பார்க்காத சேவை என்ற போர்வையில் கல்வியைக் கூட வியாபாரமாக்கி விட்டதை மைசூரில் சாடும் பகுதி 2) ஒரு புத்தப் பிக்குவுடன் கயாவில் நடக்கும் விவாதம் இப்படி: புலனடக்கம், கொல்லாமை, திருடாமை, கயமைத்தனம் இல்லாமை என்று நல்லொழுக்கக் கோட்பாடுகளைச் சாஷேயில் போட்டுக் கொடுத்து விட்டார்கள். யதார்த்த வாழ்வில் பொருள் தொலைத்த வெறும் லட்சியவாதக் கோட்பாடுகள். காலத்தின் வெறிப் பாய்ச்சலில் இந்தச் சொற்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என்ன இப்போது? ஓட‌ ஓட விரட்டும் வாழ்வெனும் அசுரப் பிசாசின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டே இருக்க ஒழுக்கங்களல்ல; ஒழுக்க மீறல்களே பெரும்பாலும் தீர்வாக அமைந்து விடுகிறது. சராசரி மனிதனுக்குத் தத்துவங்களைக் காட்டிலும் தீர்வுகளே முக்கியமாக இருப்பதைத் தயவு செய்து குறை கூறாதீர்கள்.

ஆத்திகம் நாத்திகம் இந்து பவுத்தம் வேதம் காதல் நடைமுறையியல் என்று எல்லா சித்தாந்தங்களுக்கு உள்ளேயேயும் சென்று திரும்புகிறது புதினம். நமது தனிப்பட்ட‌ சித்தாந்தங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏன் அப்படி சிந்திக்கவில்லை - இது தவறு - அது பாதி தவறு என்று எதிர்வாதம் சொல்லாமல் இன்னொருவன் சிந்தனையுடன் உள்ளது உள்ளபடி சேர்ந்து பயணிக்க நீங்கள் தயார் என்றால், குளிர் முதல் மரணம் வரை உங்களை வசப்படுத்த‌ 'அலகிலா விளையாட்டு' இருக்கிறது.

- ஞானசேகர்

Saturday, August 04, 2012

93. CRIME AND PUNISHMENT


It is in just such stupid things clever people are most easily caught. The more cunning a man is, the less he suspects that he will be caught in a simple thing. The more cunning a man is, the simpler the trap he must be caught in.

-------------------------------------------------------
புத்தகம் : Crime and Punishment (குற்றமும் தண்டனையும்)
ஆசிரியர் : Fyodor Dostoyevsky (பியோதர் தஸ்தயெவ்ஸ்கி)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : இந்தியாவில் Wilco Publishing House
முதற்பதிப்பு : 1866
விலை : 235 ரூபாய்
பக்கங்கள் : 527 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்)
-------------------------------------------------------
மனிதர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள். தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றிபெற எதிர்வரும் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறியும் உரிமை அசாதாரணமானவர்களுக்கு உண்டு. அக்காரியம் சில சமயங்களில் மொத்த மனித சமூகத்திற்கே நன்மை தரக் கூடியதாகவும் இருக்கலாம். நியூட்டனும் கெப்ளரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் முனைப்புடன் இருந்திருந்தாலும், குறுக்கே வந்த நூற்றுக்கணக்கானவர்களையும் தள்ளிவிட்டு முன்னேற வேண்டி இருந்திருக்கிறது. அவர்கள் அப்படி செய்திருந்திருக்காவிடில் அவர்களின் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்திற்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதற்காக‌ நியூட்டன் தெருவில் வருகிறவர் போகிறவர்கள் எல்லோரையும் கை கால்களை வெட்டி குற்றங்கள் செய்யவில்லை. ஆனால் நெப்போலியன் உட்பட வரலாற்றின் பெரும்பாலான ஆட்சியாளர்கள் அடிப்படையில் மாபெரும் குற்றவாளிகளே. தத்தம் முன்னோர்கள் புனிதமாகக் காத்துவந்த விதிகளை உடைத்தெறிந்து தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக எதையும் செய்யத் துணிந்தார்கள்; தனது வெற்றியை அப்பாவி மக்களின் இரத்தத்தால் எழுதினார்கள். நன்றாக உற்றுக் கவனித்தால், மனித சமூகத்தின் மீட்பனாகக் காட்டிக் கொண்டவர்கள் எல்லாரும் மிகக் கொடூரமான படுகொலையின் பிணக்குவியலில் இருந்து எழுந்து வந்தவர்களே.

சிறந்த மனிதர்களும் சாதாரண மனிதர்களில் இருந்து கொஞ்சமேனும் வேறுபட்டவர்களும் மனிதயினம் விரும்பாத ஏதேனும் குற்றம் செய்தவர்கள். இல்லாவிடில் அந்த நிலைக்கு அவர்களால் வரவே முடியாது. சாதாரணமானவர்கள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு வாழவும் கட்டுப்பாட்டுடன் வாழவுமே பிறந்தவர்கள். அசாதாரணமானவர்கள் சட்டத்தை மீறவும் அழிக்கவுமே பிறந்தவர்கள். எந்த அளவிற்கு வீரியமான குற்றமோ அந்த அளவிற்கு அவர்களின் நோக்கமும் வீரியமாய் இருக்கும். சில நேரங்களில் அதனால் அவர்கள் இரத்தத்தின் மேல் நடைபோட வேண்டி இருக்கிறது. அசாதாரணமானவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட உரிமைகளென அவர்கள் செய்யும் காரியங்களைப் ப‌ல நேரங்களில் சக மனிதர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைத் தண்டிக்கிறார்கள்; கொன்றும் விடுகிறார்கள். குற்றவாளிகள் என ஒதுக்கப்பட்ட அதே அசாதாரணமானவர்கள் அடுத்த சில தலைமுறைகளின் சிலரால் வழிபடும் அளவிற்கு உயர்ந்தும் இருக்கிறார்கள். சாதாரணமானவர்கள் தற்காலத்திற்கு உரியவர்கள். அசாதாரணமானவர்கள் எதிர்காலத்திற்கு உரியவர்கள். சாதாரணமானவர்கள் உலகை ஓரிடத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கிறார்கள். அசாதாரணமானவர்கள் உலகை அதன் இலக்கை நோக்கி நகர வைக்கிறார்கள்.

குற்றங்களின் பின்னணியில் இருக்கும் உளவியலையும் தர்மங்களையும் நியாயப்படுத்தும் இப்படி ஒரு கட்டுரையை ஒரு பத்திரிக்கையில் எழுதிய, இப்புதினத்தின் நாயகன் இரஸ்கோல்நிகோவ் (Raskolnikov) ஓர் ஏழை வாலிபன். 19ம் நூற்றாண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சட்டம் படிக்கிறான். சொந்த ஊரில் இருக்கும் தாயும் சகோதரியும் தான் ஒரே சொந்தம். ஏழ்மையில் தவிக்கும் தாயையும் அதே ஏழ்மையைக் காரணமாக வைத்து ஒரு பொருத்தமற்ற கல்யாணத்திற்குக் கட்டாயப் படுத்தப்படும் சகோதரியையும் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறான். 'எல்லாருக்கும் ஒரு விடிவுகாலம் வரும்' என்று சட்டைப் பைக்குள் கைவிட்டுக் கொண்டு காத்திருக்க விரும்பாமல் தனது வறுமை தாண்ட ஏதாவது செய்யத் துடிக்கிறான். அதுவரை வெறும் கோட்பாடுகளாக அவன் சிந்தனையிலும் பத்திரிக்கைகளிலும் இருந்து கொண்டிருந்த விசயங்களைச் செயலாக்க நினைக்கிறான். பணம் அதிகம் இருக்கும் இடத்தில் இருந்து எடுக்க முடிவு செய்கிறான். தான் நெப்போலியனைப் போல் அசாதாரணமானவன் என உணர்கிறான். கொலையும் செய்ய துணிகிறான்.

ஒரு கொலையும் செய்து விடுகிறான். முதல்முறை செய்வதால் கதவைப் பூட்டிச் செய்ய மறந்து விடுகிறான். அதைத் தற்செயலாகப் பார்த்ததற்காக இன்னொரு கொலையும் செய்கிறான். யாருக்கும் தெரியாமல் தப்பி வந்த பிறகுதான், தான் செய்த கொடூரத்தை உணர்கிறான். உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. அடிக்கடி உடல்நலம் குன்றிப் போகிறான். அன்றாடச் செயல்களில் வினோதம் தலைதூக்குகிறது. யாருக்கும் புரியாத புதிராக வலம் வருகிறான். சுற்றி இருப்பவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, தான் சந்தேகப்படப் படுகிறோமோ என சந்தேகப் படுகிறான். அவர்கள் எல்லாம் தன்னைத் தானாகவே குற்றத்தை ஒத்துக் கொள்ள வைக்க‌ சதி வேலைகளில் ஈடுபடுவதாக நினைக்கிறான். அவனாக காவலர்களிடம் சரணடைய விரும்பும் போதெல்லாம் சூழ்நிலைகள் தடுக்கின்றன. தான் தவறென சொல்லும் கொலை என்ற செயலைச் செய்தவன் இரஸ்கோல்நிகோவ் என்று மனிதயினம் கண்டுபிடித்து தண்டித்ததா? இல்லை அசாதாரணமானவனாகவே இரஸ்கோல்நிகோவ் வாழ்ந்து போனானா என்பதே மிச்சக் கதை. குற்றமும் தண்டனையும் மனத்திலும் உடலிலும் தொடர்ந்து துரத்துவதே புதினத்தின் கரு.

'கொலைகாரனை நாம் வெறுக்கிறோம்; நமக்குள் இருக்கும் கொலைகாரனை ஞாபகப்படுத்துவதால்' என்று சொல்வார் மதன், 'மனிதனுக்குள்ளே மிருகம்' புத்தகத்தில். எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்தக் கொலையுணர்வை 'யுத்தம் செய்' திரைப்படத்தில் டாக்டர் யூதாஸ் காரியோத் சொல்வதுபோல், நீதி நியாயம் தர்மம் என்று சொல்லி சமூகம் நம்மை அமைதி காக்கச் சொல்கிறது. பின்னாளில் நினைத்து நினைத்து வருத்தப்படும் கொடுந்துயரம் தவிர்க்கவே, பெரும்பாலான குற்றங்களைச் செய்யத் தூண்டப்பட்டும் நாம் உடனே செய்து விடுவதில்லை. இரஸ்கோல்நிகோவின் அப்படிப்பட்ட‌ மனத் தவிப்புகளை மிக விளக்கமாக சொல்கிறது புதினம். இளைஞன் ஒருவனின் உளவியலைப் ப‌திவு செய்வதால், புதினம் முழுதும் விவரணைகளின் நீளம் அதிகம்.

கதையில் வரும் அனைத்து மாந்தர்களும் ஏதோ ஒரு வகையில் சில நாட்கள் நினைவில் தங்கிப் போகும் அளவிற்கு வித்தியாசமானவர்கள். எப்போதுமே இரஸ்கோல்நிகோவைச் சந்தேகப்படுவது போலவே நடந்து கொள்ளும் காவல்துறை அதிகாரியும் அவரது சகாக்களும். உடம்பு சரியில்லாமல் கிடக்கும் அவனைப் பார்க்கும்போது கூட, 'குற்றமும் நோயும் சிலேடைகள்' என்று துப்பறியும் பாணியிலேயே பேசுவார்கள். கள்ளுக்கடையில் பார்க்கும் குடிகாரக் கிழவன். அவன் வீட்டில் இருக்கும் அவனது இரண்டாவது மனைவி. அவளது கட்டாயத்தால் விபச்சாரியாக வாழ்ந்து வரும் முதல் மனைவியின் மகள் சோனியா. நாயகனின் சகோதரியை மணமுடிக்க நிச்சயித்துப் போன ஒருவன். அவனுடன் எப்போதுமே முறைத்துக் கொண்டு திரியும் நாயகன். இரஸ்கோல்நிகோவின் கொலைகளுக்காக கைது செய்யப்படும் ஓர் அப்பாவி.

நான் ரசித்தவை:
பாத்திரம்: கதாநாயகி சோனியாவை விபச்சாரத்தில் தள்ளும் அவளது தகப்பனின் இரண்டாம் மனைவி Katerina Ivanovna Marmeladova. பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்குப் பிடித்த பாத்திரமும் இவள்தான்.
ப‌குதிக‌ள்: 1) இரவில் குடிபோதையில் நிதானம் தெரியாமல் தள்ளாடும் பெண்ணொருத்தியைக் இரஸ்கோல்நிகோவ் காப்பாற்ற போய், ஒரு காவல்காரனிடம் பணத்தைப் பறிகொடுக்கும் நிகழ்ச்சி 2) இரஸ்கோல்நிகோவின் சகோதரியைச் சாமர்த்தியமாக ஒரு தனியறைக்கு அழைத்துப் போனவனிடம் இருந்து தப்பிக்க, அவள் போராடும் நிகழ்ச்சி.
வரிக‌ள்: இரஸ்கோல்நிகோவின் கனவொன்றை இப்படி விவரிக்கிறார் ஆசிரியர்.
The whole world was condemned to a terrible new strange plague that had come to Europe from the depths of Asia. All were to be destroyed except a very few chosen. Some new sorts of microbes were attacking the bodies of men, but these microbes were endowed with intelligence and will. Men attacked by them became at once mad and furious. But never had men considered themselves so intellectual and so completely in possession of the truth as these sufferers, never had they considered their decisions, their scientific conclusions, their moral convictions so infallible. Whole villages, whole towns and peoples went mad from the infection. All were excited and did not understand one another. Each thought that he alone had the truth and was wretched looking at the others, beat himself on the breast, wept, and wrung his hands. They did not know how to
judge and could not agree what to consider evil and what good; they did not know whom to blame, whom to justify. Men killed each other in a sort of senseless spite. They gathered together in armies against one another, but even on the march the armies would begin attacking each other, the ranks would be broken and the soldiers would fall on each other, stabbing and cutting, biting and devouring each other. The alarm bell was ringing all day long in the towns; men rushed together, but why they were summoned and who was summoning them no one knew. The most ordinary trades were abandoned, because every one proposed his own ideas, his own improvements, and they could not agree. The land too was abandoned. Men met in groups, agreed on something, swore to keep together, but at once began on something quite different from what they had proposed. They accused one another, fought and killed each other. There were conflagrations and famine. All men and all things were involved in destruction. The plague spread and moved further and further. Only a few men could be saved in the whole world. They were a pure chosen people, destined to found a new race and a new life, to renew and purify the earth, but no one had seen these men, no one had heard their words and their voices.

நான் ஆங்கிலத்தில் இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக எனக்கு வேண்டப்பட்ட விரோதி ஒருவரும் தமிழில் படித்துக் கொண்டிருந்தார். ஆங்கில மொழிப்பெயர்ப்பில் வார்த்தைகள் அவ்வளவாக ஒட்டவில்லை எனக் குறை சொன்னேன். இணையத்தில் சிலதளங்களும் இதைத்தான் சொல்கின்றன. இரஷ்ய மொழியில் மிக வேகமாக ஏற்பட்டுப் போன மாற்றங்களை அதற்குக் காரணமாகச் சொல்கின்றன. உதாரணமாக புத்தகத்தின் பெயரிலேயே இருக்கும் குற்றம் என்ற வார்த்தைக்கு இணையாக ஆசிரியர் உபயோகப்படுத்தி இருப்பது 'குற்றத்தைத் தாண்டுதல்' என்பது போன்றது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று படிக்கும் சிலருக்கு இப்புதினம் போன்ற மிக நீண்ட விவரணைகள் சலிப்பூட்டலாம். இவ்விரு தடைகளைக் கொஞ்சம் சகித்துக் கொண்டால், குற்றமும் தண்டனையும் பக்கத்தில் வந்து வந்து விலகி விலகி ஓடும் அலைகடல் விளையாட்டை உங்களாலும் ரசிக்க முடியும்.

அனுபந்தம்:
----------
பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் The Idiot என்ற புதினத்தின் ஒரு பாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு, சண்முகராஜா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டவரை இயக்குனர் மிஷ்கின் என்று சொன்னால் நமக்கெல்லாம் தெரியும்.

- ஞானசேகர்

Sunday, July 08, 2012

92. நிலமெல்லாம் ரத்தம்


எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறித்து (விவிலியம்)


------------------------------------------------------------------
புத்தகம் : நிலமெல்லாம் ரத்தம்
ஆசிரிய‌ர் : பா.ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2005
விலை : 350 ரூபாய்
பக்கங்கள் : 704 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------------

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை. மத்தியக் கிழக்கில் உள்ள இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே அன்றாடம் நடக்கும் எல்லை மற்றும் யூத-அரபு இனப் பிரச்சனை. இப்படி நினைத்துக் கொண்டு செய்தித்தாள் பக்கங்களை நீங்கள் அவசர அவசரமாகப் புரட்டினால், நிற்க. பாலஸ்தீனம் (Palestine) என்பது இன்றைய தேதியில் தமிழீழம் போல ஒரு கோரிக்கை மட்டுமே; ஒரு தனிச் சுதந்திர நாடு அல்ல. அரபு மண்ணில் எண்ணெய் வளம் இல்லாத சவலைக் குழந்தை இந்தப் பாலஸ்தீன். கட‌வுளால் ஆசிர்வதிக்கப்பட்ட மண் என்று குடியேறி, கானான் (Canaan) என்று ஆதிமனிதன் அழைத்த அந்த‌ மண்ணில், சக மனிதனை நாகரீக மனிதன் அகதியாக்கி நிலமெல்லாம் ரத்தம் பாயும் புண்ணிய பூமி!

வடக்கே லெபனான். கிழக்கே ஜோர்டான் ஆறு. தெற்கே எகிப்து. மேற்கே மத்தியத் தரைக்கடல். இதற்குள் தான் இன்றைய இஸ்ரேலும் பாலஸ்தீனும் இருக்கின்றன‌. மத்தியத் தரைக் கடலை ஒட்டிய பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதி காசா கரை (Gaza Strip). ஜோர்டான் (Jordan) ஆற்றின் மேற்குப் பக்கம் இருக்கும் பாலஸ்தீனத்தின் கிழக்குப் பகுதி மேற்குக் கரை (West Bank). நமக்குச் சுதந்திரம் கிடைத்த பின், கிழக்கு மேற்கு பாகிஸ்தான்களுக்கு இடையே இந்தியா இருந்தது போல, இஸ்லாமிய பாலஸ்தீனத்தின் இவ்விரு பகுதிகளுக்கும் இடையே நீண்டு கிடக்கிறது யூத இஸ்ரேல். முப்பெரும் மதங்களும் முப்பெரும் கண்டங்களும் சந்திக்கும் இந்நிலம்தான் மனிதர் வாழும் பூமியின் மையம்.
(www.worldatlas.com)

இரண்டாம் உலகப் போரில் ஆரியக் கிறித்தவரான‌ ஹிட்லரால் கும்பல் கும்ப‌லாகக் கொன்று குவிக்கப்பட்ட இனம் யூதயினம். அவர்கள் பட்ட துயரங்களுக்கு எல்லாம் ஆறுதலாக அவர்களது பூமியில் இஸ்ரேல் (Israel) என்ற தனிநாடு உண்டானது சரியே. அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த பூர்வகுடிகளான‌ அரபு முஸ்லீம்கள் நாடற்ற அகதிகள் ஆனார்கள். ஹிட்லரை இரண்டாம் உலகப் போரில் ஆதரித்த அவர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். யூதர்கள் மேல் அனுதாபம்; இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு. மிஞ்சி மிஞ்சிப் போனால் போன நூற்றாண்டின் வரலாற்றை மட்டும் பாடப் புத்தகங்களில் படித்திருக்கும் நம்மிடையே இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை பற்றிய பெரும்பாலானவர்களின் கருத்து இதுவாகத் தான் இருக்கும். அதாவது Thomas Loren Friedman சொல்வது போல், வல்லரசு நாடுகளின் பத்திரிக்கைகள் சொல்வதையே நாமும் சொல்கிறோம்.

ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாட்டின் பிறப்புடன் தொடர்வதில்லை இப்பிரச்சனை. அதற்கும் முன்னால் முகம்மது நபி. அவருக்கும் முன்னால் இயேசு கிறித்து. அவருக்கும் முன்னால் மோசஸ். அவருக்கும் முன்னால் இருந்தே பல நூறு ஆண்டுகளாக‌ எரிந்து கொண்டிருக்கிறது இப்பிரச்சனை. கிட்டத்தட்ட 5000 வருட சரித்திரச் சிக்கல். பிரச்சனையின் அடிப்படை புரிய உலகின் முப்பெரும் மதங்களைப் பற்றியும் இன்னும் சில விசயங்களும் தெரிய வேண்டும். துண்டு துண்டாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் விசயங்கள் ஒரு கோர்வையாக, புத்தகத்திற்குள் நுழையும் முன் இதோ எனது அறிமுகம்.

யூதம். கிறித்தவம். இஸ்லாம். தோரா திருவிவிலியம் திருக்குரான் முறையே இறை நூல்க‌ள். யூதர்களுக்கு ஜெஹோவா. முஸ்லீம்களுக்கு அல்லா. கிறித்தவர்களுக்குக் கர்த்தர், இயேசு, தூய ஆவி என்று மூன்று தனித்தனிக் கடவுள்கள் - மூவரும் சேர்ந்து ஒரே கடவுள்; கர்த்தர் தன்னைப் போல் மனிதனைப் படைத்தார்; இயேசு மனித உருவெடுத்தார்; தூய ஆவிக்கு உருவமில்லை. மூன்று மதங்களுக்கும் ஒரே கடவுள் கொள்கை. மூன்று மதங்களுக்கும் ஆதி ஒரே இடம் தான் - ஆதாம் ஏவாளின் ஏதேன் தோட்டம். அது மெசபடோமிய நாகரீகம் தோன்றிய யூப்ரடீஸ் டைகிரீஸ் நதிகளுக்கு அருகில் இருக்கலாம் என கணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். ஆதாம் தான் ஆதிமனிதன் என்று ஆரம்பிக்கின்றன அவற்றின் புனித நூல்கள். ஆதாமைப் படைத்தவருக்கு ஜெஹோவா கர்த்தர் அல்லா என்று பெயர்கள்.

ஆதாமில் இருந்து இயேசு கிறித்து வரையிலான 60 தலைமுறைகளின் வரிசையைக் கிறித்தவர்களின் விவிலியம் இவ்வாறு சொல்கிறது: ஆதாம் சேத் ஏனோஸ் காயினான் மகலாலெயெல் யாரேத் ஏனோக் மெத்துசலா லாமேக் நோவா சேம் அற்பக்சாத் சாலே ஏபேர் பாலேக் ரேயூ சாரூக் நாக்கோர் தாரே ஆபிராம் ஈசாக் யாக்கோபு யூதா பாரேஸ் எஸ்ரோம் ஆரோம் அம்மினதாப் நசசோன் சல்மோன் போவாஸ் ஓபேத் ஈசாய் தாவீது சாலமோன் ரெகோபெயாம் அபியா ஆசா யோசபாத் யோராம் உசியா யோதாம் ஆகாஸ் எசேக்கியா மனாசே ஆமோன் யோசியா எகோனியா சலோத்தியேல் சொரோபாபேல் அபியூத் எலியாக்கீம் ஆசோர் சாதோக் ஆகிம் எலியூத் எலேயாசார் மாத்தான் யாக்கோபு சூசை இயேசு.

ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்தார். மனிதர்கள் செய்யும் பாவங்களில் கோபம் கொண்ட கடவுள், நோவா காலத்தில் 40 நாட்கள் தொடர்மழை பெய்வித்து பெரும் பிரளயம் வரவைத்து, நோவாவின் குடும்பத்தைத் தவிர மற்றவர்களை அழிக்கிறார். சேம் காலத்தில் மனித ஆயுளை 120 ஆகக் குறைக்கிறார். யூப்ரடீஸ் டைகிரீஸ் நதிகளுக்கு இடையே அன்றைய மெசபடோமியாவில் (ஈராக்) வாழ்ந்து வந்த ஆபிராமைக் கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீனப் பகுதியில் போய் வாழச் சொல்கிறார். விவிலியத்தின் முதல் 11 அதிகாரங்களில் வரும் இதுவரையிலான கதையை முந்நூல்களும் சிறுசிறு வித்தியாசங்களுடன் அப்படியே சொல்கின்றன. ஆபிராம் தான் மூன்று மதங்களின் ஆதிப்புள்ளி. விவிலியப்படி ஆதாமிற்கும் ஆபிராமிற்கும் இடையே கால வித்தியாசம் 1056 ஆண்டுகள்.

85 வயதாகியும் குழந்தை இல்லாத ஆபிராமை, அவரின் மனைவி வேலைக்காரப் பெண்ணுடன் கூடச் சொல்கிறாள். ஆபிராமின் 86வது வயதில் அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்த மகனின் பெயர் இஸ்மேல் (Ismael). அதன்பின் ஆபிராமை ஆசீர்வதித்து ஆபிரகாம் (Abraham) என்று பெயரை மாற்றுகிறார் கடவுள். ஆபிரகாம் இஸ்மேலுடன் சேர்ந்து இறைவனுக்காகக் கட்டிய புனிதப் பீடம் தான் கா'அபா (Kaaba). இஸ்லாமியர்களின் இந்த முதல் ஆலயம் சவூதி அரேபியாவில் மெக்காவில் (Mecca) இருக்கிறது. இஸ்லாமியர்களின் முதல் புனிதஸ்தலம்; இரண்டாவது மெதினா (Medina). இஸ்லாத்தின் அடிப்படையான 5 முக்கிய கட்டளைகளில், இரண்டாவது கட்டளைப்படி கா'அபாவை நோக்கி தினம் 5 முறைகள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்கிறார்கள். ஐந்தாவது கட்டளைப்படி ஹஜ் (Hajj) என்ற புனிதப் பயணமாக அங்கு செல்கிறார்கள்.

இஸ்மேல் பிறந்து 12 வருடங்கள் கழித்து மாதவிடாய் நின்ற பிறகும் கடவுளின் கருணையால் ஆபிரகாமின் மனைவி கருத்தரிக்கிறாள். ஆபிரகாமின் 100வது வயதில் பிறந்த அம்மகனின் பெயர் ஈசாக் (Isaac). ஆபிரகாமின் உண்மையான வாரிசு யாரெனெ பிரச்சனை வர, இஸ்மேல் தாயுடன் வெளியேறுகிறார். இறைத்தூதர் தன் இனத்தை மீட்க வருவார் என்று ஆபிரகாமிற்குக் கடவுள் சொல்லி இருந்ததால், பிரிந்துபோன‌ அவரின் வாரிசுகள் ஆண்டாண்டு காலமாய் எதிர்பார்த்தனர்; இன்னும் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் கதை என்று நினைத்தால் கதை; வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆத்திக நாத்திக சித்தாந்தங்களை எல்லாம் தாண்டி இன்றைய நிகழ்கால எதார்த்தம். முந்நூல்களும் இதே கதையை வெவ்வேறு வார்த்தைகளில் தத்தம் பார்வைகளில் சொல்கின்றன.

இஸ்மேலின் வழிவந்தவர்கள் அராபியர்கள் (Arabs). ஈசாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள் (Jews). முகம்மது நபி இஸ்மேல் வம்சம். இயேசு கிறித்து ஈசாக் வம்சம். அரபு யூதம் என்ற வார்த்தைகள் இனத்தைக் குறிக்கின்றன. யூத மதத்தில் மதமாற்றம் என்பது அறவே கிடையாததால் யூதம் என்பது மதத்தையும் இனத்தையும் சேர்த்தே குறிக்கும். அரபு மொழியில் திருக்குரானில் ஆபிரகாமின் பெயர் இப்ராஹீம்; இஸ்மேல்-இஸ்மாயில், ஜோசப்-யூசூப், யோபு(Job)-அயூப், மோசஸ்(Moses)-மூசா, தாவீது(David)-தாவூத், சாலமோன்(Solomon)-சுலைமான், ஜோனா-யூனூஸ், இயேசு-ஈசா, மேரி-மரியம்.

இஸ்லாம். தனது இனத்திற்கு ஓர் இறைத்தூதர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து, கா'அபாவில் 360 இறை உருவங்களை வைத்து பல தெய்வங்களை வழிபட்டு வந்த அராபியர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரலாறு முழுவதும் பல காலக் கட்டங்களில் சுற்றி நடப்பது என்னவென்று தெரியாமலேயே அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். இஸ்மாயில் வம்சத்தில் 570CEல் முகம்மது நபி தோன்றாது போய் இருந்தால் அரபு மக்களுக்கு என்று ஒரு தனி வரலாறு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இஸ்லாமிய மதத்தை உண்டாக்கிய முகம்மது நபி மற்ற இறைத்தூதர்களில் இருந்து வித்தியாசமானவர். இவர் ஆட்சியாளரும் கூட. மதீனா நகரை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அரசை உண்டாக்கியவர். பின்னாளில் இவரின் மருமகன் அலி தான் இறுதி இறைத்தூதுவர் என்று சொல்லி, இஸ்லாமியத் தலைமைக்கும் அவர்தான் வாரிசு என்றும் ஷியா (Shia) என்றொரு பிரிவு இஸ்லாத்தில் உண்டானது. அதை மறுத்து, கலீபா (Caliph) எனப்படும் இஸ்லாமியத் தலைவர்கள் மூத்த மதத் தலைவர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட‌வேண்டும் என்ற‌ சுன்னி (Sunni) பிரிவினர் தான் இன்றளவும் எண்ணிக்கையில் அதிகம். முகம்மது நபி சொர்க்கம் சென்று மீண்டும் திரும்பிய எருசலேமில் கோவில் மலை (Temple Mount) என்ற இடத்தில் அல் அக்சா (Al Aqsa) என்ற பள்ளிவாசல் இருக்கிறது. இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புண்ணியஸ்தலம் அது.

யூதம். ஈசாக்கிற்கு எசாயூ யாக்கோபு என்ற இரட்டையர்கள் பிறந்தனர். எசாயூவின் வாரிசு உரிமையை யாக்கோபு வஞ்சகமாகப் பறித்து ஆபிரகாமின் ஒட்டுமொத்த ஆசீர்வாதத்தையும் பெற்று விடுகிறார். யாக்கோபின் வம்சத்திற்குக் கடவுள் வைத்த பெயர் இஸ்ரேலயர்கள்; அதாவது யூதர்கள். யாக்கோபின் ஒன்றுவிட்ட தலைமுறையில் பிறந்த மோசஸ் தான் கடவுளிடம் நேரடியாகப் பேசி யூதர்களுக்கான சட்டத் திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். கிறித்து பிறப்பிற்குச் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சாமுவேல் (Samuel) என்ற தீர்க்கத்தரிசியால் அடையாளம் காட்டப்பட்ட சவுல் (Saul) என்பவர் தான் இஸ்ரேல் என்ற நாட்டை உண்டாக்கி அதன் முதல் அரசர் ஆனார். நமக்கெல்லாம் தெரிந்த தாவீது (David) தான் அடுத்த அரசர். எருசலேம் தலைநகரம் ஆனது. அவரின் மகன் சாலமன் (Solomon) மூன்றாவது மன்னர். ஒரே குழந்தையைச் சொந்தம் கொண்டாடும் இரு தாய்களுக்குத் தீர்ப்பு சொல்லி, உலகின் அதிபுத்திசாலி என்று இன்றளவும் பேசப்படும் சாலமன், யூதர்களுக்கான முதல் தேவாலயத்தை எருசலேமில், ஈசாக்கைக் கடவுள் ஆணைப்படி ஆபிரகாம் பலி கொடுக்கப் போன இடமான‌ Temple Mount இல் கட்டினார். யூதர்களின் முதல் புண்ணியஸ்தலம் இக்கோவில். இன்று ஒரு சுவர் (Wailing Wall) மட்டும் மிச்சம் இருக்கிறது.

சாலமனிற்குப் பின் வடக்கு தெற்கு என இஸ்ரேல் இரண்டாக உடைந்தது. வடக்குப் பகுதி சமாரியா. எருசலேம் இருக்கும் தெற்குப் பகுதி யூதேயா (Judaea). யூதர்கள் எகோனியா காலத்தில் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். சிரியாவுக்குத் தெற்கே உள்ள நிலத்தை, வரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் கிரேக்கரான‌ ஹிரொடோடஸ் (c400 BCE) முதன் முதலில் பலைஸ்டைன் சிரியா என்று அழைத்தார். தென்சிரியா என்று பொருள்படும் இச்சொல்லாடல் தான் பின்னாளில் பாலஸ்தீன் என்றானது. யூதேயாவை அசிசீரியர்கள் தாக்கினார்கள். பாபிலோனியர்கள் தாக்கியதில் சாலமன் தேவாலயம் முதல்முறை சிதிலமானது. பெர்ஷியர்கள் தாக்கினார்கள். அலெக்ஸாண்டரும் தாக்கினார். யூத குலத்தில் இயேசு கிறித்து பிறந்தபோது யூதேயாவை ரோமானியர்கள் வைத்திருந்தார்கள். ரோமானியர்கள் தாக்கியதில் சாலமன் தேவாலயம் இரண்டாம் முறை சிதிலமானது. இன்னொரு தேவதூதன் இறங்கி வந்து மீண்டும் அதைக் கட்டித் தருவான் என்று யூதகுலம் இன்னும் காத்திருக்கிறது. இடிந்த கோயிலின் ஒரு செங்கல்லைக் கூட அவர்கள் திரும்ப எடுத்து அடுக்க முயற்சி செய்யவில்லை. இன்னும் மிச்சமிருக்கும் கோயிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியைத் தான் அவர்கள் தம் புனிதத்தின் மிச்சமாக வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இயேசு கிறித்து காலத்தில் இருந்து உலகப் போர்கள் வரை 2000 வருடங்களாக தங்களுக்கென்று ஒரு தேசம் இல்லாமல் வீடற்ற‌ அகதிகளாக அலையும் படித்தான் யூதர்களைக் காலம் செய்திருந்தது.

கிறித்தவம். இயேசு கிறித்து பிறந்தது எருசலேமிற்கு அருகில்; போதித்தது யூதேயா முழுவதும். யூத மதத்தின் நம்பிக்கைகளை இயேசு கிறித்து விமர்சித்தது யூத மதக் குருக்களுக்குப் பிடிக்கவில்லை. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் கைக்குக் கை காலுக்குக் கால் சூட்டுக்குச் சூடு காயத்துக்குக் காயம் தழும்புக்குத் தழும்பு என்று சொல்லும் யூத குலத்தில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார். 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட, தங்களின் புண்ணியஸ்தலமான சாலமன் தேவாலயத்தை மூன்றே நாட்களில் இடித்துவிட்டு மீண்டும் கட்டிக் காட்டுவதாகச் சொன்னவுடன் சிலுவையில் அறைந்து கொன்றே போட்டார்கள். உயிர்த்தெழுந்தார். கிறித்தவம் என்ற தனி மதம் தோன்றியது. உலகத்தின் மையம் எருசலேம் (Jerusalem) - எருசலேமுக்கே மையம், இயேசு கிறித்து சிலுவையில் உயிர்விட்ட‌ கல்வாரி மலை என நம்புகிறது கிறித்தவம்.

தங்கள் இறைத்தூதர் உயிர்ப்பதில்லை என்று சொல்லி இயேசு கிறித்துவைக் கண்கட்டி வித்தைக்காரன் என்றார்கள் யூதர்கள். முகம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதராக இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள் இஸ்லாமியர்கள். இயேசு கிறித்துவின் சீடர்கள், பின் போப்பாண்டவர்கள் தலைமை எனத் தொடரும் நெறியைப் பின்பற்றுபவர்களுக்குப் பெயர் ரோமன் கத்தோலிக்கர்கள் (RC). இன்றைய தேதிக்கு மிகப்பெரிய மதம். 1543CE வாக்கில் மார்டின் லூதர் என்ற‌ பாதிரியார், பணநோக்கில் போகும் போப்பின் திருச்சபையில் இருந்து விலகி ஆரம்பித்த நெறிக்குச் சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism) என்று பெயர். சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் இயேசுவின் தாயான மேரிக்குப் புனிதப் பிம்பம் கொடுப்பதில்லை; பாதிரிகளின் திருமணத்தை அனுமதிப்பதுண்டு.


தலைமுறையில் இயேவுசுக்கு முன் இருப்பவர்களைப் புறக்கணித்து கிறித்தவம் உடைந்தது; முகம்மது நபிக்குப் பின் இருப்பவர்களைப் புறக்கணித்து இஸ்லாம் உடைந்தது. கிரீன் ஹவுஸ் முறையில் விவசாயம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானத்தில் அதிநவீனமாகப் போய்க் கொண்டிருந்தாலும் இயேசு கிறித்து இறந்த காலத்தில் இருந்து தன்னைத்தானே தனிமைப் ப‌டுத்திக்கொண்டு கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்கிறது யூதம். சித்தாந்த‌ங்கள் தோன்றிய காலப்படி வரிசைப் படுத்தினால் இஸ்லாம் யூதம் கிறித்தவம். மதமாக உருவெடுத்த காலப்படி வரிசைப் படுத்தினால் யூதம் கிறித்தவம் இஸ்லாம். ஈசாக்கை விட இஸ்மாயில் 14 வயது மூத்தவர் என்பதால் யூதர்களை விட அராபியர்கள் மூத்தவர்கள். கிறித்தவம் இயேசு கிறித்துவில் இருந்தே ஆரம்பிப்பதால் கி.மு.வுக்குப் போகத் தேவையில்லை. தோராயமாக கா'அபா கட்டப்பட்ட காலம் 2130BCE; சாலமன் தேவாலயம் 1007BCE. தோராயக் கணக்குப்படி பார்த்தால்கூட 1056 + 112 + 2130 + 2012 = 5310 ஆண்டுகள் சரித்திரம்.

யூதர்களுக்கு ஹீப்ரு (Hebrew) மொழி. மத நம்பிக்கையும் மொழி நம்பிக்கையும் யூத அடிப்படைகள்; அவர்களின் அடையாளங்கள். எழுதுவது போலவே பேசப்படும் மொழி ஹீப்ரு. அதாவது பேச்சுவழக்கு என்று கூடத் தம் மொழியைச் சிதைக்க யூதர்கள் விரும்பவில்லை. உலகின் இரண்டாம் தொன்மொழி ஹீப்ரு; தமிழ் ஆறாவது. செல்லும் இடங்களின் மொழிகளையே கிறித்தவம் பேசினாலும், ஹீப்ருவைத் தாய்மொழியாகக் கொண்ட இயேசு கிறித்து போதித்த மொழி அர்மைக் (Aramaic). உலகின் மூன்றாம் தொன்மொழி அர்மைக். திருக்குரானைப் படிப்பதற்காகவே இஸ்லாமியர்கள் அரபி மொழி கற்றுக் கொள்கிறார்கள்.

முப்பெரும் மதங்கள். ஒரே பெருநதியின் மூன்று கிளைநதிகள் அதனதன் போக்கில் அமைதியாகத் தானே போய்க் கொண்டு இருக்கின்றன. என்ன பிரச்சனை? அவற்றிற்கும் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கும் என்ன சம்மந்தம்? மூவரும் தத்தம் அடிப்படை சித்தாந்தங்களில் இருந்து சற்றே விலகிப் போனதால் கிடைத்த‌ அரிதாரம். மதம் வாரிசுரிமை தாண்டி இருபதாம் நூற்றாண்டில் இருந்து இப்பிரச்சனையின் அவதாரங்கள் பல. அணையாத இதில் அணையும் ஒரு பிரச்சனை. கால்வாய் பிரச்சனை. இப்போது புத்தகத்திற்குள் போகலாம்.
(www.nhm.in)

பா.ராகவன் சாரின் நிலமெல்லாம் ரத்தம். இஸ்ரேல்-பாலஸ்தீன் எரியும் பிரச்சனையின் புரியும் வடிவம் என்கிறது முன்னட்டை. முழுத் தகுதியுண்டு. 100+1 அத்தியாயங்களில் மிக எளிமையான மொழியில், மிகத் தைரியமாக இச்சிக்கலான பிரச்சனையைத் தமிழுக்குச் சொல்லும் புத்தகம். ஆபிரகாமில் ஆரம்பிக்கிறது. அடுத்து நேராக இயேசு கிறித்து. முகம்மது நபி. ரோமானிய ஆக்கிரமிப்பு. கலீபாக்களின் ஆட்சி. சிலுவைப் போர்கள். ஒட்டாமன் பேரரசு. யூதர்களின் புலம்பெயர்தல். ஜியோனிஸம் (Zionism). தியோடர் ஹெர்ஸில் (Theodor Herzl). யூத நில வங்கிகள். இரண்டு உலகப் போர்கள். ஹிட்லர். 1948ல் இஸ்ரேல் உதயம். இதுவரை பேசுகின்றன புத்தகத்தின் 400 பக்கங்கள்.

மிச்சமுள்ள 300 பக்கங்கள் பேசுவது 2005 வரையிலான நவீன பிரச்சனைகள். நாசர். சூயஸ் கால்வாய் (Suez). ஆறுநாள் யுத்தம். PLO. யாஸர் அராபத். முனிச் ஒலிம்பிக் படுகொலைகள். ஹமாஸ் (Hamas). PA. ஓஸ்லோ மாட்ரிட் கேம்ப் டேவிட் சமாதானங்கள். ஒட்டகத்தின் தாடையெலும்பை ஆயுதமாக எடுத்த அராபியர்கள் துப்பாக்கியேந்தி பின் கல்லெடுக்க வைத்த இண்டிபதா (Intifada). யாஸர் அராபத்தின் மரணத்துடன் ஆரம்பித்த‌ புத்தகம், அவர் இல்லாத பாலஸ்தீனர்களின் எதிர்காலக் கேள்விக்குறியுடன் முடிகிறது. அதன்பிறகு இரண்டு லெபனான் யுத்தங்கள், துனீசியா எகிப்து லிபியா ஏமன் என போய்க் கொண்டிருக்கும் அரபுக் கிளர்ச்சி (Arab Spring), இந்த வருடம் இந்தியாவில் இஸ்ரேலியத் தூதரகக் குண்டுவெடிப்பு என கண்டம் தாண்டியும் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை இது.

ஆபிரகாமின் வாரிசு யார் என்ற அண்ணன் தம்பிப் பிரச்சனை. எருசலேம் யாருக்குச் சொந்தம் என்ற இருப்பியல் பிரச்சனை. அடிமையின் வாரிசுகள் என்று அராபியர்களை யூதர்கள் மட்டம் தட்டினார்கள். அடைக்கலம் தந்த இஸ்லாமியர்களுக்கு சிலுவைப் போர்களில் உதவாமல் இருந்தது, யூத நில வங்கி மூலம் 19ம் நூற்றாண்டில் அராபியர்களின் நிலங்களை வஞ்சகமாக அபகரித்தது என்று யூதர்கள் தன் சகோதர அராபியர்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் பகைத்துக் கொண்டார்கள். இருவருக்கும் பொதுவான பங்காளிகள் கிறித்தவர்கள். இயேசுவைக் கொன்ற படுபாவிகள் என்று யூதர்கள் மேல் பழி சுமத்தி கிறித்தவம் பரவியது. இஸ்லாமியர்களை எருசலேமில் இருந்து விரட்டத்தான் நூற்றாண்டுகளாக சிலுவைப் போர்கள் நடந்தன. சாலமன் தேவாலயத்தை இடித்து விட்டுத்தான் அல் அக்சா மசூதி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிரச்சனைகளின் வடிவம் வேறு. சரித்திர நியாயங்களை எல்லாம் உதறிவிட்டு, நான் விளையாட்டுக்கு வரவில்லை என்று மேற்கத்திய கிறித்தவ நாடுகள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அராபியர்கள் அவர்களது பூர்வீக பூமியில் இப்போது அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்மாயிலை ஈசாக்கிற்காக துரத்தி அடித்த அதே 5000 வருட முந்தைய கதையின் நவீன வடிவம்.

காலம் ஓர் இரக்கமற்ற மோசமான கதைசொல்லி. ஒரே கதையை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு இடங்களில், சில சமயங்களில் அதே இடங்களில் மறந்து போன தலைமுறைகளுக்கும் சொல்கிறது. இனத்தை அழிக்க பெண்ணின் கருப்பையைச் சிதைப்பது - தனது நம்பிக்கையை அடுத்தவனையும் நம்பச் சொல்லி குரூரமாக ரசிப்பது - இன்னொருவன் ஆலயத்தை உடைத்து தனது நம்பிக்கையை நடுவில் வைத்து கும்பிடச் சொல்வது - இன்னொருவன் கோயிலுக்குள் போய் ஆட்சி பிடிப்பது - அகழ்ந்து சின்னாபின்னமாக்கி ஒன்றுமேயில்லை என்ற பின்னும் தன் நம்பிக்கையைத் திணிப்பது - தன் இனம் இன்னொரு இடத்தில் அழியும் போது கையறு நிலையில் நிற்ப‌து - ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லையென போராளி இயக்கங்களை மக்கள் நம்புவது - போராளி இயக்கங்கள் பெற்றுத் தராத விசயங்களைத் தாங்களே தெருவில் இறங்கி மக்களே பெற்றுக் கொள்வது - எல்லாம் எங்கேயும் எப்போதும்.

என்.சொக்கன் அவர்களின் ஹமாஸ். முகில் அவர்களின் யூதர்கள். Thomas Loren Friedman அவர்களின் From Beirut to Jerusalem. கொஞ்சம் இடைவெளி எடுத்து படிக்கலாம் என்று ஒதுக்கி வைத்த புத்தகம் இது. சூப்பர் புத்தகம் என்று மூன்றாம் அத்தியாயத்தில் ஏரோது (Herod) மன்னனை அறிமுகப்படுத்தும் விதத்திலேயே தெரிந்தது. எத்தனை பக்கங்களில் எழுதி குறிப்பெடுத்தேன், எத்தனை இணைய தளங்களில் உலவினேன் என்று என்னைப் பற்றி ஆச்சரியப்படுவதை விட, ஆசிரியரை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஓர் எளிய வாசகனுக்குப் புரியும் விதத்தில் அவர் சொல்லும் வரிசை அருமை. முதல் முறை படித்துவிட்டு 3 மாதங்கள் இடைவெளிக்குப் பின், சரியாகப் புரிந்து கொண்டேனா என்று சரிபார்க்க இரண்டாம் முறை படித்தேன். கடல் போல பரந்து கிடக்கும் இச்சிக்கலுக்கு வழிகாட்டும் ஒரு பேராறுதான் இப்புத்தகம். பேராற்றின் வேகத்திற்குத் தடை போடாமல் சிற்றோடைகளாக‌, ஆசிரியர் விட்டு விட்ட தகவல்களே இவ்வளவு நேரம் இப்பதிவில் நீங்கள் படித்தவை. கடலைப் புரிந்து கொள்ள பேராற்றில் நீங்கள் பயணிக்கும் போது இடையில் இளைப்பாற இச்சிற்றோடைகள் உதவும்.

பாலஸ்தீன் வரலாறு பற்றிய எனது சொந்தக் கருத்துகள்:
பிடித்த நபர்கள்:
1. முகம்மது நபி - இஸ்லாமியர்களின் காலம் எருசலேமின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு மத நல்லிணக்கமும் சகோதரத்துவமும் விதைத்தமைக்காக.
2. சுல்தான் சலாவுதீன் - மூன்றாம் சிலுவைப் போரில் கத்தியின்றி இரத்தமின்றி எருசலேமை வென்றதற்கு.
3. இயேசு கிறித்து - பின்பற்றியவர்களுடன் வைத்துப் பார்த்தால் சார்லி சாப்ளின் சொன்னது. தனியாகப் பார்த்தால் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி சொன்னது. அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்களே தேடுங்கள்.
4. யாஸர் அராபத் - ஒரு கையில் ஆலிவ் இலையும் மறு கையில் துப்பாக்கியும் ஏந்தி ஐக்கிய நாடுகள் சபைக்குப் போனதற்காக.

பிடிக்காத நபர்கள்:
1. போப் அர்பன் 2
2. அடால்ப் ஹிட்லர்
3. எனது பட்டியல் பெரிது. அவர்கள் இப்புத்தகத்தில் இல்லை.

இப்படி நடக்காமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கும் விசயங்கள்:
1. சிலுவைப் போர்கள்
2. முதல் யூத அரபு யுத்தத்தில் (1948) போர் நிறுத்தத்திற்குப் பின் பாலஸ்தீனப் பகுதிகளை அரபு நாடுகள் திருப்பித் தராமல் போனது
3. ,,,,

புத்தகம் படித்தபின் நீங்கள் படிக்க‌, புத்தகத்தில் இடம்பெறாத சில விசயங்கள்:
1. மூன்று இல்லைகள் தீர்மானம் (3 NO's resolution 1967)
2. பச்சை மைக் கோடு (Green line 1948)
3. The prisoner of Zenach street
4. Quartet


இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையைப் பல முறைகளில் சொல்லலாம். எப்படிப் படித்தாலும் ஏதோ புரியாதது போல ஒரு பிரம்மையை உண்டாக்கும் பிரச்சனை இது. ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்களுக்குக் கொஞ்சமெனும் புரியும்படி இப்பதிவு இருக்கும் என நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை எருசலேம் என்ற நகரின் கதையைச் சொல்வதே மிகச்சிறந்த முறை. எருசலேம் எந்தக் காலத்தில் எவரிடம் எதற்காக எப்படி இருந்தது என்று அறிய முயன்றால் எல்லாக் கதையும் அடங்கிவிடும். விரைவில் அப்படியொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன். ஒரு வாசகனின் அறிவுப்பசியைத் தூண்டும் இப்புத்தகத்தைத் தந்த பா.ராகவன் சாருக்கு மீண்டும் நன்றிகளுடன் முடிக்கிறேன்.

சரித்திரத் தேர்ச்சி கொள்வோம்!

அனுபந்தம்:
----------------
1. ஆரம்ப காலத்தில் யூதர்களைச் சம்மந்தப்படுத்த‌ உண்டான, Pogrom Ghetto போன்ற‌ சில வார்த்தைகள் பின்னாளில் பொதுவான வார்த்தைகளாக ஆகிப் போனதைக் கவனித்தேன்.
2. தமிழ்நாட்டின் அவ்விரு நகரங்களுக்கு இடையே பயணித்தபோது விளைநிலங்களில் முளைத்திருந்த வீட்டுமனைகளின் பெயர்களைக் கவனித்தேன். எல்லாம் இஸ்ரேலில் உள்ள இடங்களின் பெயர்கள்! தற்செயலா என்று தெரியவில்லை. ஆனால் யூத நில வங்கிகள் மூலம் அப்பாவி அராபியர்கள் தங்கள் நிலங்களை யூதர்களிடம் பறிகொடுத்து நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

நிலங்களை விட்டுவிடாதீர்கள். அதைத்தான் அரபுச் சரித்திரம் சொல்கிறது. தாய்மொழியை விட்டுவிடாதீர்கள். அதைத்தான் யூதச் சரித்திரம் சொல்கிறது. நாம் வரலாற்றில் இருந்து உருப்படியாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அதைத்தான் வரலாறு சொல்கிறது.

- ஞானசேகர்

Wednesday, June 27, 2012

91. HOW LONG IS A PIECE OF STRING?

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!

இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல் மனக்கணக்கு
இருபது பதினெட்டைக் கூட்டிச் செல்லல் காதல்கணக்கு
செட்டியார்தம் கடையிலே அட்டியின்றி கொடுப்பது வட்டிக்கணக்கு
அடுக்களையில் பாவையர்தம் கரிக்கோட்டால் கிழிப்பது
பால்கணக்கு தயிர்க்கணக்கு மோர்க்கணக்கு
மந்தையிலே போடாதே ஆட்டுக்கணக்கு
மொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்கு
வாழ்க்கை கணக்கை தவறாகப் போடாமல் சரியாகப் போட‌
கணக்குப் பாடம் எடுத்துப் படிப்பீர்.
- முன்னாள் முதல்வர் கருணாநிதி
-----------------------------------------------------------
புத்தகம் : How Long is a Piece of String?
ஆசிரியர்கள் : Rob Eastway and Jeremy Wyndham
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Portico
முதற்பதிப்பு : 2002
விலை : 250 ரூபாய்
பக்கங்கள் : 215

-----------------------------------------------------------

அந்த நிலாவ‌த்தான் நீங்க கையில‌ புடிக்கிறீங்க‌, உங்க ராசாவுக்காக அல்லது ராசாத்திக்காக. உள்ளங்கையில் நீங்கள் வைத்திருக்கும் அந்நிலவு பின்வருவனவற்றுள் எதன் அளவுடன் கிட்டத்தட்ட ஒத்துப் போகும்?
1. நெற்றிப்பொட்டு 2. (இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்) ஒற்றை நாணயம் 3. டேபிள் டென்னிஸ் பந்து 4. ஆரஞ்சு பழம் 5. வதனமோ சந்திர பிம்பமோ?.
பதில் பிறகு.

பெரும்பாலான இன்றைய தமிழ்ப்படங்களில் கதாநாயகி காதல் சொல்லும் இடமாகவும் சண்டைக்காட்சி களமாகவும் ஆகிப்போனதால், பொது இடங்களில் ஆண்களுக்கான கழிவறை எப்படி இருக்கும் என்று நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக‌, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்தில் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பதுதான், அங்கு ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனையே. இரு வரிசைகளில் இருக்கும் சிறுநீர்க் கலன்களில், முதலில் நுழைபவன் ஏதாவது ஒரு மூலைக்குப் போகிறான். அடுத்தவன் அதற்கு எதிர் மூலை அல்லது அடுத்த வரிசையின் ஒரு மூலை. இவர்களுக்கு இடையே எங்கு பெரிய இடைவெளி இருக்கிறதோ அதை இரண்டு துண்டாக்கி நடுவில் நிற்கிறான் அடுத்தவன். இப்படித் தான் துண்டு போடுவார்கள் அடுத்தடுத்து வருபவர்கள். பெரிய இடைவெளியே மூன்று கலன்களுக்குக் குறைவாக இருக்கும்போது வரும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், இன்னொருவன் பக்கத்தில் நிற்பதற்குச் சபிக்கப் படுகிறார்கள். இந்நிலையில் பொறுத்திருந்து அதிர்ஷ்டம் தேடிக் கொள்பவர்களும் உண்டு.

Gentlemen's urinal என்ற‌, பெரும் பரப்பளவை ஆண்மூளை வகுத்தல் செய்யும் இச்சாதாரண கணக்கு போல, அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கணக்கு என்ற பாடம் நாம் அறியாமலேயே நம்மைப் பின் தொடர்கிற‌து; நாமும் தொடர்கிறோம். இந்த அடிப்படையில் ஆசிரியர்கள் 'ஏன் பேருந்துகள் மூன்று மூன்றாகச் செல்கின்றன?' - Why do Buses Come in Threes? என்ற புத்தகத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்புத்தகம் - 'ஒரு துண்டு எவ்வளவு நீளமானது?' - How Long is a Piece of String? ஆண்களின் இப்போக்கைக் கிட்டத்தட்ட கணக்கு முறையில் ஊகிக்க முடியும் என்று சொல்லும் ஆசிரியர்கள், பெண்கள் கொத்துக் கொத்தாகச் செல்வதன் காரணம் தெரிவதில்லை எனவும் ஒத்துக் கொள்கிறார்கள். ஓடாத படத்திற்கு மூலையில் இடம்பிடிப்பவர்கள் தவிர, திரையரங்குகளிலும் இந்த யுத்தி கொஞ்சம் செல்லுபடியாகும்.

அலைபேசி கோபுரங்கள் கிழமைகள் மின்தூக்கிகள் (lifts) கொள்ளைநோய்கள் வதந்திகள் இசைப்பாடல்கள் என்று அன்றாடம் நாம் கடந்து போகும் விசயங்களுக்குப் பின் மறைந்திருக்கும் கணக்கை விவரிக்கிறது புத்தகம். அவற்றோடு சம்மந்தப்பட்ட சில குறிப்புகளும் கேள்விகளும் ஆங்காங்கே சிறு பெட்டிகளில் குவிந்து கிடக்கின்றன. நான் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும் விளையாட்டு இசை பற்றி முழுக்க முழுக்க‌ பேசும் இரு கட்டுரைகள் தவிர மற்ற அனைத்தையும் முழுதும் படித்தேன்.

நான் ரசித்த சில கட்டுரைகளின் சாரம்:

1. அது என்ன வாரத்திற்கு 7 நாட்கள்? ஞாயிறு (சூரியன்), திங்கள் (நிலவு), செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என கிழமைகளில் என்ன வரிசை இது? வார வேலை நாட்கள் ஏன் திங்கட்கிழமையில் ஆரம்பிக்கிறது? புத்தகத்தின் இந்த முதல் கட்டுரையை மறக்கவே முடியாது.

2. நாம் கருவறையின் இருட்டில் கிடந்த நாட்களில் கேட்டுக் கொண்டிருந்த ஒரே சத்தம், தாயின் இதயத்துடிப்பு. அந்த உயிரியலின் தொடர்ச்சியாகவே, அதே சத்ததுடன் ஒத்துப் போகும் ட்ரம்ஸ் வாசிப்பை அனைவரும் ரசிக்கிறோம் என்கிறார்கள் ஆசிரியர்கள். மரபியல் தொட‌ர்ச்சியும் உண்டு என்பது தமிழனாகிய எனது கருத்து. இரவு நேரங்களில் மிருகங்களை விரட்ட பறை அடித்த ஆதிமனிதர்களின் வழித்தோன்றல்கள் நாம்! அதுபோல சில குறிப்பிட்ட ரிதங்களில் வரும் பாடங்களை மட்டுமே நமது மூளை விருப்பப்பட்டு ரசிக்கிறது. அந்த சூட்சமம் தெரிந்தவர்கள் சிறந்த இசையமைப்பாளர்கள் ஆகிறார்கள்.

3. இரண்டு லாடு லபக்கு தாசுகள் பிடித்திருப்பதாகச் சொன்னால், சுயரசனைகளை எல்லாம் விட்டுவிட்டு கும்பலோடு கும்பலாக சில பாடல்களைச் சிலர் ரசிப்பதுண்டு. கொள்ளைநோய்கள் வதந்திகள் போன்ற இவை திடீரென ஒரு சமூகத்தையே உலுக்கி ஆட்டிப் படைத்துவிட்டு படுவேகமாகப் பரவி, சட்டென ஒருநாளில் காணாமல் போய் விடுகின்றன. அதற்கும் கணக்கு சொல்கிறது புத்தகம். இதே கொள்ளைநோய் விசயத்தை மருத்துவ ரீதியில் சொன்ன ஒரு புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன். படித்திருந்தால் நினைவிருக்கிறதா?

4. 1000 ரூபாய் கட்டிவிட்டு நீங்கள் எங்கள் கம்பெனியில் உறுப்பினராகலாம். நீங்கள் இன்னும் 8 பேரைச் சேர்த்துவிட்டால், அவர்கள் தரும் 1000 ரூபாய்கள் உங்களுக்கே. ஆக மொத்தம் ஒன்றுமே செய்யாமல் 7000 ரூபாய் வருமானம். விரையுங்கள்! இதுமாதிரி உழைப்பே இல்லாமல் பணம் பண்ணச் சொல்லும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் பார்த்திருப்பீர்கள். விளையாட்டு மைதானம் முதல் மின்னஞ்சல்கள் வரை நடைபெறும் இதுபோன்ற‌ சூதாட்டங்கள் பற்றியது ஒரு கட்டுரை. கிட்டத்தட்ட பின்னணி இசையில் பந்தைத் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு போன்றது இது. இசை நிற்கும் போது பந்தை வைத்திருப்பவனுக்கு இருக்கிறது மொத்த வேட்டும்! கம்பெனிக்காரன் சுருட்டிக் கொண்டு ஓடும்போது 8 பேரைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இருக்கிறது எல்லாம்! கம்யூனிசத்தில் இருந்து வெளிவந்த அல்பேனியா நாடு, தனது வங்கிகள் மூலம் அரசே நடத்திய இதுபோன்ற பைனான்ஸ் ஆட்டங்களால் அந்நாடே திவாலானது.

5. 20வது தளத்தில் இருக்கிறாள் லைலா. 21ல் மஜ்னு. லைலாவிற்கு இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்த மஜ்னு, கீழே செல்ல மின் தூக்கி பொத்தானை அழுத்துகிறான். தரைத்தளம் வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி 20க்கு வருகிறது மின் தூக்கி. கடுப்பாகிப் போகிறான் மஜ்னு. 21க்குப் போக அழுத்தியிருந்த‌ லைலாவும் அவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டிருந்தால், காதல் வெளங்கும்? லிப்ட்களின் ட்ஸைன்களைப் பற்றி ஒரு கட்டுரை.

வாக்கியங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை (space) வைத்து காப்புரிமை (copyright) விதிகள் மீறுபவர்களைக் கண்டுபிடிக்கும் முறையை நான் புதிதாகக் கேள்விப்பட்டேன். ஷேக்ஸ்பியர் எழுதியவைகளாகச் சொல்லப்படும் எல்லாம் உண்மையிலேயே அவரால்தான் எழுதப்பட்டனவா என்று இன்னும் ஆராய்ச்சி நடக்கிறதாம். நான் பத்தாவது படித்த காலத்தில், பிட் அடிப்பவர்கள் பட்டியலில் தவறாமல் இருக்கும் பித்தாகரஸ் தேற்றம். அதை 300 வெவ்வேறான முறைகளில் நிரூபிக்கலாம் என்கிறது புத்தகம். நாம் கற்பதற்கு முன்னரே நமது ஆழ்மனம் 1 2 3 என்ற எண்களைப் புரிந்து கொள்ளுமாம். ஓர் ஆறுதான் தங்களுக்கு இடையேயான எல்லை என்று ஒத்துக் கொள்ளும் சில நாடுகள், எல்லையின் நீளம் சொல்லுவதில் வேறுபடுவதைக் கவனித்து இருக்கிறீர்களா? புவியியல் அளவுக‌ள் ஊடக‌ங்களில் ஒரேமாதிரி இருப்பதில்லையே ஏன்? வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லும் விசயங்கள் சில சமயங்களில் நேரெதிராக நடப்பதேன்? டாக்ஸி மீட்டர் எப்படி வேலை செய்கிறது? இப்படி பல விசயங்கள் பேசுகிறது புத்தகம்.

தானே ஆடும் பேய், பறைபெற்றால் ஆடாதோ பாய்ந்து? இதோ கேள்விக்கணைகள்!
1. வரும் பௌர்ணமி வரை காலம் எடுத்துக் கொள்ளுங்கள். புத்தகத்தில் வரும் நிலாக் கேள்வியாக நான் ஆரம்பத்தில் கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள்.
2. 10 மீட்டர் நீளமுள்ள சதுரத்தில், 1 மீட்டர் விட்டமுள்ள எத்தனை வட்டங்கள் வைக்கலாம்? 100 என்றால் தவறு.
3. கம்ப்யூட்டரே திணறும் ஓர் எளிய கேள்வி. 222,222,222,222,222,222,222^2 - 222,222,222,222,222,222,221^2 = ?

எனது 50வது புத்தகமாக இத்தளத்தில் இடவேண்டும் என்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகம் இது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தல அஜீத் த‌விர யாருக்கும் 50 ராசியில்லை. இதுபோல‌ சில எண்கள் மட்டும் ஏன் வசீகரமாக இழுக்கின்றன என்று ஒரு பெட்டிச் செய்தியில் சொல்கிறது புத்தகம். 37% விதி என்று வாழ்க்கைத் துணை தேடும் ப‌ட‌ல‌த்தில் குறைந்த‌ப‌ட்ச‌ம் எத்த‌னை பேரைச் சந்தித்த‌ பிற‌கு முடிவெடுக்க‌ வேண்டும் என்று க‌ண‌க்கு போட‌ச் சொல்லும் ப‌குதிக‌ளும், கணக்கில் எனக்கு அறவே பிடிக்காத பகுதியான நிக‌ழ்தகவும் (probability) த‌விர்த்து, ச‌மீப‌ கால‌ங்க‌ளில் நான் ப‌டித்துக் கொண்டிருக்கும் ம‌ற்ற‌ பெரிய‌பெரிய‌ புத்த‌க‌ங்க‌ளில் இருந்து ச‌ற்றே இர‌ண்டு நாட்க‌ள் இளைப்பாற‌ இப்புத்தக‌ம் உத‌விய‌து உண்மை.

Sierpinski triangle பற்றி படித்துப் பாருங்கள். பொடிசுகளுக்கு இதுபோன்ற தண்டனைகள் கொடுங்கள். சில தாவரங்கள் ஃபிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) முறையைக் கடைபிடிப்பது இன்னும் அறிவியலுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. (a+b)^2 = a^2+b^2+2ab - இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். 2க்குப் பதிலாக 3,4,5... என்றால் சொல்வீர்களா? என்னை மாதிரி சில பேர் சொல்வார்கள். எண்களை ரசிக்கும் பக்குவமும் அவைகளுக்கு இடையே நடத்திக் கொள்ளும் ஒழுங்கான விளையாட்டுகளைப் புரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வமும் போதும். கணக்கு என்ற கலை சலிப்பதில்லை. π என்றால் 3.14.... என்று ஆரம்பித்து, நீங்கள் போதும் என்று சொல்லும் வரை சொல்லுபவர்களும் உண்டு. எண்களுடன் விளையாடுங்கள்; மூளை சந்தோசப்படும்.

π (pi = 22/7), பித்தாகரஸ் (Pythagoras) போன்ற விசயங்கள் புரியும் என்றால், மூளைக்குச் சற்றே ஓய்வு தேவை என்று தோன்றும் நாளில் படித்துப் பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Thursday, June 07, 2012

90. THE RED MARKET


பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 

மனிதனுக்காக பொருள்கள் என்ற நிலைபோய் பொருள்களுக்காக மனிதன் என்ற நிலை உருவாகும்.
- கார்ல் மார்க்ஸ்.
---------------------------------------------------------------
புத்தகம் : The Red Market
ஆசிரியர் : Scott Carney (http://www.scottcarney.com/)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Hachette India
முதற்பதிப்பு : 2011
விலை : 550 ரூபாய் (ரூ 385 தள்ளுபடி விலையில் வாங்கினேன்)
பக்கங்கள் : 241 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

---------------------------------------------------------------

எனது எடை 90 கிலோ கிராமிற்குக் கொஞ்சம் குறைவு. அடர்த்தியான முடிகள். ஆரோக்கியமான கண்கள். எல்லாப் பற்களும் பத்திரமாக‌ உள்ளன. எனக்குத் தெரிந்தவரை எனது தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்கிறது. ஆறு அடி இரண்டு அங்குல உயரம். தொடை மற்றும் பின்னங்கால் எலும்புகளும் இணைப்புத் தசைகளும் நன்கு வலுவாக உள்ளன. இரண்டு சிறுநீரகங்களும் நலமே. இதயம் நிமிடத்திற்கு 87 முறைகள் துடிக்கிறது. எனது மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். திருமணச் சந்தையில் எனது ஆரம்ப ஏல விலை என நினைக்காதீர்கள். இவை அனைத்தும் ஸ்காட் கார்னி அவர்கள் தனது The Red Market புத்தகத்தில் ஒரு கட்டுரையில் அவரது உடம்பிற்கான சுயமதிப்பீடாக‌ சொல்லும் விசயங்கள்.

எனது இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா சிவப்பணுக்கள் இரத்தத்தட்டுகள் (platelets) என்று தனித்தனியே பிரித்தெடுத்து தேவைப்படுபவருக்கு உபயோகப்படுத்தப் படலாம். முழங்கால் உடைந்து போன விளையாட்டு வீரர்களுக்கு எனது தசைநார்கள் (ligament) பொருத்தப் படலாம். அமெரிக்க அழகிகளுக்கும் பாப் பாடகர்களுக்கும் செயற்கை முடி செய்யவோ கேக்குகள் செய்யவோ எனது முடி பயன்படுத்தப் படலாம். விழிவெண்படலம் இதயம் சிறுநீரகம் கல்லீரல் போன்றவை இன்னொருவருக்கு அப்படியே பொருத்தப் படலாம். எனது மொத்த எலும்புக் கூடும் ஏதோ ஒரு மருத்துவ மாணவனின் படிப்பிற்குப் பயன்படலாம். நான் செத்தே போனாலும் கூட எனது விந்துவைப் பத்திரப்படுத்தி ஒரு பெண்ணைக் கருத்தரிக்க வைக்கலாம். அப்படிப் பிறக்கும் குழந்தையின் மதிப்பில் எனக்கும் பங்குண்டு என்பது வேறு விசயம். இப்படித்தான் ஒரு கோடி ரூபாய்க்கு விளக்கம் சொல்கிறார் ஆசிரியர். 'மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு. அடப் போங்க‌ தம்பி'. நீங்கள் நினைக்கலாம்.

ஓர் இயந்திரத்தின் உதிரி பாகத்தைப் போல மனித உறுப்புகளைச் செயற்கையாகச் செய்ய இன்னமும் ஆய்வுக்கூடங்கள் திணறிக்கொண்டு இருக்கின்றன. இன்றைய‌ சூழலில் இன்னோர் உயிருள்ள ஆரோக்கியமான மனித உடலில் இருந்து எடுத்து, பழுதடைந்து போன மனித உடலில் பொருத்துவதுதான் ஒரேவழி. கொடுக்கல் வாங்கல் என்றாலே தரகு என்ற இடைநிலையுடன் ஒரு சந்தை இருக்கத்தான் செய்யும். எதையும் விலைப்படுத்தும் வளர்ந்த நாட்டவர்கள்தான் இங்கே வாங்குபவர்கள்; மனிதவளம் மிக்க மூன்றாம் உலக நாட்டவர்கள்தான் இங்கே கொடுப்பவர்கள். ஆசிரியரின் சுயமதிப்பீட்டில் சொன்ன ஒரு கோடி ரூபாயில் அவருக்கு ஏதாவது சொற்ப பங்கு கிடைக்குமா இல்லையா என்பது உறுப்பைப் பொறுத்தது. தேவை உள்ள இடங்களில் தட்டுப்பாடு தோற்றத்தை ஏற்படுத்தி பணம்செய்யும் தரகர்களின் கள்ளச் சந்தை பற்றியது இப்புத்தகம். இரத்தமும் சதையும் நுகர்வுப் பொருட்கள் என்பதால், இக்கள்ளச்சந்தையின் பெயர் சிவப்புச் சந்தை!

ஒரு காலத்தில் மனித உடலை வெட்டிப் படிக்க மதங்கள் தடை செய்தன. மருத்துவ வல்லுனர்கள் பிணங்களைத் திருடித்தான் மனித உடலைத் திருட்டுத்தனமாகப் படித்தார்கள். போர்களில் சில வீரர்களின் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளின் பிணங்கள் தேவைப்பட்டன. எல்லாக் காலங்களிலும் ப‌ல்வேறு சூழ்நிலைகளில் இன்னொரு மனித உடலின் உறுப்புகள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன‌. இளமை நிலைக்க‌ சிறுவர்கள் நரபலி கொடுக்கப்படுவதும், ஆட்சி நிலைக்க புதிதாய்ப் பருவமடைந்த பெண்ணின் கருவறை திறப்பதும் அத்தேவைகளின் இன்னொரு வடிவங்கள். பெனிசிலின் கண்டுபிடித்து மருத்துவ உலகம் பிரம்மாண்டமாய் வளர்ந்துவிட்ட பின், இரத்தம் கண் உடல் என்று பொதுநலம் கருதி சிலர் தானே முன்வந்து தானமாகவும் தந்தனர்; அவற்றின் தேவை அதிகரித்தபோது அவற்றுக்கென ஒரு சந்தை உருவாகி விலையும் உருவானது. செருப்பு, எலட்ரானிக் பொருட்கள் போல மனித உறுப்புகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாடுகள் கடந்தன. காலப்போக்கில் மனிதநேயம் என்ற அடிப்படையில் மனித உறுப்புகளை விற்பதை நாடுகள் படிப்படியாகத் தடை செய்தன. பேனா வாங்கினால் மூடி இலவசம் என்று சொல்லி, மூடியின் விலையையும் பேனாவோடு வசூலிக்கும் சந்தை தந்திரத்தில், மனித உறுப்புகள் மூடி போல் இலவசமாயின. இடமாற்றும் மருத்துவச் செலவு என்பது பேனா போல் சமூக வழக்கமாயின. தரகு தளைக்கிறது!

மனித பாகங்களை ஏற்றுமதி செய்வதை 1985ம் ஆண்டுதான் இந்தியா தடை செய்தது. ஆனாலும் ஓர் இந்திய மருத்துவ மாணவன், கல்லறைகளில் திருடப்பட்ட எலும்புகளைத் தனது படிப்பிற்குப் பயன்படுத்துவதைச் சட்டம் அனுமதிக்கிறது. பிள்ளைகளைத் தத்தெடுப்பதில் இந்தியாவில் கெடுபிடிகள் அதிகம். மருத்துவப் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வாடகைக்குக் கரு சுமப்பதை இந்தியா 2002ம் ஆண்டு சட்டப்பூர்வ‌மாக்கியது; ஆனால் சட்ட திட்டங்கள் தெளிவாக இன்னும் ஒழுங்குபடுத்தப் படவில்லை. அமெரிக்காவில் ஆகும் சிகிச்சை செலவை விட இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவு. அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனங்களின் கெடுபிடிகள் அதிகம். உறுப்புச் சந்தையைச் சீனாவில் அரசாங்கமே நடத்துகிறது. அரசுக்கு எதிரான சிறைக் கைதிகளின் உறுப்புகளைச் சீன‌ அரசாங்கமே கடத்தியதாக செய்திகள் உண்டு. இஸ்ரேல் போன்ற நாடுகள் தனது எல்லைக்குள் கருமுட்டைகள் விற்பதைத் தடை செய்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்குப் பணவுதவி அளிக்கின்றன. கொடுப்பவர் யாரெனத் தெரியாமலேயே வாங்கச் சொல்லி அவர்களுக்கு இடையே தார்மீக சங்கடங்கள் ஏற்படுவதை உலக நாடுகள் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற விசித்திர ஓட்டைகள் தான் சிவப்புச் சந்தையின் மந்திரச்சாவி.

10 கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம் சொல்லும் சில விசயங்கள்:

1. இறந்த உடல் பாகங்களுக்கு அருகில் இருப்பதன் மூலம் முக்தி அடைய முடியுமென நம்புகிறது பூட்டானிய புத்த மதத்தவர்களின் ஒரு பிரிவு. அவர்களின் புல்லாங்குழல், மனித பின்காலெலும்பு (tibia); அவர்களின் மந்திரம் சொல்லும் கோப்பை, மனித மண்டையோடு. இதற்காகப் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப் படுகின்றன. புத்தனின் பல்லைக் காக்கும் சிங்களவர்கள் புத்தனின் சொல்லைக் காக்காமல் போனது போல!

2. மருத்துவ மாணவர்களுக்கு எலும்புக் கூடுகள் விற்கும் கும்பலில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தனி டீம். பிணங்களைப் பற்றிய துப்பு கொடுக்க ஒரு டீம். தோண்டி எடுக்க ஒரு டீம். சதைகளைப் பிரித்தெடுக்க ஒரு டீம். பாலிஷ் போட ஒரு டீம். மார்கெட்டிங் டீம் தனி. ஷிப்பிங் டீம் தனி. இதேபோல் உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகளுடன் தொடர்புடைய துப்பு கொடுப்பவர்கள், மிகவும் சாதாரணமானவர்கள். அவர், நீங்கள் மதுரையில் தினமும் சாப்பிடும் இட்லிக் கடைக்காரராக‌க் கூட இருக்கலாம். தினமும் உங்கள் வறுமையைச் சொல்லி அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தால், ஒருநாள் அவர் சொல்லலாம்: 'ஒங்க கஷ்டமெல்லாம் தீர நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பீங்களா?'. மதுரை இட்லிக்கு மட்டுமல்ல பேமஸ்; கிட்னிக்கும்தான் என்பது வடிவேலு காமெடியல்ல!

3. சுனாமி மறுவாழ்வுக்கென அமைத்துத் தரப்பட்ட சென்னைக் கிராமம் ஒன்று, பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் தங்களின் சிறுநீரகங்களை விற்றது. கிட்னிவாக்கம் என்று பெயர் பெறும் அளவிற்கு வியாபாரம். தடுத்த உள்ளூர் அரசியல்வாதியின் போஸ்டர் கல்லடி வாங்கும் அள‌விற்கு, வியாபாரம் நியாயமாகிவிட்டது. விசயம் நீதிமன்றம் வரை போய் தமிழ்நாட்டின் 52 பெரும் மருத்துவமனைகள் சிக்கின. காலாவதியான மாத்திரைகள் விசயம் காலாவதியாகிப் போனது போல், கிட்னி விசயமும் ஓர் அமைச்சரின் தலையீட்டால் செயலிழந்து போனது என்று ஆசிரியரான அமெரிக்காக்காரர் சொல்கிறார்.

4. புதிய மருந்துகளைச் சோதிக்கும் இரகசிய ஆய்வுக்கூடம் ஒன்றிற்குப் படிக்கும் காலத்தில் ஆசிரியரும் போய் இருக்கிறார். சோதிக்க உடம்பு தருபவர்களுக்கு ஊதியம் அதிகம். படிப்புச் செலவிற்காகச் சென்றிருக்கிறார். அவர் போன நேரம், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்கும் புதிய மருந்துக்கான சோதனை. இறந்தால் வெளியே தெரியாத இந்த சோதனையில் ஆசிரியர் தப்பித்துவிடுகிறார். முழுச் சோதனையிலும் தன் ஆணுறுப்பு சோதிக்கப்படாத ஆச்சரியத்தை நர்ஸிடம் கேட்கிறார். 'மிக வினோதமான பக்கவிளைவுகள் இல்லாத வரையில் மருந்தின் செய‌ல்பாடு என்பது சோதனையின் நோக்கமல்ல. அது எவ்வளவு நேரம் உடம்பில் தங்குகிறது என்பதே சோதனை' என்கிறது பதில்.

5. சென்னையில் ஒரு பிரபல மருத்துவர் ஸ்டெம் செல்களை ஒரு நோயாளியின் மேல் சோதித்து எதேச்சையாக‌ வெற்றி. எப்படி என்று அவரால் சொல்ல முடியவில்லை. திரும்பவும் வெற்றி பெற முடியவில்லை. ஜெயிக்கும் வரை இராசியான டாக்டர் என்ற பெயர். தோற்றால் ஈ திரைப்படத்தின் வில்லன்!

திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுதப் பாதுகாப்புடன் முடி பிரிக்கும் பணி. செங்கிஸ்கானை விட அதிகமாகப் பெண்களைப் பிரசவிக்க வைத்ததாகப் பெருமைப்படும் ஒரு சைப்ரஸ் நாட்டு டாக்டர். அமுல் பால் புகழ் ஆனந்த் நகரில், வாடகைத் தாய்களின் வயிற்றைக் குழந்தை பெற்றுத்தரும் பாத்திரமாக உபயோகிக்கும் கொடூரம். கோரக்பூர் நகரில் இருட்டறையில் வைத்து தொடர்ந்து மாதக்கணக்கில் இரத்ததை உறிஞ்சி உறிஞ்சி சக்கையாக உடம்பைப் பிழிந்து போட்ட கொடூரம். புதிய மருந்து கண்டுபிடிப்புகளைப் பரிசோதிக்கப் போய் விகார‌மான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள். இங்கே உபரியாக‌ இருக்கும் குழந்தை வளத்தை, வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுக்கும் சமூகத் தொண்டு நிறுவனங்கள். இது போல பல அதிர்ச்சிகளைத் தருகிறார் ஆசிரியர்.

சிவப்புச் சந்தையில் இப்போது கிராக்கி அதிகம். கருமுட்டை / விந்து வாங்குபவர்களும் தத்து எடுப்பவர்களும் தன்னைப் போலவே குழந்தை இருக்க வேண்டுமென எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். கொடுப்பவர்கள் பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதன் எல்லாவற்றின் மூலம் அதிகம் பாதிக்கப்படுபவன் சமூகக் கட்டமைப்பில் அடியில் கிடப்பவனே! உதாரணமாக மதுரையில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்ற மல்லிகா தனது மகனுக்குச் சிறுநீரகம் தேவைப்படும்போது திக்கற்று நிற்கிறாள். இந்தியாவில் சதை என்பது சமூகக் கட்டமைப்புகளின் மேல்தட்டு மக்களால் மட்டுமே பெற முடிகிறது, கீழ்த்தட்டு மக்களால் விற்க மட்டுமே முடிகிறது என்கிறார் ஆசிரியர். இலாப நோக்கில் போய்க் கொண்டிருக்கும் இச்சந்தையில் மனிதனுக்குத் தன் சொந்த சதை மேல் கூட உரிமை இல்லாமல் போகிறது.

எல்லா கட்டுரைகளும் ஆசிரியரின் நேரடி அனுபவ‌ங்கள். அமெரிக்கா இந்தியா சைப்ரஸ் என்று தேடித்தேடிப் போய் தகவல்கள் சேகரித்து இருக்கிறார். அவர் மனைவி பெயரைப் பார்த்தால் நம்மூர் போல் தெரிகிறது. ஏழாம் உலகம் போன்ற புதினங்கள் உலாவும் தமிழ் தெரிந்து, ஆங்கிலத்தில் படித்ததால் பிரச்சனையின் வீரியம் அந்த அளவிற்குப் பாதிக்கவில்லை. புத்தகத்தில் வீரியம் குறைவு என்பதும் உண்மையே. ஆனால் எடுத்துக்கொண்ட விசய‌த்தால் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

காணாமல் போன‌ குழந்தை ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாட்டுப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு திரும்பி வந்ததைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அது ஏன் கடத்தலாக இருக்கக் கூடாதென‌ இனிமேல் யோசியுங்கள். இரத்தம் பெறும்போது HIV அது இது என்று பல கேள்விகள் கேட்பதுபோல், இரத்ததானம் செய்யும்போதும் எங்கெல்லாம் போகும், கேளுங்கள். பெரியார் சொல்லியே கேட்காத, நீண்ட முடியைக் கடவுள் பெயரில் மொட்டை அடிக்கும் பெண்கள், நான் சொல்லியா கேட்கப் போகிறார்கள்?

ஸ்டெம் செல்கள் மூலம் உறுப்பு பரிமாற்றத்தை நீக்கும் முயற்சியை மருத்துவ உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது. இரத்ததானம் செய்பவர்கள் முதல், எதிர்பாராமல் மரணத்தை நெருக்கும் உறவுகளின் உறுப்புகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரோ ஒருவருக்குத் தானம் செய்யும் நல்லவர்கள் வரை மனிதமும் அடிக்கடி தலை நீட்டத்தான் செய்கிறது. மருத்துவம் என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாகும் வரை, பேனாவிற்கு மூடி இலவசம் என்ற வியாபார யுக்தியுடைய தரகுகளைத் தடுப்பது கடினமே! அதுவரை சந்தை நிலவரம் தெரிவோம்!

அனுபந்தம்:
1. ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான ஐஐடி மாணவரின் விந்தணு தான‌ம் தேவையென சில நாட்களுக்கு முன் விளம்பரம் செய்தனர் ஒரு சென்னை தம்பதியினர். பெர்னாட்ஷாவை ஓர் அழகு யுவதி கேட்டாள்: 'நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால், என்னைப் போல் அழகாகவும் உங்களைப் போல் அறிவாகவும் குழந்தை பிறக்கும்'. பெர்னாட்ஷா சொன்னார்: 'ஒருவேளை என்னைப் போல அழகாகவும் உன்னைப் போல் அறிவாகவும் பிறந்துவிட்டால்?'.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/) 

Tuesday, May 15, 2012

89. கெட்ட வார்த்தை பேசுவோம் - பகுதி 1

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 
--------------------------------------------------------------------
புத்தகம் : கெட்ட வார்த்தை பேசுவோம் - பகுதி 1 (இலக்கியக் கட்டுரைகள்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்
வெளியீடு : கலப்பை (http://kalappai.in/)
முதற்பதிப்பு : 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 136 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------------------

கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழையும் போது, அந்நகரில் அவன் கொல்லப்படுவான் என்று அறிந்திருந்த மதுரையின் மாடத்து மலர்கள் எல்லாம் அசைந்து, அவர்களை வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தன. பத்தாம் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் தற்குறிப்பேற்றணிக்கு உதாரணமாகச் சொன்னவை இவ்வரிகள். இளங்கோவடிகள் என்றாலே ஒரு சாமியார் என்ற பிம்பத்தை நமது பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு விதைப்பதாக மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் தமிழாசிரியர் வகுப்புக்கு வெளியே மிகவும் இயல்பாகப் பேசக் கூடியவர். அவரிடம் இருந்து சிலப்பதிகாரம் பற்றி விசாரித்தோம். கோவலனும் கண்ணகியும் திருமணமாகித் தழுவிக் கொள்ளும்போது, அவர்கள் கழுத்தில் உள்ள மாலைகள் பேசிக் கொள்ளும் பகுதி ஒன்று சொன்னார். அடடடடா. அன்றில் இருந்து இளங்கோவடிகளை இளங்கோ என்றுதான் சொல்கிறேன். அதன் பின், காமத்துப் பாலை முழுதும் படித்து, திருவள்ளுவர் மேல் உள்ள சாமியார் பிம்பத்தை நானே உடைத்துப் போட்டேன். புத்தகத்திலேயே வராமல் பல விசயங்கள் இதுபோல மறைக்கப்படுவது ஒருபுறம். பெண் இனப்பெருக்க மண்டலமும் மாதவிடாய் சுழற்சியும் வகுப்பில் நடத்தப்படப் போகும் ஆர்வத்தில் நாங்கள் எல்லாம் அமர்ந்திருக்க, அப்பக்கங்களை மின்னல் வேகத்தில் ஆசிரியர் கடந்து போனார். புத்தக‌த்தின் பல விசயங்கள் இதுபோல மறைக்கப்படுவது இன்னொருபுறம்.

ஐஸ்கிரீம் போன்ற அன்னியங்களைப் போதிக்கும் ஆங்கிலம். அதற்குக் கடன் வாங்கச் சொல்லும் கணக்கு. தூரத்தில் காட்டும் தமிழ். பார்க்க வைத்து சாப்பிடும் அறிவியல். அதையும் பறித்து ஓடும் சமூகவியல். நமது பாடத்திட்டங்கள் அப்படித்தான். இதை உணர்ந்தவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் பெருமாள்முருகன் அவர்களின் 'கெட்ட வார்த்தை பேசுவோம்'.

மணல்வீடு இதழில் பா. மணி என்ற பெயரில் ஆசிரியர் எழுதிக் கொண்டிருக்கும் தொடர்களின் முதல் தொகுப்பு இப்புத்தகம். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியத்தைத் தாள்களில் அச்சேற்றிய தமிழ் அறிஞர்கள், அவையல்கிளவி இடக்கரடக்கல் குஃறொடரன்மொழி என்று சில பகுதிகளை நீக்கி இருக்கிறார்கள் அல்லது மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி பதிப்பேறியவைகளைப் படித்து, பெண் பிள்ளைகள் கெட்டுப் போகக் கூடாதென, உரை நூல்களிலும் வகுப்பறைகளிலும் வேறுவிதமாக பொருள் சொல்லப்படுகின்றன. இது போன்ற இலக்கிய‌ ஓரவஞ்சனைகளின் தொகுப்பே இக்கட்டுரைகள்.

புத்தமதத் துறவியான மணிமேகலையைப் பாம்புப் ப‌டம் போன்ற அல்குலை உடையவள் என்கிறார் சீத்தலைச் சாத்தனார். இப்படிப் பெண்குறிக்கு அல்குல் என்ற ஆதிகாலத் தமிழ்ச் சொல்லை இலக்கியங்கள் தயக்கமின்றி தாராளமாகப் ப‌யன்படுத்தி இருக்கும்போது, இன்றைய எழுத்துலகம் யோனி என்ற சமஸ்கிருத சொல்லுடன் சமரசம் செய்து கொண்டிருப்பதையும், அச்சேற்றியவர்களும் உரையாசிரியர்களும் அல்குலுக்கு மூக்கு, முலை, இடை, ஆடை, தோள் என்று சம்மந்தமில்லாத பொருள் சொல்லி இருப்பதையும் குறுந்தொகை, தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி, பழமொழிநானூறு என்று பல உதாரணங்களுடன் சொல்கிறார்.

கம்பருக்கு என்று ஒரு தனிக் கட்டுரை ஒதுக்கி அண்ணாத்துரை அவர்கள் எழுதிய கம்பரசம் பற்றிச் சொல்கிறார். மலப்புழை தவிர பெண்ணுடம்பை வரிவரியாக வருணிக்கும் இலக்கியங்களுக்கு இடையில் ஆணுறுப்புக்கென தனிச் சொல்லாடல்களைப் பயன்படுத்தி, புணர்ச்சிக்கென தனி வழக்குச் சொல்களை உண்டாக்கிய‌ காளமேகப் புலவரைப் பற்றி மட்டுமே பாதிப் புத்தகத்திற்கு மேல் கட்டுரைகள் பேசுகின்றன.

நான் ரசித்த சில செய்யுள்கள்:

சீதையின் அல்குலைப் படாதபாடு படுத்தியிருக்கும் கம்பரசத்தில் ஒரு துளி:
வாம மேகலையிற வளர்ந்தது அல்குலே

கோமளவல்லிகளின் ஆடைக்குள்ளிருக்கும் அங்கங்க‌ளைக் கண்டு ஆராயக் கோதண்டபாணி, பிரம்மச்சாரி அனுமனிடம் கூறுகிறார்:
செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன்

சந்திரனைக் சேவலாகக் காவலுக்கு வைத்துவிட்டு பிறன்மனை விழைந்து அகலிகையை ஏமாற்றிய‌ பின் இந்திரன் ஆயிரம் கண்கள் பெறுவதைச் சொல்லும் பிர‌போத சந்திரோதயம் பாடல்:
அந்தா பதன் சொற்ற சாபத்தி னால்நொந் தகங் குன்றியே
முந்தா யிரம் கோச நெடுமா மரம்தூங்கும் முதுவா வல்போல்
நந்தா துடம்பெங்கும் நாலப் பழிப்பெய்தி நாகா திபன்
மந்தார நிழலூ டிருந்தாலும் வெந்தாப மாரா தரோ

சீரும் த‌ளையும் சிதையாம‌ல் 'மென்முலையார்' என்ப‌து 'பென்ம‌யில்நேர்' என்று ந‌ம‌து பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளில் சொல்லித் த‌ர‌ப்ப‌ட்ட‌ காள‌மேக‌ப் புல‌வ‌ர் பாட‌ல்:
காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வ‌ந்த‌த‌ற்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

பூட்டுவில் பொருள் கொள்ள‌ச் சொல்லும் காள‌மேகப் புல‌வ‌ரின் இன்னொரு பாட‌ல்:
மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி
இரும்படிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடவை தப்பும் பறை

நாத்திகர்கள் பெரும்பான்மையுடன் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில், 'பட்சி சாதி நீங்க, இந்தப் பகுத்தறிவாளரெ பாக்காதீங்க' என்ற வரிகளுக்கு எதிர்ப்பு வந்தபோது பெருந்தன்மையுடன் நீக்காமல் வெளியிட்டார்கள். பகவதி திரைப்படத்தில் 'போடாங்ங்கோ' என்ற பாடலுக்குக் கடும் எதிர்ப்பு வந்தபோது, கதாநாயகன் சொன்னார்: 'கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவரும் இப்படித்தான் பாடல் எழுதியிருப்பார்'. இன்றைய திரைப்பாடல்களின் நிலைமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. Who the F பாடலுக்குக் குழந்தைகள் ஆடிப் பரிசு பெறுவது சாதாரணமாகி விட்ட காலம். காதல் என்ற பண்டைய கெட்ட வார்த்தை இன்று அன்றாட‌ப் பேச்சுகளில் நல்ல வார்த்தையாகிப் போன‌து. முலை சயனி என்று சமய‌ நூல்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை ஆத்திகர்கள் கூட‌ சொல்வதில்லை. எச்சொல் யார்யார்க்கு எந்தெந்த நேரங்களில் கெட்ட சொல் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

வைரமுத்து அழகாகச் சொல்வார்: 'முத்தம் என்ற வார்த்தைக்குக் கட்டிலில் வேறு பொருள், தொட்டிலில் வேறு பொருள், பாடையில் வேறு பொருள். சொல்லின் பொருளைத் தீர்மானிப்பது சொல்லல்ல, காலமும் இடமுமே'. காலங்காலமாகச் செல்லுமிடமெல்லாம் நீச பாஷை என்று ஒதுக்கப்படும் தமிழ்மொழியின் சொல்வளங்களைக் காக்கச் சொல்லும் இதுபோன்ற புத்தகங்களை வெறும் தலைப்பை மட்டும் பார்த்து வெறுத்து ஒதுக்காமல் ஆதரவு தருவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்.
1. நண்பர் மு. ஹரிகிருஷ்ணன் http://manalveedu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
2. தம்பி சேரலாதன் http://seralathan.blogspot.in/2010/10/blog-post_28.html

அனுபந்தம்:
இப்பதிவிடுபவ‌ரும் இத்தளத்திற்குச் சொந்தக்காரரும் முன்பொரு காலத்தில் கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்துவதாக ஒரு விபரீத முடிவெடுத்து தளத்துக்காரர் மட்டும் அதைக் கச்சிதமாகப் பின்பற்றி வந்தார். அவருக்கும் ஒரு கதை சொல்லி, கெட்ட வார்த்தை பேச வைக்கும் சக்தியை மீட்டெடுத்த‌ பெருமை பதிவுக்காரரையே சாரும்.

இரண்டாம் பகுதி புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து,


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)