Saturday, November 24, 2012

98. தூங்காமல் தூங்கி


ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி
சுகம் பெறுவது எக்காலம்
-------------------------------------------------------------------------
புத்தகம் : தூங்காமல் தூங்கி
ஆசிரிய‌ர் : Dr.S.மாணிக்கவாசகம் MBBS.DA.
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2008
விலை : 65 ரூபாய்
பக்கங்கள் : 128 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்) 
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். ஆசிரியரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கடையின் புத்தகக் குவியல்களில் எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கிக் கிடக்கும். ஆனாலும் முதலில் பார்க்கும்போது, அட இப்படியும் ஒரு புத்தகமா என்ற ஆச்சரியத்துடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும் வசீகரம் சில புத்தகங்களுக்கு அமைந்துவிடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் எனக்கு இப்புத்தகம். ஆசிரியர் 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவர். அயல் மனித முகங்கள் மேல் மனிதாபிமானம் காட்டும் தொழில். வாழ்வின் பெரும்பகுதியை அறுவைச் சிகிச்சை அரங்கிற்குள்ளேயே கழித்துவிட்டவர். தொழில் சார்ந்த அவரது அனுபவங்களே இப்புத்தகம்.

தூங்காமல் தூங்கி. Memories of an Anaesthesiologist. ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை.

நோயாளியை மயக்க நிலைக்குக் கொண்டு போய் மீண்டும் கண் விழிக்க‌ வைக்கும் வரை கூடவே இருந்து கண்பாவை, நாடித்துடிப்பு, சுவாசம், உடல்நிறம், இரத்த அழுத்தம், காயத்திலிருந்து வெளியேறும் இரத்தம், அதை ஈடுசெய்ய மருந்துகள் போன்ற விசயங்களைக் கவனித்துக் கொள்ளும் தனது தொழிலில் மறக்க முடியாத மனிதர்கள்-அனுபவங்கள் பற்றியது இப்புத்தகம். தொழில்நுட்பம் முன்னேறிவிட்ட இக்காலத்தில் இவை எல்லாவற்றையும் கணினியே பார்த்துக் கொள்ளும்போது, மருத்துவன் அறுவைச் சிகிச்சை அரங்கிற்கே செல்லத் தேவையில்லை. அறுவைச் சிகிச்சையில் என்ன செய்யப் போகிறோம் என முன்கூட்டியே மருத்துவர் நோயாளிக்கு வீடியோ படம் காண்பிக்கும் காலம் இது. வாசகனை அறுவைச் சிகிச்சை அரங்கு வரை அனும‌தித்து, தூக்கம் உணவு தண்ணீர் குடும்பம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு, அனுபவ அறிவுடனும் மருந்துகளுடனும் போராடிய மருத்துவ உலகை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.

குளோராபார்ம் டாக்டர் என்று தெரிந்தவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர், தான் தன் தொழிலில் சந்தித்த முதல் மரணம் முதல் சிசேரியன், குடலிறக்கம், குடலடைப்பு, விரைவீக்கம், குடல்வால், கத்திக்குத்து, ஆணுறுப்பு மேல்தோல் நீக்கம், தைராய்டு கட்டி, எலும்புமுறிவு போன்ற‌ அறுவைச் சிகிச்சைகள் கண்ட நோயாளிகள் வரை பலரைச் சிறுகதைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.

- ஞானசேகர்

No comments: