Wednesday, December 20, 2006

13. IN THE LINE OF FIRE

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
----------------------------------------------------------
புத்தகம்: In the line of fire
ஆசிரியர்: Pervez Musharraf
விலை: ரூ.950/-

வெளியிட்டோர்: Free Press
வெளியிட்டவர்: Kofi Annan
----------------------------------------------------------












நான் 'Company of women' படித்தபோதுகூட அட்டையை மறைத்துப் படித்ததில்லை. ஆனால், இப்புத்தகத்தை..... புத்தகம் வாங்கினது முதலே, என்னைச் சிலபேர் ஒருமாதிரி பார்த்தார்கள். எனவே, இப்பதிவை இட்டதற்காக சேரலாதனிடம் முகம் சுழிக்காதவர்களும், வரலாறு - இலக்கியம் - அரசியல் போன்ற வார்த்தைகளுக்கு முகம் சுழிக்காதவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.

பொதுவாகவே நான் சுயசரிதங்கள் படிப்பதில்லை. ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி சொன்னதுபோல், என்னைப் பொருத்தவரை, "சுயசரிதம் என்பது தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு". இதற்கு எந்தச் சுயசரிதமும் விதிவிலக்கில்லை. இருந்தாலும் நான் படித்த நான்காவது சரிதம் இது. நான் படித்த சரிதங்களில் தற்புகழ்ச்சி கொஞ்சம் குறைவாக இருந்த புத்தகமும் இதுதான்.














ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. டெல்லியில் பிறந்து, Train to Pakistan வழியாக கராச்சியில் குடியேறி, நாட்டின் தலைமகனாக உயர்ந்த ஒரு சாதாரண மனிதன். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்சியாளர். ஆசிரியர், இராணுவத்தில் பணிபுரிந்து இருந்ததினாலும், ஒன்பது முறை கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து இருத்ததினாலும்தான், இப்புத்தகத்திற்கு இப்பெயர் என நான் நினைக்கிறேன்.

சுயசரிதங்கள், வம்சாவழியின் பெருமைகளுடன் ஆரம்பிக்கும் என்பதற்கு இப்புத்தகம் விதிவிலக்கு. தனது நான்கு வயதில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயரும் குடும்பங்களில் ஒருவனாக ஆரம்பிக்கிறது புத்தகம், Train to Pakistan என்று. "அப்பயணம் மேற்கொண்ட எவனும் உயிரோடு இருந்தால், அவனுக்கு என்று சொல்ல ஒரு கதை வைத்திருப்பான்" என்கிறார் ஆசிரியர். அந்நாளில் அந்த Trainல் இருந்து உயிர் தப்பித்ததாலும், பின்னாளில் ஒரு Planeல் இருந்து உயிர் தப்பித்தாலும், அவர் சொல்வதற்காக வைத்திருக்கும் ஒரு (தொடர்)கதைதான் இப்புத்தகம்.

ஆறு பகுதிகள் கொண்ட இப்புத்தகத்தில், முதல் பகுதி இளமைப் பருவம்; Train to Pakistan முதல் இராணுவத்தில் சேருவதுவரை. தன் பாட்டியின் பர்தா வழியாக, தனது முதல் காதலிக்குத் தூது அனுப்பியது; ஜனாதிபதி ஆன பின்பு, தன்னைச் சிறு வயதில் அடித்த பாதிரியாரிடம், "ஜனாதிபதி seatல அடிகிறோம்னு அப்போதைக்கு ஒங்களுக்குத் தெரியலையா Father?" என ஒரு பழைய நண்பன் கேட்டது; இதுபோன்று சீராகப் போகிறது இப்பாகம். ஆனால், இவருடைய மாமா, சிறந்த நகைச்சுவையாளர் என்பதற்காக, அவர் செய்த ஒரு காரியத்தைச் சொன்னார். அது வேறு ஒன்றுமில்லை, பொல்லாதவன் படத்தில், ரஜினியிடம் முதல் சந்திப்பில் ப்ரியா செய்யும் காமெடி. யாரு யாருகிட்ட சுட்டாங்கன்னு யாருக்குத்தான் தெரியும்?

கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே பனிசரிவு நிகழும் மலைபிரதேசத்தில் இராணுவப் பயிற்சி, இரணுவத்தில் வகித்த பதவிகள், கார்கில் யுத்தம் - இவையெல்லாம் இரண்டாம் பாகம். ஆசிரியர் சொல்கிறார்: "இந்தியாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புதான், கார்கில் யுத்தத்திற்குக் காரணம்".

புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது, இந்த மூன்றாம் பாகம்தான். Plane to Pakistan என்று தனது இலங்கையில் இருந்து திரும்பும் பயணத்தில் ஆரம்பித்து, அது தரை இறங்க அனுமதிக்கப்படாதபோது, இந்தியாவில் (மும்பை) தரை இறங்குவதைவிட சாவதே மேல் என கடைசியில் பாகிஸ்தானில் தரையிறங்கி, நவாப் செரீபை விரட்டிவிட்டு ஆட்சிபிடித்த முக்கிய நிகழ்ச்சிகள் இப்பாகத்தில்தான் வருகின்றன. ஆசிரியரே சொல்கிறார்: "இராணுவத்தில் அதிஉயர் பதவியில் இருக்கிறேன். இனிமேல் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என நினைத்து இருந்தேன். ஆனால், இனிமேல்தான் வாழ்க்கையே..".

Never democratic, often autocratic, usually plutocratic and lately kleptocratic ஆய் இருந்த பாகிஸ்தானைத் தனது ஆட்சிக்காலத்தில் எப்படி மாற்றிவருகிறார் என்பதே நான்காம் பாகம். பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை இப்பாகத்தில் விளக்கி இருக்கிறார். இப்பாகத்தின் பாதியில் இழந்த சுவாரஸ்யம் கடைசி பாகம்வரை தொடர்கிறது. ஐந்தாம் பாகத்தில் பயங்கரவாதம் பற்றி விளக்குகிறார். செப்டம்பர் 11, ஒசாமா பின் லேடன், முல்லா ஓமர், Daniel Pearl, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வைத்த எழுதப்படாத 7 கோரிக்கைகள் என பல கதைகள். கடைசி பாகத்தில் பாகிஸ்தானைப் பற்றிப் பொதுவான கருத்துகளைக் கூறியுள்ளார். 2005 நிலநடுக்கம் இதில்தான் விளக்கப்பட்டு இருக்கிறது. புத்தகத்தின் ஆரம்பத்தில், அவர் மீது நடத்தப்பட்ட 9 கொலை முயற்சிகளையும் விளக்கியுள்ளார்.

புத்தகம் முழுவதும் தன்னைவிட, தனது நாட்டை அதிகம் புகழ்ந்திருக்கும் ஆசிரியரைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். பாகிஸ்தான் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் தவறான கருத்துகளுக்கு என்றே, தனியாக ஒரு பெரிய விளக்கமும் கொடுத்திருக்கிறார். தனது பக்கத்து எதிரியான இந்தியாவையும் அவர் கிண்டல் செய்யத் தவறவில்லை. சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமருக்குக் கைகுலுக்கியது ஓர் உதாரணம்.

புத்தகத்தின் இரண்டாம் பாதி முழுவதும் தற்புகழ்ச்சி அதிகம் இருந்தாலும், அவர் ஆட்சியில் அமரும்வரை உள்ள முதல் பாதி கண்டிப்பாக வரலாறுவிரும்பிகள் படிக்கலாம்.

கொசுறு 1: அமெரிக்க அதிபரைக் கொலை செய்ய நடக்கும் முயற்சிகளைப் பற்றி, In the line of fire என்ற ஓர் ஆங்கிலப் படம் உள்ளது.
கொசுறு 2: இப்புத்தகத்தின் முதல் பதிப்பில் சிலபல எழுத்துப் பிழைகள். (eg: Manmoham Singh). உடனடியாக அவை திருத்தப்பட்டு, மறுபதிவு வெளிவந்தது.
கொசுறு 3: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும், அதற்காக பாகிஸ்தான், CIA விடம் இருந்து கணிசமான தொகையைப் பெற்றது எனவும் ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார். இதைச் சொல்லும் பத்திதான், புத்தகத்தின் பின்புற அட்டையை அலங்கரிக்கிறது. ஆனால், இது தவறான கருத்து என்று ஆசிரியர் பின்னர் வருத்தம் தெரிவித்தார்.
Pervez Musharraf says, "History judges leaders by results". History says, "Judge by results is injustice".

-ஞானசேகர்

Friday, August 04, 2006

12. THE KITE RUNNER

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
--------------------------------------------------
புத்தகம் : The Kite Runner
ஆசிரியர் : Khaled Hosseini
மொழி : ஆங்கிலம்

--------------------------------------------------















ஆப்கானிஸ்தான் நாட்டைப் பற்றிய புத்தகம்.













அமீர், ஹாஸன் என்ற இரண்டு சிறுவர்கள்-நண்பர்கள். அமீர் வீட்டு வேலைக்காரரின் மகன் தான் ஹாஸன். தனது படிப்பறிவைப் படிப்பறிவு இல்லாதவர்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தி அதில் சுகம் காணும் அற்ப சிறுவனாகவும், தனது நண்பன் தனக்காக பரிந்து பேசப் போய் தன் கண் முன்னே பாலியல் பலாத்காரம் (ஆண் ஆணையே) செய்யப்படும்போது மறைந்து நின்று வேடிக்கை பார்க்கும் ஓர் அற்ப நண்பனாகவும் தான், கதையின் நாயகன் அமீர் வலம் வருகிறார். மேல் உதடு கிழிந்து போய், நண்பனுக்காக எதுவும் செய்யும் ஒரு நட்பு பைத்தியமாக, தனது முன்னோர்கள் தன் தலையில் வைத்து போன அவமானங்களின் பாரத்தால் அமைதியாகவே வலம் வருகிறார் ஹாஸன்.

ஒருகாலத்தில், இருவரும் பட்டம்விட்டு ஓடி விளையாடிய வீதிகளில் ரஷ்ய பீரங்கிகள் வலம்வர ஆரம்பிக்கின்றன; இருவரும் கதை சொல்லி விளையாடிய மலைகளில் குண்டு மழை மொழிகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பூர்வீக சொத்தை எல்லாம் விட்டுவிட்டு, அமீரின் குடும்பம் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவில் குடியேறுகிறது. அமீரின் சூழ்ச்சியால் அவமானப்படுத்தப்பட்ட ஹாஸனின் குடும்பம், தனது சொந்த ஊரில் குடியேறுகிறது.
அமெரிக்காவில் மனைவியுடன் வசதியாக வாழும் அமீர், பல ஆண்டுகள் கழித்து, இடம் பெயர்ந்தபோது உதவிய தனது தந்தையின் நண்பர் ஒருவரைக் காண, பாகிஸ்தான் வருகிறார். அவர் தனது கடைசி காலத்தில், அமீரின் குடும்ப ரகசியம் ஒன்றை அமீரிடம் சொல்ல, அதுவரை இருந்த அமீரின் மனநிலை அப்படியே தலைகீழாக மாறிப் போகிறது.

அப்போதைக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்துவந்த நேரம். தனது பால்ய பருவத்தில் ஹாசனுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பரிகாரம் தேட ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார் அமீர். தனது சொந்த நாட்டை ஒரு சுற்றுலாதளம் போல உணரும் அமீர், வந்த காரியத்தை முடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதும், அவர் மேல் உதடு எப்படி கிழிகிறது என்பதும், மீண்டும் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு உயிருடன் எப்படி வருகிறார் என்பதே மீதி கதை.
சிறு வயதில் தர்பூசணி கொட்டைகளைத் தூரத்தில் துப்பி விளையாடியதை பிற்காலத்தில் நினைவுபடுத்தி பார்ப்பதையும், நாட்டின் எல்லை கடக்க கணவனின் கண் முன்னே மனைவியின் உடல் சுகம் கேட்கும் ஒரு ரஷ்ய படைவீரன் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியும், சிறு வயதில் அமீர் செய்யும் ஒவ்வொரு தவறையும் உடனுக்குடன் விமர்சித்து இருப்பதையும், அமீரின் குடும்ப ரகசியமும், அமீருக்கும் ஒரு தலிபான் வீரனுக்கும் நடக்கும் கை சண்டையும், வலுவான கதையும், இன்னும் பல நிகழ்ச்சிகளும் இப்புத்தகத்திற்குப் பலங்கள்.

மொத்தத்தில், ஓர் ஆண்மை இல்லாத கதாபாத்திரம், தனது மனைவியை இன்னொருவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுப்பியதால் வந்த பிரச்சனைகளையும், இன்னொரு ஆண்மை இல்லாத காதாபாத்திரம், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கக் கிழம்புவதால் வரும் பிரச்சனைகளையும், ரஷ்யாவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, தாலிபான் ஆட்சி என்ற பின்னணியில் சொல்லி இருக்கும் அற்புதமான - ஆண்மை உள்ள - உயிரோட்டமான கதைதான் இது.

கொசுறு 1 : உலகின் மிக உயரமான புத்தர் சிலை, நாம் வாழும் இக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இடிக்கப்பட்டதால், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்காக அழும் பாப்பரசர் இரண்டாம் ஜான் பாலின் படத்துடன் தினத்தந்தி வெளியிட்ட இந்தத் தலைப்பு மனிதன் என்ற முறையில் என்னைக் கேவலப்பட வைத்தது: " ஆதி மனிதன் அவதரித்த மண்ணில் நாகரீக மனிதன் நடத்தும் யுத்தம்".

கொசுறு 2 : இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு படித்தால், முழுக்கதையும் தெளிவாக புரியும். உதவிக்கு விகடன் பிரசுரத்தின் ஜி.எஸ்.மணி அவர்கள் எழுதிய 'பிரச்னை பூமிகள்' என்ற புத்தகத்தின் ஆப்கானிஸ்தான் பற்றிய குறிப்புகள் போதுமானவையே.

கொசுறு 3 : ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைப் பற்றிய ஓர் அற்புதமான ஆங்கிலப்படம் உள்ளது. அதன் பெயர் - The beast of war.

கொசுறு 4 : "பொதுவாக, எதாவது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படை எடுத்தால், ரஷ்யா ஏதும் கண்டனம் தெரிவிப்பது இல்லை. ஆப்கானிஸ்தான் விஷயத்தில் நீ மட்டும் யோக்கியமோ என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில்தான்" - எதோ ஒரு பிரபலமான தமிழ் புத்தகத்தில் இப்படி படித்து இருக்கிறேன்.

சரி, மீண்டும் வேறு ஏதாவது பிரச்சனையுடன், மன்னிக்கவும், புத்தகத்துடன் சந்திக்கிறேன்.

-ஞானசேகர்

Tuesday, July 04, 2006

11. THE OLD MAN AND HIS GOD

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : The Old Man and His God
ஆசிரியர் : சுதா மூர்த்தி (Infosys Founder நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி)
விலை : 150 ரூபாய்
------------------------------------------------------------
புத்தகத்தின் அட்டைப்படமும், Discovering the Spirit of India என்ற sub-titleலும், இந்தியாவின் மூன்றாம் பணக்காரரின் மனைவி சமுதாயத்தைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகம் என்பதாலும் இப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டப்பட்டேன்.











ஆசிரியரின் இளம்வயதில் இருந்து, இன்றைய நாள்வரை அவர் சந்தித்த பல வித்தியாசமான மனிதர்களைப் பற்றியும், அவர்கள் மூலம் ஆசிரியருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் 25 சிறுகதைகளாக விளக்குவதே இப்புத்தகம்.

பெரும்பாலான கதைகளை நான் ஏற்கனவே அனுபவித்தும், கேள்விப்பட்டும் இருந்ததால், எனக்கு வித்தியாசமாய்த் தெரிந்தவை சில கதைகள் மட்டுமே. அவற்றில் சிலவற்றைப் பற்றி சொல்கிறேன்.

The Journey : நாராயண மூர்த்தி (ஆசிரியரின் கணவர்) கம்யூனிஸத்தின் மேல் நம்பிக்கை கண்டவராக ஒரு காலத்தில் இருந்தாரம். அவர் ஒரு கம்யூனிஸ நாட்டில் சுதந்திரமாகப் பேசியதற்காக சிறையில் வைக்கப்பட்டு, சில நாட்கள் உணவில்லாமல், இந்தியர் என்ற ஒரே காரணத்தினால் விடுதலை செய்யப்படுவார். கம்யூனிஸம் என்பது, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அற்புதமாகத் தெரியும்; வாழ்ந்து பார்த்தால் கஷ்டம் என்கிறார் ஆசிரியர்.

The Line of Separation : பாகிஸ்தானில் பிறந்த ஒரு பெண், பாரதப் பிரிவினையின் போது, சென்னையில் குடியேறுகிறாள். அவள் தனது பூர்வீக வீட்டைப் பார்ப்பதற்காக ராவல்பிண்டிக்குச் செல்லும்போது, ஆசிரியரும் உடன் செல்கிறார். சிமெண்ட் அச்சில் அவள் கால் பதித்திருந்த அந்த வீட்டின் அடித்தளத்தில், இப்போது ஒரு நட்சத்திர ஓட்டலை எதிர்கொள்ளப் போகும் ஒரு நிலையை அருமையாக் எழுதி இருந்தார் ஆசிரியர்.

India, the Holy Land : கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியையும், தனது திபெத் பயணத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியையும் வைத்து, திபெத் நாட்டவர்கள் இந்தியர்களை எப்படி தெய்வமாக மதிக்கிறார்கள் என்பதை ஒரே நிகழ்வில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

இவற்றைத் தவிர A tale of two brothers, Mother's love என்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன.

மொழியை அழகுபடுத்தப்போய், உண்மையை ஒதுக்கிவைக்கும் வழக்கமான வார இதழ் கதைகள் போல் அல்லாமல், தனக்கு பெரிய விஷயங்களாகத் தெரிந்தவைகளை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். தாய்லாந்து பிரதமரின் IT ஆலோசகரின் மனைவி, தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விருப்பாதத் தன்மையைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக, பணக்காரர்கள் காலம் போன கடைசியில் சும்மா பொதுத்தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதுண்டு. ஆனால், தான் செய்யும் தொண்டுகளையே விமர்சனம் செய்து இருக்கும் ஆசிரியரின், வார்த்தைகள் இல்லாத அந்த ஒரு நல்ல பண்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் Discovering the Spirit of India என்று சொல்லி இருந்தாலும், இந்தியாவிற்கு வெளியே சொல்லப்பட்ட கதைகள்தான் என்னை மிகவும் பாதித்தன.

அடுத்ததாக, அலெக்ஸாண்டர் முதல் இன்றைய தேதி தேசிய அரசியல்வாதிகள் வரை பலபேரை கதாப்பாத்திரங்களாக்கி எழுதப்பட்ட ஒரு சர்ச்சைக்குறிய புத்தகத்துடன் வருகிறேன்.

-ஞானசேகர்

10. SHALIMAR THE CLOWN

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : Shalimar the clown
ஆசிரியர் : சென்னையை மணந்த மும்பைக்காரர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie)
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.395/ல் இருந்து

-------------------------------------------------------------


















புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன், காஷ்மீரைப் பற்றிய கதை என்று சிலர் சற்றே யூகிக்கலாம். அதுவும் சரியே. இதைப் படித்துவிட்டு, புத்தகத்தை எவரேனும் படிக்க தூண்டப்பட்டால், சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதற்காக கதையை ஒரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நான் ரசித்த கதைக்களத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் சொல்கிறேன்.




















மொகலாய மன்னர் ஜஹாங்கீரால் காஷ்மீரில் அமைக்கப்பட்ட சாலிமார் (Shalimar) தோட்டத்தில் பிறந்த ஒரு கழைக்கூத்தாடியின் கதைதான் இப்புத்தகம். வாழ்க்கைத்துணை தனக்கு செய்த துரோகத்திற்காகப் பழிவாங்கும் சாதாரண கதைதான். முதல் நாற்பது பக்கங்கள் படித்து விட்டாலே, மீதி கதையின் போக்கை உங்களாலேயே யூகிக்க முடியும். கிட்டத்தட்ட ஜெனரல் டயரின் கதைமாதிரி என்று ஆசிரியரே சொல்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் வைத்ததில் ஆசிரியர் பிரமிக்க வைக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் 'அன்பே சிவம்' பாணியில் இரண்டு பெயர்கள். உதாரணமாக, ஒரு கதாபாத்திரத்தின் ஒரு பெயர் காஷ்மிரா, மற்றொரு பெயர் இந்தியா. ஓர் இடத்தில் அவளைப் பற்றி சொல்லும்போது, "இந்தியாவைப் போல் விரிந்த, துணையாக, அளவுக்கு அதிகமாக, குரூரமாக, அதிர்வாக, கும்பலாக, பழைமையாக, இரைச்சலாக, புராணமாக, எந்த வையிலும் மூன்றாவது உலகமாக இருக்க விரும்பாத அவள் காஷ்மீராவாகவே இருக்கிறாள்" என்கிறார் ஆசிரியர். இதற்குமேல் என்ன வேண்டும், இந்தியாவையும், காஷ்மீரையும் ஒப்பிட?

ஓரிடத்தில் வரும் உரையாடல் இது : "Freedom is not a tea party India, freedom is a war". இங்கு இந்தியா எனக் குறிப்பிடப்படுவது அப்பெண்ணின் கதாபாத்திரம். என்ன ஒரு வார்த்தை விளையாட்டு!
கதாப்பாத்திரங்களின் பின்னணியிலும் ஆசிரியர் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டார். தட்டச்சு கண்டுபிடித்த குட்டன்பர்க்கின் அச்சகத்தில் அவருடன் வேலை பார்த்த ஒருவரின் வழித்தோன்றல் ஒரு கதாபாத்திரம். அலெக்ஸாண்டர் இந்தியாவில் படையெடுத்தபோது, அவரின் படை காஷ்மீரில் செய்த சில்மிஷங்களின் வழித்தோன்றல் இன்னொரு கதாபாத்திரம். உச்சக்கட்ட பிரமிப்பு, இந்தியாவின் அமெரிக்கத் தூதராக வரும் அந்த ஒரு கதாப்பாத்திரம்தான். ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, இந்திராகாந்தி போன்றவர்களுடன் அத்தூதர் பேசுவதாகக் காட்டப்படும் நிகழ்ச்சிகளும், வியட்நாம் போரைக் காரணம் காட்டி அவரைப் பதவியில் இருந்து அமெரிக்கா நீக்காமல் இருந்தது என்று சொல்வதில் இருந்தும், இப்படி ஒரு தூதர் உண்மையிலேயே இந்தியாவில் இருந்தாரா என என்னை கூகிளில் தேடவைத்துவிட்டன.

பழங்கால கற்பனை கதாபாத்திரமான மேலைநாட்டுக் கும்பகர்ணன் ரிப் வேன் விங்கிளையும், வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்டஸையும், இன்னும் சிலரையும் ஆங்காங்கே உவமைகளாக அருமையாகக் கையாண்டு இருக்கிறார் ஆசிரியர். அலெக்ஸாண்டரின் படை கிரேக்க நாடு திரும்பி, "இந்தியர்களின் உயிரணுக்கள் கருப்பு நிறமுடையவை" என்று சொன்னார்களாம். ஒரு நிமிடம் இடைவெளி எடுத்துக்கொண்டு, அதை யோசித்துப் பாருங்கள். விளையாட்டு வினையாய்ப் போனது?

தொலைக்காட்சி அறிமுகமான ஒரு முஸ்லீம் கிராமத்தில் வரும் சண்டைகளும், தலிபான் பற்றிய சில நிகழ்ச்சிகளும், கதையின் முடிவின்மையும், உலகப் போர்கள்-வியட்நாம் போர்-இந்திய பாகிஸ்தான் போர் என பல போர்கள் கதை பயணிக்கக் காரணமாக அமைக்கப்பட்டு இருந்தாலும் காஷ்மீரும், சுவாரஸ்யமும் கொஞ்சம் குறைவே.

-ஞானசேகர்

Wednesday, May 17, 2006

9. THE COMPANY OF WOMEN

மொழி : ஆங்கிலம்
வெளியான ஆண்டு : 1999
வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhi
புத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்
--------------------------------------------------------------

















நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு இவரைப்பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்கும்)

எனவே நேரடியாகப் புத்தகத்திற்கு வரலாம். குஷ்வந்த் சிங்கின் புத்தகங்கள், பெரும்பாலும் அரசியல், மதங்கள் போன்ற விஷயங்களை விமர்சனம் செய்வதாக அமைந்திருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்புத்தகம் அரசியலை மட்டும் விட்டு விட்டு, காதல், காமம், மதங்கள், நம் கலாச்சாரம் என பலவற்றைத் தாக்கி இருக்கின்றது.

இது ஒரு நாவல். மோகன் குமார் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை மூன்று பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் ஆகி 12 வருடங்களுக்குப்பிறகு, மனைவியையும் 2 குழந்தைகளையும் விவாகரத்து மூலமாகப் பிரியும், டெல்லியில் வாழும் சுமார் 40 வயதான ஒரு தொழிலதிபர் மோகன்குமார் என்பதாகத் தொடங்குகிறது கதை. மனைவியின் பிரிவுக்குப் பிறகு கிடைக்கும் தற்காலிகத் துணைகளின் மூலமாக, எப்படி தன் தனிமைக்கும், பாலுணர்வுகளுக்கும் மருந்து தேடிக் கொள்கிறார் என்பதாகக் கதை தொடர்கிறது.

இடையில், தன் இளமைப்பருவத்தைப் பற்றி மோகன் குமாரே சொலவது போல் அமைத்திருக்கிறார் ஆசிரியர். 20 வயது வரையில் இந்தியாவில் தன் ஒரே உறவான தந்தையுடன் வாழும் மோகன், தன் திறமையால் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்து செல்கிறார். அங்கே அவருக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக நிகழும் மாற்றங்கள் என்று பல விஷயங்களை அடுக்கிச்செல்கிறது கதை.

அங்கே அவர் முதன்முதலில் உடலுறவு கொண்ட கருப்பினப்பெண், பாகிஸ்தான் நாட்டுப் பெண் என்று பலருடனான தன் அனுபவங்களை வெட்டவெளிச்சமாக விளக்கி நாடு திரும்புகிறார் மோகன். பிறகு திருமண வாழ்க்கை, முதலிரவு, தேன் நிலவு, குழந்தைகள் என்று சரளமாக ஓடுகிறது கதை.

மீன்டும் மணமுறிவுக்குப் பிறகான நிகழ்காலத்தில் வரும் பெண்கள், அவர்களுடனான உறவு, மும்பையில் உறவு கொள்ளும் ஒரு விலைமாது, கடைசியாக எய்ட்ஸ், மரணம் என்பதாக முடிகிறது கதை.

சரி! இனி கதையைக் கொஞ்சம் வெளியிலிருந்து அலசுவோம். பாலுணர்வைத் தூண்டக்கூடிய பகுதிகள் புத்தகம் முழுதுமே உண்டு! இந்தப் புத்தகத்தை எழுதும் போது குஷ்வந்த் சிங்கிற்கு 80 வயதுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இப்புத்தகத்தின் முகவுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

"As a man gets older, his sex instincts travel from his middle to his head. What he wanted to do in his younger days, but did not because of nervousness, lack of response of oppurtunity, he does in his mind"

உன்மைதான்!

சரளமான ஆங்கிலம். நான் படித்தப் புத்தகங்களில் மிக எளிமையான ஆங்கிலத்தைக் கண்டது இதில்தான்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக, எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன என்று சொல்லி இருக்கிறார். 20 வயது வரை படிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்த ஒருவன், சில மாதங்களிலேயே தன்னை விட ஒரு வயது மூத்த கருப்பினப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்பது முகத்திலடிக்கும் உண்மையாக இருந்தது.

யாஸ்மீன் என்னும் பாகிஸ்தான் பெண்ணுடனான் அவன் உறவு கொஞ்சம் வித்தியாசமானது. இவன் வயது இருபதுகளின் ஆரம்பம்! அவள் வயது முப்பதுகளின் முடிவு! கல்லூரி வகுப்பில் மதங்களைப் பற்றிய விவாதத்தில், இந்துத்துவத்தைத் திட்டிப் பேசும் இந்தப் பெண்ணுடன் மோதலில் தொடங்கும் இவன் அனுபவம், காதலில் அல்ல, காமத்தில் முடிகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு மோகன் தரும் தீர்வு மிகவும் வித்தியாசமானதுதான்!

விவாகரத்திற்குப் பிறகு, தனக்குத் தற்காலிகத் துணை வேண்டும் என விளம்பரம் கொடுக்க, வரிசையாக வந்து சேர்கிறார்கள் சரோஜினி என்கிற ஒரு பேராசிரியரும், மோலி என்கிற ஒரு பெண்ணும்!

பெண்களுடனேயே வாழ்ந்து முடிக்கும் மோகனின் இன்னொரு புறமும் வித்தியாசமாகவே இருக்கிறது! குழந்தைகளிடம் அன்பு, வியாபாரத்தில் வெற்றி, தோட்டத்தில் சிறு நீர் கழிப்பது, தகப்பனார் மீதான மாறாத அன்பு, தினம் செய்யும் சூரிய நமஸ்காரம், காயத்ரி மந்திரம், அடக்க முடியாத உடல் இச்சை என்று மோகன் என்ற தனி மனிதனின் பன்முகத்தன்மையைக் காட்டி இருக்கிறார் குஷ்வந்த் சிங்.

படிப்பது கொஞ்சமாவது பயன்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தைத் தவிர்க்கலாம். Just for Fun என்று நினைப்பவர்களும், எந்தப் புத்தகத்திலும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்ற(என் போல்) நம்பிக்கை இருப்பவர்களும் இதைப் படிக்கலாம்.

-சேரல்

Tuesday, May 16, 2006

8. INTERPRETER OF MALADIES

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர்.

புத்தகம் : Interpreter of maladies
ஆசிரியர் : Jhumpa Lahiri (வங்காள எழுத்தாளர்)
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.235

சிறப்பு : 2000ம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் மற்றும் நான் சம்பாதித்து முதலில் செய்த செலவு
------------------------------------------------------------------------------















வழக்கம்போல், ஆசிரியரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, உங்களைச் தெரிந்துகொள்ள விடாமல் செய்ய, நான் விரும்பவில்லை.

11 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பொதுவாக, எந்த மொழியிலுமே நான் சிறுகதைகள் படிப்பதில்லை. சரி, புலிட்சர் பரிசு வாங்கிய ஒரு புத்தகத்தைப் படித்தோம் என்ற பெருமையாகச் சொல்லிக் கொள்ளத்தான், இப்புத்தகத்தை வாங்கினேன். இன்னொரு காரணம், இதன் அருமையான, வித்தியாசமான தலைப்புதான் - "பிணிகளை விளக்குபவர்". எனக்குப் பிடித்த, சில கதைகளைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.



























Halder என்ற ஒரு கதையில், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருத்தி , ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், எப்படி எல்லாம் நடத்தப்படுகிறாள் என்று நன்றாக சொல்லி இருப்பார். தமிழில்கூட இதுபோல பலகதைகள், நான் வார இதழ்களில் படித்து உள்ளேன். சாகித்திய அகாடமி விருது வாங்கிய ஒரு தமிழ் எழுத்தாளர்கூட, இதுபோல ஒரு கதை எழுதி இருக்கிறார். ஆனால், எல்லா கதைகளிலும் ஒரே முடிவுதான்; சொல்லப்படும் சூல்நிலைகள்தான் வித்தியாசப்பட்டன. அனால், இந்த Halder கதையில், அப்பெண் யாரோ ஒருவனால் கற்பமாக்கப்பட்டபின்கூட, கதை முடியாமல் இருப்பதுதான், ஆசிரியரின் எழுத்துத் திறமை. புத்தகத்தின் ஆசிரியர் என்ற ஒரு பெண், இன்னொரு பெண்ணை நன்கு புரிந்து எழுதி இருந்தார்.

இன்னொரு கதையில், அமெரிக்காவிற்கு வாழ்க்கைப்பட்டு போன, அதிகம் படிப்பறிவு இல்லாத ஒரு பெண்ணின் மனநிலையை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்த கதை, புத்தகத்தின் தலைப்பிலேயே அமைந்த "Interpreter of maladies" என்ற கதைதான். ஒரியா மொழி தெரியாத ஒரு டாக்டரிடம், ஒரியா மொழி பெயர்ப்பாளராக பணியாற்றும், மொழிகள் தெரிந்த ஓர் ஏழையின் கதை இது. இப்போது புரிகிறதா, தலைப்பின் அர்த்தம்? தமிழில், எஸ்.ராமகிருஷ்ணனின் தலைப்புகள் போல, சும்மா நச்சுன்னு! டாக்டரிடம் வேலை இல்லாத நேரங்களில், சுற்றுலாப் பயணிகளுக்கு மொழிபெயர்த்து சம்பாதிக்கிறான். நாற்பது வயதிலும், மனைவியின் முழங்காலைக்கூட பார்த்திராத, ஓர் அப்பாவிக் கணவன் அவன்.

அவனுக்குள் பல நாட்களாக காமம், வடிகால் தேடி தழும்பி வழியக் காத்திருக்கும் நேரத்தில், சுற்றுலா வரும் ஒரு தம்பதிக்கு பூரி ஜெகன்நாதர் கோவிலைச் சுற்றிக் காட்டுகிறான். பேச்சுவாக்கில், அப்பெண் தனது கணவனுக்கு ஏற்கெனவே துரோகம் செய்தவள் எனவும், இவன் மனைவி இருந்தும் சந்யாசி எனவும் தெரிய வருகிறது. இருவரும், தங்களுக்குள் ஒருமுறை உடலுறவு கொள்ள தீர்மானிக்கிறார்கள். சந்தர்ப்பமே கிடைக்காமல், கனவுகளிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டு, 100 நாட்கள் தாண்டி ஓடும் பல தமிழ் திரைப்படங்களைப் போல் அல்லாமல், செக்ஸ் என்பதில் பல்வீனமாய் இருந்தாலும், அதைவிடப் பல பலவீங்கள் மனிதனிடம் உண்டு. அப்பலவீனங்களின் முன், நடைமுறையில் செக்ஸ் என்ற பலவீனம் தோற்றுத்தான் போகிறது என்ற அற்புதமான உண்மையைச் சொற்களில் சொல்லாமல், காட்சிகளில் சொல்லி, கதையை முடிக்கிறார் ஆசிரியர். பிணிகளை விளக்குபவன் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறான். இவன் பிணிகள் மட்டும் யாருக்கும் விளக்கப்படாமல் போகின்றன.

Interpreter of maladies - ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிவசப்பட வைக்காத ஓர் அமைதியான புத்தகம்.

-ஞானசேகர்

Monday, May 08, 2006

7. TEN DAYS THAT SHOOK THE WORLD

புத்தகம் : Ten days that shook the world
ஆசிரியர் : John Reed
மொழி : ஆங்கிலம்
--------------------------------------------
ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளர் (புத்தக ஆசிரியர்தான்), ரஷ்யப் புரட்சி காலத்தில், லெனின் தலைமையில் ஆட்சி அமையும் வரையுள்ள பத்து நாட்களில், ரஷ்யாவில், குறிப்பாக பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களில் என்ன நடக்கிறது என்பதைத் தனது பத்திரிக்கைக்கு அனுப்ப செய்தி சேகரிக்கும்போது ஏற்படும் அனுபவங்களே இப்புத்தகம்.

ஆசிரியர் முதல் பாதி பெட்ரோகிரேட் நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை விளக்குகிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எனக்கு ஒன்றும் ஞாபகமில்லை. இரண்டாம் பாதியில் மாஸ்கோ நோக்கி பயணிக்கிறார். இதில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட அடையாளச் சீட்டில், அவரைப்பற்றி ரஷ்ய மொழியில் எழுதியிருக்க, இவர் மொழிதெரியாத படைவீரர்களிடம் மாட்டிக்கொள்ள, இவரைச் சந்தேகத்தின் பேரில் கொல்லப்போவார்கள். அப்புறம் ரஷ்ய மொழி தெரிந்த ஓரு ஆள் காபாற்றுவார்.

ஒரு பட்டதாரி வாலிபனுக்கும், ஒரு படிக்காத விவசாயிக்கும் நடக்கும் லெனின், கன்யூனிஸம் பற்றிய வாக்குவாதங்கள் ஒரு பக்க அளவிற்கு அனல் பறந்தது. புத்தகம் முழுவதும், லெனின் ஒரு ஜெர்மானியர் என்ற வாதம் அடிக்கடி தலைதூக்கியது.

"கன்யூனிஸம் என்ற கொள்கை, ஓர் இடத்தில் துளிர்விட்டால் போதும்; அண்டை நாடெல்லாம் பரவிவிடும். அதேபோல், ஓர் இடத்தில் அழிந்தால் போதும்; அண்டை நாட்டில் எல்லாம் அழிந்து போகும்"
என்றும்,
"ஒரு நாடு பொருளாதார மறுமலர்ச்சி காணாமல், அரசியல் மறுமலர்ச்சி காண முற்பட்டால், ரஷ்யா போல துண்டாகித்தான் போகும்"
என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இரண்டாம் கருத்தைப் புரிந்து கொள்ளத்தான் இப்புத்தகம் படித்தேன்.

ரஷ்யாவைப் பற்றி எனது முதல் புத்தகம் இது. ஆள் பெயர் எது, இடப்பெயர் எது, அமைப்புப் பெயர் எது என்று நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் போனேன். முழுக்க முழுக்க பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களையே சுற்றிவரும் இக்கதை, எப்படி உலகையே உலுக்கியது என்பது என் சிற்றறிவுக்கு விளங்காமல் போனதும் உண்மைதான்.

-ஞானசேகர்

Tuesday, May 02, 2006

6. THE ALCHEMIST

புத்தகத்தை வெளியிட்டோர் : Harper Collins Publishers, New Delhi (இந்தியாவில்)
புத்தகம் வெளியான ஆண்டு : 1988 ( எந்த மொழி என்று தெரியவில்லை)
1993 (ஆங்கிலத்தில்....)
1998 (இந்தியாவில்)
புத்தகத்தின் விலை : 195 ரூபாய்கள்
--------------------------------------------------------------------------------
வெகு சில ஆங்கிலப் புத்தகங்களையே படித்த அனுபவமுள்ள நான், இந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்ய தகுதியானவன் என்று எனக்கு தோன்றவில்லை. என்றாலும் எனக்குப் பிடித்துப் போய்விட்ட இந்தப் புத்தகம், என் போன்ற ரசனை உள்ளவர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தைப் பற்றிச் சில கருத்துகளை மட்டும் எழுதுகிறேன்.

புத்தகத்தை எழுதியவர், Paulo Coelho. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் Alan R. Clarke.

Paulo Coelhoவைப் பற்றி....
-------------------------------------



















பிரேசிலில் வாழ்ந்து வருகிறார். தத்துவார்த்தமான கதைகளை எழுதி பெயர் பெற்றவர். இன்னும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே செல்லவும்....
http://www.paulocoelho.com.

புத்தகத்தைப் பற்றி.....
-----------------------------
















இது ஒரு நாவல். எந்த காலத்திய கதை என்பது சொல்லப்படாத, தேவைப்படாத ஒன்று. கொஞ்சம் யதார்த்தத்தை மீறி, தத்துவங்களோடு பின்னிப்பிணைந்து செல்லும் கற்பனைக்கதை இது.

ஸ்பெயின் நாட்டில் வாழும் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், தன் கனவில் வந்த புதையலைத் தேடி எகிப்தில் இருக்கும் பிரமிடுகளுக்குச் செல்கிறான். இதுதான் கதையின் சுருக்கம். ஆனால் 176 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதைக்குள் மனித வாழ்க்கையையே அலசி ஆராய்ந்து விடுகிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு பகுதியை முடிக்கும்போதும் எத்தனையோ கேள்விகள், எத்தனையோ பதில்கள், நமக்குள். விடை தெரிந்திராத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் அதே வேளையில் பல புதிய கேள்விகளும் கருக்கொள்கின்றன.

தன் பயணத்தின்போது அந்தச் சிறுவன் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள் அவனைப் பல விதத்திலும் பாதிக்கிறார்கள், நம்மையும்தான். இடையில் வரும் மாயாஜாலம் போன்ற பகுதிகளைக் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

இதைப் படித்த பிறகு பாதுகாப்பான, அமைதியான, ஆபத்துகளற்ற, சுவாரஸ்யங்களற்ற நம் வாழ்க்கை முறை மீது கோபமே ஏற்படுகிறது. நம் மீது திணிக்கப்பட்ட இந்த விஷயங்களிலிருந்து மீண்டு வருவது எந்த அளவுக்கு சாத்தியமோ தெரியவில்லை.

யதார்த்தத்தை மட்டுமே விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகத்தில் அதிகமாக எதுவும் கிடைத்துவிடாது என்றும் சொல்லலாம். ஆனால், கொஞ்சம் கற்பனையை ஓரமாகத் தள்ளிவிட்டு உள்ளிருக்கும் விஷயங்களை மட்டும் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்குக் கிடைக்க நிறைய இருக்கிறது.

-சேரல்

Thursday, April 20, 2006

5. வில்லோடு வா நிலவே!

புத்தகத்தை வெளியிட்டோர் - "சூர்யா பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 75 ரூபாய் (2001ல்)
வெளியான ஆண்டு - 1993
------------------------------------------------------------------


















இந்தப் புத்தகத்தை எழுதிய வைரமுத்துவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்க் கவிதைகளைக் காதலிக்கும் பெரும்பாலானோர் இவரின் கவிதைகளோடே தத்தம் பயணத்தைத் தொடங்கி இருப்பார்கள்(நானும்தான்). எனவே நேரடியாக நூலைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி வைரமுத்துவின் வார்த்தைகளாலேயே சொல்வதென்றால்,
"ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர அரச குடும்பத்தில் வருணபேதம்வந்து புகுந்த வேளையில் அதை எதிர்த்தாடிய ஓர் இளைய சேரன் கதை! இதைக் கதையாகவும் வாசிக்கலாம், கவிதையாகவும் நேசிக்கலாம்"
எனலாம்.

இந்தப் புத்தகத்தை முதன்முதலாக நான் படிக்க நேர்ந்தது, என் 13 ஆம் வயதில். தமிழ் மீதும் வைரமுத்து மீதும் அப்போதே தொடங்கிய பற்றுதல் இன்றும் தொடர்கிறது.

இது ஒரு நாவல் என்பதால், கதை படிப்பவர்களுக்கும், கவிதை நடையிலேயே அமைந்திருப்பதால் கவிதைப் பிரியர்களுக்கும் நல்ல விருந்தாய் இருக்கும் என நம்புகிறேன்.

சேரன் செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இளங்கோவடிகள் இவர்களின் தம்பி "சேரலாதன்" என்னும் சிற்றரசனே இக்கதையின் நாயகன். காக்கைப்பாடினியார் என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட "நச்செள்ளை" எனும் புலவரே இக்கதையின் நாயகி.

கதைக்களம் சிலப்பதிகாரத்துக் காலம் என்றாலும், (நல்லவேளை!) எல்லோருக்கும் புரியும்படியான தமிழையே பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர்.

இந்நாவலின் முன்னுரையில் கவிஞர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"இளைய தலைமுறைக்கு இரண்டு குணங்கள் வேண்டும்.
ஒன்று எதிர்காலம் குறித்த முன்நோக்கும் உணர்வு!மற்றொன்று, வரலாறு குறித்த பின்நோக்கும் உணர்வு!"

எனவே, வரலாற்றில் தன்னை மிகவும் நெருடிய, கவர்ந்த ஓர் உண்மையை அடிப்படையாக வைத்து, கற்பனை கலந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

வருணபேதம் தலை தூக்கத்தொடங்கிய காலத்தில், வருணங்களையும், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் பற்றிச் சிறிதும் கலங்காமல் தமிழ்க்கவிதையாய் வாழ்ந்த, வேறு இனத்தைச் சேர்ந்த நச்செள்ளையைத் தன் இணையாகக் கொண்டான் இளைய சேரன் சேரலாதன் என்பது வரலாற்று உண்மை.

இதைச்சுற்றி தன் தமிழால் கோட்டை கட்டியிருக்கிறார் கவிஞர். தமிழர்களின் மரபு, அக்காலத்திய வழக்கங்கள்,அரசகுல மாண்பு, தமிழின் பெருமை, தமிழ்நாடு பிற நாடுகளுடன் கொண்டிருந்த வாணிபத்தொடர்பு என்று பல செய்திகள் ஒரு காதல் கதையோடு இழையோடி இருக்கின்றன.

உம்பற்காடனின் நட்பு, சேரலாதனின் காதல், வீரம், காமம், நச்செள்ளையின் தமிழ், குருமார்களின் சூழ்ச்சி, என்று உணர்ச்சிகள் எங்கெங்கும் குவிந்து கிடக்கின்றன.

உன்னதப் பெண்ணின் இலக்கணம் சொல்வதிலாகட்டும், மடலேறுதல் போன்ற பழந்தமிழ்ப் பண்பாடுகளை விளக்குவதிலாகட்டும், சேரலாதன் - நச்செள்ளை காதல் காட்சிகளைக் காட்சிப்படுத்துவதிலாகட்டும், எல்லாவற்றிலும் தனித்து நிற்கிறார் வைரமுத்து.

முதல் அத்தியாயம் தொடங்கி, கடைசி வரை கொஞ்சமும் ஆர்வம் குறையாதவாறு படைத்திருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு காட்சியிலும் காதலும், தமிழும் கொஞ்சி விளையாடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, தான் சொல்ல வந்த கருத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.

தமிழைக் காதலிப்பவர்களுக்கும், காதலிக்கும் தமிழர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

-சேரல்

Wednesday, April 19, 2006

4. OBITUARIES

மீண்டும் ஞானசேகர்...!
---------------------------------------------------------
புத்தகம் : Obituaries (Death at my doorstep)
ஆசிரியர் : குஷ்வந்த் சிங்
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.295

---------------------------------------------------------
மரணம், மரணம், மரணம் பற்றியது இப்புத்தகம்.

'தனது மரணம் எப்படி இருக்கும்?' என்று ஒரு கற்பனை கதையுடன் ஆரம்பிக்கிறார் இப்புத்தகத்தை-ஆசிரியர்-அவரது பாணியில்.
புத்தகத்தின் முதல் பாதி, மரணத்தைப் பற்றி சில பிரபலங்களின் கருத்துகள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர்.

முதலாமவர் ஆச்சார்யா ரஜ்னீஷ். அவர் சொல்கிறார், "Religion only has validity because of death". இரண்டாமவர் தலாய் லாமா. குஷ்வந்த் சிங் கேட்கிறார், "Can you give me an example of a Muslim child recalling his earlier existence?". தலாய் லாமா சொல்கிறார், " If I didn't believe in reincarnation, I would be out of business".

புத்தகத்தின் இரண்டாம் பாதி, சில பிரபலங்களின் மரணத்தைப் பற்றி. அதில் ஆர்.கே.நாராயணன், சஞ்சய் காந்தி, டிக்கா கான் என்ற பல பிரபலங்களின் மரணங்கள் சொல்லப்பட்டாலும், என் நினைவில் நிற்பவர்கள் இருவர்.

முதலாமவர், பூட்டோ. தாடி மழித்தது உட்பட பூட்டோவின் மரணத்தில் நடந்த, உலக எதிர்ப்புகள், குடும்பத்தாரின் ஏக்கங்கள் என்று பல நிகழ்வுகளை அருமையாக விளக்கி இருப்பார். இவரின் மனைவி இவரைவிட 15 வயது மூத்தவர் என்பது, இப்புத்தகம் படித்துதான் எனக்கு தெரிந்தது. "வாக்களித்தது எதையுமே செய்யாத பூட்டோவுக்காக ஏன் இப்படி போரடுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு, ஒரு பாகிஸ்தான் விவசாயி சொல்வார், "அவர் சொன்னதைச் செய்யாமல் போனாலும், எங்களுக்கு உரிமை கேட்க நாக்கு தந்தவர் அவரே".

இரண்டாமவர், மவுண்ட் பேட்டன். அவரது கொலை பற்றி விளக்கிவிட்டு, கடைசியாக ஆசிரியர் சொல்கிறார், "In spite of everything, he is a great man" .
புத்தகத்தின் கடைசியாக, தனக்காக ஒரு கல்லறை வாசகத்தைப் பரிந்துரைக்கிறார், குஷ்வந்த் சிங்.

"...........................................................Thank the Lord, he is dead, the son of gun"

புத்தகத்தில் ஆங்காங்கே குஷ்வந்த் சிங்கின் தனிப்பட்ட அடையாளங்களான நேரடி அரசியல் எதிர்ப்பு (ஒருவரை Butcher of Bangladesh என்று சொல்லி இருப்பார்), மதங்களைக் கிண்டல் செய்தல் என்று எல்லாம் இருந்தாலும் சீரியஸான புத்தகம் என்பதால் கிளுகிளுப்பு ரொம்ப கம்மி.

ஒரு தென்னிந்தியன் என்ற முறையில், அவர் சொல்லி இருக்கும் சில பேர் எனக்கு பரிட்சயம் இல்லாமல் போனதும் உண்மை. புத்தகம் படித்து முடித்ததும், Final Destination படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, எனக்கான கல்லறை வாசகத்தை எழுதினேன். அதில்தான் இப்படைப்பு ஜெயித்துவிட்டது.

-ஞானசேகர் (சேரலுக்கு நன்றி)

Tuesday, April 04, 2006

3. LAJJA (SHAME)

இந்த முறை, நண்பர் ஞானசேகர் விமர்சனம் செய்கிறார். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : Lajja (Shame)
ஆசிரியர் : Taslima Nasrin
மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு
விலை : 200 ரூபாய்
------------------------------------------------------------
ஆசிரியர் குறிப்பு:
----------------------
Taslima Nasrin













இவரைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நானே அறிமுகப்படுத்துவதைவிட, நீங்களே அவரைப் பற்றி தேடித் தெரிந்து கொள்வதே அறிவுப்பூர்வமான செயல்.

புத்தகம் பற்றி:
-------------------------
யாரும் எனக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்யவில்லை. ஒரு புத்தகக் கடையில் இதைப் பார்த்தேன். முதல் பக்கத்தில்,
"Let another name for religion be humanism"
என்று இருந்தது. வாங்கிவந்து விட்டேன்.

இந்தியா என்ற இந்துமக்கள் பெரும்பான்மை நாட்டில், பாபர் மசூதி என்ற ஒரு முஸ்லீம்களின் புனித இடம், இந்துக்களால் இடிக்கப்பட்டதால், இந்தியாவிற்கு அண்டை நாடான பங்களாதேஷ் என்ற இந்துமக்கள் சிறுபான்மை நாடு எப்படி பாதிக்கப்பட்டது என்பதுதான் கதை.

6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், பங்களாதேஷில் எற்பட்ட மதக்கலவரங்களும், பொருளாதாரச் சீரழிவுகளும், சேதங்களும் அற்புதமாக விவரிக்கப்பட்டு இருக்கும். டாக்கா நகரின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாம் சென்று சேதங்களைப் பார்வையிடுவதுபோல், ஒரு பிரமை உணரமுடியும்.

பங்களாதேஷில் சுதர்ஸன், அவனின் தங்கை மாயா, தாய் கிரன்மாய், தந்தை சுதாமாய் ஆகியார் கொண்ட ஒரு இந்து குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பம் - தேசப்பற்றுள்ள ஒரு குடுமபம் 6.12.1992 முதல் 18.12.1992 வரை கொண்ட பதின்மூன்று நாட்களில் எப்படி எல்லாம் சின்னாபின்னமாகிறது எனவும், ஒவ்வொருவரின் மனநிலையும் கொள்கைகளும் படிப்படியாகத் தலைகீழாக மாறுவதையும் படிக்கும்போது நம்மாலும் உணரமுடியும்.

டிசம்பர் 16ம் தேதி, பாங்களாதேஷில் 'வெற்றி நாள்' என்று கொண்டாடுவார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 12 நாட்கள் கழித்து வரும் அந்நாளின் நிலைமை அற்புதமாக விவரிக்கப்பட்டு இருக்கும்.

புத்தகத்தில் இடம்பெற்ற சில வரிகள் இதோ:

"Those who kill by the night are the very same people who come in the evening to sympathize effusively with the disaster that have taken place"

"Religion is the sigh of the tortured and the persucuted, the heart of the heartless world, just as it is the soul of a soulless society. Religion is the opium of the masses."

சீரழிவுகளைச் சொல்லும் புத்தகத்தில், கொஞ்சம் வார்த்தைகள் தூக்கலாக இருக்கும் என்பது விதி. ஆனால் இப்புத்தகம் அதற்கு விதிவிலக்கு. கற்பழிப்பு காட்சிகள் கூட, சிறுகுழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சொல்லப்பட்டிருக்கும். எனவே எல்லோரும் படிக்க ஏற்ற புத்தகம்.

புத்தகத்தைப் படித்துவிட்டு மூடி வைத்து விட்டாலும், மாயா என்ற கதாபத்திரம் சில கணங்கள் நம் சிந்தனையைவிட்டு அகலாமல் இருப்பதும் தவிர்க்க முடியாத உண்மை. அதில்தான் ஒரு படைப்பாளி ஜெயிக்கிறார்.
-ஞானசேகர்

Thursday, March 23, 2006

2. களவு போகும் புரவிகள்

தாமதத்திற்கு வருந்துகிறேன்.

புத்தகத்தை வெளியிட்டோர் - "தமிழினி பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 60 ரூபாய்
வெளியான ஆண்டு - 2001

-----------------------------------------------
புத்தகத்தை எழுதிய சு.வேணுகோபாலைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
-----------------------------------------------
தற்போது இவர் போடி நாயக்கனூரில் ஒரு விவசாயியாக இருக்கிறார். சில பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று, இலக்கிய உலகத்தில் நுழைந்திருக்கிறார். இவர் எழுதிய வேறு சில புத்தகங்கள்...நுண்வெளி கிரகங்கள்(நாவல்),பூமிக்குள் ஓடுகிறது நதி(சிறுகதைகள்), கூந்தப்பனை(குறு நாவல்).
(புத்தகத்தோட பின் அட்டைல இருந்ததை அப்படியே காப்பி அடிச்சிட்டேன்...!!??)

இனி, புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்.
--------------------------------------------------------
சமுதாயம், மனித மனம், அன்றாட வாழ்க்கை இவற்றிலிருக்கும் இருண்ட பக்கங்களையும், வக்கிரங்களையும் தேடி இழுத்து வந்து நம்மிடம் அடையாளம் காட்டுகிறது வேணுகோபாலின் எழுத்து. எந்த இடத்திலும் எதையும் மூடி மறைக்காமல் எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் "தாமரை" உள்ளிட்ட பல சிற்றிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவற்றுள் சில கதைகளை நான் என் சிறு பிராயத்திலேயே தாமரை இதழில் படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் படிக்கும்போது பால்ய நண்பனைப் பார்த்தாற்போன்ற ஒரு மகிழ்ச்சி.
(பரிசளித்த நண்பன் சுரேஷுக்கு நன்றி!)

ஒவ்வொரு சிறுகதையும் மனதில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, நம்மை உருக்குலைத்துப் போட்டுவிடுகிறது. சுஜாதாவிடம் நான் கண்ட அதே Climax Punch, இவரிடமும் இருக்கிறது. ஆனால் இருவரின் நடை மற்றும் கதைக்கரு ஆகியவை முற்றிலுமாக வேறுபட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, "மீதமிருக்கும் கோதும் காற்று" எனும் ஒரு சிறுகதை. 6 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதை, "சுகிர்தா" எனும் "சுப்பம்மாள்" என்ற ஒரு விலைமாதுவின் ஓர் இரவை விளக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இது போன்ற கருக்களை சுஜாதாவிடம் படித்ததாக ஞாபகம் இல்லை.

"சப்பைக்கட்டு" என்றொரு சிறுகதை. ஒவ்வொரு ஆண் மிருகத்தின் முகத்திரையையும் கிழித்துப்போட்டுவிடுகிறது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் விவாகரத்தான ஒரு பேரிளம்பெண் காந்தாலட்சுமி அம்மாள். இவளுடன் வங்கியில் பணி புரியும் Narrator .( Narratorகு தமிழ்ல என்னப்பா?). இவரும் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாகவே பேசி வருகிறார்.

ஆணாதிக்கத்தைப் பற்றிய பல பேரின் கருத்துக்களோடு சரளமாக ஒடிச்செல்லும் கதை இப்படியாக முடிகிறது. Narratorகு தெரிந்த ஓர் இளைஞன் காந்தாலட்சுமி அம்மாளின் மகளை திருமணம் செய்து கொள்ள இவரின் உதவியை நாடும்போது இவரது பதில்,

"கிருஷ்ணா! பொம்பளை ராஜ்யம் பிடிச்ச குடும்பம்டா அது...! ஆணாதிக்கம் அது இதும்பாளுக..! வேற நல்ல இடமா பாக்கலாம்"

என்பதாக வருகிறது. கதையைப் படிக்கும்போது கண்டிப்பாக ஒரு குற்ற உணர்ச்சி தலை தூக்கும்.

"மண்ணைத் தின்றவன்" என்ற கதையின் நாயகன், பட்டப்படிப்பு படித்து, மற்றவரின் கீழ் வேலை செய்ய விரும்பாமல், தன் கிராமத்திலேயே விவசாயம் பார்க்கிறான். ஒரு நேரத்தில் விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு, ஏதாவது பணியில் சேரலாம் என்று நகரத்தில் இருக்கும் நண்பன் ஒருவனின் உதவியை நாடி வருகிறான். இப்படியே போய்க் கொண்டிருக்கும் கதை எப்படி முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழும் நேரத்தில் இப்படி முடிக்கிறார் ஆசிரியர்.

நண்பன் வீட்டில் இல்லாததால், இவனை அழைத்து உட்காரவைத்து பேசிக்கொண்டிருக்கும் நண்பனின் தாயார், இவனின் பின்புலங்களை விசாரிக்கிறாள். இவனது தந்தயின் பெயரைக் கேட்டுவிட்டு,

"ஐயோ! உன்னைப் போய் நீங்கன்னு சொல்லிட்டேனே" என்றாள். அசிங்கத்தை மிதித்தது போல் இருந்தது.

"சரிம்மா! நான் லைப்ரரியிலேயே பாத்துக்கிடுறேன்" என்றபடி வெளியேறினேன்.

இதுதான் கதையின் முடிவு.
இப்படிப்பட்ட முடிவை உண்மையாகவே நான் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று மனதைப் பிசைந்து விடுகிறது. எல்லோருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

மனைவியின் பிரசவத்தின் பொழுதில் ஒரு கணவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள், 35 வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆண்மகனின் உணர்ச்சிகள், கணவனின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்து கொண்ட ஒரு பெண்ணின் எண்ணங்கள் என்று யாரும் புரட்டாத பக்கங்களில் தன் பேனாவை ஓட விட்டிருக்கிறார் வேணுகோபால்.

வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் இவர், வார்த்தைப் பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம். ஒருவேளை, இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த இந்த வார்த்தைகளே தகுதியானவை என்று நினைத்திருக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் எனக்குத் தெரியாத பல பேரோடு இவரை ஒப்பிட்டிருந்தார்கள்.(நிறைய படிக்க வேண்டியிருக்கு...!!!!).

இவருடைய மற்ற படைப்புகளையும் படிக்க ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருக்கிறேன்.

-சேரல்

Tuesday, February 28, 2006

2. வரப்போவது........

அடுத்த பதிவு...
"களவு போகும் புரவிகள்"
சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர் : சு.வேணுகோபால்

Monday, February 27, 2006

1. ஸ்ரீரங்கத்துக் கதைகள்

புத்தகத்தை வெளியிட்டோர் - "உயிர்மை பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 200 ரூபாய்
வெளியான ஆண்டு - 2003
---------------------------------------------
என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் உடன் இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன். எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாக சொல்வதால் சிலருக்கு இவரைப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில், நல்ல எழுத்துக்களை படிக்க விரும்புபவர்கள் இவரைப் படிக்க வேண்டும் என்றே நான் சொல்வேன்.
----------------------------------------------
முதலில் சுஜாதாவைப் பற்றிச் சில வரிகள்....












தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், தமிழ்த்திரைப்படங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கும், இவரைப் பற்றிய அதிகமான அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
ரங்கராஜன் என்பது இவரின் பெயர். தன் மனைவி சுஜாதாவின் பெயரையே புனைப்பெயராகக் கொண்டு பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர். கல்வித்தகுதி M.Tech. கடைசியாக பெங்களூரில் BEL நிறுவனத்தில் பணி புரிந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இவரது நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த நடை எனக்கு மிகவும் பிடித்ததொரு அம்சம்

திரைத்துறையில் புகழ்பெற்ற வசனகர்த்தாவாகத் திகழ்கிறார். இவர் வசனம் எழுதிய சில திரைப்படங்கள்.....ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளம் கேட்குமே, அந்நியன், ஆயுத எழுத்து..இன்னும் சில திரைப்படங்கள்.
(சே! Public Exam ல ஆசிரியர் பற்றிச் சிறு குறிப்பு வரைஞ்ச மாதிரி ஆயிடுச்சு!)
------------------------------------------------
இனி புத்தகத்தைப் பற்றி...



















கொஞ்சமும் யதார்த்தத்தை மீறாத தன்மை சுஜாதாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் அதையே தொடர்கிறார். சிறு வயதில் அவர் வாழ்ந்த ஸ்ரீரங்கமே கதைகளுக்கான களம். அவர் பார்த்துப் பழகிய மனிதர்களே கதாப்பாத்திரங்கள். அவரும் கூட....

கதைகளின் உண்மைத்தன்மையைப் பற்றிக் கூறுகிறார்.."இந்தக் கதைகள் முழுக்க உண்மை இல்லை. உண்மையோடு கொஞ்சம் கற்பனை சேர்க்கப்பட்டு உருவானவை இவை.." என்று.

1971 லிருந்து, 2003 வரை பல்வேறு வருடங்களில், சிலவேறு பத்திரிகைகளில் வெளியான சிறு கதைகளின் தொகுப்பு இந்த "ஸ்ரீரங்கத்துக் கதைகள்". இதிலிருந்து சில சிறுகதைகள் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" என்ற பெயரில் தூர்தர்ஷனில் நாடகங்களாகவும் வெளிவந்தன.

இந்த 32 வருட கால இடைவெளியில் எழுத்தாளரின் பரிணாமம் வெகுவாகவே நிகழ்ந்திருக்கிறது. அவருடைய எழுத்துக்களிலேயே அந்த வித்தியாசத்தை உணர முடிகிறது. அவரே முன்னுரையில் "எழுத்து மீதான காலத்தின் ஆதிக்கத்தை உணர்த்தவே கதைகள் வெளியான வருடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன" என்று சொல்கிறார்.

சின்ன வயது குறும்புகள், வயதுக்கு மீறிய ஆசைகள், தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள், வாழ்ந்து கெட்ட மனிதர்கள், காலத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழுந்தவர்கள் என்று பலதரப்பட்ட உணர்வுகளும், மனிதர்களும் எல்லா இடங்களிலும் தெரிகிறார்கள்.

பல கதைகளில் வரும் "ரங்கு" என்ற கதாப்பாத்திரம்.... கடலை மிட்டாயும், பொறி உருண்டையும் விற்கும் தன் கடையைத் தவிர வேறேதும் தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல், வருவோர் போவோரைக் கிண்டல் செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் ஒரு மனிதன்........நாம் எல்லோருமே பார்த்திருக்கக்கூடிய ஒரு பாத்திரம். இது போன்ற பல பாத்திரங்கள்...

Ten Annas ஐயங்கார் எனப்படும் பத்மநாப ஐயங்கார், நாடகம் நடத்தும் வரதராஜன், கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, உபன்யாசம் செய்து பின் cinema production manager ஆன திண்ணா, full suit மாப்பிள்ளை துரைசாமி, கோபமே வராத வைத்தி மாமா, என்று பல பாத்திரங்கள்...நம் பார்த்திருக்கக் கூடிய மனிதர்கள்....!

சுஜாதாவின் அந்த Climax Punch எல்லா சிறுகதைகளிலேயுமே மிளிர்கிறது. "மறு" என்றொரு சிறுகதையில் வேலைக்காரியின் "மூன்று" ரூபாய் மாதச் சம்பளத்தை எதேச்சயாய் எடுக்க நேரிடும் ஆசிரியர், அதை செலவு செய்வதோடு தனக்கு அந்தப் பணத்தைப் பற்றி தெரியாது என்றும் சொல்கிறார். தன் பாட்டியிடம் அந்த உண்மையைச் சொல்ல விரும்பியும் தைரியம் வராமல் விட்டு விடுகிறார். இந்தக் கதையின் முடிவு இப்படி வருகிறது....

அதைச் சொல்லும் தைரியம் என் பாட்டி சாகும் நேரத்தில் தான் வந்தது. "பாட்டி நம்ம வீட்டில செவளானு ஒரு வேலைக்காரி இருந்தாளே!நினைவிருக்கா?
"ஏன் இல்லாம? அவ கூட உன் புஸ்தகத்துல பணத்தை வச்சு தொலைச்சுட்டாளே?"
"அது தொலயலை பாட்டி. நாந்தான் எடுத்து செலவு பண்ணிட்டேன்."
"எனக்குத் தெரியும்" என்றாள் பாட்டி.

என்பதாக முடிகிறது கதை.

தன் கதாப் பாத்திரங்களின் மூலம் மெல்லிய உணர்வுகளையும் வெளியிடத் தவரவில்லை சுஜாதா.
"குடுமி" என்னும் சிறுகதையின் நாயகன் ராகவன், நன்றாகப் படித்தும், அமெரிக்கா சென்று படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், "குடுமி" வைத்திருந்த ஒரே காரணத்தால் VISA மறுக்கப்பட்டு இங்கேயே ஏதோவொரு அலுவலகத்தில் வேலைக்குச் சேருகிறான்.
அவன் பேசுவதாய் வரும் வசனம் ஒன்று...

"ஒரு மனுஷனுக்கு அவன் புறத்தோற்றத்தை முடிவு செய்யக்கூட உரிமை கிடையாதா? மத்தவா கிண்டல் பண்றாங்கிறதுக்காக எல்லாத்தையும் மாத்திக்கணுமா?"

என்ன ஒரு சத்தியமான வசனம்.

"ரெண்டணா" என்றொரு சிறுகதை இப்படிப் போகிறது.சின்ன வயதில் பாட்டி எண்ணெய் வாங்கி வரச்சொன்ன ரெண்டணாவை மோடி மஸ்தானுக்கு பயந்து அவன் தட்டில் போட்டு விட்டு, பின் "பாட்டி அடிப்பாளே" என்று அவனிடம் காசைக் கேட்க, அவன் தன்னோடு வந்து விடுமாறு ஆசை காட்டுகிறான்.
பயந்து ஓடிப்போய் தன் உண்டியலை உடைத்து எண்ணெய் வாங்கி வருகிறார்.இந்தக் கதை இப்படி முடிகிறது...
"நான் மட்டும் பாட்டிக்குப் பயந்து அவன் பின்னால் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தெருத் தெருவாகச் சுற்றிக் கொண்டு...எது எப்படியோ? இந்தக் கதையைக் கண்டிப்பாக எழுதியிருக்க மாட்டேன்".

இவர் பயன்படுத்தியிருக்கும் களம் திருச்சி என்பதால், நானும் திருச்சியில் சில வருடங்களைக் கழித்தவன் என்பதால், இந்தக் கதைகளைப் படிக்கும்போது கொஞ்சம் Nostalgic Feeling.

முக்கியமாக அவர் திருவெள்ளறையைப் பற்றிக் குறிப்பிடும்போது என்னைப் பழைய நினைவுகள் மிகவுமே தொல்லை செய்தன. திருவெள்ளறை திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயில் ஒன்று இருக்கிறது என்பது பல திருச்சி வாசிகளுக்கே தெரிந்திருக்காது. இன்றைய இந்துக் கோயில்களின் கட்டிட அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இக்கோயில் கண்டிப்பாய்ப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்!நண்பர்களோடு ஒருமுறை சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம்.

சரி..புத்தகத்துக்கு வரலாம்.நடிகையை அட்டைப்படத்தில் கொண்ட ஒரு புத்தகத்தில் சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்...
"ஒரு சிறுகதை எப்போது தொடங்குகிறது?"

"முடிவதற்குச் சற்று முன்னால்..."

இந்த இலக்கணத்திலேயே பெரும்பாலும் இவரது சிறுகதைகள் அமைந்திருந்தன. சிறுகதைகள் எழுத விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

கொஞ்ச நாட்கள், ஸ்ரீரங்கத்திலும் அந்த மக்களோடும் வாழ்ந்துவிட்ட வந்ததைப் போன்ற அனுபவம்!

இதோ காதுகளில் ஒலிக்கிறது

"ஸ்ரீரங்கத்து தேவதைகள்! நான் சந்தித்த ஜீவிதங்கள்!"

-சேரல்

Friday, February 24, 2006

முன்னுரை

என்னை அறியாமல் என்னைத் தொற்றிக்கொண்ட ஒரு நல்ல பழக்கம், புத்தகம் படிப்பது. கொஞ்சம் வறட்சியாய்ப் போன வாழ்க்கையை நடதிக்கொண்டிருக்கும்போது நல்ல துணையாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகங்கள். சின்ன வயதில் உருவான இந்தப் பழக்கத்திற்கு இப்போது நன்றி சொல்கிறேன்.

இந்த வலைப்பூ, நான் படித்த புத்தகங்களையும், அவற்றுடனான என் அனுபவங்களையும், அவற்றைப் படிக்கும்போது, படித்தபின் நேர்ந்த அனுபவங்களையும் பற்றிச் சொல்லக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருக்கட்டும்.