Thursday, March 22, 2007

17. CONFESSIONS OF A SECULAR FUNDAMENTALIST

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-------------------------------------------------------------
புத்தகம்: Confessions of a secular fundamentalist
ஆசிரியர்: மணி சங்கர் அய்யர் (பஞ்சாயத்து ராஜ்ஜிய மத்திய அமைச்சர்)
மொழி : ஆங்கிலம்
விலை: 295 ரூபாய்
பதிப்பகம்: பென்குவின் (Penguin)
பக்கங்கள்: 271

-------------------------------------------------------------

















லாகூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக டெல்லி சென்றிருக்கும் ஆசிரியரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அந்தமான் செல்லுலார் சிறை பற்றிய இவரது அணுகுமுறையால் இவர்மேல் எனக்கொரு தனிமதிப்பு உண்டு. இப்புத்தகம் படிக்கவும் அவ்வணுகுமுறையே காரணம்.















தலைப்பின் நேரடி மொழிபெயர்ப்பு சொல்வதுபோல், மணி சங்கர் என்ற ஒரு மதசார்பற்ற தத்துவவாதியின் மதசார்புள்ள நம்பிக்கைகளைப் பற்றி கூறுவதே இப்புத்தகம்.
மதசார்பின்மை என்ற கொள்கையைச் சில மற்ற கொள்கைகளுடனும், வரலாற்றுடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துடனும், இன்றைய மதச்சார்புடனும் விளக்கி கடைசியாக இந்தியாவில் மதத்தால் சிறுபான்மையினரின் நிலைகளையும், மதங்களால் அல்லல்படும் மற்ற நாடுகளையும் அலசிவிட்டு, தான் ஏன் நாத்திகன் என முடிக்கிறார். கட்டுரை பாணி புத்தகம் என்பதால், நான் புதிதாக அறிந்துகொண்ட தகவல்களை மட்டும் இங்கு பகிர்்கிறேன்.

இப்புத்தகத்தின் முன்னுரையே வித்தியாசமானது. 1995ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரியுடன் இவர் கொண்ட ஒரு விவாதம்தான் முன்னுரை.

1986ல் பாபர் மசூதியின் எல்லைக்குள் இருந்்த ராம்லாலா கோவிலின் கதவுகளைத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் இருந்து, இந்தியர்களை மதவிவாதம் பிடித்துக் கொண்டது என்று ஆரம்பிக்கிறார். அதற்கெல்லாம் முன்னரே மதத்தின் பெயரால் இந்தியா பிரிக்கப்பட்டதும், இந்துக்களுக்கு Tushtikaran சொன்ன காந்தி முஸ்லீம்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை என்றும் பல இடங்களில் மதம் தலைதூக்கியதைச் சொல்கிறார்.

விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையில் இந்தியர்கள் என்பவர்கள் யார் என்று விளக்கியதைப் பல அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லி, சில கேள்விகள் வைக்கிறார். அதுபோன்ற அமைப்புகள் மதத்தின் அடிப்படையில் எல்லைகளைப் பிரிக்கப் போராடுவதாகவும், ' Statehood based on religion will not work' என்று இந்தியா வந்த ஒரு யாத்திரீகர் சொன்ன உண்மையை மேற்கோள் காட்டுகிறார்.

புத்தகத்தின் பெரும்பகுதி இந்து - முஸ்லீம் மதங்களைப் பற்றி மட்டுமே விதாதிக்கிறார். கடைசியில் ஒருபகுதி மற்ற மதங்களுக்காக. 1857 முதல் 1947 வரை இந்திய யூனியனில் இவ்விரு மதங்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினகளைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமானது, மீரட் இந்து சிப்பாய்கள் புரட்சி செய்தது ஒரு இந்துவை ஆட்சியில் அமரச்செய்ய அல்ல; பகதூர்ஷா என்ற முஸ்லீமை. நெத்தியடி கருத்து. இன்னொரு கருத்து, இந்திய யூனியன் மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிந்ததற்குச் சர்ச்சில் சொன்ன கருத்து. முகத்தில் அடித்த கருத்து அது.

இப்புத்தகத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்தது, மதங்களைப் பற்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்ற பகுதிதான். இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954 இந்து மற்றும் முஸ்லீம்களை எப்படி பாதிக்கிறது, ஏன் இவ்விரு மதங்களுக்கும் தனித்தனி திருமணச் சட்டங்கள் உள்ளன, ஏன் இந்தியா முழுவதும் பொதுவான சட்டங்களைச் ( eg. Article 370) சில நேரங்களில் கொண்டுவர முடிவதில்லை இதுபோன்ற பல கேள்விகள் எனக்குக் கிடைத்தன; பதில்களுடன். ஆசிரியர், இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதமாற்றங்கள் பற்றிய சட்டங்கள், பசுவதைத் தடுப்பு சட்டம், Shah Bano பிரச்சனை, பாதிரியார் Graham Staines ஒரிஸாவில் எரிக்கப்பட்ட பிரச்சினை, மாநில அரசின் உதவிபெறும் மதச் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பற்றிய கட்டுப்பாடுகள், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, வந்தே மாதரம் பிரச்சினை, ஜம்மு - காஷ்மீர்க்கான சிறப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 370 இவை போன்ற பல விஷயங்களைப் பற்றி தெளிவான விளக்கங்களை இப்பகுதியில் பெறமுடியும்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இரு நாடுகளும் மிகப்பெரிய மதவன்முறைகளை எதிர்கொண்டன. அந்நேரத்தில் 1949ல் இங்கிலாந்து கரன்ஸியின் மதிப்பு சரிந்தது. அதற்குக் கீழ் இருந்த இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானுடன் வைத்திருந்த பொருளாதார உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்படாதவாறு நேரு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, அவருக்கு நான் ஒரு சல்யூட். முகமது கஜினி ஆரம்பித்துவைத்த சோம்நாத் கோவில் பிரச்சனை மீண்டும் தலைதூக்கியபோது, அக்கோவிலைப் புதுப்பிக்க ஒரு பைசாகூட கொடுக்காமல் இருந்த நேருவுக்கு மீண்டும் ஒரு சல்யூட். ஆனால் 1989ல் ரூபையா சயீத் கடத்தப்பட்டபோது, இந்திய அரசின் அவசர முடிவால் காஷ்மீர் பிரச்சினை மீண்டும் உயிர்பெற்றதையும், அதன்பிறகு கோத்ரா, ஹீப்ளி போன்ற சப்பை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்ததையும், உலகமயமாக்கலை அறிமுகப்படுத்திய குஜராத் வன்முறை பூமியாகப் போனதையும் விலாவரியாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

இந்தியாவின் சிறுபான்மை மதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் முக்கிய பிரச்சனைகளையும், தீர்வுகளையும் அற்புதமாக விளக்கி உள்ளார். இப்பகுதியில் நிறைய விசயங்களைப் புரிந்து கொண்டேன். இஸ்ரேல், பாலஸ்தீன், யுகோஸ்லேவேகியா, பங்களாதேஷ் என்று மதப்பிரச்சனைகள் உள்ள நாடுகளின் என்ன நடந்தது - நடக்கிறது எனக்கூறி, நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்.

புத்தகத்தின் கடைசியில், 2000ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அரசியல் பயிற்சி துறையின் சார்பில் நடத்தப்பட்ட மதச்சார்பின்மை பற்றிய கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்விகளையும், அவை பெற்ற பதில்களையும் பகிர்ந்துள்ளார்.

ஆசிரியர் நிறைவு செய்தபடியே நானும் முடிக்கிறேன். "Secularism is not about giving primacy to my beliefs. It is about respecting the right of others to hold beliefs that I do not hold".
சில பின் குறிப்புகள்.

1) The argumentative Indian என்ற புத்தகத்தில் அமர்தியா சென் சொல்கிறார்: 'மதவேற்றுமைகளைப் போக்க தீ இலாஹி என்ற மதத்தைத் தோற்றுவித்த அக்பர், கடைசிவரை தனது சொந்த மதத்திலேயே இருந்தார்'.

2) 1993 மும்பை கலவரங்களைப் பற்றி சமீபத்தில் Black Friday என்ற படம் வந்தது. அருமையான படம்.

3) பகத்சிங் சிறையில் இருக்கும்போது எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர், 'நான் நாத்திகன் - ஏன்?'.

4) Confession of என ஆரம்பிக்கும் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் Confessions of Nat Turner என்ற புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் படிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.

- ஞானசேகர்

2 comments:

தருமி said...

ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

வாசிக்க வேண்டும்....

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தருமி,

வருகைக்கு நன்றி!