Friday, February 12, 2010

57. மோகமுள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

அவனவனுக்குச் சந்தோசமெல்லாம் அவனோட பழைய காதலியப் பாக்காத வரைக்குந்தான்.
- அழகி

All countries and cultures have struggled to define the line where freedom ends and licence begins. Standards of decency, respect for others and self-restraint vary from one country to another, and from one period to another.
- Javier Perez de Cuellar (Fifth Secretary General of the United Nations)


-----------------------------------------------------
புத்தகம் : மோகமுள் (புதினம்)
ஆசிரியர் : தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன்
வெளியீடு : ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி
விலை : 300 ரூபாய்
பக்கங்கள் : 686 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------------

வயிற்றில் இருக்கும் கருவின் பாலினம் சொல்வதும், சில உன்னத படைப்புகளின் கருவைச் சொல்வதும் சமகுற்றங்கள் என நினைப்பவன் நான். கருவழிப்பு இல்லாத எனது கருத்துகள் இப்பதிவு! 45 மாதங்களில் என் வயதுக்கும் அதிகமான புத்தகங்களை இங்கே பதிவிட்டிருந்தாலும், ஒரு தமிழ்ப்புதினம் பற்றிய எனது முதல் பதிவு.

மோகமுள். இரண்டாண்டுகளுக்கு முன் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'கதாவிலாசம்' தான், எனக்கு இப்புத்தகத்தின் விலாசம் சொன்னதென்று நினைக்கிறேன். வானுக்கும் பூமிக்கும் இடையே நிற்கும் புழுதியுடன் ஆரம்பித்து, வானுக்கும் பூமிக்கும் இடையே நகரும் மரங்களுடன் கதை முடிகிறது. கும்பகோணம், தஞ்சாவூர், பாபநாசம், காஞ்சிபுரம், சென்னை என்ற ஊர்களினுடே கதை பயணிக்கிறது. போர்கள், காந்தி, விலைவாசி, சர்க்கார் என கதையின் கால கட்டம் எல்லா இடங்களிலும் மறைமுகமாகச் சொல்லப்பட்டது அருமை. காவிரியில் தண்ணீர் ஓடிய காலம்; அத்தண்ணீரில் ஓடம் ஓடிய காலம்!

வில், நூல், ரோஜா, சங்கு, வாழைத்தண்டு, தம்பூரா என்று பெண்ணின் அங்கங்களைக் கூறுபோட்டு, மார்புக்கு நடுவில் மனதைத் தேடச்சொல்லித்தரும் மகாகாவியங்களுக்கு நடுவே, எங்குமே விரசம் விதைக்கப்படாத ஒரு புத்தகம். புத்தகத்தின் பெயரை வைத்து, இதையெல்லாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். பெண்ணைத் தெய்வநிலையில் பார்க்கும் மூன்று கதாபாத்திரங்களும், கடைசிவரை அந்நிலையைத் தொடர்ந்திருக்கும் இப்புதினமும் அருமை. கத்திபோன்ற கதையை யாரையும் குத்தாமல் அதன் மேல் நடந்துகொண்டே சொல்லியிருக்கும் கதையாடல்.

'எல்லாம் இதற்குத்தானா?' இப்புத்தகத்தின் கதையோட்டத்தில் சுருக்கென்று குத்தும் ஒரு வசனம் இது. தமிழ்ப்படங்கள் சிலவற்றில் இதே வசனத்தைச் சில சோகக்காட்சிகளில் கேட்டதாக ஞாபகம். இதே வசனத்தை, இப்புத்தகத்தில் வருவதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் உபயோகித்திருந்த ஒரு பிரபலமான சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் படித்தேன். திரும்பவும் அச்சிறுகதையைப் படிக்க வேண்டும். சொற்பமான கதைமாந்தர்களைத் தவிர வேறு எவருக்கும் ழகரம் உச்சரிக்கத் தெரியாதபோல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதே நடையையும் சமீபத்திய சில புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்.

வித்தியாசமான பின்புலமுடைய சில கதைமாந்தர்களும் உண்டு. சிவாஜியின் தம்பி ஏகோஜி தஞ்சையை ஆண்டபோது, அவருடன் குடியேறி தமிழ்மண்ணில் வாழ்ந்துவரும் மராட்டியக் குடும்பம் ஒன்றுதான் இப்புத்தகத்தின் ஆணிவேர்.அக்காலத்தில் வழக்கில் இருந்த வார்த்தை உபயோகங்களும் எனக்குப் புதிதுதான். உதாரணமாக, உலுப்பை என்ற வார்த்தை. 'யாருக்கும் தெரியாமல் திடீரென்று பெண்ணின் அழகை எடைபோட ஒரு கூட்டம்' ‍- பெண் பார்க்கப் போகிறவர்களைக் கிண்டல் செய்யும் இது போன்ற வாக்கியங்கள் ஏராளம்.

ஆசிரியர் உபயோகப்படுத்தியிருக்கும் உவமைகள் குறிப்பிட்டுச் சொல்லுபடி நிறையவே இருக்கின்றன. கிட்டத்தட்ட பத்து உவமைகளைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நீங்களும் பதம் பார்க்க இதோ மூன்று சோறுகள்! 'யாரும் கீழ்ப்படியாத சர்க்கார் உத்தரவு' - இது ஒருதலைக்காதலுக்கான உவமை. புத்தகம் படிக்கும்போது இவ்வுவமை சொல்லப்பட்ட கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்; இலைமறை காய்! 'ஜீவனாம்சம் கேட்கிற வாழாவெட்டி' - பரம்பரை சொத்தைக் குத்தகைக்குவிட்டு உழைக்காமல் திரியும் ஒரு சோம்பேறிக்கான உவமையிது. நீரின் பீச்சல்களுக்கும் நடுவில் எண்ணெய்க் கம்பத்தில் ஏறுகிறவன், கட்டுப்படுத்த முடியாத மனத்திற்கான உவமை.

கமலஹாசன் சொல்வதுபோல், கலிலியோவின் உலகைச் சதுரமாக்கிப் போகும் ஒரு பெண்ணின் ஜன்னல் வழிப்பார்வை! சேரன் சொல்வதுபோல், உணர்வுகளை ஒத்திப்போட்டு பகுத்தறிந்து வீரியம் குறைக்கும் கடிதங்கள்! சமூகம் அங்கீகரிக்காத மனைவி-அவளின் வாரிசை, அங்கீகரிக்கப்பட்ட மனைவியை-அவளின் வாரிசுகள் நிராகரிக்கும் எதார்த்தம்! சமூகம் எதிர்க்கும் ஓர் உறவை நாடும் புதுமை! எல்லாம் உண்டு.

சுடுகாட்டுக் கொட்டகையின் தூணில் போட்டிருக்கும் கோடுகளை, பாபு என்ற கதாபாத்திரத்தின் மனநிலையில் ஆச்சரியமாகப் பார்க்கச் செய்வதும், எரியும் உடல் முழுதும் சாம்பலாகும் வரை பாபுவோடு நம்மையும் உட்கார்ந்திருக்க வைப்பதும் ஆசிரியரின் திறமை. ஒரே பக்கத்தில் வரும் இந்நிகழ்ச்சியில், ஒரே ஒரு வரியில் மட்டும் பாபுவுக்கும் வெட்டியானுக்கும் இடையே வந்து போகும் சிவபெருமான், அட்டகாசமான எழுத்துநடை.

தன்மையும் படர்க்கையும் கதைசொல்லும் இப்புத்தகத்தில் நான் ரசித்த ஒருபகுதி உங்கள் பார்வைக்கும்:

"இவளும் மனித அனுபவங்களைப் பெற வேண்டியவள் தானே? சாப்பிடுகிறாள். சோற்றையும் பண்டங்களையும் பல்லால் கடித்து மென்றுதானே தின்கிறாள். இவளுக்கும் குளியல், சோப்பு, அங்கங்களை மறைத்துக் கொள்ள ஒரு புடவை, ரவிக்கை எல்லாம் வேண்டித்தானிருக்கின்றன.
இவளும் ஒரு கணத்தில், ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும்? தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள் - ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத் தானே வேண்டும்!".


தூணில் சாய்ந்த‌படியே கண்ணைமூடிக்கொண்டிருக்கும் யமுனா மறக்கப்பட முடியாதவள், வைரமுத்துவின் தமிழ்ரோஜாவிற்கு அடுத்ததாக என்னைக் கவர்ந்தவள் தி.ஜானகிராமனின் யமுனா!
ஆசிரியர் பாணியிலேயே சொல்வதென்றால், இருக்கும் இடத்திலேயே ஓடும் அனுபவத்தைத் தரும் ஓர் அருவி இந்த மோகமுள். குறைந்தபட்சம் எட்டி நின்றாவது திவாலைகளில் சுகப்பட்டுப் பாருங்கள்.

கொசுறு:‍‍‍‍‍‍

புத்த‌க‌த்திற்கு அப்பால்,

இப்புதின‌ம் ஞான‌ராஜ‌சேக‌ரன் அவ‌ர்க‌ளால் திரைப்ப‌ட‌மாக்க‌ப் ப‌ட்டிருக்கும் த‌க‌வ‌ல், என‌க்குப் பாதி புத்த‌க‌ம் க‌ட‌ந்த‌ பிற‌குதான் தெரிந்த‌து.


- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/

No comments: