Tuesday, July 10, 2007

22. A VIEW FROM THE OUTSIDE

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------
புத்தகம் : A view from the outside (Why good ecomonics works for everyone)
ஆசிரியர் : ப. சிதம்பரம் (மத்திய நிதி அமைச்சர்)
மொழி : ஆங்கிலம்
பக்கங்கள் : 372
விலை : 495 INR
பதிப்பகம் : Penguin Portfolio
--------------------------------------------------
ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. 2002ல் இருந்து 2004 தேர்தல்வரை, Indian Express மற்றும் Financial Expressல் ஆசிரியர் எழுதிய columnகளின் தொகுப்பே இப்புத்தகம். வரி, தேர்தல், பட்ஜெட், விவசாயம், அந்நிய முதலீடு என பல பகுதிகளாக தனது கட்டுரைகளைத் தொகுத்து இருக்கிறார் ஆசிரியர். கட்டுரைபாணி புத்தகம் என்பதால், என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் இங்கு பதிக்கிறேன்.




















முதல் பக்கம் படிக்க ஆரம்பித்தவுடனே எனக்கு ஒன்று புரிந்துவிட்டது. புத்தகம் முடியும்வரை மூன்று விஷயங்கள் தேவைப்படும் என புரிந்தது. 1) அடிக்கோடிட பென்சில் 2) குறிப்பெழுத ஒரு காகிதம் 3) http://www.google.com/. ஏனெனில் ஆசிரியர் சொல்லும் சில உலக மற்றும் இந்திய, அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை.

மினரல் வாட்டருக்கு 12 ரூபாய் கொடுக்கும் நாம், அரிசிக்கு 1 ரூபாய் அதிகம் கொடுக்கத் தயங்குகிறோம். இந்த மனநிலை மாறவேண்டும். பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இருக்கும் விவசாய விழிப்புணர்வு இந்தியாவுக்கும் வரவேண்டும் என அட்டகாசமாக ஆரம்பிக்கிறது புத்தகம். ஆசிரியரின் இக்கருத்தை விமர்சித்த ஒரு பத்திரிக்கையாளரை, "பஞ்சாப், ஹரியானா எனச் சுற்றியது போதும். தமிழ்நாடு, ஆந்திரா எனச் சுற்றிப் பாருங்கள். உண்மையான விவசாய நிலைமை புரியும்" என்கிறார்.

அந்நிய முதலீடுகளுக்கு இந்திய சட்டங்கள் அதிகம் கெடுபிடியாக இருப்பதாகவும் - சிவாஜியில் உபயோகப்படுத்தப்படும் பெரா (FERA) உட்பட, அப்போதைய அரசின் மெத்தனத்தால் 'தபோல்' போன்ற பல நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறுகிறார். தாஜ்மகால் ஒன்றை மட்டும் வைத்தே சுற்றுலாத்துறையில் வருடத்திற்கு 20 பில்லியன் டாலர் ஈட்டலாம் எனத் திட்டம் வைத்திருக்கிறார் நாராயணமூர்த்தி. இங்கிலாந்தில் அரண்மனைக் காவலாளி மாறுவதைப் பார்க்கவே ஆயிரம் பேர் வருகிறார்கள். நாம் தாஜ்மகாலை போன்ற பல நல்ல வளங்களை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்கிறார்.

CII-WEFன் வருடாந்திர கூட்டத்தில் பங்குபெறாமல் போலோ விளையாடப்போன நிதி அமைச்சரை எல்லாம் இந்தியா கண்டிருக்கிறது எனவும், நிதியமைச்சர் என்ற பதவி தனி இசைக்கலைஞனைப் போலல்லாமல், வர்த்தகம்-பெட்ரோலியம் போன்ற துறைகளையும் நெறிப்படுத்தும் இசை இயக்குனர் என்கிறார். அப்படி அவர் தரும் பட்ஜெட்டை, நிதியாண்டு முடியும்வரை விமர்சிப்பது சரியல்ல என்கிறார். பொருளாதார அறிவுள்ள சட்டத்துறை, சட்ட அறிவுள்ள நிதித்துறையும் இந்தியாவிற்கு மிக அவசியம் என்கிறார்.

ஆசிரியர் காட்டும் சில மேற்கோள்கள் அருமையாக இருக்கின்றன. உதாரணமாக, ஜெயலலிதா வழக்கிற்கு நீதிபதி பிரஜேஷ் குமார் சொன்னது: "எழுதப்பட்ட ஓர் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொன்றும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது கடினம். பழக்கத்திலும், நடைமுறயிலும்தான் சில விஷயங்களை விளக்கமுடியும். இப்படித்தான் ஜனநாயகம் நடைமுறைக்கு வருகிறது".

அரிசிக்கு ஒரு ரூபாய் அதிகம் கொடுங்கள், காமராஜர் காலம் அப்பாவித்தனமான காலம், பங்குச்சந்தைக்கும் தஞ்சை விவசாயின் அடுப்புக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லும் இடங்களிலும், அவற்றை விளக்கிய விதங்களிலும் ஆசிரியர் பளிச்சிடுகிறார்.

இதே வலைத்தளத்தில் மதன் அவர்களின் கிமு.கிபி. என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தோம். மெசபடோமியாவில் இருந்த 'ஊர்' (Ur) என்ற ஊர்தான், நாகரீக மனிதனின் முதல் ஊர், அதாவது முதல் நிரந்தர உறைவிடம் என்கிறார் மதன். முதல் ஊரின் பெயரும் தமிழில் ஊராக அமைந்திருப்பது ஆச்சரியமே என்று மதன் சொன்னபோது நானும் லேசாகச் சிரித்தேன். ஆனால், இப்புத்தகத்தில் ஈராக் விஷயத்தில் அமெரிக்காவின் அத்துமீறலை இரண்டு கட்டுரைகளில் ஆசிரியர் விளக்கி இருக்கிறார். ஈராக்கில் சேதப்படுத்தப்பட்ட சில இடங்களின் பட்டியலையும், அவற்றின் பெருமையையும் விளக்கி இருந்தார். அப்பட்டியலில் முதன்மையாக ஊரைப் (Ur) பார்த்தபோது, நாம் வாழும் காலத்தில் இது நடக்கிறது என்பதால் என்னால் கேவலப்படாமல் இருக்கமுடியவில்லை.


மாயாவதியும்-ராப்ரிதேவியும் பதவிக்கு வருமுன் ஜம்மு-காஷ்மீர் அரசுதான் கடைநிலையில் இருந்தது, தனது ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகள் என்று LTTE சொன்னபோது NorthEast என்பதற்கு இடையில் '-' இல்லை. இதுபோன்ற சில இடங்களில் ஆசிரியர் வார்த்தைகளில் விளையாடுகிறார்.

புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியே இப்புத்தகம் பெரும்பாலும் அலசினாலும், WEF-WSF போன்ற பொதுவான கட்டுரைகள் மிக நன்றாக இருக்கின்றன.

ஒருமுறை ஆசிரியர், பதவியில் இல்லாதபோது, எங்கள் கல்லூரியில் பேசினார். அவர் பேச்சில் இருந்த தெளிவும், நிதானமும், உண்மையும், கேட்பவர்களின் அமைதியும் என்னை ஆச்சரியப்படுத்தின. அதனால்தான் பொருளாதாரம் என்ற துறையைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவுடன் இப்புத்தகம் வாங்கினேன். அரசியல் கலந்த பொருளாதாரம் நாடுபவர்களுக்கு இது ஏற்ற புத்தகம்.

-ஞானசேகர்

No comments: