Wednesday, October 14, 2009

48. அகல் விளக்கு

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

------------------------------------------------------
புத்தகம் : அகல் விளக்கு
ஆசிரியர் : மு.வரதராசன்
விற்பனை : பாரி நிலையம்
விலை : ரூ100
பக்கங்கள் : 412
கிடைத்த இடம் : தஞ்சை இரயில் நிலையம்

--------------------------------------------------------

இது சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.

ஆரம்ப காலத்தில் புதினம் என்ற எழுத்து வடிவம் சங்க காப்பியங்களின் நீட்சி என்று கருதப்பட்டதாலோ என்னவோ, புதினம் என்றாலே கண்டிப்பாய் நீதிபோதனைகள் இருக்கும். ஓரிரு வரிகள் அல்ல பக்கம் பக்கமாய் கூட சில இடங்களில் இருக்கும். மக்களுக்கு நீதி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதே புதினங்களின் கதிமோட்சமாக கருதப்பட்டது. தமிழில் முதல் புதினம் வெளிவந்து 100 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருந்தாலும், இந்த புத்தகமும் அத்தகைய கருத்திலிருந்து அதிகம் மீண்டுவிடவில்லை.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இருவர். பால்ய நண்பர்கள். எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாய் கதைசொல்லியின் வாழ்வு அமைக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வாழக்கூடாததற்கு இன்னொருவனின் வாழ்வு. இந்த இருவர் வாயிலாக தன் கருத்துக்களையும் வெளிப்படுத்தியவாறே கதைசொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

தெளிந்த நீரோடை மாதிரி கதை. திடுக்கிடும் திருப்பங்களோ அதிரடி காட்சியமைப்புகளோ இல்லாமல் சென்றாலும் சுவையாகவே செல்கிறது.

கதைக்காக என்பதை விட, சமூக நிலைக்காக என்பதுதான் மிகப்பொருத்தம். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது? மக்களின் மனநிலை, நம்பிக்கைகள், கல்வி, காதல், நட்பு, கைம்பெண் குறித்த பார்வை எப்படி இருந்தது? திருவிழாக்கள் நடந்த விதம்? கல்லூரிகள் எப்படி இருந்தன? என்று சுவாரஸ்யமாய் பல கேள்விக்குறிகளுக்கு விடையளிக்கும் காலக்கண்ணாடி இந்த விளக்கு.

உதாரணத்திற்கு ஒன்று..

பள்ளிக்காலத்தில் நமக்கு அனாமத்தாக சில அஞ்சல் அட்டைகள் வரும். நமக்கெல்லாம் கூட தபால் வருதான்னு ஒரு குதூகலம் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.

"இது அருள்மிகு __ __ __ சாமியின் அருள்பெற்றது. நீங்கள் பரீட்சையில் பாஸாகனுமா? நினைத்தது நடக்கனுமா? இன்னும் 10 பேருக்கு இந்த அஞ்சலட்டை எழுதி அனுப்பவும். இல்லையேல் ரத்தம் கக்கி சாவாய்" என்கிற ரேன்ஞ்-சில் எழுதியிருக்கும். என் நண்பர்கள் பலரும் கர்ம சிரத்தையாக அதனை 10 பேருக்கு அனுப்புவதைப் ப ார்த்திருக்கிறேன். ரத்தம் கக்குவதைப் பற்றிய பயம் உள்ளுர வந்திருந்தாலும் நான் இதுவரை எழுதியதில்லை :)

இது இன்னைக்கு நேத்துதான் நடக்குதுன்னு நினைத்திருந்தேன். மு.வ சொல்லித்தான் தெரியுது நம்ம மக்கள் 50 வருசம் முன்னாடி கூட இப்படித்தான் இருந்திருக்காங்க. ஒரு பழக்கம், தவறானதுன்னு தெரிந்தாலும் கூட மக்கள் மனங்களை விட்டு அகல இவ்வளவு காலம் ஆகுமா? மக்களின் இறைபக்தியை சில்லறை வணிகமாக்கும் இந்த மாதிரி உத்திகள் எல்லா காலத்திலும் எப்படி வெற்றி பெறுகின்றன? இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள். உண்மையில் கதையைவிட இந்த மாதிரி கிளைகளில் நம்மை யோசிக்க வைக்கும் கேள்விகளுக்காக நிச்சயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

வாழ்க்கைப் பயணத்தில் தினம் தினம் ஆயிரம் பயணிகள் நம்மோடு பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரையுமே நாம் தெரிந்துகொள்வதில்லை. ஆயினும், ஒருசிலர் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகின்றனர். யோசித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் ஒரு பால்ய சினேகிதன் இருந்திருப்பான். கொடுக்காப்பள்ளி அடிப்பதிலிருந்து கணக்கு வாத்தியாரிடம் அடிவாங்குவது வரையிலும் உங்களுடனேயே இருந்திருப்பான். அவனுடன் ஊர் சுற்றி அலைந்திருப்பீர்கள். பொல்லாத கதைகள் பேசி திரிந்திருப்பீர்கள். பள்ளிக்குப் பின்பு அவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துப் பார்க்க உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்ததுண்டா? கண்டிப்பாய் அவனைப்பற்றிய நினைவுகளை கிளறிச்செல்லும் இப்புத்தகம்.

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

No comments: