Wednesday, July 29, 2009

41. சாயாவனம்

---------------------------------------------------------------
புத்தகம் : சாயாவனம்
ஆசிரியர் : சா.கந்தசாமி
பக்கங்கள் : 199
வெளியிட்டோர் : காலச்சுவடு
நூல் வெளியான ஆண்டு : 1969
காலச்சுவட்டில் வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ 150

---------------------------------------------------------------

சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றுகிற போது அவை தேடக்கிடைப்பதில்லை. அதே புத்தகங்களை வேறு மனநிலையில் பார்க்கும் போது வாங்கும் விருப்பம் இல்லாமலும் போவதுண்டு. இப்படியே பல காலமாக என்னிடம் இருந்து விலகியிருந்த, அல்லது நான் விலக்கி வைத்த ஒரு நூல் சாயாவனம். சில தினங்களுக்கு முன்பு என் ஆர்வமும், புத்தகத்தின் இருப்பும் ஒன்று சேர்ந்து கொள்ள, வாங்கி வந்துவிட்டேன்.

ஞாயிறு அதிகாலை ஐந்தரை மணிக்கு மெரீனா கடற்கரையில் இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அந்த அதிகாலையைப் போலவே இந்தப் புதினமும் என்னோடு மிகவும் அணுக்கமானது; நட்பு பாராட்டக் கூடியது; பறந்து பட்ட வெளியை எனதாக்கக்கூடியது; எல்லையற்ற சுகானுபவங்களை வழங்க வல்லது.

மாற்றத்தின் ஊற்றுக்கண் பெருக்கெடுத்தோடி அடித்து வந்து சேர்க்கும் நிகழ்வுகளைப் படியவைக்கிறது சாயாவனம். தன் ஓட்டத்தின் பல புள்ளிகளில் நிகழ்ந்துவிட்ட பெரும் மாற்றங்கள் வாழ்க்கை முறையின் திசையை வேறாக்கிச் சென்றதைக் கண்ணுற்றுக்கொண்டே
ஓடிக்கொண்டிருக்கிறது காலம். அரசியல், பொருளாதாரம், மதம், தார்மீகக்கோட்பாடுகள், அறிவியல் இவற்றில் ஏற்படுகிற மாற்றங்கள் தனி மனித வாழ்விலும், ஒரு சமூகத்தின் பண்பாட்டிலும் தோற்றுவிக்கிற மாற்றங்கள் ஆச்சரியத்துக்குரியவை.

மேலை நாடுகளில் தோன்றிய தொழிற்புரட்சியிலிருந்து, இப்போது உலகெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை வரை இவ்வாறான ஒரு தாக்கத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன். இதுபோன்றதொரு நிகழ்வை உடனிருந்து விளக்குவதாயிருக்கிறது சா.கந்தசாமியின் சாயாவனம்.

புலம் பெயர்ந்து, மீண்டும் தன் மண்ணையும் மனிதர்களையும் வந்தடையும் ஒருவனின் ஆசையால் அந்த மண்ணும், மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும், இலை தழை செடி கொடி மரங்களும் அடைகிற மாற்றங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது இந்தப் புதினம். சாயாவனம், காவிரி மண்ணில் வாழும் ஒரு கிராமம். அந்த ஊருக்கு, வெகு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வரும் அவன், அங்கிருக்கும் காடு போன்றதொரு தோட்டத்தை வாங்கி, அதை அழித்து, அங்கொரு சர்க்கரை ஆலை கட்ட முனைகிறான். இதையும், இதைச் சார்ந்தும் நடக்கும் இயக்கங்களைப் பதிவு செய்கிறது இக்கதை.

முதலில் புதினத்தில் நான் ரசித்த முக்கியாம்சம், வாசகனுக்குத் தரப்படுகிற சுதந்திரம். எந்த விஷயமும் இது இப்படித்தான் என்ற போக்கில்லாமல், நம் கற்பனைக்கு எல்லையற்ற வெளியை வழங்கிபோகிறது புதினம்.

சிதம்பரம், சிவனாண்டித்தேவர், குஞ்சம்மாள் இன்னும் சில முக்கியப் பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்கள் பெயரளவில் அல்லாமல், சித்திரமாக மனதில் பதிகிறார்கள். இது ஒரு வகையில் பலமும், பலவீனமும் கூட.

பல புதிய தளங்களை அறிமுகம் செய்கிற இந்நூலில் பல செய்திகள் படிமமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் எதுவுமற்றதாகத் தோன்றும் பகுதிகள், ஆழ்ந்து படிக்க, புதுப்புது வடிவம் கொண்டு வளைய வருகின்றன.

ஏறக்குறைய 150 பக்கங்களுக்கு, தோட்டம் அழிக்கப்படும் நிகழ்வுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இது எந்தவிதமான சலிப்பையும் நம்முள் ஏற்படுத்த இயலாததாகவே இருக்கிறது.

ஆழ்மன உணர்ச்சிகளை அதிகம் வார்த்தைப்படுத்தாமல், பாத்திரங்கள் பேசும் வசனங்களிலேயே அவர்களின் உணர்வுகளை மிகச்சாதுர்யமாகக் கூறி இருக்கிறார்.

ஒரு தோட்டம் அணுவணுவாக அழிவதை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது புதினம். இதை மூன்றாவது மனிதன் ஒருவனின் பார்வையில் அல்லாமல், ஆலை வைக்க முனையும் சிதம்பரத்தின் பார்வையிலும் செலுத்தி இருப்பது அற்புதம்.

கதையின் காலகட்டம் கூட சம கால நிகழ்வுகளின் மூலமாக, மறைமுகமாகவே உணர்த்தப்படுகிறது. நுண்மையான மனித உணர்வுகள், உறவுகள், பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம் வியப்பிலாழ்த்துகிறது. சரியென்றும் தவறென்றும் தீர்மானிக்கப்படுபவை செயல்பாடுகளேயன்றி மனிதர்களல்லர்; தீர்மானிப்பவையும் சூழ்நிலைகளே என்றும் விளங்கவைக்கின்றது சாயாவனத்து மக்களின் வாழ்க்கை.

கூலி அதிகம் கொடுத்தாலும் வழக்கமாக வேலை செய்யும் இடத்தை விட்டு நீங்கி வராத மனிதர்கள், காசினை அதிகம் பயன்படுத்தாமல் நெல்லையே பிரதானமான வணிக ஆதாரமாகக் கொண்டிருக்கும் தன்மை, கொடுத்த வாக்குக்கு மதிப்பு தரும் மேன்மை என்று வாழும் சாயாவனத்துக்காரர்கள் நம்மோடு நிச்சயம் அன்பு கொண்டுவிடுவார்கள். ஆனால், இதே நிலைகள் புதினத்தின் முடிவில் ஒரு தனி மனிதனின் மூளைக்கு முன் இயங்கவியலாமல் மாறிவிடுகிற தன்மை நம்மையும் சங்கடப்படுத்துகிறது

ஒவ்வொரு மரத்துப்புளி ஒவ்வொரு வீட்டுக்கு என்றிருந்த கிராமத்தில், மற்ற ஊர்களிலிருந்து புளி வாங்கி வந்து கலந்துகட்டி விற்கிற நிலைமை வந்து சேர்வது சாயாவனம் என்றில்லாமல், மூலத்தை இழந்துவிட்ட நம் எல்லா ஊர்களையும் நினைவுறுத்துவதாக இருக்கிறது.

வெயில் ஊர்ந்தோடும் சாயாவனத்தின் தோட்டத்தை எரித்துத் தணியும் அனல் நம்மோடு கதையாடுவது நிச்சயம். அழிவின் விளிம்பில் இருக்கும் மூங்கில் புதர்களும், புன்னை மரங்களும், புளிய மரங்களும், காரைச்செடிகளும், எரிந்து சாம்பலாகும் ஜீவராசிகளும் நமக்கு உணர்த்தும் உண்மைகளும் ஏராளம்.

ஒரு சமூகத்தின் வாழ்வோட்டத்தையும், அதில் பின்னிப்பிணைந்திருக்கும் சுக துக்கங்களையும், அபரிமிதமான அன்பையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர்.

மறந்துபோன சடங்குகளை, பழக்கவழக்கங்களை, பூர்வீகமான பண்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்கு இட்டுச்செல்லும் முயற்சியும் இங்கே காணக்கிடைக்கிறது. தாவரங்கள், மனிதர்கள், விவசாயம், மற்ற அடிப்படை பணிகள் குறித்தான பல நுண் தகவல்கள் நூலெங்கும் விரிந்து கிடக்கின்றன.

எழுத்து எதைச் சாதிக்க வேண்டுமோ, எழுத்தாளன் எதை நிறைவேற்ற வேண்டுமோ அதை மிகச் செம்மையாக செய்து முடித்திருக்கிறது இப்புதினம்.

ஆசிரியரைப்பற்றி:




பிறந்த ஆண்டு 1940. பிறந்த ஊர், மயிலாடுதுறை(முன்பு மாயூரம் அல்லது மாயவரம்). இருபத்தைந்து வயதில் இந்தப் புதினத்தை எழுதி இருக்கிறார். இருபத்தொன்பது வயதில் வெளியாகி இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் இது. இவரது 'விசாரணை கமிஷன்' என்ற இன்னொரு நூலும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 11 புதினங்களையும் இவர் எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கிய வட்டத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்.

பின் குறிப்புகள்:

1. நான் படிக்கும் சா.கந்தசாமியின் முதல் நூல் இது. எங்கள் ஊர்ப்புறத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணமே இவர் மீது அதிகப்படியான ஒட்டுதலை ஏற்படுத்துகிறது. இவர் எழுத்து முழுவதும் எங்கள் ஊர்ப்புற வட்டார வழக்கையும், பழக்க வழக்கங்களையும் காணும்போது மகிழ்வெய்துகிறது மனம்.

2. 25 வயதில் சமூக அக்கறையுடனான ஒரு புதினத்தைப் படைத்து, அதில் விருது வாங்கும் தன்மையும் கொண்டிருந்திருக்கிறவரைப் பார்க்கும்போது, அதே வயதில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எண்ணத் தோன்றுகிறது.

3. ஆண்டுகள் பல கடந்து இன்னும் தமிழ் இலக்கிய வட்டத்தில் பெரும்பெயர் பெற்றிருக்கும் இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் 'கிளாசிக் வரிசை' என்ற பெயரில் வெளியாகும் படைப்புகளுள் ஒன்றாக வெளியிட்டிருக்கிறது. இந்த வெளியீட்டுக்காகப் பாவண்ணன் எழுதி இருக்கும் முகவுரை மிகவும் அருமையானது. நூல் குறித்தான தன் பார்வையை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார்.

4. இப்புதினம் ஆங்கிலம், பிரென்ச் முதலான பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

புதினத்திலிருந்து ஒரு பகுதி...




சிதம்பரத்தின் கட்டிலில், குருட்டாம்போக்காய் சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு காக்கை விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் துள்ளிக்குதித்தான். காக்கையைப் பார்த்ததும் புன்சிரிப்பு வெளிப்பட்டது. காக்கையின் காலைப் பிடித்துத் தீயை நோக்கி வீசியெறிந்தான். ஒரு ஓசையின்றி, சடசடப்பின்றிக் காகம் தீயில் போய் விழுந்தது. இறகு பொசுங்கிக் கருகிச் சாம்பலாகும் காட்சியைக் காணவேண்டும் என்று மனதுக்குள் ஓர் ஆவல். அலக்கை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான், அனல் வீச்சையும் பொருட்படுத்தாமல்.

காக்கை தீயில் பொசுங்கிக்கொண்டிருந்தது. அலக்கால் குத்தி, எரியும் காக்கையை மேலே தூக்கினான். ஒரு நெடி, வாடை குப்பென்று அடித்தது. முகத்தைச் சுளித்துக்கொண்டு காக்கையை அலக்கோடு தீயில் செருகினான். அலக்கு வேகமாக உள்ளே சென்றது.

அலக்கை வெளியே உருவிப்பார்த்தபோது, நிதானமாக எரிந்து கொண்டிருந்தது. இது இரண்டாவது அலக்கு-கருக்கரிவாள் கட்டியது. தீ பற்றிய வேகத்தில் அரிவாள் வரையில் உள்ள பகுதி சாம்பலாகிவிட்டது. அரிவாள் இன்றி எரியும் அலக்கைத் தீர்க்கமாக நோக்கினான். அவன் மனத்தில் நெறிமுறையைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் ஓர் உணர்வு தோன்றியது. அவன் புளகாங்கிதமுற்றான். உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. நிற்க முடியவில்லை. வெறியுற்ற நிலையில், எரியும் அலக்கைத் தீயில் வீசியெறிந்து விட்டுக் கட்டிலில் போய் அமர்ந்தான்.

தீ சடசடவென்ற இரைச்சலோடு மேலுக்குத் தாவிப் புன்னை மரத்தைச் சாடியது. இலைகளிலிருந்து கிளைகளுக்கும், கிளைகளிலிருந்து அடி மரத்திற்கும் ஒரு தாவல். உயர்ந்து அலையலையாய்ப் படர்ந்து அடங்கும் தீயின் போக்கையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தரத்தில் தீ அற்புதம் நிகழ்த்துகிறது. ஓரோர் சமயம் தீயின் உக்கிரம் அவனை நிலைகுலைய வைத்தது. இப்படியே போனால் என்ன ஆகும்?

-சேரல்

No comments: