Thursday, April 20, 2006

5. வில்லோடு வா நிலவே!

புத்தகத்தை வெளியிட்டோர் - "சூர்யா பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 75 ரூபாய் (2001ல்)
வெளியான ஆண்டு - 1993
------------------------------------------------------------------


















இந்தப் புத்தகத்தை எழுதிய வைரமுத்துவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்க் கவிதைகளைக் காதலிக்கும் பெரும்பாலானோர் இவரின் கவிதைகளோடே தத்தம் பயணத்தைத் தொடங்கி இருப்பார்கள்(நானும்தான்). எனவே நேரடியாக நூலைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி வைரமுத்துவின் வார்த்தைகளாலேயே சொல்வதென்றால்,
"ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர அரச குடும்பத்தில் வருணபேதம்வந்து புகுந்த வேளையில் அதை எதிர்த்தாடிய ஓர் இளைய சேரன் கதை! இதைக் கதையாகவும் வாசிக்கலாம், கவிதையாகவும் நேசிக்கலாம்"
எனலாம்.

இந்தப் புத்தகத்தை முதன்முதலாக நான் படிக்க நேர்ந்தது, என் 13 ஆம் வயதில். தமிழ் மீதும் வைரமுத்து மீதும் அப்போதே தொடங்கிய பற்றுதல் இன்றும் தொடர்கிறது.

இது ஒரு நாவல் என்பதால், கதை படிப்பவர்களுக்கும், கவிதை நடையிலேயே அமைந்திருப்பதால் கவிதைப் பிரியர்களுக்கும் நல்ல விருந்தாய் இருக்கும் என நம்புகிறேன்.

சேரன் செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இளங்கோவடிகள் இவர்களின் தம்பி "சேரலாதன்" என்னும் சிற்றரசனே இக்கதையின் நாயகன். காக்கைப்பாடினியார் என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட "நச்செள்ளை" எனும் புலவரே இக்கதையின் நாயகி.

கதைக்களம் சிலப்பதிகாரத்துக் காலம் என்றாலும், (நல்லவேளை!) எல்லோருக்கும் புரியும்படியான தமிழையே பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர்.

இந்நாவலின் முன்னுரையில் கவிஞர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"இளைய தலைமுறைக்கு இரண்டு குணங்கள் வேண்டும்.
ஒன்று எதிர்காலம் குறித்த முன்நோக்கும் உணர்வு!மற்றொன்று, வரலாறு குறித்த பின்நோக்கும் உணர்வு!"

எனவே, வரலாற்றில் தன்னை மிகவும் நெருடிய, கவர்ந்த ஓர் உண்மையை அடிப்படையாக வைத்து, கற்பனை கலந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

வருணபேதம் தலை தூக்கத்தொடங்கிய காலத்தில், வருணங்களையும், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் பற்றிச் சிறிதும் கலங்காமல் தமிழ்க்கவிதையாய் வாழ்ந்த, வேறு இனத்தைச் சேர்ந்த நச்செள்ளையைத் தன் இணையாகக் கொண்டான் இளைய சேரன் சேரலாதன் என்பது வரலாற்று உண்மை.

இதைச்சுற்றி தன் தமிழால் கோட்டை கட்டியிருக்கிறார் கவிஞர். தமிழர்களின் மரபு, அக்காலத்திய வழக்கங்கள்,அரசகுல மாண்பு, தமிழின் பெருமை, தமிழ்நாடு பிற நாடுகளுடன் கொண்டிருந்த வாணிபத்தொடர்பு என்று பல செய்திகள் ஒரு காதல் கதையோடு இழையோடி இருக்கின்றன.

உம்பற்காடனின் நட்பு, சேரலாதனின் காதல், வீரம், காமம், நச்செள்ளையின் தமிழ், குருமார்களின் சூழ்ச்சி, என்று உணர்ச்சிகள் எங்கெங்கும் குவிந்து கிடக்கின்றன.

உன்னதப் பெண்ணின் இலக்கணம் சொல்வதிலாகட்டும், மடலேறுதல் போன்ற பழந்தமிழ்ப் பண்பாடுகளை விளக்குவதிலாகட்டும், சேரலாதன் - நச்செள்ளை காதல் காட்சிகளைக் காட்சிப்படுத்துவதிலாகட்டும், எல்லாவற்றிலும் தனித்து நிற்கிறார் வைரமுத்து.

முதல் அத்தியாயம் தொடங்கி, கடைசி வரை கொஞ்சமும் ஆர்வம் குறையாதவாறு படைத்திருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு காட்சியிலும் காதலும், தமிழும் கொஞ்சி விளையாடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, தான் சொல்ல வந்த கருத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.

தமிழைக் காதலிப்பவர்களுக்கும், காதலிக்கும் தமிழர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

-சேரல்

Wednesday, April 19, 2006

4. OBITUARIES

மீண்டும் ஞானசேகர்...!
---------------------------------------------------------
புத்தகம் : Obituaries (Death at my doorstep)
ஆசிரியர் : குஷ்வந்த் சிங்
மொழி : ஆங்கிலம்
விலை : ரூ.295

---------------------------------------------------------
மரணம், மரணம், மரணம் பற்றியது இப்புத்தகம்.

'தனது மரணம் எப்படி இருக்கும்?' என்று ஒரு கற்பனை கதையுடன் ஆரம்பிக்கிறார் இப்புத்தகத்தை-ஆசிரியர்-அவரது பாணியில்.
புத்தகத்தின் முதல் பாதி, மரணத்தைப் பற்றி சில பிரபலங்களின் கருத்துகள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர்.

முதலாமவர் ஆச்சார்யா ரஜ்னீஷ். அவர் சொல்கிறார், "Religion only has validity because of death". இரண்டாமவர் தலாய் லாமா. குஷ்வந்த் சிங் கேட்கிறார், "Can you give me an example of a Muslim child recalling his earlier existence?". தலாய் லாமா சொல்கிறார், " If I didn't believe in reincarnation, I would be out of business".

புத்தகத்தின் இரண்டாம் பாதி, சில பிரபலங்களின் மரணத்தைப் பற்றி. அதில் ஆர்.கே.நாராயணன், சஞ்சய் காந்தி, டிக்கா கான் என்ற பல பிரபலங்களின் மரணங்கள் சொல்லப்பட்டாலும், என் நினைவில் நிற்பவர்கள் இருவர்.

முதலாமவர், பூட்டோ. தாடி மழித்தது உட்பட பூட்டோவின் மரணத்தில் நடந்த, உலக எதிர்ப்புகள், குடும்பத்தாரின் ஏக்கங்கள் என்று பல நிகழ்வுகளை அருமையாக விளக்கி இருப்பார். இவரின் மனைவி இவரைவிட 15 வயது மூத்தவர் என்பது, இப்புத்தகம் படித்துதான் எனக்கு தெரிந்தது. "வாக்களித்தது எதையுமே செய்யாத பூட்டோவுக்காக ஏன் இப்படி போரடுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு, ஒரு பாகிஸ்தான் விவசாயி சொல்வார், "அவர் சொன்னதைச் செய்யாமல் போனாலும், எங்களுக்கு உரிமை கேட்க நாக்கு தந்தவர் அவரே".

இரண்டாமவர், மவுண்ட் பேட்டன். அவரது கொலை பற்றி விளக்கிவிட்டு, கடைசியாக ஆசிரியர் சொல்கிறார், "In spite of everything, he is a great man" .
புத்தகத்தின் கடைசியாக, தனக்காக ஒரு கல்லறை வாசகத்தைப் பரிந்துரைக்கிறார், குஷ்வந்த் சிங்.

"...........................................................Thank the Lord, he is dead, the son of gun"

புத்தகத்தில் ஆங்காங்கே குஷ்வந்த் சிங்கின் தனிப்பட்ட அடையாளங்களான நேரடி அரசியல் எதிர்ப்பு (ஒருவரை Butcher of Bangladesh என்று சொல்லி இருப்பார்), மதங்களைக் கிண்டல் செய்தல் என்று எல்லாம் இருந்தாலும் சீரியஸான புத்தகம் என்பதால் கிளுகிளுப்பு ரொம்ப கம்மி.

ஒரு தென்னிந்தியன் என்ற முறையில், அவர் சொல்லி இருக்கும் சில பேர் எனக்கு பரிட்சயம் இல்லாமல் போனதும் உண்மை. புத்தகம் படித்து முடித்ததும், Final Destination படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, எனக்கான கல்லறை வாசகத்தை எழுதினேன். அதில்தான் இப்படைப்பு ஜெயித்துவிட்டது.

-ஞானசேகர் (சேரலுக்கு நன்றி)

Tuesday, April 04, 2006

3. LAJJA (SHAME)

இந்த முறை, நண்பர் ஞானசேகர் விமர்சனம் செய்கிறார். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : Lajja (Shame)
ஆசிரியர் : Taslima Nasrin
மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு
விலை : 200 ரூபாய்
------------------------------------------------------------
ஆசிரியர் குறிப்பு:
----------------------
Taslima Nasrin













இவரைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நானே அறிமுகப்படுத்துவதைவிட, நீங்களே அவரைப் பற்றி தேடித் தெரிந்து கொள்வதே அறிவுப்பூர்வமான செயல்.

புத்தகம் பற்றி:
-------------------------
யாரும் எனக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்யவில்லை. ஒரு புத்தகக் கடையில் இதைப் பார்த்தேன். முதல் பக்கத்தில்,
"Let another name for religion be humanism"
என்று இருந்தது. வாங்கிவந்து விட்டேன்.

இந்தியா என்ற இந்துமக்கள் பெரும்பான்மை நாட்டில், பாபர் மசூதி என்ற ஒரு முஸ்லீம்களின் புனித இடம், இந்துக்களால் இடிக்கப்பட்டதால், இந்தியாவிற்கு அண்டை நாடான பங்களாதேஷ் என்ற இந்துமக்கள் சிறுபான்மை நாடு எப்படி பாதிக்கப்பட்டது என்பதுதான் கதை.

6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், பங்களாதேஷில் எற்பட்ட மதக்கலவரங்களும், பொருளாதாரச் சீரழிவுகளும், சேதங்களும் அற்புதமாக விவரிக்கப்பட்டு இருக்கும். டாக்கா நகரின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாம் சென்று சேதங்களைப் பார்வையிடுவதுபோல், ஒரு பிரமை உணரமுடியும்.

பங்களாதேஷில் சுதர்ஸன், அவனின் தங்கை மாயா, தாய் கிரன்மாய், தந்தை சுதாமாய் ஆகியார் கொண்ட ஒரு இந்து குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பம் - தேசப்பற்றுள்ள ஒரு குடுமபம் 6.12.1992 முதல் 18.12.1992 வரை கொண்ட பதின்மூன்று நாட்களில் எப்படி எல்லாம் சின்னாபின்னமாகிறது எனவும், ஒவ்வொருவரின் மனநிலையும் கொள்கைகளும் படிப்படியாகத் தலைகீழாக மாறுவதையும் படிக்கும்போது நம்மாலும் உணரமுடியும்.

டிசம்பர் 16ம் தேதி, பாங்களாதேஷில் 'வெற்றி நாள்' என்று கொண்டாடுவார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 12 நாட்கள் கழித்து வரும் அந்நாளின் நிலைமை அற்புதமாக விவரிக்கப்பட்டு இருக்கும்.

புத்தகத்தில் இடம்பெற்ற சில வரிகள் இதோ:

"Those who kill by the night are the very same people who come in the evening to sympathize effusively with the disaster that have taken place"

"Religion is the sigh of the tortured and the persucuted, the heart of the heartless world, just as it is the soul of a soulless society. Religion is the opium of the masses."

சீரழிவுகளைச் சொல்லும் புத்தகத்தில், கொஞ்சம் வார்த்தைகள் தூக்கலாக இருக்கும் என்பது விதி. ஆனால் இப்புத்தகம் அதற்கு விதிவிலக்கு. கற்பழிப்பு காட்சிகள் கூட, சிறுகுழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சொல்லப்பட்டிருக்கும். எனவே எல்லோரும் படிக்க ஏற்ற புத்தகம்.

புத்தகத்தைப் படித்துவிட்டு மூடி வைத்து விட்டாலும், மாயா என்ற கதாபத்திரம் சில கணங்கள் நம் சிந்தனையைவிட்டு அகலாமல் இருப்பதும் தவிர்க்க முடியாத உண்மை. அதில்தான் ஒரு படைப்பாளி ஜெயிக்கிறார்.
-ஞானசேகர்