Monday, March 26, 2007

19. காமக்கடும்புனல்

உலகின் ஒவ்வொரு உயிரின் அடிப்படை நோக்கமும் இனப்பெருக்கம்தான்
- சிக்மண்ட் ஃப்ராய்ட்
------------------------------------------------------
புத்தகம் : காமக்கடும்புனல்
ஆசிரியர் : மகுடேசுவரன்
வெளியிட்டோர் : யுனைடெட் ரைட்டர்ஸ்
வெளியான ஆண்டு : 2004
விலை : 100ரூ
------------------------------------------------------
காமக்கடும்புனல், பாலியல் பற்றிய 400 கவிதைகள் கொண்ட ஒரு கவிதைத்தொகுப்பு.

மகுடேசுவரன் திருப்பூரில் பின்னலாடைத்தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணிபுரியும் ஓர் இளைஞர். 'பூக்கள் சொல்லும் தகவல்கள்', 'அண்மை', 'யாரோ ஒருத்தியின் நடனம்' ஆகியவற்றிற்குப் பிறகு இவர் வெளியிட்டிருக்கும் மூன்றாவது கவிதைத்தொகுப்பு இது.

பாலியலைப் பல்வேறு கோணங்களில் இருந்து சிந்தித்து எழுதி இருக்கிறார். எந்தவொரு கவிதையும் எண்ணிக்கைக்காகத் திணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஓர் ஆணின் பார்வையிலிருந்து மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் பார்வையிலும் பாலியலையும், காமத்தையும் அணுகியிருக்கிறார்.

இன்னும் முறையல்லாத உணர்ச்சியாக நிருபிக்கப்படும் காமத்தையும், அதன் புனைப்பெயரான, சினிமாக்களில் புனிதமாகக் காட்டப்படும் காதலையும் பற்றிய கவிதைகள், பெண்ணின் உணர்வுகள் மற்றும் இயற்கை பெண்ணுக்கு அளித்த அசவுகரியங்கள் பற்றிய கவிதைகள், சுய இன்பத்தைப் பற்றிய சில கவிதைகள், நிதர்சனம் சொல்லும் சில கவிதைகள் கொண்டு இப்புத்தகத்தை நிரப்பியிருக்கிறார் ஆசிரியர்.

என்ன எழுதி என்ன? சில உண்மைகள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

எனக்கு இந்தக் களத்தில் 95% நேரடி அனுபவம் இல்லை என்பது 100% உண்மையாதலால், இப்புத்தகத்தை விமர்சிக்காமல் இதில் எனக்குப்பிடித்திருக்கிற சில கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன்.
-----------------------------
சொற்கள் பிறழ்ந்தன
கலைந்தன
மருவின
திரிபுற்றன

பிறந்தது புது மொழி
-----------------------------
முதுமை மீது
அனைவர்க்கும் உண்டு
ரகசிய பயம்

பழைய ஆட்டத்தை ஆட
ஆளற்ற தனிமை
தொய்ந்த நரம்புகள்
சுண்டிய ரத்தம்
போகத்திற்கு ஒத்துழைக்காத வெற்றுடல்
-----------------------------
உலகத்தை அழகுபடுத்த
மிச்சமிருப்பவை
இன்னும் பிறவாக் குழந்தைகள்

இன்பமாக
மிச்சமிருப்பவை
அவை
ஜனிப்பதற்கு நிகழா உறவுகள்
-----------------------------
பெண்களுக்கு
ஆண்களிடமிருந்து
என்னென்னவோ உரிமைகள்
கிடைத்தென்ன?

அழைத்தால் வருகிறார்களா
மறுத்தால் விடுகிறார்களா
கணவர்கள்
-----------------------------
ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி

தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லா
தமகளல்லாத
பர ஸ்திரீ
-----------------------------
ஓடிப்போவோர்
முதலில் செய்கிற காரியம்

உள்ளம் திகட்ட
உயிர் அதிரப் புணர்வதுதான்
-----------------------------
'உன்னைப்புணர விரும்புகிறேன்' என்று
நேரடியாகக் கூற இயலவில்லை
நூதனமாக ஆரம்பிக்கிறேன்
'உன்னை விரும்புகிறேன்'
-----------------------------
சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய

எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்
-----------------------------
ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது
-----------------------------
நம் காதலும்
உன்னதமாகத்தான் இருந்தது
நாம் புணரும் வரை
-----------------------------
வீடு துறந்து செல்பவர்கள்
திரும்புவதில்லை
வெளியில் ஒருத்தி
அமைந்துவிட்டால்
-----------------------------
சாதுவாகத் திரிந்தவனின்
குரூர முகத்தைச்
சந்திக்க விருப்பமா?

படுக்கையில் அவன் முகம்
ஓநாயின் வேட்டை முகம்
-----------------------------
என்னை நீங்கள் எங்கும் காணலாம்

பாங்காக்கில் புகையூதியபடி
சோனாகஞ்சில் நகம் பூசியபடி
உடைந்த ரஷ்யாவில் நெட்டைக்கால் தெரியும்படி
கென்யாவில் கிருமி தாங்கியபடி
லாஸ்வேகாஸில் காரோட்டியபடி

உன் வீட்டில்
சுமங்கலி பூஜையில் பாடியபடி
-----------------------------
கணவனால் கைவிடப்பட்டவள்
ஓர் இளைஞனை
வைத்துக்கொள்கிறாள்
புறம்பேசித் திரிகிறது
அவளால் கதவடைபட்டக் கூட்டம்
-----------------------------
அடங்காத காமத்துடன்
தவித்துக்கொண்டிருக்கிறேன்

உனக்கோ
ஆழ்ந்த அயர்ந்த உறக்கம்

விடிந்ததும்
எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்
-----------------------------
நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-----------------------------
'முறையல்லாதன செய்கிறாய்
சொன்னால் கேள் அண்ணா'
கண்ணீர் மல்கப் பேசு தோழி

உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்
-----------------------------
தாய்மையை மதிப்பார்
பெண்மைக்குக் குரல் கொடுப்பார்

மங்கையராய்ப் பிறந்திட
மாதவம் செய்திட வேண்டுமென்பார்

வீட்டம்மா
நிறைமாத கர்ப்பிணி என்பதற்காக
ஒருநாள் விட்டுவைக்க மாட்டார்
-----------------------------
உன் இசைவில்லாமல்
ஏதாவது செய்திருக்கிறேனா?
புணர்ந்தது தவிர
-----------------------------
வேற்றூரில்
யுவதியும் ஓர் இளைஞனும்
அறை எடுத்து
ஒன்றாகத் தங்கினர்
அவர்கள் மொழியாராய்ச்சி செய்துகொண்டிருந்தனர்

என்கிறேன்

நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்
-----------------------------
மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களில் ஒன்று
ஒரு வேசியினுடையதாகவும்
இருக்கலாம்
-----------------------------

- சேரல்

Friday, March 23, 2007

18. கிமு.கிபி

விமர்சனம் செய்கிறவர் சேரல்!

'இளைய தலைமுறைக்கு இரண்டு விதமான அறிவு தேவை. ஒன்று எதிர்காலம் குறித்த முன்னோக்கும் அறிவு; இன்னொன்று வரலாறு குறித்த பின்னோக்கும் அறிவு'

- வைரமுத்து
-----------------------------------------------
புத்தகம் : கிமு.கிபி
ஆசிரியர் : மதன்
வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2006
விலை : 75 ரூ
-----------------------------------------------
குமுதத்தில் வெளியான வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு. மதனுக்கு அறிமுகமே தேவை இல்லை.

'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தின் மூலம், தான் வரலாறு சொல்லும் பாணியே தனி என்று நிரூபித்திருந்த மதன், இந்தப் புத்தகத்திலும் நம்மை ஏமாற்றவில்லை. தன் இயல்பான நடையில் நன்றாக எழுதி இருக்கிறார்.

இதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஏற்கனவே நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயங்களாகவே இருக்கின்றன. எனவே, வித்தியாசமான செய்திகளாக எனக்குத்தோன்றிய சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

450 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியதிலிருந்து புத்தகம் தொடங்குகிறது.

உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்று வரலாற்று ஆதாரங்களோடு சொல்கிறார் ஆசிரியர். ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றிய மனித இனம் 3 லட்சம் ஆண்டுகளில் நடை பயணமாக உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றது.

நாடோடியாகவே வாழ்ந்த மனிதர்கள் கிமு 8000ல் தான் பாலஸ்தீனில் ஜெரீகோ என்ற இடத்தில் முதன்முதலில் ஒரு குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாகரிகத்தின் தோற்றத்தையும், அதன் பல்வேறு படிநிலைகளையும் விவாதித்துவிட்டு, பூசாரிகள், மன்னர்கள் தோன்றிய வரலாற்றையும் சொல்கிறார். கிமு 2334ல் மெசொபடேமியாவில் ஆட்சிக்கு வந்த 'ஸார்கான்' தான் உலகின் முதல் மன்னன் என்று சொல்லப்படுகிறான். 1764ல் பாபிலோனியாவில் மன்னனான 'ஹமுராபி' உலகின் முதல்பெரும் சக்கரவர்த்தி.

ஹமுராபியைப் பற்றி விளக்க ஆசிரியருக்குச் சில அத்தியாங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. உண்மைதான்! உலகின் முதல் பேரரசனின் அரசு அப்படிப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய மன்னன் ஹமுராபி தான்.

'கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபியின் சட்டங்களின் ஆதாரமாக இருந்தது. அடித்தவனுக்கு அடியே தண்டனை! கலப்படம் செய்தால் தண்டனை! கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மரண தண்டனை!

திருட்டுப்போன பொருளைக் காவல்துறை கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பொருளின் இழப்பை அரசே ஈடு செய்தது. மேலும், குறிப்பிட்ட காவல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரை வேறெந்த அரசிலும் இப்படி ஒரு சட்டம் இருந்ததே இல்லை.

ஹமுராபியை தொடர்ந்து ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி சொல்லிவிட்டு இலக்கியத்தில் நுழைகிறார் ஆசிரியர். கிமு 2100ல் எழுதப்பட்ட கில்கெமெஷ் காப்பியம் இலியத், ராமாயண மகாபாரதங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

பாபிலோனியர்களின் மத நம்பிக்கை பற்றி பேசும்போது நம் மனதைக் கவரும் ஒரு பாத்திரம் 'லிலித்'. இவள் பாதி பெண்ணாகவும் பாதி பறவையாகவும் நிர்வாணமாக அலையும் ஒரு செக்ஸ் தேவதை. கலவியின் போது தெறித்து விழும் ஆணின் உயிரணுக்களைக் கொண்டு சாத்தான்களை உருவாக்குவது அவள் வேலை என்று நம்பப்பட்டது.

நம்மைக் கவரும் இன்னொரு பாத்திரம் 'ஆமன் ஹோடப்' எனப்படும் 'ஆக்நெடான்' என்னும் மன்னன். ஓவியத்தில் உண்மயைச் சொல்லுங்கள் என்று கலைஞர்களுக்குக் கட்டளை இட்டவன் இவன். மதங்களில் நம்பிக்கை இல்லாமல் சூரிய வழிபாட்டை மேற்கொண்டவன்.

எகிப்தின் வரலாறு சொல்லும்போது, மன்னர்கள் தங்கள் இனத்தில் கலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தங்கள் மகள்களையே மணந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

சற்று ஹரப்பா, மொஹஞ்சதாரோவைப் பார்வை இட்டுவிட்டு ஏதென்ஸின் வரலாறு சொல்லத்தொடங்குகிறார் ஆசிரியர். இதில் தெரிந்த பல விஷயங்களையே குறிப்பிட்டுள்ளார். புது விஷயங்கள் என்றால், நல்ல நாகரிகம் பெற்றிருந்த கிரேக்கத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டனர். 'ஹோமோ செக்ஸில்' ஈடுபட்டவர்கள் அதிகம். சொல்லப்போனால் 'ஹோமோ செக்ஸில்' ஈடுபடாதவர்களுக்கு மதிப்பு இல்லை. 'மகிழ்ச்சிக்கு விலைமாதர்கள்; குழந்தைக்கு மனைவி; காதலுக்கு நண்பன்' என்று குறிப்பிடுகிறார் டெமஸ்தனிஸ்.

வரலாற்றின் தந்தை ஹெரோடோடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேடஸ், நையாண்டி நாடகங்கள் எழுதிய அரிஸ்டோஃபனீஸ், தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்ஸாந்தர் பற்றியெல்லாம் பேசிவிட்டு இந்திய வரலாற்றில் நுழைகிறார் மதன்.

இந்தியாவின் முதல் பேரரசர் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், சந்திரகுப்தரின் மகன் பிந்து சாரர், அவரின் மகன் அசோகர் என்று வரலாறு சொல்லி மௌரிய வம்சம் கிமு 188ல் வீழ்ச்சி அடைவதோடு முடிக்கிறார்.

வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். 'வந்தார்கள்; வென்றார்கள்' முன்னுரையில் சுஜாதா சொல்வது போல, மதன் வரலாற்றுப்பாடங்களை எழுதினால் யார் வேண்டுமானாலும் நூற்றுக்கு நூறு வாங்கலாம்.

புத்தகத்தின் குறை, அங்கங்கே தெரியும் சில எழுத்துப் பிழைகள். உதாரணமாக, ஆரியருக்கு ஆசிரியர், ஐந்நூறுக்கு ஐந்தாறு, இப்படிச் சில பிழைகள். ஓரிடத்தில் அலெக்ஸாந்தரின் ஆசிரியர் பிளாட்டோ என்று அச்சாகியுள்ளது. கண்டிப்பாக இது அச்சுப்பிழைதான். அடுத்தப் பதிப்பில் இந்தப் பிழைகள் நீக்கப்படும் என்று நம்புவோமாக!

- சேரல்

Thursday, March 22, 2007

17. CONFESSIONS OF A SECULAR FUNDAMENTALIST

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-------------------------------------------------------------
புத்தகம்: Confessions of a secular fundamentalist
ஆசிரியர்: மணி சங்கர் அய்யர் (பஞ்சாயத்து ராஜ்ஜிய மத்திய அமைச்சர்)
மொழி : ஆங்கிலம்
விலை: 295 ரூபாய்
பதிப்பகம்: பென்குவின் (Penguin)
பக்கங்கள்: 271

-------------------------------------------------------------

















லாகூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக டெல்லி சென்றிருக்கும் ஆசிரியரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அந்தமான் செல்லுலார் சிறை பற்றிய இவரது அணுகுமுறையால் இவர்மேல் எனக்கொரு தனிமதிப்பு உண்டு. இப்புத்தகம் படிக்கவும் அவ்வணுகுமுறையே காரணம்.















தலைப்பின் நேரடி மொழிபெயர்ப்பு சொல்வதுபோல், மணி சங்கர் என்ற ஒரு மதசார்பற்ற தத்துவவாதியின் மதசார்புள்ள நம்பிக்கைகளைப் பற்றி கூறுவதே இப்புத்தகம்.
மதசார்பின்மை என்ற கொள்கையைச் சில மற்ற கொள்கைகளுடனும், வரலாற்றுடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துடனும், இன்றைய மதச்சார்புடனும் விளக்கி கடைசியாக இந்தியாவில் மதத்தால் சிறுபான்மையினரின் நிலைகளையும், மதங்களால் அல்லல்படும் மற்ற நாடுகளையும் அலசிவிட்டு, தான் ஏன் நாத்திகன் என முடிக்கிறார். கட்டுரை பாணி புத்தகம் என்பதால், நான் புதிதாக அறிந்துகொண்ட தகவல்களை மட்டும் இங்கு பகிர்்கிறேன்.

இப்புத்தகத்தின் முன்னுரையே வித்தியாசமானது. 1995ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரியுடன் இவர் கொண்ட ஒரு விவாதம்தான் முன்னுரை.

1986ல் பாபர் மசூதியின் எல்லைக்குள் இருந்்த ராம்லாலா கோவிலின் கதவுகளைத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் இருந்து, இந்தியர்களை மதவிவாதம் பிடித்துக் கொண்டது என்று ஆரம்பிக்கிறார். அதற்கெல்லாம் முன்னரே மதத்தின் பெயரால் இந்தியா பிரிக்கப்பட்டதும், இந்துக்களுக்கு Tushtikaran சொன்ன காந்தி முஸ்லீம்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை என்றும் பல இடங்களில் மதம் தலைதூக்கியதைச் சொல்கிறார்.

விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையில் இந்தியர்கள் என்பவர்கள் யார் என்று விளக்கியதைப் பல அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லி, சில கேள்விகள் வைக்கிறார். அதுபோன்ற அமைப்புகள் மதத்தின் அடிப்படையில் எல்லைகளைப் பிரிக்கப் போராடுவதாகவும், ' Statehood based on religion will not work' என்று இந்தியா வந்த ஒரு யாத்திரீகர் சொன்ன உண்மையை மேற்கோள் காட்டுகிறார்.

புத்தகத்தின் பெரும்பகுதி இந்து - முஸ்லீம் மதங்களைப் பற்றி மட்டுமே விதாதிக்கிறார். கடைசியில் ஒருபகுதி மற்ற மதங்களுக்காக. 1857 முதல் 1947 வரை இந்திய யூனியனில் இவ்விரு மதங்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினகளைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமானது, மீரட் இந்து சிப்பாய்கள் புரட்சி செய்தது ஒரு இந்துவை ஆட்சியில் அமரச்செய்ய அல்ல; பகதூர்ஷா என்ற முஸ்லீமை. நெத்தியடி கருத்து. இன்னொரு கருத்து, இந்திய யூனியன் மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிந்ததற்குச் சர்ச்சில் சொன்ன கருத்து. முகத்தில் அடித்த கருத்து அது.

இப்புத்தகத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்தது, மதங்களைப் பற்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்ற பகுதிதான். இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954 இந்து மற்றும் முஸ்லீம்களை எப்படி பாதிக்கிறது, ஏன் இவ்விரு மதங்களுக்கும் தனித்தனி திருமணச் சட்டங்கள் உள்ளன, ஏன் இந்தியா முழுவதும் பொதுவான சட்டங்களைச் ( eg. Article 370) சில நேரங்களில் கொண்டுவர முடிவதில்லை இதுபோன்ற பல கேள்விகள் எனக்குக் கிடைத்தன; பதில்களுடன். ஆசிரியர், இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதமாற்றங்கள் பற்றிய சட்டங்கள், பசுவதைத் தடுப்பு சட்டம், Shah Bano பிரச்சனை, பாதிரியார் Graham Staines ஒரிஸாவில் எரிக்கப்பட்ட பிரச்சினை, மாநில அரசின் உதவிபெறும் மதச் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பற்றிய கட்டுப்பாடுகள், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, வந்தே மாதரம் பிரச்சினை, ஜம்மு - காஷ்மீர்க்கான சிறப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 370 இவை போன்ற பல விஷயங்களைப் பற்றி தெளிவான விளக்கங்களை இப்பகுதியில் பெறமுடியும்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இரு நாடுகளும் மிகப்பெரிய மதவன்முறைகளை எதிர்கொண்டன. அந்நேரத்தில் 1949ல் இங்கிலாந்து கரன்ஸியின் மதிப்பு சரிந்தது. அதற்குக் கீழ் இருந்த இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானுடன் வைத்திருந்த பொருளாதார உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்படாதவாறு நேரு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, அவருக்கு நான் ஒரு சல்யூட். முகமது கஜினி ஆரம்பித்துவைத்த சோம்நாத் கோவில் பிரச்சனை மீண்டும் தலைதூக்கியபோது, அக்கோவிலைப் புதுப்பிக்க ஒரு பைசாகூட கொடுக்காமல் இருந்த நேருவுக்கு மீண்டும் ஒரு சல்யூட். ஆனால் 1989ல் ரூபையா சயீத் கடத்தப்பட்டபோது, இந்திய அரசின் அவசர முடிவால் காஷ்மீர் பிரச்சினை மீண்டும் உயிர்பெற்றதையும், அதன்பிறகு கோத்ரா, ஹீப்ளி போன்ற சப்பை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்ததையும், உலகமயமாக்கலை அறிமுகப்படுத்திய குஜராத் வன்முறை பூமியாகப் போனதையும் விலாவரியாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

இந்தியாவின் சிறுபான்மை மதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் முக்கிய பிரச்சனைகளையும், தீர்வுகளையும் அற்புதமாக விளக்கி உள்ளார். இப்பகுதியில் நிறைய விசயங்களைப் புரிந்து கொண்டேன். இஸ்ரேல், பாலஸ்தீன், யுகோஸ்லேவேகியா, பங்களாதேஷ் என்று மதப்பிரச்சனைகள் உள்ள நாடுகளின் என்ன நடந்தது - நடக்கிறது எனக்கூறி, நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்.

புத்தகத்தின் கடைசியில், 2000ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அரசியல் பயிற்சி துறையின் சார்பில் நடத்தப்பட்ட மதச்சார்பின்மை பற்றிய கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்விகளையும், அவை பெற்ற பதில்களையும் பகிர்ந்துள்ளார்.

ஆசிரியர் நிறைவு செய்தபடியே நானும் முடிக்கிறேன். "Secularism is not about giving primacy to my beliefs. It is about respecting the right of others to hold beliefs that I do not hold".
சில பின் குறிப்புகள்.

1) The argumentative Indian என்ற புத்தகத்தில் அமர்தியா சென் சொல்கிறார்: 'மதவேற்றுமைகளைப் போக்க தீ இலாஹி என்ற மதத்தைத் தோற்றுவித்த அக்பர், கடைசிவரை தனது சொந்த மதத்திலேயே இருந்தார்'.

2) 1993 மும்பை கலவரங்களைப் பற்றி சமீபத்தில் Black Friday என்ற படம் வந்தது. அருமையான படம்.

3) பகத்சிங் சிறையில் இருக்கும்போது எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர், 'நான் நாத்திகன் - ஏன்?'.

4) Confession of என ஆரம்பிக்கும் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் Confessions of Nat Turner என்ற புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் படிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.

- ஞானசேகர்

Tuesday, March 06, 2007

16. மேல்மாடி (All about Brain)

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

மூளையின் மகத்துவம் அறிய பியானோ வாசித்துப் பாருங்கள்.
-யாரோ

டினோஸர்களில் சில இனங்கள் அழிந்ததற்குக் காரணம் மூளையின் உயரமே.- அறிவியல் ஆராய்ச்சி
-----------------------------------------------------------
புத்தகம்: மேல்மாடி (All about Brain)
ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்
விலை: 60 ரூபாய் (!!!)
மொழி: தமிழ்
வெளியிட்டோர்: நலம் (கிழக்கு பதிப்பகம்)
-----------------------------------------------------------
வழக்கம்போல் ஆசிரியரைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எனக்கும் இவரைத் தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

"மனமும் இதுதான். மனச்சாட்சியும் இதுதான். மனிதனைப் பொறுத்தவரை எல்லாமுமாக இருப்பது மூளை" என்று இப்புத்தகத்தின் பின் அட்டையில் எழுதி இருந்தது; வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியர் தெளிவாய் இருக்கிறார்; புத்தகமும் தெளிவாய் இருக்கும் என்ற நம்பிக்கையில். என் நம்பிக்கை வீண்போகவில்லை; தெளிவாகக் குழம்பிப் போனேன். "இதயத்தைச் சமாதானப் படுத்துவதைவிட மூளைக்கு அடிமையாவதே உத்தமம்" என்று எனது சிறுகதை ஒன்றில் நான் குழப்பி இருந்த இந்த விசயத்தை, இந்தியன் திரைப்பட வசனத்தில்மூலம் விளக்கி இருந்தார் ஆசிரியர். "காட்டிகொடுன்னு மூளை சொல்லுது. ஆனா வேணாம்னு இந்தப் பாழாப்போன மனசு தடுக்குதே""எனக்கு மனசு, மூளை ரெண்டுமே ஒண்ணுதான்".

புத்தகத்தின் தலைப்பைப் போல, மூளையைப் பற்றி பெரும்பாலும் எல்லா விசயங்களையும் தமிழில் பல உதாரணங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். டிவி பார்ப்பது, நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது, தூக்கத்தில் நடப்பது, ஞாபகமறதி, கோமா, டவுன் சின்ட்ரோம் என்று ஏன் எதற்கு எப்படி எது எங்கே என்று பல கேள்விகளுக்கு விடை செல்ல முயலும் புத்தகம் என்பதால், எனக்கு எப்படி விமர்சனம் எழுதுவது என்று தெரியவில்லை. தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் வரவேற்கப்பட வேண்டும் என்பதற்காக என் (எங்கள்) வழியே ஒரு எளிய அறிமுகம் இது.

அரைகுறை அறிவியல் எனக் கிண்டல் செய்யப்படும் Phrenology பற்றி, இப்புத்தகம் மூலம்தான் நான் தெரிந்து கொண்டேன். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைப்பவர்கள் Left - Right Brain Theory படித்துப் பாருங்கள்; பலம் - பலவீனம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

ஞாபகமறதி அதிகம் என்று அடிக்கடி வருத்தப்பட்ட எனக்கு இப்புத்தகம் ஒரு நல்ல புத்துணர்வு கொடுத்தது. அறியாமை அவிழ்ந்தபோது நம்பிக்கை விடுபட்டது. ஆளவந்தான், குடைக்குள் மழை தவிர மற்ற சில தமிழ் சினிமாக்களில் சீரழிக்கப்பட்ட Schizophrenia பற்றி ஆசிரியர் ஒன்றும் எழுதாமல் போனதில் ஒரு சிறு வருத்தம். மற்றபடி தமிழில் ஒரு நல்ல அறிவியல் புத்தகம்.

Euphoria பற்றி குறிப்பிடும்போது ஆசிரியர் சொல்கிறார், "அர்த்தமே இல்லாமல் எல்லாவற்றிற்கும் மயிர்கூச்செரிந்து பரவசப்படும் ஒருவரை யாரும் நோயாளியாகக் கருதுவதில்லை".

-ஞானசேகர்