Sunday, July 06, 2008

28. SURVIVAL OF THE SICKEST

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------------------------
புத்தகம் : Survival of the sickest (The surprising connections between disease and longevity)ஆசிரியர் : Dr. Sharon Moalem with Jonathan Prince
மொழி : ஆங்கிலம்

விலை: 13.95 USD
பக்கங்கள்: 210
பதிப்பகம்: Harper Perennial
-----------------------------------------------------------------------------

மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதேன்? மனிதர்களின் மூக்கு கீழ்நோக்கி இருப்பதேன்? மனிதர்களின் தோலோடு கொழுப்பு ஒட்டியிருப்பதேன்? இந்த கேள்விகளைப் பற்றி விவாதித்த இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயம் கொடுத்த ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாமல், இப்புத்தகத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன்.

Alzhimer நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து இரத்ததானம் செய்துகொண்டிருக்கும் தனது தாத்தாவின் கஷ்டங்களைக் கண்டு கலங்குகிறான் 15 வயதில். அதே நோய் தனக்கும் 18 வயதில் வரும்போது, அவனுக்குள் பல கேள்விகள். சூழ்நிலைக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்வது பரிணாமம் என்றால், கேடுதரும் ஜீன்களை அப்பரிணாமம் தலைமுறைகளுக்குக் கடத்துவதேன்? அக்கேள்விகளுக்கு விடைதேடப் புறப்பட்டதன் விளைவு, அவர் இன்று ஒரு மருத்துவ விஞ்ஞானி; மற்றும் இப்புத்தகம்.

"Welcome to the our magical medical mystery tour" என்று வரவேற்கிறது இப்புத்தகத்தின் முன்னுரை. நாம் அன்றாடம் பார்க்கும், பசுவம்மை தழும்பு உள்ள நமது முந்தைய தலைமுறை ஓர் உதாரணம். பசுவம்மைக்கும், பெரியம்மைக்கும் இடையே இருப்பது வேறொன்றுமில்லை; magical medical mystery தான். எப்போதுமே ஒரு மனிதன் தனியாக இருப்பதில்லை; பாக்டீரியா முதல் கொசு வரை ஆயிரக்கணக்கான பேர் அவனைச் சார்ந்துள்ளன. பரிணாமம் என்னும் கயிற்றினால் கட்டப்படிருக்கும் இம்முடிச்சுகளைக் கொஞ்சம் அவிழ்க்க முயல்வதே இப்புத்தகம். "பரிணாமம் என்பது முடிந்துவிடவில்லை; பரிணாமம் என்பது ஒருமையில்லை; எல்லா உயிகளும் சேர்ந்தே பரிணமிக்கின்றன" என்ற ஒரு வரி கருத்தைப் பல உதாரணங்களுடன் விளக்குவதே இப்புத்தகம்.

'புரியாத புதிர்' படம் முடிந்தவுடன் கே.எஸ்.ரவிக்குமார் சொல்வார்: "தயவுசெய்து இப்படத்தின் முடிவை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்". இதைவிட பலமடங்கு அதிகமான பொறுப்பு, இப்போது எனக்கு உள்ளது! இப்புத்தகத்தின் ஏதேனும் ஓர் உட்கருத்தை எடுத்து, இப்பதிவைப் படிப்பவர்களுக்காக எடுத்துச் சொல்வது, ஆசிரியர் சொல்லும் magical medical mystery யைப் பாதிக்கும் என நான் நினைக்கிறேன்.

இப்புத்தகம் மூலம், கீழ்க்கண்டதுபோல் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும். 14ம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தைக் கொன்று குவித்த பிளேக் நோய், ஏன் சிலபேரை மட்டும் தாக்கவில்லை? பெரும்பாலான உயிரினங்களை அடியோடு அழித்த, பனியுகத்தில் இருந்து நமது முன்னோர்கள் சிலர் மட்டும் எப்படித் தப்பித்தார்கள்? ............................................ மனிதன் என்ற பாலூட்டிக்கு உடலை ரோமங்கள் ஏன் மூடியிருக்கவில்லை? மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதேன்? மனிதர்களின் மூக்கு கீழ்நோக்கி இருப்பதேன்? மனிதர்களின் தோலோடு கொழுப்பு ஒட்டியிருப்பதேன்?

Sun glass போடுவதால் ஏற்படும் குறை - சிலபேர் (பெரும்பாலான ஆசியர்கள்) சரக்கு (alcohol) அடிக்கும்போது ஒரே சிப்பில் முகமெல்லாம் வியர்த்துவிடுவதன் நன்மை - இதுபோன்ற பல விஷயங்கள். எனக்கு பிடித்த - பசுமரத்தாணிபோல மனதில் வைத்துக்கொண்ட - பகுதி, மத்திய கிழக்கு நாடுகளின் மக்களிடையே காணப்படும் Favism என்ற குறைபாடு. அசந்துபோனேன். பொதுவாக நண்பர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்க சில விஷயங்கள் கைவசம் வைத்திருப்பேன்: காலண்டர், நாஸ்டர்டாமஸ், வைரமுத்து, மதம், சூரிய மண்டலம், Time zones. இப்போது இப்புத்தகம்; குறிப்பாக Favism, Asian Flush, Water birthing!

எல்லா கொடூர விஷயங்களுக்குப் பின்னே ஏதோ ஓர் மெல்லிய நன்மை இருக்கலாம் என்பதைச் சில உதாரணங்கள் மூலம் உணரவும், பூர்வீகமும் உணவுமுறைகளும் நம்மை எப்படி தகவமைக்கின்றன என்பதை இன்னும் நிரூபித்துக் கொள்ளவும் தவறாமல் இப்புத்தகத்தைப் படிக்கலாம். இப்புத்தகத்தை ஏற்கனெவே படித்த என்னைப் போன்றவர்கள், அன்பளிப்பு கொடுத்து ஆச்சரியப்படுத்துவது உறுதி.

- ஞானசேகர்

Thursday, January 10, 2008

27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.
- இயேசு கிறிஸ்து
---------------------------------------------------------------
புத்தகம்: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை
ஆசிரியர்: நளினி ஜமீலா
மொழி: மலையாளத்தில் இருந்து தமிழ்
விலை: ரூ.100
பக்கங்கள்: 183
பதிப்பகம்: காலச்சுவடு
----------------------------------------------------------------

நான் படித்த முதல் இரண்டு சுயசரிதைகளின் தாக்கத்தால், பொதுவாக நான் சுயசரிதைகள் படிப்பதில்லை. முஷாரப்பிற்கு அடுத்ததாக நான் படித்த சுயசரிதை இது; ஐந்தாவது சுயசரிதை இது.

புலிட்சர் பரிசு என்று ஒன்று இருப்பது, சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்தபோது, நான் பார்த்த சில புகைப்படங்களில் இதுவும் ஒன்று: அது எடுக்கப்பட்ட இடம், கொல்கத்தா நகரின் சோனாகன்ச். ஒரு பெண் ஆடை அணிந்து கொண்டிருப்பாள்; ஓர் ஆண் அந்த அறையில் இருந்து வெளியேறுவதற்காக கதவைத் திறப்பான்; இன்னொரு ஆள் உள்ளே வர தயாராக நின்றுகொண்டு இருப்பான்.

புனே நகரின் விலையுயர்ந்த பிள்ளையார் கோவிலுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். திரும்பும்போது அதன் அடுத்த வீதி வழியே சென்றோம். அந்த இடத்தின் பெயர் புதுவார்பேத் (புதன்பேட்டை) - புனே நகரின் சிவப்பு விளக்கு பகுதி. பைக்கில் இருந்து இறங்காமல் சாலையின் இருபுறங்களிலும் பார்த்துக்கொண்டே சென்றோம். வரிசையாக பெண்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களை ஆண்கள் எதிர் கடைகளில் இருந்து நோட்டம்விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒருவழிப்பாதை என்று பைக்கில் இருந்து இறங்கி தள்ளிகொண்டு செல்லும்போது, ஒருகாட்சி கண்ணில் சட்டென பதித்தது: ஒரு பெண் தனது குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டு இருந்தாள். ஓர் ஆளுடன் வந்த தரகர் அவளைச் சுட்டிக்காட்டினான். அவள் சட்டென எழுந்து, குழந்தையை இன்னொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, குறுகிய படிகள் வழியே மாடியேறினாள். தனது ஒருபக்க மார்பை அவள் மறைக்க முயலவில்லை.

இதுபோன்ற சில நிகழ்ச்சிகளை சாமானியனால் கற்பனை செய்யக்கூட முடியாது. மண்ணைத் தன்மீது ஓர் இரவு முழுவதும் போர்த்திக் கொள்ளும், இப்புத்தகத்தில் வரும் நிகழ்ச்சிகூட அவ்வகையே. "எங்களின் இந்நிலைக்குக் காரணம், உங்கள் வீட்டு ஆண்கள்தான்" என சொல்கிறார் ஆசிரியர்.சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.

பின்குறிப்பு:
"ஒரு லைங்கிக தொழிலாளியோட ஆத்மகதா" என்ற மலையாளப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இப்புத்தகம். இதே புத்தகத்தை ஆங்கிலத்தில் Westland Books பதிப்பகத்தார் The autobiography of a sex worker என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்கள் (150 INR).

- ஞானசேகர்