Monday, February 19, 2007

15. மறைவாய் சொன்ன கதைகள்

வெகு நாட்களுக்குப் பிறகு, விமர்சனம் செய்கிறவர் சேரல்.
-------------------------------------------------------
புத்தகம் : மறைவாய் சொன்ன கதைகள்
ஆசிரியர்கள் : கி.ராஜநாராயணன், கழனியூரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2005
விலை : ரூ230

-------------------------------------------------------
திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசிக்கு அருகில் இருக்கும் கழுநீர்க்குளம் என்னும் ஊரில் பிறந்தவர் கழனியூரன். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கி.ரா வைப் பற்றி பெரும்பாலான தமிழ்வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.






இனி புத்தகத்தைப்பற்றி,

100 நாட்டுப்புறப் பாலியல் கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இது! இதில் இடம்பெற்றுள்ள கதைகள், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'(1992, நீலக்குயில் பதிப்பகம், கி.ரா), 'நாட்டுப்புறப் பாலியல் கதைகள்' (1994, நீலக்குயில் பதிப்பகம், கழனியூரன்) ஆகிய புத்தகங்களிலிருந்தும், 'இறக்கை' மற்றும் 'வாசுகி' இதழ்களில் கழனியூரன் எழுதிய பாலியல் கதைகளில் இருந்தும் தொகுக்கப்பட்டவை.

இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

சில கதைகள் நாம் ஏற்கனவே அறிந்தவையாகவும் இருக்கின்றன. இன்றும் கூட பாலியல் விஷயங்களை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்பவை இது போன்ற பாலியல் கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற கதைகளும், கதை சொல்லிகளும் எல்லா கிராமங்களிலும் பரவிக்கிடக்கின்றனர்.('அர்' விகுதி இந்த இடத்திற்குச் சரியானதா?)

இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். 'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்' என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.

அடிமனக்கூறுகளில் ஆக்ரமித்திருக்கும் அதீதமான பாலியல் கற்பனைகள், சில கதைகளாக உருவெடுத்திருக்கின்றன. மனித உறவுமுறைகள் ஒழுங்கு படுத்தப்படாத காலத்தில் புனையப்பட்ட கதைகள் சிலவும் இடம்பெற்றிருக்கின்றன. 'அபூர்வ ராகங்களை' நினைவுபடுத்தும் ஒரு கதை, வெற்றிலை வந்த கதை, கடல் தொன்றியதற்கான கதை, ஆணுக்குப் பிரசவ வலி வேண்டிய பெண்கள் கதை என சில கதைகள் வேறு வடிவத்தில் நம்மை ஏற்கனவே வந்தடைந்தவையாக இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் சிலவற்றில், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மேல் சேலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இருந்திருக்கிறது. அன்று நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவமும் இங்கே கதையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் பகுதியை ஆளும் ராஜாவை வரவேற்கும் கூட்டத்தில், ஒரு பெண் தன் பிறப்புறுப்பைக் காட்டி வரவேற்கிறாள். அதற்கு அவள் தரும் விளக்கம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜாவும் மனம் மாறி அவர்கள் விருப்பப்பட்டால் மேலாடை அணியலாம் எனச் சலுகை அளிக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே அந்தப் பகுதிகள் முழுவதும் 'தோள் சீலைப் போராட்டம்' நடத்தப்பட்டிருக்கலாம்.

மொத்தத்தில் இது பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட புத்தகம் இல்லை. கொஞ்சம் தெளிவு, பழையன தேடும் ஓர் ஆர்வம், கதை சொல்வதின், கேட்பதின் சுகம், கிராமத்து பழக்கங்கள் இவற்றைப் பெறுவது என்கிற அடிப்படியிலேயே இக்கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள் கி.ராவும் கழனியூரனும். தொகுக்கும்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும், ஏற்பட்ட சங்கடங்களையும், எதிர்ப்புகளயும் பின் இணைப்பில் விளக்கி இருக்கிறார் கழனியூரன்.

சில பின் குறிப்புகள்:

1. அழகான கிராமிய நடை, புத்தகம் முழுவதும் கையாளப்பட்டிருக்கிறது
2. இந்தப் புத்தகத்தின் எந்தவொரு இடத்திலும், வழக்கத்தில் இருக்கும் 'கெட்ட' வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.
3. தமிழின் கெட்ட வார்த்தைகளையும், அவற்றின் ஆதி, வழங்குமுறை இவற்றைத் தொகுத்து வெளியிடுவதே தன் அடுத்தத் திட்டம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் கி.ரா.