Monday, December 28, 2009

55. A BRIEF HISTORY OF TIME

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan . நன்றி!

"காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை"
பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை - அரசூர் வம்சம்


----------------------------------------------------------
புத்தகம் : A brief history of Time
ஆசிரியர் : Stephen Hawking
பதிப்பகம் : Bantam Books
விலை : ரூ193
பக்கங்கள் : 224
முதற்பதிப்பு : 1988
கிடைத்த இடம் : LandmarkOntheNet
(http://www.landmarkonthenet.com/Books/A-Brief-History-of-Time-Stephen-Hawking/9780553176988)

----------------------------------------------------------

நம் அனைவருக்கும் பரிச்சயமான முகம் Stephen Hawking. கண்டிப்பாக ஏதாவதொரு செய்திக்குறிப்பில் இவரைக் கண்டுகொண்டிருப்போம். கார்பஸ் கடிகாரத்தை திறந்து வைத்ததோ, விண்வெளி பயணம் போனதோ இன்னும் ஏதாவதோ இவரை நம்மிடம் அழைத்து வந்திருக்கும். ஆனால், இவரது ஆய்வைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இப்புத்தகம் அவரது முக்கியமான ஆய்வுப்பகுதியான கருந்துளைகள் மற்றும் காலத்தைப் பற்றிப் பேசுகிறது.

இப்புத்தகத்தின் அடிநாதமான கேள்வி, காலம் என்பது என்ன?

இந்தக்கேள்வி அங்கங்கே கிளைத்து இன்னும் ஆயிரம் கேள்விகளுக்கு வித்திடுகிறது.

காலத்திற்குத் தொடக்கமோ முடிவோ உண்டா? பிரபஞ்சம் எப்போது தோன்றியது? பெருவெடிப்பில் (பிக் பேங்) பிரபஞ்சம் தோன்றியிருந்தால் அதற்கு முன்பு காலம் என்ற ஒன்று இருந்ததா? பெருவெடிப்பில் கடவுளின் பங்கு என்ன? என்ற மற்றொரு விவாதத்திற்குரிய கேள்வியும் கொஞ்சம் போல் வந்து செல்கிறது.

இது அறிவியல் புத்தகம் என்பதற்காக, பூச்சி பூச்சியாக பயமுறுத்தும் சமன்பாடுகளெல்லாம் இல்லை. புத்தகம் முழுக்க தேடினாலும் தட்டுப்படும் ஒரே ஒரு சமன்பாடு E=mc2 மட்டும்தான். மற்றபடிக்கு சுவாரஸ்யங்கள் நிறைந்த வரலாறு இது.

உதாரணத்திற்கு, சில மட்டும் இங்கே.

அறிவியலை எப்படி வரையறுக்கிறார் என்று பாருங்கள்..
"The whole history of science has been the gradual realization that events do not happen in an arbitrary manner, but that they reflect a certain underlying order ..."

அப்படியானால் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துமே ஏதோ விதி்க்குட்பட்டு நடக்கின்றன.
நாம் இது வரை கண்டறிந்திருக்கும் அறிவியல் விதிகள் எல்லாமுமே குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வர்ணிக்கின்றன. இவை அனைத்துமே ஒரு பேரியக்கத்தின் பகுதிகள் எனில், அந்தப் பேரியக்கத்தை வர்ணிப்பதற்கும் ஒரு விதி இருக்கவேண்டும். அதுதான் யுனிஃபைட் தியரி. இது வரை நாம் அதை கண்டுபிடிக்கவில்லை. அந்த யுனிஃபைட் தியரிக்கான தேடல் பல பதிற்றாண்டுகளாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த யுனிஃபைட் தியரியை நாம் கண்டுபிடிப்பதோ கண்டுபிடிக்காமல் போவதோ கூட முன் நிர்ணயிக்கப்பட்டு விட்ட ஒன்றுதான்.

நம் வழக்கில் சொல்வதானால், அனைத்தும் விதிப்படிதான் நடக்கும். ஏனெனில் நாமும் இந்தப் பேரியக்கத்தின் ஓர் அங்கம். கொஞ்சம் நிதானமாக இந்த வரிகளை யோசித்துப் பாருங்கள். இதெல்லாம் முதல் அத்தியாயத்தில் வரும் செய்திகள். இதைப் படித்து விட்டு ரொம்ப நேரத்திற்கு இதைப்பற்றியே அசைபோட்டுக்கொண்டிருந்தேன். பல விசித்திரமான சாத்தியக்கூறுகளில் உங்களை இட்டுச்செல்லும் பாதைகள் இதில் ஒளிந்திருக்கின்றன. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

இன்னொரு கேள்வி.

இறந்தகாலம் நம் நினைவில் இருப்பது போல், ஏன் எதிர்காலம் நம் நினைவில் இருப்பதில்லை? இந்த கேள்வி ரொம்ப அபத்தமாகத் தெரிகிறதல்லவா? ஆனால் இதற்கும் தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதிக்கும் தொடர்பு உண்டென்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

காலம் அம்புதான். ஆனால் ஓர் அம்பு அல்ல. மொத்தம் மூன்று அம்புகள். பிரபஞ்சத்தின் அம்பு, தெர்மோடைனமிக்ஸ் அம்பு, சைக்கலாஜிக்கல் அம்பு. இந்த மூன்று அம்புகளும் ஒரே திக்கில் பயணிக்கும் போதுதான் இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றமுடியும் என்கிறார். தெர்மோடைனமிக்ஸ் அம்பு நேரெதிராக இருக்கும் ஒரு பிரபஞ்சத்தில் மனிதன் உயிர்வாழ நேர்ந்தால் அவனுக்கு எதிர்காலம் மட்டுமே நினைவிலிருக்கும். கடந்த காலமல்ல. சுவையான அறிவியல் புனைவு மாதிரி தோன்றுகிறதல்லவா?

நாலு அப்சர்வேஷன் எடுத்து அதுக்கு பொருந்தற மாதிரி லேப் ரெக்கார்ட்டில் கிராஃப் போட்ட அனுபவம் உண்டா? அப்படித்தான் astro physics ம்.. ஒரு கட்டத்துக்கு மேல் எதையும் தீர்மானமாகச் சொல்வது என்பது இயலாத காரியம்.. ஒரு தியரி யாராவது சொன்னால் கூட அது சரியா தவறா என்று யாராலும் உடனே சொல்லிவிட முடியாது.. நாலைந்து முறை அளவீடுகள் எடுத்து, கிட்டத்தட்டவாவது அது ஒத்துப்போகுதான்னு பாத்துதான் எதுவும் சொல்லமுடியும். இந்த ஒரு சுதந்திரத்தினாலேயே பல கட்டுப்பாடுகள் களைந்த கற்பனைகளுக்கு இடம் கொடுக்கிறது தத்துவ இயற்பியல்.

மெய் எண்கள், கற்பனை எண்கள் என்று பள்ளிக்காலத்தில் படித்திருப்போம். கணிதத்தில் ஒருசில குறிப்பிட்ட குழப்ப நிலைகளைக் கடப்பதற்கு மெய்எண்கள் மட்டும் போதாது. அதனால்தான் கற்பனை எண்கள் தோன்றின. அப்படித்தான் பிரபஞ்சத்தின் காலக்கணக்கின் குழப்பங்கங்களுக்காக கற்பனைக் காலம் ஒன்றை அறிமுகம் செய்கிறார். இந்தக் கற்பனைக் காலத்தின் மிகப்பெரிய சவுகரியம், இந்தக் காலத்தில் நாம் ஜாலியாக முன்பின்னாக ஊஞ்சலாட முடியும். முன்னாடி செல்வது மாதிரியே நாம் பின்னாடியும் செல்லும் சவுகரியம் இதிலுண்டு. இந்தக் கற்பனைக் காலத்தில் ஏறக்குறைய துல்லியமாக பிரபஞ்சத்தின் தோற்றத்தை வர்ணிக்க முடியும்.

இதுபோல் இன்னும் ஏராளமான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன காலத்தின் வரலாற்றில்.

ஆசிரியரைப்பற்றி:



தத்துவ இயற்பியலின் ஆதார ஸ்ருதி, Suppose என்ற பதம் தான். Suppose இது இப்படி இல்லாமல் இருந்திருந்தால் அது எப்படி இருக்கும் என்பது மாதிரியான தர்க்கங்கள்தான் அடுத்தடுத்த புரிதல் நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்கின்றன. நியுட்டனுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் பிறகு மாபெரும் தத்துவ அறிவியல் மேதையாக கொண்டாடப்படுபவர் Stephen Hawking. கலீலியோ பிறந்து சரியாக 300 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Lucasian Professor of Mathematics பதவியை வகித்தபின் சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன்னுடைய இருபதாவது வயதில் Motor Neuron Disease க்கு தன் உடல் இயக்கங்கள் அனைத்தையும் பறிகொடுத்தாலும் அறிவியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் தொடர்ந்து, விடாமல் இயங்கி வருகிறார்.

கொசுறு:

கார்பஸ் கடிகாரம் (http://en.wikipedia.org/wiki/Corpus_Clock) மற்றொரு சுவாரஸ்யம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் Paa திரைப்படத்தில், flashback காட்சிகளில் இந்தக் கடிகாரம் ரொம்ப அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும்

Auro விற்கு கிச்சடி மேல் இருக்கும் அளவுக்காவது உங்களுக்கு அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் படித்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு கதை சொல்லும் லாவகத்தில் நம் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பிரபஞ்ச வலம் வரக் காத்திருக்கிறார் Stephen Hawking.

இரண்டு நினைவுகள்:

* கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்சத்தின் பிரமாண்டம் தெரியவரும் போது நாமெல்லாம் எவ்வளவு தக்குணுன்டு என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் வந்துசெல்கிறது. "என் ஊர், என் மாநிலம், என் நாடு என்று அடித்துக்கொண்டிருக்கிறீர்களே. இதெல்லாம் ஒரு தூசு கூட கிடையாதுடா மடையா" என்று பொட்டில் அறைகிறது உண்மை.

* நான் பள்ளியில் படித்த வரை, எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது அணுவைப் பிளந்தால் கிடைப்பது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான். இவைதான் primitive particles of matter. அதாவது இதற்கு மேல் எதையும் பிளக்கமுடியாது என்பது அதன் அர்த்தம். நானும் அதையேதான் நம்பிக்கொண்டிருந்தேன் இப்புத்தகத்தைப் படிக்கும் வரை. ஆனால், மனிதகுலம் எப்பவோ இவற்றையும் பிளந்து குவார்க்ஸ் (quarks-http://en.wikipedia.org/wiki/Quark) வரை சென்று விட்டது.

நான் பள்ளிக்காலம் முடித்தது ஏறக்குறைய இப்புத்தகத்தின் முதற்பதிப்பு வெளிவந்து கால் நூற்றாண்டுக்குப் பின். நம் பள்ளிப் பாடத்திட்டங்கள் காலத்தால் ஏன் இவ்வளவு பின்தங்கியிருக்கின்றன?

- Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Tuesday, December 15, 2009

54. MIDNIGHT'S CHILDREN

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

A son who will never be older than his motherland - neither older nor younger. There will be two heads; there will be knees and a nose, a nose and knees. He will have sons without having sons! He will be old before he is old! And he will die before he is dead!

If one wishes to remain individual in the midst of the teeming multitudes, one must make oneself grotesque.

-------------------------------------------------------------
புத்தகம் : Midnight's Children (புதினம்)
ஆசிரியர் : Salman Rushdie
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Vintage U.K.
முதற்பதிப்பு : 1981ம் ஆண்டு, Jonathan Cape Ltd.
விலை : தோராயமாக 300 ரூபாய்
பக்கங்கள் : 463 (தோராயமாக 43 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------------

சிறப்புகள்:

1) 1981ம் ஆண்டு புக்கர் பரிசு
2) புக்கர் பரிசுகளில் சிறந்த புத்தகத்திற்கான பரிசு இருமுறை
3) Time இதழ் தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் இடம்பெற்ற ஒரே இந்தியப் புதினம்
4) BBC தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் இடம்பெற்ற இரு இந்தியப் புதினங்களில் ஒன்று



சலீம் சினாய். புத்தகத்தின் முதல் பக்கத்தில் பேச ஆரம்பிக்கிறார். ஆகஸ்ட் 15, 1947 அன்று நள்ளிரவு சரியாக பன்னிரண்டு மணிக்குப் பிறந்ததாகச் சொல்கிறார். வித்தியாசமான கதைக்களம் எனப் புத்தகத்தின் முதல் பத்தியிலேயே தெரிந்தது. புத்தகத்தின் தலைப்பில் Children என்று பன்மையில் இருக்கும்போது சலீம் மட்டும் தனியாகப் பேசுகிறாரே என்று, கதைக்களம் எப்படி எல்லாம் இருக்கலாம் என கொஞ்சம் கற்பனை செய்துகொண்டு தொடர்ந்தேன்.

புத்தகம் படித்து முடித்தவுடன் கதைமாந்தர்கள் பெயரெல்லாம் எழுதி, பெயர் சூட்டப்பட்ட முறைகளை, புத்தகம் சொன்ன கதையை, அது சொல்லப்பட்ட விதத்தை யோசித்துப் பார்த்தேன். இப்புத்தகத்தை எல்லோரும் ஏன் இந்தப் புகழ் புகழ்கிறார்கள் என்பதை அப்போது உணர்ந்தேன். ஆங்கிலத்தில் எனது விருப்பப் பட்டியலில் முதலிடம் பெறும் புதினம்! நெடுங்குருதிக்குப் பிறகு நான் படித்த சிறந்த புதினம். நீங்கள் இப்புத்தகம் படிக்கும்போது மையக்கதையின் சுவாரசியம் பாதிக்கப்படாத வகையில் இப்புத்தகம் பற்றிய நான் இரசித்த விசயங்களை உங்களோடு பகிர்கிறேன்.

ஆசிரியரைப் பற்றி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இப்புத்தகத்தைத் தீபா மேத்தா (Deepa Mehta) திரைப்படமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில், நான் இப்பதிவின் தொடக்கத்தில் சொன்ன முதல் வசனத்தைப் பேசப்போகிறவர்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர். சல்மான் ருஷ்டி. பிறந்த வருடம் 1947!

சலீம் சினாய் இந்திய நாட்டுடன் சேர்ந்தே பிறக்கிறார். இந்தியாவின் போக்கைப் பிரதிபலிக்கப் போவதாக எண்ணி, சலீமை மொத்த தேசமும் உன்னிப்பாகக் கவனிக்குமென ஜவகர்லால் நேரு சலீமுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்த சலீம் வரலாற்றுக்குள் எப்படி தள்ளப் படுகிறான், வரலாற்றால் எப்படி மறுக்கப்படுகிறான், அவனுக்குப்பின் வரலாறு என்னவாகப் போகிறது, அவனின் பாதிப்பு எப்படியெல்லாம் தொடரப் போகிறது என்பதை இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் என்ற மூன்று நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளின் போக்குகளில் சல்மான் ருஷ்டி தந்திருக்கும் புதினமிது. 1915 முதல் 1977 வரை பயணிக்கிறது புதினம். முதல் உலகப்போர் முதல் எமெர்ஜென்சி வரை.

வரலாற்றின் போக்கில் சுவாரசியம் தேடுபவர்களுக்கு நல்ல புத்தகம். ஒரு பிரதமரும் அவரின் வாரிசான இன்னொரு பிரதமரும் சோசியக்காரர்களின் கைப்பொம்மையாக இருந்தது, சுதந்திரகாலத்து பம்பாய், டென்சிங் எவரெஸ்ட் தொட்டது, முகமது நபிகளின் பொருள் ஒன்று இந்தியாவில் திருடுபோனது, கம்யூனிசம், பம்பாய் மாகாணத்தில் இருந்து குஜராத் பிரிந்தது, வங்காளதேச பிறப்பு, இந்தியாவின் போர்கள், பக்ரா நங்கல் அணையில் கீறல் விழுந்தது, ஜனதா மோர்ச்சா கட்சி தோன்றியது எனப் பல நிகழ்வுகள் கதையின் போக்கோடு நிகழும். ஒரு ஜனாதிபதி நிர்வாணமாக நாடு கடத்தப்படும்போது சலீம் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பார்!

மிகக்கொடூரமான நிகழ்வான ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் படுநேர்த்தியாக இலக்கிய நயத்துடன் சொல்லியிருப்பார். அந்தத் துப்பாக்கிச் சூடுகளுக்குத் தப்பித்து இரத்தக் கறைகளுடன் வீடு வருபவனிடம் மனைவி சொல்வாள்: "எப்ப பாத்தாலும் ஒங்களுக்கு வெளையாட்டுதான்; ஏதாவது சாயத்தைப் பூசிட்டு வந்திட்டு, இரத்தமுன்னு சொல்லி என்கிட்டே சில்மிஷம் செய்றதே வேலையாப் போச்சு".

வரிகள் உயர்த்தப்பட்டு, வரி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வருமானம் குறைக்கப்பட்ட ஒருநாளில் ஒரு வசனம்: "மேற்சட்டையை தூக்கிக்கொண்டு காற்சட்டையை இறக்கிவிட்டு மலம்கழிப்பது போல....".

இந்தியாவின் படைத்தளபதி ஒருவர் வேறொரு நாட்டில் சிறைப்பிடிக்கப் பட்டதாக செய்திவந்த நாளில் இந்திய ஜனாதிபதி விடுத்த அறிக்கை: "துரதிஷ்டவசமாக இச்செய்தி முழுவதுமாக உண்மையில்லை - Unfortunately this report is untrue completely". அறியாமை இல்லாதவர் என தன்னைக் கூறியவரைக் கண்டித்து போஸ்டர் அடித்த அரசியல் கதையெல்லாம் தமிழ்நாட்டிலேயே உண்டு.

அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவி செல்லாதென அறிவித்ததில் இருந்து எமெர்ஜென்சி வரையுள்ள 13 நாட்களை ஒரு கர்ப்பிணியின் பிரசவவலியோடு ஒப்பிட்டு கிட்டத்தட்ட நிறுத்தக் குறிகளைத் தவிர்த்து எழுதியிருக்கும் இரண்டரை பக்க அளவுள்ள பகுதி, புத்தகம் படித்த எவராலும் மறக்கமுடியாத இடம். கதையில் மிகவும் குறைந்த பக்கங்களில் இந்திரா - சஞ்சய் காந்திகள் வந்திருந்தாலும் புத்தகம் வெளிவந்த பிறகு இந்திரா சல்மான் மீது வழக்கு தொடரும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகளைத் தாக்கியிருப்பார். சஞ்சய் காந்தியின் கட்டாய கருத்தடை திட்டப்படி, பாலினம் மாறும் சக்தி படைத்த ஒருவனுக்கு இரண்டு முறை *ectomy செய்திருப்பார்கள்!

எமெர்ஜென்சி காலத்தை ஒருவனின் காசநோயுடன் ஒப்பிட்டு இருப்பதும், நாட்டின் பொருளாதார நிலைமையைப் பிரதமரின் சிகையலங்காரத்துடன் ஒப்பிட்டிருப்பதும், ஒரு நாளின் செய்தித்தாளில் உள்ள நிகழ்வுகளை வைத்து வரலாற்றை மாற்றி எழுத சலீம் முயற்சிப்பதும் பிரம்மாண்டமான எழுத்துநடை. Buddha, Alpha, Omega போன்ற வார்த்தைகளுக்கு வேறொரு அர்த்தம் கொடுத்து உபயோகித்திருப்பதும், கதைக்காக உண்டாக்கியிருக்கும் Thunderbox, Mandog, Heartboot போன்ற வார்த்தைகளும் அருமையான சொல்லுபயோகங்கள்.

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தில் கடவுள்கள் இல்லாமலா? நிறையவே உண்டு. ஒரு காமக்கொடூரன் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் கலவியில் இருப்பான். இருவருக்கும் தம்பதிகளான கடவுளர்களின் பெயர்கள். அக்கடவுள்கள் மலைமீது செய்யும் தெய்வீக யுத்தத்தைப் பூமியில் பிரதிபலிப்பதாகச் சொல்வார். மும்பாதேவியை விரட்டிவிட்டு கணேசக் கடவுள் பம்பாயை ஆக்கிரமித்ததை அட்டகாசமாகச் சொல்லியிருப்பார். ஜோசப் என்ற தனது காதலனின் விருப்பப்படி, ஒரு குழந்தையை வளர்த்துக்கொண்டு கடைசி வரை கன்னியாகவே ஒருத்தி இருப்பாள்; அவளுக்குப் பெயர் மேரி.

இரண்டாண்டுகள் திருமண வாழ்வில் தனது மகளுக்குக் கன்னித்திரை கிழியாததைக் கண்டறியும் ஒரு தந்தை; கண்ணாடிப் பிம்பங்களாக உலகைப் பார்க்கும் ஒருவன்;செருப்புகளுக்குத் தீ வைக்கும் ஒரு பெண்; திருக்குரானின் அதிகாரங்களை மறுவரிசைப்படுத்த முயலும் ஒருவன்; குழந்தைகளை வெறுக்கும் ஒரு gynaecologist; எண்களையும், நிறங்களையும் கூட கதைமாந்தர்களாக்கிக் கொண்ட கதைக்களம்; கதைக்குக் குரல் கொடுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்கள்; இன்னும் பல வித்தியாசமான கதாப்பாத்திரங்கள்.

புதினத்தின் மையக்கதையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், திரைப்படமாய்ப் பார்ப்பதற்கு முன், இப்புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்களின் ஞாபகசக்தி, ரசனை மற்றும் கற்பனைத் திறன்களோடு பரமபதம் விளையாடும் ஒரு புத்தகம். பாம்பும் மேலேற்றிவிடும்; ஏணியும் கீழ்தள்ளிவிடும்! சாபங்களாகும் வரங்களுக்காத் தவமிருப்பதே வாழ்க்கை!

கொசுறு:

புத்தகம் படித்து முடித்தவுடன் அதன் அட்டைப் படங்களைப் பற்றி இணையத்தில் துலாவினேன். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வோர் அர்த்தம். ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கப்பட்ட ஓர் அட்டைப்படமும் உண்டு.

BBC தேர்ந்தெடுத்த இரு இந்தியப் புதினங்கள் என்று ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா? அந்த இரண்டு புத்தகங்களின் பொதுவான ஓர் அம்சம் உண்டு. அதுதான் Pickle Factory! விரைவில் அதையும் பதிவிடுகிறேன்.

Most of what matters in our lives takes place in our absence.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Saturday, December 12, 2009

53. வாய்மொழியில் உலவும் வரலாறுகள்

----------------------------------------------------------------
புத்தகம் : வாய்மொழியில் உலவும் வரலாறுகள்
ஆசிரியர் : கழனியூரன்
வெளியிட்டோர் : சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ 80
பக்கங்கள் : 143

----------------------------------------------------------------

நான் ஹாரி பாட்டர் படித்ததில்லை. சில நண்பர்கள் அதைப்பற்றிப் பேசுகையில் படிக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் மேலெழுகிறது. வெறும் மாயாஜாலக் கதை என்றில்லாமல்,வெவ்வேறு வயதினருக்கும், வெவ்வேறு அனுபவமுள்ளவர்களுக்கும் அதில் விஷயமிருக்கிறது என்றொரு தோழி சொன்னார். அதில் உண்மை இருக்கலாம் என்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு. என் பாட்டி சொன்ன கதைகளையும் அப்படியே தான் நம்புகிறேன். லாஜிக் என்ற கூட்டுக்குள் அடைபடாமல், கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறக்கும் கதைகள் அவை. என் பாட்டி, என்னை ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி அழைத்துப் போயிருக்கிறாள்; கால்கள் பரவாத தேசத்தில், தேவதைகளின் சிறகுகளுக்குள் தூங்கவைத்திருக்கிறாள்; பிள்ளையுண்ணும் அரக்கனின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறாள்; இரவுகளில் கிளியாகிவிடும் இளவரசியுடன் பேசவைத்திருக்கிறாள். பள்ளி விட்டு வரும் வழியில் பிரிந்து போகும் ஏதோ ஒரு வழி என்னை இன்னொரு உலகுக்கு இட்டுச் செல்லும் என்று நம்புமளவுக்குப் என்னைப் பாதித்திருக்கிறாள்.

என் பாட்டிக்குப் பிறகு நான் பலரிடம் கதை கேட்டிருக்கிறேன். ஆனால், அவள் சொன்ன கதைகளின் அனுபவத்தை வேறெவரிடமும் பெறமுடியவில்லை. எனக்கும், திகட்டத் திகட்டப் பரந்துகிடக்கும் அக்கற்பனை வெளிக்குமான இடைவெளியை அவளால் மட்டுமே நிறைக்க முடிந்திருக்கிறது. சமீபத்தில் எழுத்தாளர் கழனியூரனை நேரில் சந்தித்து உரையாடியபோதும், அவரின் நேர்முகம் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்த்தபோதும் இக்கருத்து எனக்கு மேலும் வலுவுறுவதாய் இருந்தது.



கதைசொல்லியாய் இருப்பதொன்றும் இலகுவான காரியமில்லை; போலவே கதை கேட்பதுவும். பண்டைக் காலங்களில் இந்தக் கதை சொல்லிகளுக்கும் கதை கேட்போருக்குமிடையேயான சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி, கதைகளைப் பகிர்ந்துகொண்டு பிரிந்திருக்கிறார்கள். சில நாட்களில் தொடரும் போட்டு மீண்டும் பிறிதொரு நாள் கதைப்பதும் உண்டு. இதில், கதைசொல்லிக்கும், கதை கேட்போனுக்குமான மனவோட்டம் ஒத்துப்போகாதபட்சத்தில் இவ்வமைப்பு நிச்சயமாகத் தோல்வியுறுகிறது. மேதாவித்தனமோ, அறியாமையோ...இருவரும் ஒரு நிலையில் இருக்கையில் பகிரப்படும் செய்தியில் இருவருமே ஒருமிக்க முடியும். ஒருவன் பேசும் மொழியை, அல்லது செய்யும் ஒரு சமிக்ஞையைப் புரிந்துகொள்ள ஒத்த அலைவரிசையுடைமை அவசியமாகிறது. வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் கதை சொல்லிகளாகவும் இருந்ததில்லை; கதை கேட்போராகவும் இருந்ததில்லை. இரண்டுக்குமே தனியானதொரு அகவமைப்பு தேவையாய் இருந்திருக்கிறது.

இப்போதிருக்கும் தலைமுறையும் சரி, இனி வருகின்ற தலைமுறைகளும் சரி, இது போன்றதொரு அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு அருகியே போய்விட்டது. கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்துவிடுகிறார்கள்? கதை கேட்கும் ஆர்வம் குழந்தைகளிடத்திலும் குறைந்து போய்த்தானே இருக்கிறது? குழந்தைகளை லாஜிக் இயந்திரங்களாகத்தானே வளர்த்துவிடுகிறோம். பாட்டிகள் கதை சொன்னாலும், அவர்கள் யதார்த்தத்தை மீறிய அந்த மிகை யதார்த்தக் கதைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. யதார்த்தம் தாண்டிய அழகியலும், வாழ்க்கைத்தத்துவமும் நிறைந்ததாகவிருக்கும் இக்கதைகளின் சங்கிலி பாதியிலேயே அறுந்துவிட்டது.

இச்சங்கிலியை ஒட்ட வைக்கும் ஒரு நல்ல முயற்சியாக இந்நூலைப் பார்க்கிறேன். நாட்டார் வழக்கில் இருக்கும் பல கதைகளில் 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு இது.

'விளிம்பு நிலை மக்களின் வரலாறுகளைச் சொல்லும் நாட்டார் கதைகளாக மட்டும் இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் அமைந்துவிட்டன. மக்கள் வரலாற்றைத் தொகுக்க வேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள் இத்தகைய தொகுப்புக் கதைகளைக் கவனிக்க வேண்டும்' என்கிறார் ஆசிரியர்.

மிகை யதார்த்தம் மட்டுமன்றி, நம் தொன்மையின் வேர்தேடு கேள்விகளுக்கான பல விடைகளையும் இக்கதைகள் கொண்டிருக்கின்றன. என் மூதாதையர் எப்படி வாழ்ந்தனர், அவர்களின் அகம் எப்படி இருந்தது, புறம் எப்படி இருந்தது, அவர்களின் காதல் எதைக்கொண்டாடியது, அவர்களின் அறம் எதைக்காத்தது என்பனவற்றுக்கான வாய்மொழி இலக்கிய ஆதாரங்களாக இருந்த இக்கதைகள் இப்போது எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.

கழனியூரன் அவர்களிடம் பேசும்போது எழுத்தாளர் தி.க.சி பற்றியும், எழுத்தாளர் கி.ரா. பற்றியும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர்கள் எத்தனை சுவாரஸ்யமான மனிதர்கள் என்ற பதங்கள் அடிக்கடி வந்துவிழுந்தவண்ணமிருக்கும். எனக்குக் கழனியூரனைப் பற்றிய எண்ணமும் இதுவாகவேயிருக்கிறது. இக்கதைகளின் வாசிப்பை, நான் என் பாட்டியிடம் கதை கேட்பதான அனுபவமாகவே உணரலானேன். அருகிருந்து ஒரு கதைசொல்லி கதைசொல்லும் அற்புத உணர்வைக் கொடுக்கவல்லதாயிருக்கிறது இந்நூலின் நடை.

சாமான்ய மனிதர்களின் வரலாறு எப்போதும் முக்கியத்துவம் பெறுவதில்லை. உயர் வாழ்க்கை வாழ்ந்த ஒருவனைப்பற்றிய குறிப்புகள் அறியப்படாமலேயே அழிந்துபோகின்றன. வரலாற்றின் நோக்கம் தறிகெட்டு கெட்டுப்போயிருக்கிறது. எளிய மனிதர்களின் வாழ்க்கை வாய்மொழிக்கதைகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை எழுத்துவடிவமாக்கும் பயணத்தில் ஒரு நல்ல படி இந்நூல். என் பாட்டன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஷாஜஹான் என்ன செய்தான் என்பது எனக்குத் திணிக்கப்பட்டுவிடுகிறது. என் பாட்டனின் வாழ்க்கையை அறிமுகம் செய்ய உதவுகிறது எனும் வகையில் இத்தொகுப்பு நன்றிக்குரியது

பின் குறிப்புகள் :

1. இத்தொகுப்பை எழுத்தாளர் கழனியூரன் அவர்கள் எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். அவருக்கு நன்றி!

2. பேனா எடுத்துக்கொண்டு உட்கார்ந்து திருத்துமளவுக்கு அச்சுப்பிழைகள் இருப்பது குறித்து மிக வருத்தம். அடுத்த பதிப்பில் பதிப்பகம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

-சேரல்
(http://seralathan.blogspot.com/)