Thursday, December 23, 2010

71. JAPANESE ORCHID

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

------------------------------------------------------------
புத்தகம் : Japanese Orchid
ஆசிரியர் : Rei Kimura
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Mehta Publishing House
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 249 ரூபாய்
பக்கங்கள் : 244 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)

------------------------------------------------------------

உலகிலுள்ள மிகச்சிறிய தண்டனைகளிலெல்லாம் மிகச்சிறிய தண்டனை, மிகச்சிறிய
கதையுடைய மர்மப் புதினத்தின் கதை சொல்லாமல் அதைப்பற்றிச் சொல்வது.

டெட்சுயோ அகினிசோ. 2000 தொழிலாளர்கள் கொண்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின்
அதிபர். பிறப்பால் ஜப்பானியரான அமெரிக்க வியாபாரக் காந்தம் (business
magnate). DNA துறையில் கொடிகட்டிப் பறக்கும் இவரின் நிறுவனம் செய்யும்
அனைத்து சோதனைகளுக்கும் தனது தாயின் பெயரிடும் அளவிற்குத் தாய்ப்பாசம்.
ஒருநாள் அவருக்கு வரும் மின்னஞ்சல்தான் கதையின் ஆரம்பம். அவரின் குடும்ப
ரகசியங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி அவரின் நற்பெயரைக்
கெடுக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறது யாரோ அனுப்பிய அம்மின்னஞ்சல்.

தனது வழக்கறிஞர், ஒரு தனியார் துப்பறியும் நிபுணர், அந்நிபுணரின்
ஜப்பானிய உதவிப்பெண். இம்மூன்று பேரின் உதவியுடன், மிரட்டல்காரனைக்
கண்டுபிடிக்க முயலுவதும், மிரட்டல்காரனின் அடுத்தடுத்த மின்னஞ்சல்களும்,
துரத்திவ‌ரும் பழங்கதையை வெல்வதற்காக ஓடுவதும்தான் கதையோட்டம். இதுவே
பின்னட்டைக் கதைச்சுருக்கம்.

60 வயதில் புகழின் உச்சியில் இருக்கும் காலத்தில் மிரட்டல்காரனைப் பற்றித்
தனது குடும்பத்திற்குக்கூட சொல்லாமல் மறைத்துத் தத்தளிக்கும் அகினிசோ.
தனது தொழில்நிமித்தம் சில ஆண்களின் நிர்வாணப் படங்களைத் தனது
மடிக்கணினியில் வைத்திருந்து, அதனால் மனைவி என்ற உறவை இழக்கும்
துப்பறியும் தொழில் நிபுணர். ஒவ்வொருவரிலும் சில நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக்
கொள்ளும் அளவிற்குப் புத்தகம் அவர்களின் சொந்த வாழ்க்கையின் சில
பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது.

புத்தகத்தின் மிகப்பெரிய பலம் அதன் மையக்கதை. எனக்கிருக்கும் ஆங்கில
novelophobiaவையும் மீறி, எல்லா வரிகளையும் படிக்கச் செய்ததும் அதே
மையக்கதைதான். புத்தகத்தின் கடைசி 100 பக்கங்களை ஒரே மூச்சில் படித்து
முடித்தேன். இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூரில் நடக்கிறது
புத்தகத்தின் கரு. அக்காலகட்டத்தில் வாழ்ந்த இன்றைய சிங்கப்பூர் மக்கள்
மறக்க நினைக்கும் காலம். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பும் அதன் வடுக்களும்
சிங்கப்பூரின் பழைய மனிதர்களின் நினைவுகளில் ஜப்பானியர்களின்மேல் ஒரு
பயத்தை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அதே காலத்தில்
சிங்கப்பூரில் இருந்த ஒரு ஜப்பானியப் பெண்ணை, அறுபது வருட‌ங்கள் கழித்து
ஒரு நியூயார்க் மனிதனுடன் தொடர்புபடுத்துவதே கதையின் சாரம்.

சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் நான் மிகவும் ரசித்த தலைப்பும்,
பெயர்க்காரணமும் இப்புத்தகம்தான். Japanese Orchid. கேட்பதற்கு
இனிமையாகவும் மலர்களை ஞாபகப்படுத்துவதாகவும் இருக்கும் இச்சொற்கள்,
புத்தகம் படிக்கும்போது மனித சமூகத்தில் பெண்மீதான போர்க்காலக் கொடுமைகளைப்
பதிவுசெய்கின்றன. தன்னைப் பலசாலியாகக் காட்டிக்கொள்ள எப்போதும் பெண்கள்
குழாம்சூழ வலம்வரும் ஆண்மையற்ற ராணுவ மேலதிகாரி; வன்பாலியல்
பலாத்காரத்தால், உள்ளுறுப்புகள் சிதைந்து இறந்து போன பெண்ணைச் சுற்றி
எக்காளமிடும் சில அதிகாரிகள். இதுபோன்ற சில கடினமான விசயங்களும் உண்டு.

நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர். மூன்றே இடங்கள்தான். ஒரு ஹோட்டல்,
ஜப்பானியர்களுக்கான‌ கல்லறை, ஆசியாவின் பணக்கார நாட்டின்
ஒதுக்குப்புறத்தில் இருக்கும் வசதி குறைந்தவர்களின் குடியிருப்பு ஒன்று
என்று சிங்கப்பூரையே சலிக்காமல் சுற்றிக்காட்டும் கதை. விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய கதைமாந்தர்கள்தான். சுஜாதா அவர்கள் சொன்னதுபோல் இந்த
நல்ல கதையும், முடிவதற்குச் சற்று முன்தான் ஆரம்பிக்கிறது.

Japanese Orchid - போர்க்காலங்களில் மறைக்கப்பட்ட பெண்களுக்கான ஒரு
பெண்குரல். இத்துடன் எனக்கான சிறுதண்டனையையும் நானே முடித்துக்
கொள்கிறேன்.

அனுபந்தம்:

1. உலகிலேயே புற்களுக்கு அடுத்தபடியாக அதிக சிற்றினங்களைக் (species)
கொண்டது ஆர்கிடுகள்தான். இதை எனக்கு சொன்ன புத்தகத்தை இம்மாத இறுதிக்குள் உங்களுக்கும் சொல்கிறேன்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, November 25, 2010

70. நீர்ப்பறவைகளின் தியானம்

பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!

----------------------------------------
புத்தகம் : நீர்ப்பறவைகளின் தியானம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 208 பக்கங்கள்
விலை : ரூ. 120

----------------------------------------

“மனோவேகம்“ என்றொரு பதம் உண்டு. உண்மையில் மனதின் வேகத்தைக் கணக்கிட முடியுமா என்றால் எதிர்மறைதான். மனிதமனம் ஒவ்வொரு நிமிடத்திலும் சிலநூறு எண்ணங்களைப் பரிசீலிப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வறிக்கை. ஒன்றோடொன்று சம்பந்தமில்லாததாகத் தோன்றும் அந்த எண்ணச்சிதறல்களுக்கிடையில், மெல்லிய சரடொன்று ஊடுபாவியிருப்பது நிதானித்துப் பார்க்கையில் மட்டுமே புலப்படும். இந்தச் சரடு, எண்ணங்கள் அல்லது ஞாபகங்கள் இரண்டை இணைக்கும் வலுவான கயிறல்ல. ஒரு சிறிய நூல் மட்டுமே. இந்த இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கு இது ஒன்றே போதும். கால தூரங்கள் தொலைத்து சம்பந்தமே இல்லாத ஊரில் ஜனத்திரள்களுக்கு மத்தியில் ஓரிரு வினாடிகளில் கடந்து செல்லும் ஒரு நபர், ஞாபகத்தின் வேறேதோ அடுக்கில் புதைந்திருந்த உங்களுக்கு மிகப்பரிச்சயமான வேறொருவரை - நிச்சயமாக இவர் அவர் அல்ல என்று தெரிந்திருந்தபோதும் - நினைவுபடுத்திச் செல்வதை உணர்ந்திருக்கிறீர்களா? கல்லூரியில் நண்பர்களுடன் பார்த்த ஒரு திரைப்படம், அதன்பின் பார்க்கப்படும் ஒவ்வொரு முறையும் கல்லூரி வாழ்க்கையின் ஞாபகச்சின்னமாக அவதாரமெடுப்பதை? அப்படித்தான் யுவனின் சிறுகதைகளும் பயணிக்கின்றன. ஏதோ ஒரு நினைவைப் பின்பற்றியபடி, அங்கங்கே கிளைபிரிந்து அடுத்தடுத்த நினைவலைகளில் தாவியபடி செல்கின்றன.

எந்தவொரு கதையும் ஒரு தனிக்தையல்ல. ஒரு பெருங்கதையின் ஒரு பகுதிதான். அதே மாதிரி, ஒரு கதையில் துணைப்பாத்திரமாக வரும் ஒருவன், அவனுக்கான கதையின் நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எவ்வளவு நிஜம். யுவனின் சிறுகதைகள், அந்த ”அவனு”க்கும் வேண்டிய இடைவெளியைத் தருகின்றன. ஒரு துணைப்பாத்திரமாக இல்லாமல், நாயகனுக்கு நிகழும் நிகழ்ச்சிகளின் அடர்த்தி குறையாமல், அவனைப் போலவே, உணர்வுகள் உள்ள ஒருவனாகக் கடந்து செல்ல.

இது மையக்கதையின் போக்கைத் தடைசெய்யாதா என்றொரு கேள்வி எழலாம். இங்குதான் யுவனின் சாகசம் ஒளிந்திருக்கிறது. அவர் மையக்கதை என்ற ஒன்றையே கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு கதையும் அதனளவில் ஒரு தனிக்கதையே. இவர் கதைகளுக்குக் கதை என்ற பதத்தைவிட பகுதி என்பதே பொருந்துமென நினைக்கிறேன். ஒரு கதையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு விதமான சஞ்சலத்தை நமக்குள் விதைக்கின்றன. ஒரு சிறுகதையை முடிக்கையில், எந்தவொரு பகுதியும் மனதில் நிலைக்காமல், அவற்றிக்கு பொதுவானதொரு உணர்ச்சியும் சில சமயம் எஞ்சி நிற்கிறது.

தன்னிலையில் கதைசொல்லும் உத்தி எழுத்தாளர்களுக்கு எப்போதுமே அலாதியான ஒன்று. இது, சொல்லப்படும் கதைக்கு ஒரு சிட்டிகை அதிகப்படியான நம்பகத்தன்மையைத் தருவதோடு சொல்லும் நடையின் சரளத்திற்கும் கை கொடுக்கிறது. யுவனும் கூட முன்னுரையிலேயே இதனைப்பற்றி(யும்) பேசுகிறார். எந்தக்கதையில் வரும் “நானு“ம் நானல்ல என்று அங்கேயே தெளிவும் படுத்திவிடுகிறார். ஆனாலும், எல்லாக்கதைகளிலும் கரட்டுப்பட்டியில் பிறந்து, வங்கியில் பணிபுரிந்து, சிகரெட் பிடித்தபடி எழுத்தாளனாகப் பரிணமிக்கும் அந்த ”நான்” பிம்பம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. இந்தப் பிம்ப ஒற்றுமை அனைத்து சிறுகதைகளையும் ஒரே பெருங்கதையின் பகுதிகளாகப் பொருத்திப்பார்க்கச் சொல்கிறது. ஒரு வேளை, இதுதான் ஆசிரியர் எதிர்பார்த்த வாசகத்தாக்கமாக இருக்கலாம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்ற கதைகளில் எது எப்படியோ, “சொன்னால் நம்பமாட்டீர்கள்“ கதையில் இதே பிம்பத்தை இவர் பயன்படுத்தியிருக்கும் விதம் அட்டகாசம்.



2007 டிசம்பரில் வெளிவந்த “யுவன் சந்திரசேகர் கதைகள்“ முழுத்தொகுப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட 10 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

லேண்ட்மார்க்கில் இப்புத்தகத்தைப் பார்த்தபோது இதனைக் கண்டிப்பாக வாங்கவேண்டும் என்பதற்கு என்னிடம் பெரிதாகக் காரணங்கள் ஏதும் இல்லை. “நீர்ப்பறவைகளின் தியானம்” என்ற பதமே வசீகரமாய்த் தெரிந்தது. அது மட்டுமே நான் அறிந்திருந்த ஒன்று. அதையும் தாண்டிய வசீகரம் யுவனின் எழுத்துகளுக்கு உண்டென்று படுகிறது படித்து முடிக்கையில்.

சாதாரண கதைக்களன்களைக்கொண்டு அசாதாரண கதைகளின் மாய வலைப்பின்னலை உருவாக்குகிறார் யுவன். “விஷக்கோப்பை“யின் பீம்ஸென் ஜோஷியும் “இரண்டே அறைகள் கொண்டி வீட்டி“ல் வரும் நாதஸ்வர வித்வானும் “சுவர்ப்பேயி“ன் ராஜு வாத்தியாரும் அவரவர்க்கேற்ற அளவில் வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றனர். இவர்களில் யாரும் ஒரு ஆதர்ச கதாபாத்திரம் கிடையாது. சராசரியான மனித வாழ்வின் மற்றொரு பிம்பங்கள். ஆசை கொண்டு, ஏமாற்றம் கொண்டு, இலக்கின்றி அலைந்து எப்படியாவது வாழ்க்கையை வாழ்ந்து விட்டால் போதும் எனத்தவிக்கும் மானிடர்கள். யாரும் இரண்டாம் முறை திரும்பிப்பார்க்கத் தேவையில்லாத பிம்பங்கள். ஆனால், யுவனின் எழுத்துகளின் வழி காட்சிப்படும் போது, அவர்களின் ஏமாற்றங்கள் நம்மையும் வதைக்கின்றன. நாமும் அவர்களுடனே அலைகிறோம். மிக நெருக்கத்தில் நின்று அவர்களை கவனிப்பதைப்போன்ற மாயத் தோற்றத்தைத் தருகின்றன யுவனின் எழுத்துகள்.

மாய பீன்ஸ் கொடியைப்பிடித்து மேலேறுவது மாதிரி நினைவின் வெளிகளில் நம்மை எங்கெங்கோ இட்டுச்செல்பவை இந்த நீர்ப்பறவைகள். செல்லும் தூரமும் உயரமும் வாசகனைப் பொறுத்தது.

-Bee'morgan
http://beemorgan.blogspot.com/

Saturday, October 30, 2010

69. FOLLOWING FISH

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

கடல்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
- வைரமுத்து (தண்ணீர் தேசம்)


-----------------------------------------------------------------------
புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)
ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin books
முதற்பதிப்பு : 2010
விலை : 250 ரூபாய்
பக்கங்கள் : 167 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------------

சுயமாக சமையல் செய்யவேண்டிய காட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது மீன்குழம்பும் மிளகுரசமும் மட்டும் வைக்கக் கற்றுக்கொண்டவன்; வருடத்திற்கு ஒருமுறை இரவெல்லாம் பயணித்து வங்கக்கடல்போய் மீனும் இறாலும் மட்டுமே சாப்பிட்டுவிட்டுத் திரும்புபவன்; கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு - முட்டம், தனுஷ்கோடி, கேரளாவில் வாஸ்கோடகாமா முதலில் கால்பதித்த கப்பாடு போன்ற கிராமங்களைத் தனியாகவே சுற்றித் திரிந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை முதலில் பார்க்கும்போது புரட்டிப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. சின்ன மீனிலிருந்து பெரிய படகுவரை பட்டியலிடப்பட்டிருந்த பொருளடக்கத்திலும் உள்படங்களிலும் ஈர்க்கப்பட்டு வாங்கிவிட்டேன்.

மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், கூர்ச்சரம் (Gujarat) என இந்தியக் கடற்கரையோரங்களில் ஆசிரியர் மேற்கொண்ட பயணங்களை ஒன்பது கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார். இவரின் முதல் புத்தகம்.



ஹில்சா என்ற மீனைத்தேடி கொல்கத்தாவில் அலையும் முதல் அனுபவத்தைப் படிக்கும்போது, புத்தகம் முழுவதும் சாப்பாட்டு விசயமாகவே இருக்குமோவென்று பயந்துபோனேன். இரண்டாம் கட்டுரையில் இருந்துதான் பயம்போனது. பச்சையாக மீனைச் சாப்பிடும் மருத்துவச் சிகிச்சை பற்றியது அது. இந்த ஒரு கட்டுரை மட்டும் கடல் சம்மந்தப்பட்ட இடத்தில் இல்லாமல், உள்நாட்டில் - ஹைதராபாத்தில் ஆஸ்துமாவிற்குச் சிகிச்சையாக மீனின் வாய்க்குள் மருந்தை வைத்துத் தரும் பரம்பரை வைத்தியர்களைப் பற்றிப் பேசுகிறது. சுத்த சைவ உணவுக்காரர்கள் உட்பட 35000 பேர் முன்பதிவு செய்து வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் இவ்வைத்தியத்தின் ரகசியத்தை அறிய முயன்று அவ்வைத்தியர்களை ஆசிரியர் நெருங்கி பேச்சு கொடுக்கும் இக்கட்டுரை மர்மம் கலந்த நம்பிக்கை.

மூன்றாவது கட்டுரையில் தமிழகம். இயற்கை திரைப்படம் வெளியான அன்று திருநெல்வேலியில் பம்பாய் திரையரங்கில் பார்த்தேன். 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' வைரமுத்துவின் வசீகர வரிகள் என்னை முதல்நாள் முதல்காட்சி டிக்கட் வரிசையில் நிற்க வைத்தன. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கொத்துக்கொத்தாக இருபது முப்பது என்று டிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். தனது மண்ணைத் - தனது கடலைத் திரையில் பார்த்துக் கொண்டு அவர்கள் காட்டிய அப்பாவித்தனமான பிரமிப்பை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மணப்பாடு பற்றிய எனது நினைவுகளைப் புதுப்பித்துப் போனது இக்கட்டுரை. புனித சவேரியார் இவ்வூரில் இருந்துதான் கிழக்குக் கடற்கரையில் பிரசங்கிக்க ஆரம்பித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு துண்டு இவ்வூரில் இருப்பதாகவும் படித்தேன். ஓரூர் எதற்காக பெயர்பெற்றிருக்கிறதோ, அதல்லாமல் வேறொன்றில் அதை ரசிக்கும் பக்குவம் கிடைக்கப்பெறுவது கொஞ்சம் கடினம். சில ஊர்களை அப்படிக் கடினப்பட்டு சிலபேர் புரிந்து வைத்திருப்பார்கள். அது ஒரு தவம்!

கேரள அரசின் சுற்றுலா கையேட்டில்கூட இடம்பெற்றிருக்கும் கள்ளுக்கடைகளைப் பற்றியும், அதில் பரிமாறப்படும் மீன்கறி பற்றியும் ஒரு கட்டுரை. ஆழ்கடலில் வேகமாக நீந்தும் ஒரு மீனைத் தேடித் போகிறது இன்னொரு கட்டுரை. மங்களூர் புகழ் மீன்குழம்பைக் கடைகடையாகத் தேடி அலைகிறது ஒரு கட்டுரை. கடலையும் மண்ணால்மூடி கடற்கரைகளையும் ஆக்கிரமித்திருக்கும் மும்பை, ஆதிகலைகளுள் ஒன்றான கப்பல் கட்டுதல் செய்யும் கூர்ச்சர நகரமொன்று இப்படி பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது புத்தகம். ஒரிசா மீன்குழம்பு ருசிகண்ட எனக்கு, அந்நிலப்பரப்பு இப்புத்தகத்தில் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.

நெய்தலும் நெய்தல் நிமித்தமுமே புத்தகத்தின் கருவாக இருந்தாலும், மக்களை மிக நெருங்கி அவர்களின் வாழ்வோட்டத்தை விவாதித்திருப்பது புத்தகத்தின் பெரிய பலம். தங்கள் தெய்வம் மும்பாதேவியை மும்பைக்குப் பெயராகக் கொடுத்து அந்நகரின் விளிம்புகளில் அடையாளம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மீனவர்களின் இன்றைய நிலை, கேரளாவில் கள்ளுக்கடைகளுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்று நிறைய விசயங்கள். என்னை மிகவும் கவர்ந்தது கோவா பற்றியது. சுற்றுலா என்ற பெயரில் கடற்கரைகளை இழந்துவரும் பரிதாப நிலை; பாரம்பரிய மீன்பிடித்தொழிலைச் சுற்றுலா மாயையில் இழந்து கொண்டிருக்கும் அபாயம். நான் தனியாக கோவா சென்றிருந்தபோது, பனாஜி (Panaji) பேருந்து நிலையத்தில் ஒருவன் என்னைக் கேட்டான். "Kashmir to Kanyakumari Andhra Tamil Nadu Kerala Karnataka Hindi English all states all languages beach view sir which one you want sir?". முறைத்தேன். "Girls boys both are available sir".

இந்தியாவின் கடலோர மக்களின் வாழ்க்கை முறைகளை, ஒரு பகுதியினரை இன்னொருவருடன் ஒப்பிட்டிருப்பதும் அருமை. தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஆதிமனித இனம் மெல்ல மெல்ல நிலம் நோக்கிப் பெயர்ந்ததில், இன்னும் ஆதித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகள் கண்டிப்பாக ஆவணப்படுத்தப் படவேண்டியவை.

"இந்த அம்புக்குறி காட்டும் கடற்கரைக்கும் அண்டார்க்டிகாவின் விளிம்பிற்கும் இடையே நிலமேதும் இல்லை" - இப்படியொரு செய்திப்பலகையை, சோம்நாத் (Somnath) நகரின் கடற்கரைக் கோயில் ஒன்றில் கண்டதாக ஆசிரியர் இப்புத்தகத்தை முடிக்கிறார். புத்தகத்தில் படிக்கும்போதே பரவசப்பட வைக்கும் இவ்வாசகம். இதேபோல் நேரடியாகப் பார்த்தபோது கிடைத்த சிலிர்ப்பைப் பக்குவமாக வாசகனுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.

தன்னை நாடுபவர்களையும் சார்ந்திருப்பவர்களையும் சம்மந்தமே இல்லாமல் எங்கோ இருப்பவர்களையும் தன்மட்டில் ஓர் ஒழுங்கிற்குள் கட்டாயப்படுத்தும் கடல்படிப்போம்!

அனுபந்தம்:

1. அந்தப் பழம்பெரும் தமிழ்ப்பதம் மறக்கடிக்கப்பட வேண்டிய அனைத்துச் சூழ்நிலைகளும் எல்லா மூலைகளில் இருந்தும் உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த ஆங்கிலப் புத்தகம் மூலம்தான் அப்பதத்தின் அர்த்தம் தெரிந்தது. அப்பதம் 'ஈழம்'.

2. பதினைந்து வயதுக்குட்பட்டவனாக நான் இருந்தபோது தாத்தாவுடன் குளத்திற்குச் சென்று வேட்டியைவைத்து அயிரை மீன் பிடித்து வந்து அட்டகாசமாகச் சமைத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் கொடுத்து, குறைந்தது நான்கு வேளைகளாவது அயிரையை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு இருக்கிறோம். பதினேழோடு தாத்தா நிரந்தரமாகப் பிரிந்து போனார். எப்போதாவது எட்டி எட்டிப் பார்த்து மொத்தமாக மூழ்கிப் போனது குளமும். அயிரையைப் பார்த்தே ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட எனக்குள்ள கவலையெல்லாம், குளம் என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்கத் தெரியாமல் திணறப்போகிறமோ என்பதுதான்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Sunday, October 17, 2010

68. திருநங்கைகள் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- வள்ளுவம்


நாமெல்லாம்.... நாமன்னா.... நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.
- ஆய்த எழுத்து திரைப்பட வசனம்


ஆண்மை என்கிற வார்த்தைக்குக் குழந்தைகளைப் பெறும் தகுதியுள்ளவன் என்கிற விதத்தில் எங்கும் அர்த்தம் கொடுக்கப்படவில்லை. எடுத்த காரியத்தில் திடசிந்தனை, கொண்ட நோக்கத்தில் குழப்பமில்லாத தன்மையுடன் உயர்வடைவதற்குத்தான் ஆண்மை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, கிடா மீசை வைப்பதோ, பத்து மனைவிகளைக் கட்டிக் குழந்தைகளைக் கொடுப்பதற்குப் பெயரா ஆண்மை? அந்த மாதிரியான ஆண்மை எனக்கு வேண்டியதில்லை. இதையும் மீறிப் பெண் தன்மையுடன் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
- நர்த்தகி நடராஜ் ('கனவின் பாதை' புத்தகம் - மணா - உயிர்மை பதிப்பகம்)


--------------------------------------------------------
புத்தகம் : திருநங்கைகள் உலகம்
ஆசிரியர் : பால் சுயம்பு (தினத்தந்தியில் துணையாசிரியர்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : அக்டோபர் 2009
விலை : ரூ.150
பக்கங்கள் : 277 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------

இவ்வருட ஆரம்பத்தில் ஞாநி அவர்களின் 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் படிக்கும்போதுதான், இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறுநீரக மண்டலத்திற்கும் பெண்ணுடலில் வெவ்வேறு துவாரங்கள் என்று தெரியும். ஆணுடலைத் தாங்கி ஆண்மனதுடன் சிந்திக்கத் தெரிந்த எனக்கு இது பெரிய ஆச்சரியம்தான். இதேபோல் யாரோவொரு பெண் இவ்விரு மண்டலங்களும் ஆணுடலில் ஒரே இடத்தில் முடிவதை அறிந்து அதிசயிக்கலாம். ஆணோ பெண்ணோ இன்னொரு பாலினரை அறிவு அல்லது உறவு ரீதியாக அறிந்துகொள்ள முற்படும்போது மனிதவுடலில் இயற்கை புதைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்க வைக்கலாம். இந்த இருபாலினருக்கும் பொதுவான ஆச்சரியத்தையும், கேள்விகளையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும் இயற்கையின் இன்னொரு படைப்பு பால்பிறழ்வுகள்.

ஆண் அல்லது பெண் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத Congenital Adrenal Hyperplasia, இருபால் உறுப்புகளையும் கொண்ட Hermaphroditism, குரோமசோம் அடிப்படையில் ஆணாகவும் உடலமைப்பில் பெண்ணாகவும் அமையும் Androgen Sensitive Syndrome என்று பால்பிறழ்வுகளில் பலவகைகள். இவர்களில் குறிப்பிடத்தக்க வகையினரான ஆணுடலையும் பெண்மனத்தையும் பெற்றிருக்கும் மாற்றுப் பாலினத்தவரே திருநங்கைகள் என்று அறியப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிப் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களில், மற்றவர்களுடன் பகிந்துகொள்ளும் அளவிற்கு நான் புரிந்துகொண்ட புத்தகம் - திருநங்கைகள் உலகம்.



சுருக்கமாகச் சொன்னால், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அல்லது அந்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் திருநங்கைகள் இருபது பேரின் வாழ்க்கைச் சுருக்கம். தங்களைத் திருநங்கையாக உணர்ந்த நாள்முதல் அதனை வெளிக்காட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகளும், குடும்பத்தின் கட்டுப்பாடுகளும், சமூகம் தந்த அவமானங்களும், தன்னைப் போன்றவர்களை அடையாளம் கண்டு, அங்கீகாரம் கிடைக்கும்படி வாழ்ந்துகாட்டி ஜெயித்தவர்களின் கதைகள்.

முதல் பக்கங்களில் அழகம்மை என்ற திருநங்கையை உதாரணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறையை விளக்குகிறார் ஆசிரியர். ஆணாகப் பிறந்த அழகப்பன், தனக்குள்ள பெண்மனதை உணர ஆரம்பித்து, குடும்பமும் சமூகமும் வெறுத்து ஒதுக்க, மும்பைக்குப்போய் தன்போன்றவர்களுடன் அழகம்மையாக அடைக்கலமாகிறார். அங்கு ரீத் எனும் சடங்குமூலம் மூத்த திருநங்கை ஒருவரால் மகளாகத் தத்தெடுக்கப்படுகிறார். உரோமம் பிடுக்கும் சிம்டா கருவி, தண்டுப்பணம், தந்தா என்ற கடைகேட்டல் என்று திருநங்கைகளின் வித்தியாசமான உலகையும் சொல்லாடல்களையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அதில் அதிரவைக்கும் ஒருவிசயம், நிர்வாணம் எனப்படும் தாயம்மா அறுவை சிகிச்சை. ஆண்தன்மையை நீக்குவதற்காக ஆணுறுப்பை வெட்டியெடுக்கும் சிகிச்சை. மயக்க மருந்தே இல்லாமல் இரத்தத்தையும் வலியையும் நேரடியாக உணரவைக்கும் சிகிச்சை. இறந்து போனால் காளிக்குச் சமர்ப்பணம்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 20 திருநங்கைகளின் தனிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சி இப்படிக்கு ரோஸ், திருநங்கைகள் வாக்குரிமைக்குக் குரல்கொடுத்த பிரியாபாபு, கல்கி (sahodari.org), இந்தியாவின் முதல் மாடலிங் திருநங்கை ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்னை மிகவும் பாதித்தவர் நூரி. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்ட மூன்றாவது எய்ட்ஸ் நோயாளி அவர். தற்போது சென்னையில் SIP memorial home நடத்திவருகிறார். புத்தகத்தின்படி 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். சு.சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி தொடர்கதையில் சுயம்பு என்ற பாத்திரம் இவரே.

திருநங்கைகளுக்குச் சாதாரணமாக வாடகை வீடு கிடைப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துவதில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் எம்.ஏ. படிப்பைப் பாதியிலேயே விட்டவரும் உண்டு. இவர்களைப் புதிய அனுபவத்திற்காக நெருங்கி உடல்ரீதியில் தொடர்புகொண்டு ஏமாற்றுபவர்களும் இச்சமுதாயத்தில் உண்டு. மெரீனா கடற்கரையில் நூரி அவர்களின் பாலூற்றும் சடங்கைப் பார்த்து ஆயிரம் ரூபாய் தட்சணை கொடுத்த வில்லன் நடிகர் நம்பியார் போன்றவர்களும் இதே சமுதாயத்தில் உண்டு.

பெரும்பாலும் திருநங்கைகள் விசேசங்களில் சமையல் செய்பவர்களாகவும், ஒப்பாரிக் கலைஞர்களாகவும், கரகாட்டம் - மயிலாட்டம் - ஒயிலாட்டம் - கணியான் கூத்து என்று கிராமியக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பிரிவுகளும் மதக்கோட்பாடுகளும் வட-தென் இந்தியப் பகுதிகளில் வித்தியாசப்படுகின்றன. முகலாயர்கள் காலத்தில் ஆரம்பித்த முக்காடு பழக்கம், அரவான் சரித்திரம் என்று பல தகவல்கள் ஆங்காங்கே கட்டங்களில் எட்டிப்பார்க்கின்றன.பாலுறுப்பு மாற்றலுக்குத் தாயம்மா சிகிச்சைக்குப் பதிலாக SRS (Sexual Reassignment Surgery) போன்ற நவீன சிகிச்சைகள் சென்னைக்கே வந்துவிட்டன. சகோதரன், தாய் (TAI - Tamil Nadu AIDS Initiative)ன் மனசு போன்று திருநங்கைகளுக்காகச் செயல்படும் அமைப்புகளும் பலவுள்ளன.

இவர்களின் பிறப்பிற்கு விதி, கர்மவினை, சாபம், சென்மபாவம் என்ற எதுவும் காரணமில்லை. என்றோ இரண்டு Xகளில் ஒன்றை Yயாக்கி பெண்ணிலிருந்து ஆணை உண்டாக்கியதுபோன்ற இயற்கையின் குரோமசோம் விந்தைகள்தான் இவர்களும். பாலியல் திரிபைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான அனுதாபத்தையோ, அடக்குமுறையையோ இல்லாமல் சகமனிதன் என்ற அங்கீகாரம் மட்டுமே இவர்கள் கேட்பது. ஈரலைக் கெடுக்கும் ஹார்மோன் ஊசிகளுடன் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ள, நம்மில் சிலருக்கு இருக்கும் Transphobiaவை உடைத்தெறிய இதுபோன்ற புத்தகங்கள் கண்டிப்பாக உதவும். ஆங்காங்கே பரவிக்கிடக்கும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, திருநங்கையாகப் பிறப்பதற்கான அறிவியல் காரணங்களை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அனுபந்தம்:

1. அரவானி என்ற குறிப்பிட்ட மதம் சார்ந்த புராண மரபுடன் பெயரிடப்படுவதைத் தவிர்த்து,ஆணும் பெண்ணும் கலந்த திருநங்கை என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார் நர்த்தகி நடராஜ்.

2. பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற புதினம் படித்தேன். படிக்கலாம். சந்தியா பதிப்பகம். 50 ரூபாய்.

3. மராத்தி மொழியில் 'NATARANG' என்றொரு திரைப்படம் உண்டு. பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Monday, September 06, 2010

67. வெட்டுப்புலி

------------------------------------------
புத்தகம் : வெட்டுப்புலி
ஆசிரியர் : தமிழ்மகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ 220

------------------------------------------

தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கும். சிவன் கோயில் தெருவின் முனையில் எங்கள் வீடு. அப்போது பண்ணைக்காரர்களிடம் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தார் தர்மராஜ். தீவிரமான தி.மு.க காரர். போதையில் இல்லாத தர்மராஜை ஊரில் யாரும் பார்த்ததில்லை. பண்ணைக்காரர்களும் அப்போது தி.மு.கவில் இருந்ததால் அவருக்குக் கொஞ்சம் சலுகையாக இருந்தது. கலைஞரைக் கருணாநிதி என்று அழைப்பதில் அவருக்கு அலாதி ப்ரியம்; கொஞ்சம் கர்வமும் கூட. திருக்குவளையில் கலைஞரைச் சிறுவயதிலேயே பார்த்துப் பழகியவர் என்றும் சொல்லிக் கொண்டார்கள். எந்தப் புள்ளியில் மனிதர் இவ்வளவு தி.மு.க. அபிமானியாக மாறியிருப்பார் என்பது தெரிந்தும் தெரியாமலும் இருந்தது.

மனிதன் நிதானத்தில் இருக்கும் வரை இருக்கும் வேகம், நிதானம் இழந்தபிறகு இன்னும் கூட அதிகமாகிவிடும். அதுவே எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த கோபமாகவும் மாறும். எம்.ஜி.ஆர் என்று அறிமுகமாகியிருந்தவரை, எம்.ஜி.ராமச்சந்திரன் என்று எனக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் கேட்ட முதல் மிமிக்ரி குரல் அவருடையதுதான். கலைஞரின் குரலில் பேசுவதில் வல்லவராக இருந்தார். சிவன் கோயில் பின்புறத்திலிருந்த திடலில் இங்குமங்கும் நடந்தபடி ஏகவசனத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தாக்குவார். பள்ளிக்கூடத்தில் பையன்களிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் அவர் பேச்சில் கேட்க முடிந்தது. போட்டு விளாசிவிடுவார்.

எம்.ஜி.ஆர் இறந்த நாளில் தெருப்பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்த கையோடு, அன்றிரவே அ.தி.மு.க கட்சிக்காரர்களிடம் வகையாக வாங்கியும் கட்டிக்கொண்டார். 1991ல் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது முதல் தடவையாக விஷம் குடித்தார் தர்மராஜ். அவரின் மனைவி கலைஞரின் வம்சத்தைச் சாபமிட்டுப் பழித்தபடி தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடினாள். நான்கு நாட்களில் சக்கையாகத் திரும்பிவந்த மனிதனைத் தெருவிலேயே போட்டு மிதித்தான் அவர் மகன். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பிறகு தர்மராஜின் நடமாட்டம் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அடுத்து வை.கோ வெளியேறிய போது பண்ணைக்காரர்கள் அவரோடு போய்விட, தர்மராஜ் தனியே விடப்பட்டார். வேலையும் பறிபோனது. வீட்டிலும் மரியாதை இல்லை. மகன் வேலை செய்து கொண்டுவரும் பணத்தில் குடிக்கப் பணம் கேட்கத் திண்டாட்டமாகப் போகவே, போதையில்லாமலே கண்ணில் பட்டோரை எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் நினைத்து வசை பாட ஆரம்பித்தார். கலைஞர் தன் துயர் துடைக்க வருவார் என்பது அவரது அசையாத நம்பிக்கையாக இருந்தது. குடும்பத்தலைவன் என்ற பெயருக்காக வீட்டில் சாப்பாடு போட்டுவந்தார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சி வந்தும் அவர் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. மனநிலையில் சின்ன தடுமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

மீண்டும் திமுகவின் ஆட்சி முடிந்து, அ.தி.மு.க வென்ற போது விஷம் என்று நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்து இரண்டாவது முறையாகக் காப்பாற்றப்பட்டார். இந்த முறை மகன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்க்கவில்லை. பிராணனைப் பிடித்து வைத்திருக்கும் ஆசையில் தர்மராஜின் மனைவி மகன் பேச்சுக்கு அடங்கிப்போனாள். தர்மராஜ் ஊருக்குள் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்தார். அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒன்றரை மாதங்களுக்குள் ஒரு நாள் அதிகாலையில் ஊரே பதட்டமடைந்து கிடக்க, தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஒரு காட்சி. கலைஞர் தன் வீட்டிலேயே கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் இழுத்து வரப்பட்டார். பதட்டத்தோடு பதட்டமாக நடந்தேறிய எல்லா அரசியல் நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக்காட்சி. மதியம் 'பராசக்தி' திரைப்படம் போட்டார்கள். தர்மராஜ் எங்கள் வீட்டு வெளித்தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பயிர்களுக்கென்று வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தர்மராஜ் இறந்து போனதாக ஊரே மீண்டும் பரபரப்பானது.

திராவிட இயக்கங்களைப் பற்றிய எந்தக் கடந்தகாலச் செய்தியும் எனக்கு தர்மராஜைத் தவிர்த்ததாக நினைவுக்கு வருவதேயில்லை. எங்கள் ஊரின் பதினைந்தாண்டுகால அரசியல் நிகழ்வுகள் எல்லாமும் எனக்கு அவரைத் தொடர்பு படுத்தியே நினைவில் இருந்தன. மாபெரும் அரசியலின் சிறு படிமமாக வாழ்ந்து மறைந்து போனார் தர்மராஜ் டிரைவர். பெரும் அரசியல் நிகழ்வுகளை, பெரும் வரலாறுகளை, பெரும் சமுதாய மாற்றங்களை நாம் இப்படி நினைவுகொள்வது மிக இயல்பானதுதான் இல்லையா? இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது நான் ஐந்து மாதக் குழந்தை என்று என் அம்மா சொல்லுவார். இதுவும் கூட அரசியல் நிகழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இழையோடிப்போகும் ஒரு தருணம்தான் என்று தோன்றுகிறது. தர்மராஜின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்தால், நமக்கு நம் வாழ்க்கை சார்ந்த ஒரு பேரியக்கத்தின் வரலாறு கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும். அதுபோன்றதொரு பதிவுதான் இந்த வெட்டுப்புலி. புனைவும், வரலாறும் கலந்ததொரு கலவை.



வெட்டுப்புலி தீப்பெட்டி, தமிழகத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள், தமிழ்த்திரையுலகம் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வேரூன்றியவை. இந்த யதேச்சையான ஒற்றுமையை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, இம்மூன்றையும் சுற்றிச் சுற்றிக் கோலமிட்டிருக்கிறார் தமிழ்மகன். தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஊடகத்துறையில் இல்லாத ஒருவர் இதை எழுதியிருப்பதற்குச் சாத்தியம் மிக மிகக் குறைவு என்று தோன்றியது. இத்தனை செய்திகளை ஒரு தனிமனிதன் தொகுப்பது இயலாதது. இந்த உழைப்புக்காகவே தமிழ்மகனைப் பாராட்டலாம். ஓர் எளிய, எழுத்து வசீகரம் இவரிடம் இருக்கிறது. அது நம்மை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பணியை நிறைவாகச் செய்கிறது.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் சிறுத்தையை வெட்டுவது போன்ற படம் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதன் தன் தாத்தாவின் பெரியப்பா என்று அறிந்து, அது பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தன் அமெரிக்க நண்பகளுடன் தேடலைத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். கதை அங்கிருந்து 1940களுக்குப் பயணித்து, பின் 1930, 1940 என்று தொடர்ந்து இரண்டாயிரத்துப் பத்துவரை தொடர்கிறது. கதை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்கிறது.

தாம் பார்த்துப் பழகிய இடங்களின் வரலாறு தெரிந்துகொள்வதில் யாருக்கும் ஆர்வமிருக்கும். எங்கள் ஊரின் வயோதிகர்கள், என் கிராமத்திற்கு முதல் முதலாக இரயில் வந்த கதையையும், ஆற்றுப்பாலம் வந்த வரலாற்றையும் சொல்லும்போது சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் எழும் இன்பம் அலாதியானது. பாலம் இல்லாத, இரயில் இல்லாத என் கிராமத்தின் பிம்பம் என்னுள் விரியும். மக்கள் போக்குவரத்து எப்படி நிகழ்ந்திருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதாக எண்ணவோட்டம் நீளும். வெட்டுப்புலியின் ஒவ்வொரு அத்தியாயமும் என்னுள் அப்படியான ஒரு எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியது. சென்னையின் நிகழ்கால பிம்பத்தைப் பார்த்தவனுக்கு, நூற்றாண்டுகால நகரின் வளர்ச்சி குறித்த செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. சென்னையைச் சுற்றிலும் கதை வலம் வரும் இடங்களிலும் பெரும்பாலானவற்றை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கொசஸ்தலையாறு, பூந்தமல்லி, திருவள்ளூர், அம்பத்தூர் என்று புறநகர்ப்பகுதிகளின் கடந்தகால பிம்பத்தை அழுத்தமாகப் பதியவைக்கிறது இப்புதினம். இவற்றின் அருகிருக்கும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்தாம் கதை மாந்தர்கள்.

மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான பருவம் இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லலாம். அதுவரை நிகழ்ந்திருந்த பல அதிசயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முன் நிரூபணமாகியிருந்த பல கோட்பாடுகளைப் பொய்யாக்கி, அசுர வேகத்தில் தொழில்துறையிலும், அறிவியலிலும் வளர்ச்சி கண்டனர் மனிதர்கள். இவ்வளர்ச்சி உலகெங்கிலும் இருந்த மக்களின் வாழ்க்கையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்தது. வாழ்க்கையைப் பற்றிய பார்வை வெகுவாக மாறிப்போனது. தமிழகத்தைப் பொறுத்தவரை பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வும், திரைப்படங்களின் ஆதிக்கமும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தின. சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கும் மக்களிடம் இவை பிறப்பித்த மாற்றங்களை மிக நுண்மையாக ஆராய்கிறார் தமிழ்மகன்.

வெறும் பாத்திரங்களாக இல்லாமல் அவர்கள் கருத்துகளாக வலம் வருகிறார்கள். திராவிடத்தைப் பற்றியும், திரைப்படத்தைப் பற்றியும் எத்தனை விதமான கருத்துகள் நிலவியிருக்குமோ, அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பாத்திரமாகியிருகின்றன. எது சரி எது தவறென்று நிறுவுவது ஒரு படைப்பாளியின் வேலையன்று. சமகால வரலாற்று நிகழ்வுகள், அது கதையில் வரும் பாத்திரத்தை, ஒரு சூழலை எப்படிப் பாதிக்கிறது, அது குறித்த கதைமாந்தர்களின் நிலைப்பாடு என்ன, என்பதை மட்டுமே கதையின் போக்கில் சொல்லிச்செல்கிறார். பொது நிகழ்வுகளின் எதிரொலி ஒருவனின் அந்தரங்கம் வரை கேட்கக்கூடியதாக இருக்கிறது. பாத்திரங்கள் தங்களுக்கிடையேயான முரண்பாட்டை, தங்கள் கொள்கைகளின் வேறுபாட்டோடு கலந்து அதன்மூலம் தங்கள் வன்மத்துக்கு வடிகால் தேடுகிறார்கள்.

ஒவ்வொரு பத்தாண்டுகளாகப் பிரித்துக் கதை சொன்ன உத்தி இந்தப் புதினத்தின் சிறப்பம்சம். கால மாற்றத்தில் மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய இது உதவியிருக்கிறது. ஒரு பாத்திரம் தன் அடிப்படை இயல்புக்கு முழுவதும் எதிரான, தான் வாழ்ந்துவந்த நெறிக்கு எதிரான, ஒரு கருத்தைத் தன் அடிநாதமாக மாற்றிக்கொள்ள இந்த அவகாசம் போதுமானதாகயிருக்கிறது. தனி மனிதனானாலும், இயக்கமானாலும் இது இயல்பாக நடந்துவிடுகிற விஷயம்தானே!

தன் காதல் சாதிப்பிரிவினையால் அழிக்கப்படும்போது யோசிக்கத் தொடங்கி பெரியாரைப் பின்பற்றத் தொடங்கும் இளைஞன், பெண் சுகத்துக்காகத் திரைப்படம் தயாரிக்க முற்படும் ஒரு பணக்கார இளைஞன், தரிசு நிலங்களைத் தங்கள் உழைப்பால் விளைநிலங்களாக மாற்றி அதைப் பராமரிக்கும் சிந்தனையற்று, பணக்காரர்களிடம் கொடுத்து, வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பதே பெரிய பகுத்தறிவுச் சீர்திருத்தம் எனத் தொடங்கிப் பின் அனுபவத்தால் மனம் மாறும் இளைஞன், என்று விதவிதமான பாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாங்களுடன் கதையோடு பரிணமிக்கிறார்கள்.



ஒவ்வொரு பத்து வருடத்தையும் அறிமுகப்படுத்தும் அத்தியாயங்கள் தமிழ்மகன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவனவாக இருக்கின்றன. குறிப்பாக ஐம்பதுகளின் அறிமுக அத்தியாயத்தைச் சொல்லலாம்.

'காங்கிரஸ் பேரியக்கம் ஓட்டுப்பெட்டியில் ஒடுங்க வேண்டாம் என்ற காந்தியாரின் சிந்தனை புறக்கணிக்கப்பட்டது. காந்தியைக் கொல்லச் சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கர் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டன. முரண்பாடுகள் இயல்பாகின. சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்காத இந்தியச் சுதந்திரம் கறுப்புதினமாக இருந்தது பெரியாருக்கு. தி.மு.க.வினர் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டுமென்றனர். ஒருவனே தேவன் என்ற சுருதி பேதம்'

அத்தியாயங்களின் முடிவையும் அனாயாசமான முத்தாய்ப்புடன் அமைத்திருக்கிறார் தமிழ்மகன். ஒவ்வொரு முடிவும் ஏற்படுத்தும் அதிர்வு சில நிமிடங்களுக்கேனும் நம்மை இயக்கமின்றி கட்டிப்போடும் திறனுடையதாகவிருக்கிறது. அரசியல் சார்ந்த செயல்களால் தன் சொந்த வாழ்க்கையை முற்றிலுமாக இழந்த ஓர் ஆணுக்கும் அவன் மனைவிக்குமான உறவைப் பற்றிப்பேசும் அத்தியாயம் இப்படி முடிகிறது. அவனுக்கும், மனைவிக்கும் நீண்ட காலமாக உறவே இல்லை என்றாகியிருந்தது. 'எப்பவாவது ஒரு தரம் வீட்டுக்குப்போவான். அழுக்கு வேட்டி, சட்டையைத் துவைத்துப் போட்டுவிட்டு வேறு துணி மாற்றிக்கொண்டு வருவான். அவளும் ஏன் வந்தாய் என்று கேட்பதில்லை. அவள் முழுகாமல் இருந்ததால் அவன் அப்படி வந்து போவதை எதிர்பார்க்கவும் செய்தாள்....'

அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் நிறைய காட்டமான அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை கற்பனையான வசனங்கள் என்று எண்ண முடியவில்லை. ஆசிரியர் சிறுவனாக இருந்த பருவத்தில் கேட்டு வளர்ந்த வார்த்தைகளையே இங்கே பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தோற்றம், தி.மு.கவின் மலர்ச்சி, கல்லூரிகளில் மாணவர்கள் மிக விரும்பிப் படித்த திராவிடப் பாடம், தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்து பின் வீழ்ந்தே போனது, தமிழ்நாட்டு அரசியலும் திரைத்துறையும் இரண்டறக் கலந்தது, இல்லாத கடவுள் ஒருவனே தேவனானது, ஒற்றைச் சூரியனை இரட்டை இலைகள் வீழ்த்தியது, இனமானம் காக்க வேண்டி ஒரு தலைவனை உருவாக்கிப் பின் மறந்தே போனது, எனத் தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் நிகழ்வுகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

டெண்டுகள் அமைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், சக்கரவர்த்தித் திருமகளுக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய எம்.ஜி.ஆர், திரைப்படம் எடுப்பதற்காக அரசுப்பணியைத் துறந்த பாலச்சந்தர், உடலை மூலதனமாகக் கொண்டு உழைக்க முன்வந்த நடிகைகள், எம்.ஜி.ஆரின் காலில் விழாமல் கைகொடுத்த ரஜினிகாந்த், பின் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலையிலிருந்து மீட்ட அதே ரஜினிகாந்த், திடீரென தேசிய இயக்குனராகத் தன்னை நிறுவிக்கொண்ட மணிரத்னம், கோட்டைக் கனாக்களுடன் களமிறங்கி கொண்டிருக்கும் இன்றைய நாயகர்கள் என்று தமிழ் சினிமாவின் பரிமாணங்களைக் கதாப்பாத்திரங்களின் கருத்துகளாக முன்வைப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனம்.

எழுத்தின் முக்கிய பணி வாசகனையும் தன்னோடு உள்ளிழுத்துச் சேர்த்துக்கொள்வது. அவனுக்கான கற்பனைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளாதிருப்பதும் கூட. தசரத ரெட்டிக்கு முத்தம்மா மீதிருந்த ஈர்ப்பு, சின்னா ரெட்டி சிறுத்தையை அடித்தது பற்றி வேறு வேறு கதைகள் உலவுவது என்று சில தகவல்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விட்டார்.

காலத்தையும், அது விட்டுச் செல்லும் சுவடுகளையும், சமகால நிகழ்வுகளையும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியை இன்றைய சூழலில் மிகச்சில படைப்புகளே செய்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 'வெட்டுப்புலி' மிக முக்கியமான படைப்பு.

பின் குறிப்பு :

1. இந்தப் புத்ததகத்தை நண்பர் ஞானசேகர் வாசித்துவிட்டு என்னிடம் சிலாகித்ததோடு தன் புத்தகத்தையே எனக்களித்து வாசிக்கவும் செய்தார். அவருக்கு என் நன்றி!

2. சென்னையைப் பிடித்தவர்களுக்கும், சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கும், இப்புத்தகத்தில் ரசித்துச் சுவைக்க நிறைய பகுதிகள் உண்டு

3. நான் வாழும் மைலாப்பூர் பகுதியைக் குறித்தச் செய்திகளை மிகவும் விரும்பி வாசித்தேன்

4. நிறைய எழுத்துப்பிழைகள் கண்ணில் பட்டன. பெரும்பாலும் அவை அச்சுப்பிழைகளே! அவசரமாக எதுவும் தேவைப்படும், அவசரமாக எதுவும் செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களும் அவசரகதியிலேயே தயாராகின்றன போலும்.

5. சிறுத்தையை வெட்டியதைப் பற்றிய தேடலில், தினமணி அலுவலகத்தில் 1934 ஜூன் எட்டாம் தேதி செய்தித்தாளை கேட்பான் இளைஞனின் நண்பன். அதில் அவர்கள் தேடி வந்த செய்தி இருக்கும். அது பற்றிய தகவல்கள் முன்பகுதிகளில் ஏதும் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. வாசித்தவர்கள் எவருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!

6. 'மதராசப்பட்டினம் திரைப்படம் தவறவிட்ட ஒரு வேலையை இப்புத்தகம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. உருவ அமைப்பில் அறுபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையைக் கொண்டுவந்தவர்கள், அக்கால மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்யவில்லை. அது இப்புதினத்தில் நிறைவேறியிருக்கிறது.' என்று நண்பர் ஞானசேகர் சொன்னார். நானும் அதையே உணர்ந்தேன்.

7. வரலாற்று நிகழ்வுகள் எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு பிணைந்திருப்பது இப்புதினத்தின் பலம்.

8. ஆசிரியர் தமிழ்மகனின் வலைத்தளம் : http://www.tamilmagan.in/

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Thursday, August 26, 2010

66. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

---------------------------------------------------------------------
புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1995
விலை : ரூ 175
---------------------------------------------------------------------

தொடர்ந்த வாசிப்பினிடையே பல தருணங்களில் நமக்கே கூட இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும். அல்லது எவர் மூலமாவது இதே கேள்விகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கும். 'ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எனக்கு எதைத் தருகிறது? இலக்கிய வாசிப்பின் தேவை என்ன? இலக்கியம் என்கிற கலையின் அவசியம் என்ன? இது வெறும் போழுதுபோக்குதானா? அல்லது அதைத்தாண்டிய ஏதாவது அற்புதம் இதன் மூலம் நிகழ்கிறதா?' இப்படியாக நீளும் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்று சொல்லிவிட முடிவதில்லை. இதே போல இலக்கியம் தொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட பல கேள்விகளுக்கு, தான் பதிலாக உணர்ந்தவற்றை அரங்கில் வைக்கிறார் ஜெயமோகன்.

இப்புத்தகத்துக்குள் போவதற்கு முன்பாக நாம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. நமக்கும் இலக்கியம் குறித்த சிற்றறிவேனும் இருக்கிறது. இலக்கியப்புரிதல் நமக்கும் வசப்படக்கூடிய ஒன்றுதான். அறிமுகம் என்றவுடனே, ஏதோ நமக்குச் சற்றும் தொடர்பற்ற ஒரு புதிய செய்தியை விளக்கப்போகிறார் என்று எண்ணிவிடவேண்டாம். இது முற்றிலுமாக, நீண்ட காலம் ஆழ்ந்த வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட - வாசிப்புக்காக வெகுவாக உழைத்த ஒரு வாசகனும், செறிவுள்ள எழுத்தைப் படைக்கும் திறன் கொண்ட - எழுத்தைத் தன் எண்ணத்தின் முழு வெளிப்பாடாக்கும் எழுத்தாளுமை கொண்ட ஒரு படைப்பாளியுமான ஒரு மனிதன், தன் அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டவற்றை, தொடக்கநிலையில் இருப்பவர்களுக்குக் கடத்தும் ஒரு சீரிய முயற்சி என்றுகொள்ளலாம்.



நீங்கள் எந்த வயதில் வாசிக்கத் தொடங்கினீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் என்ன சொல்லத் தோன்றும்? எப்பொழுது ஒரு மொழியின் எழுத்துகள் நம் அறிவுக்கு அறிமுகமாகின்றனவோ அப்போதே வாசிப்பைத் தொடங்கிவிடுகிறோம் அல்லவா? பேச்சு வழக்கில் ஏற்கனவே நமக்கு அறிமுகமாகிவிட்ட மொழியை எழுத்து மூலம் அறிந்துகொள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பின் அதன் மூலம் வேறு பல செய்திகளை அறிந்துகொள்ளத் தொடங்குகிறோம். இது இன்றைய சூழ்நிலையில் பள்ளிகளில், பாடத்திட்டங்களின் மூலமே சாத்தியமாகிறது. அதைத் தொடர்ந்து பாடமல்லாத எழுத்துகளைத் தேடி வாசிப்பு விரியும் வாய்ப்பு ஒரு சிறு சதவீத பேர்களுக்கே வாய்க்கிறது. பலருக்கு அதில் ஆர்வமிருப்பதில்லை என்பதும் இன்னொரு யதார்த்தம். அந்த வாசிப்பு எனக்குப் 'படக்கதைகள்' என்பதாகத் தொடங்கியது. நிறைய பேருக்கு அப்படியே தொடங்கியிருக்கும் என்பதை ஊகிக்கவும் முடியும். ராணி காமிக்ஸும், பூந்தளிரும், அம்புலி மாமாவும், கோகுலமும் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். படக்கதையைத் தொடர்ந்த சிறுவர் கதைகளுக்குள் என்னை இட்டுச் சென்றவை கோகுலமும், தினசரிகளில் வாராந்தரி இணைப்பாக வரும் சிறுவர் இதழ்களும்தாம். இப்படித் தொடங்கிய வாசிப்பு, இதழ்களல்லாத தனிப்புத்தகங்கள் வாசிப்பாகத் தொடர்ந்து, இராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வளர்ந்து, பின் சுஜாதா, வைரமுத்து என்று பல்வேறு தளங்களில் நீண்டு இன்னும் தீராத தேடல்களோடு புதிது புதிதாக எதையாவது நாடிச் சென்றவண்ணமே இருக்கிறது.

இந்த வாசிப்பின் படிநிலைகளைத் தான் முதலில் விளக்க வருகிறார் ஜெயமோகன். குழந்தையிலக்கியம், சாகசக்கதைகள், மெல்லுணர்ச்சிக்கதைகள், குற்றக்கதைகள், இலட்சியவாத எழுத்துகள், என்கிற பல படிகளைத் தாண்டியே ஒருவன் தீவிர இலக்கியத்துக்குள் நுழைகிறான் என்பது ஜெயமோகனின் கோட்பாடாக இருக்கிறது. இதை ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளவும் முடியும். சிலர் ஏதேனும் ஒரு படியில் தேங்கிவிடுவதும் உண்டு.

இலக்கியத்தை எதிர்கொள்வதைப்பற்றியும் விவரிக்கிறார். எழுத்தாளர்களும், கவிஞர்களும் அடிக்கடி 'ஏன் புரிவது போல் எழுத மறுக்கிறீர்கள்' என்ற கேள்வியை எதிர்கொள்ள நேர்கிறது. இந்தக் கேள்வியை இவர் அணுகும் விதம் வித்தியாசமாகவே தோன்றுகிறது. வாசிப்பிலும் சில படிநிலைகளை வாசகன் கடக்க வேண்டியிருக்கிறது. எப்படி ஒரு மாணவன் ஒவ்வொரு வகுப்பாகப் பள்ளிப்படிப்பைக் கடக்க வேண்டியிருக்கிறதோ அதே போன்று இது நிகழ்கிறது. எப்படி ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன், பத்தாம் வகுப்புப் புத்தகம் புரியவில்லை என்பதில் நியாயம் இல்லையோ, அதே போல ஒரு படைப்பு புரியவில்லை என்று ஒரு வாசகன் சொல்வதிலும் இல்லை. படைப்பு புரிதலுக்காகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் கட்டாயம் ஒரு வாசகனுக்குள்ளது.



வாசிப்புக்காக உழைக்க வேண்டும் என்கிறார் ஜெயமோகன். எழுதுவதற்கு படைப்பாளி செய்யும் உழைப்புக்கு இணையான உழைப்பு வாசிப்புக்கும் தேவைப்படுகிறது என்பது எத்தனை வியப்புக்குரிய செய்தி! இப்புத்தகத்தில் முழுவதுமாக வலியுறுத்தப்படும் செய்தியாக நான் இதைப்பார்க்கிறேன்.

ஓர் அற்புதமான இலக்கியம் எப்படி நிகழ்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து சொல்லுகிறார். ஒரு படைப்பாளி ஒரு படைப்பின் ஒரு பரிமாணத்தையே பார்க்கிறான். அதன் எஞ்சிய எத்தனையோ பரிமாணங்களை வாசகன் உணர்கிறான் என்கிறார். ஆழ்மனத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவின் அமைப்பை விளக்குகிறார். படிமங்களின் தோற்றமும், அதன் பல்வேறு வடிவங்களும், அது பரிமாறப்படும் விதங்களையும் விவரிக்கிறார்.

செவ்வியல் இலக்கியம், நாட்டார் இலக்கியம், இலக்கிய அரசியல் என்று தொடர்கிற நூலின் மிக சுவாரசியமான பகுதி 'இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்'. இலக்கிய வட்டாரத்தில் உலவுபவர்களிடம் மிகச் சாதாரணமாக இருக்கக்கூடிய போலியான குணங்களைப் பற்றிய பட்டியலிது. எழுத்துலகில் புதிதாக நுழைபவர்களை எளிதாகக் கவர்ந்துவிடக்கூடிய, எளிதாக ஆட்கொள்ளக்கூடிய போலி பாவனைகளைப் பற்றிய பதிவு, அவை தவிர்க்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவசியப்படுகிறதென்கிறார் ஆசிரியர்.

1. புரியாத படைப்பை எப்படி எதிர்கொள்வது?
2. இலக்கியம் வாழ்க்கையைப் பதிவு செய்வதுதானே?
3. இலக்கியத்தில் உள்ள சிந்தனைகள் முக்கியமா அல்லவா?
4. இலக்கியச் சண்டைகளினால் என்ன பயன்? பலசமயம் இவை வெற்றுச் சண்டைகளாக உள்ளனவே?
5. இலக்கிய விமரிசனம் என்பது தேவையா? அது இல்லாமலேயே இலக்கியத்தை வாசிக்க முடியாதா?
6. உலக இலக்கியம் என்றால் என்ன? உலகத்தரத்துக்கு நம்மிடம் படைப்புகள் உண்டா?
7. அதிகமாகப் படித்தால் சிறப்பாக எழுதமுடியாது என்பது உண்மையா?
8. நம்முடைய படைப்புகள் ஏன் உலக அளவில் புகழ்பெறவில்லை?
9. இலக்கியம் சாதி இன மத அடையாளம் கொண்ட ஒன்றுதானே?
10. இன்றுள்ள புதுவகை இலக்கியம் முன்புள்ள இலக்கியங்களைக் காலாவதியாக்கிவிடுமா?
11. குறைவாக எழுதப்பட்டால்தான் நல்ல இலக்கியமா?
12. சிற்றிதழ்களில் மட்டும்தான் நல்ல இலக்கியம் வர முடியுமா?

மேலுள்ள கேள்விகளைத் தானே கேட்டுக்கொண்டு, தன் அனுபவத்தின் அடிப்படையில் பதிலும் தருகிறார் ஆசிரியர். இந்தக் கேள்விகளில் பல நம்மிடத்திலும் இருக்கக்கூடும். அவற்றுக்கான பதில் தேடும் ஒரு செயலில் இவரது பதில்களை ஒரு தொடக்கப்புள்ளியாக நாம் அமைத்துக்கொள்ளலாம்.

நூலின் பின்பாதி நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றையும், அதன் வளர்ச்சிக் காலகட்டங்களையும் தலைமுறை வாரியாக விவரிக்கிறது; நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக பாரதியை நிறுத்துகிறது; அவரின் பங்களிப்பையும் அவரைத் தொடர்ந்து தமிழிலக்கியத்தின் போக்கையும், அது இயங்கிய தளங்களையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய படைப்பாளிகளையும், ஒவ்வொரு தலைமுறையிலும் இலக்கியத்தின் ஆதாரமாக விளங்கிய கூறுகளையும், இலக்கியம் எதை நோக்கிப் பயணித்தது என்பதையும் ஒரு வாசகன் மற்றும் விமரிசகனின் பார்வையில் முன்வைக்கிறது.

தமிழிலக்கிய உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சும் பல ஆதர்சங்களின் பிம்பத்தை உடைக்கவில்லையென்றாலும், அதன் அடித்தளத்தையாவது அசைத்துவிடும் வல்லமையுடையனவாகவிருக்கின்றன இக்கட்டுரைகள்.

இந்த வரலாற்றுக் கட்டுரைகள், இறுதிப்பகுதிகளில் நான் மேற்சொன்ன செய்திகளைப் பற்றிய சிறு குறிப்புகளாக மாறியிருந்தது ஏமாற்றத்தை உருவாக்கியது; இப்பகுதிகள் அவசரகதியில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

வரலாறு, பின் இலக்கியக் குழுக்கள் மற்றும் அமைப்புகளின் மீது கவனம் செலுத்துகிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம், மீயதார்த்தவாதம் என்று அழகியல் இலக்கியம் சார்ந்தகூறுகளைத் தொடக்க நிலை வாசகனுக்கு விளக்கும் கட்டுரைகள் நிச்சயம் பயன்படும்.

தீவிர இலக்கியத்துக்கு சிற்றிதழ்களே தீனி போடுகின்றன என்பது யதார்த்தம். இன்று என்றில்லாமல், தீவிர இலக்கியத்துக்கான தேடல் தொடங்கிய காலம் முதலே இருக்கும் நிலைதான் இது. சிற்றிதழ் என்ற அமைப்பே பிரபல பத்திரிகைகளால் தீவிர இலக்கியம் புறக்கணிக்கப்பட்டு, பொழுதுபோக்கு வணிகஎழுத்து முன்னிறுத்தப்பட்டதன் காரணமாகத் தோன்றியதே! முதல் சிற்றிதழ் சி.சு.செல்லப்பாவால் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அவை தமிழிலக்கியத்துக்கு அளித்துவரும் பங்களிப்பு நன்றிக்குரியதாகவே கொள்ளப்படவேண்டும். ஜெயமோகன், சிற்றிதழ்களின் இப்பங்களிப்பை தேவையான தகவல்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நவீனத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய சாதனையாகச் சிறுகதைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சொல்லலாம். வணிக எழுத்தும், தீவிர எழுத்தும் சேர்ந்தே இவ்வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. கவிதைகள் வடிவத்திலும், பாடு பொருள்களின் தன்மையிலும் பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு இன்னும் வளர்ந்தவண்ணமுள்ளன. இது போக, புதினங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளும் வாசகனின் வாசிப்பு தாகத்தைத் தணிக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலும் அந்த வரிசையிலேயே சேரும்.

எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்கவேண்டும் என்ற தெளிவு தேவைப்படும் வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆசிரியரின் மீதுள்ள இலக்கிய அரசியலைப் புறந்தள்ளிவிட்டு இதைப் படிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.

பின் குறிப்பு :

இலக்கியக் கலைச்சொற்களையும், தமிழிலக்கியத்தில் தானறிந்த சிறந்த சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் குறித்த தன் சிபாரிசையும் பின்னிணைப்பில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Wednesday, July 07, 2010

65. A Fine Balance

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
- வள்ளுவம்

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாருமே
அனாதையில்லை!
- ரா.பார்த்திபன்

---------------------------------------------------------
புத்தகம் : A Fine Balance (புதினம்)
ஆசிரியர் : ரோஹின்டன் மிஸ்ட்ரி (Rohinton Mistry)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : McClelland and Stewart (Thorndile Press in large font)
முதற்பதிப்பு : 1995
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 948 (தோராயமாக 36 வரிகள் / பக்கம்)
---------------------------------------------------------




அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அதிகாரவர்க்கத்தவர்களால் ஆடப்படும் விளையாட்டுகள். இப்படி நினைத்துக் கொண்டு தனக்கும் அவற்றிற்கும் சம்மந்தமே இல்லாததுபோல் வாங்கின பணத்திற்கும் சாப்பிட்ட பிரியாணிக்கும் நன்றியுணர்வுடன் யாருக்கோ ஓட்டுப்போடும் சாமானியன். சில சமயங்களில் அரசாங்கம் எடுக்கும் சில தவறான முடிவுகள் சில தவறான கைகளுக்குப் போகும்போது, அரசாங்கத்தில் தானும் ஓர் அங்கமென்றுகூடத் தெரியாமல் வாழ்ந்துவரும் அப்பாவிகள் பலர் அடையாளம் தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையை ஆணித்தரமாகப் பதிவுசெய்யும் புத்தகம். A Fine Balance.

குலத்தொழிலை விட்டுவிட்டு வேறுதொழில் செய்யப்போய், தங்கள் கிராமத்தில் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தில் இருந்து தப்பித்து, தலைமறைந்து, என்றாவது ஒருநாள் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு மாநகரத்திற்குள் புகும் இரு ஆண்கள். தகப்பன் தொழில் நலிந்துவரும் காலத்தில், அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தன் தாய்மண் அழிந்துவரும் நிலையில், பணம் கொடுக்கும் வாய்ப்புள்ள ஏதோவொரு படிப்பைக் கற்கும் நோக்குடன் அதே நகருக்குள் வருகிறான் இன்னொரு மலைவாழ் ஆண். அண்ணன் குடும்பம் மட்டுமே ஒரே சொந்தமெனக் கொண்ட ஒரு கைம்பெண், சொந்தக் காலில் நிற்கும் வைராக்கியத்தில் தனியே வாழ்ந்து வருகிறாள். அந்த மூன்று ஆண்களும் இவளின் வீட்டில், வெளிமனிதர்களுக்குத் தெரியாமல் வாழ்வதுதான் பின்னட்டை கதைச்சுருக்கம்.

இந்த நால்வரும் ஒரே வீட்டிற்குள் ஏன் தத்தம் அடையாளங்களை மறைத்துக் கொண்டு வாழ வேண்டும்? அந்த மூன்று ஆண்களும் வெளிமனிதர்களுக்கு ஏன் தெரியப்படுத்தப்படவில்லை? அந்நால்வரின் வாழ்க்கைகளும் அவ்வீட்டிற்கு வெளியே எப்படி இருந்ததன? அவ்வீட்டைவிட்டு வெளியேறியபின் அவர்களின் உறவு என்ன ஆனது? தத்தம் நோக்கங்களை அவர்கள் வென்றார்களா இல்லையா? இக்கதை சொல்வதற்கு ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் களம்தான், நான் இப்புத்தகத்தைப் படிக்கக் காரணம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352 - அவரநிலைப் பிரகடனம் - Emergency.

352 காலத்தில் அதிகாரம் தவறாக உபயோகிக்கப்பட்டதை இந்த நால்வர் வசிக்கும் ஒரு வீடு, ஒரு சேரி (slum) என்ற இரண்டு இடங்களிலுள்ள மாந்தர்களை வைத்துக் கதை சொல்கிறார் ஆசிரியர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைத் திட்டம், சேரி ஒழிப்புத் திட்டம், எதிர்ப்பாளர்களையும், மாணவ - யூனியன் தலைவர்களையும் அரசியல் கைதிகளாக்கியது, எந்தக் கேள்வியும் முன்னறிவிப்பும் இல்லாமல் யாரையும் கைதுசெய்வது, காணாமல் போனவர்களும், சாலையோரம் வாழ்க்கையைத் தொலைத்துப் போனவர்களும் நகர்த்திப் போகும் கதைக்களம்.

மருத்துவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கெடுவை (quota) முடிப்பதற்காக வயது, பாலினம், உடல்நிலை ஏதும் பாராமல் கண்மூடித்தனமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயப்படுத்தி செய்தது ஒருபுறம்; அதற்கு ஆட்கள் பிடித்துத்தந்து கமிஷன் பெற்றவர்கள்; தனக்கு வேண்டப்படதாவர்களைச் சிகிச்சைக்குக் கட்டாயப்படுத்திய அதிகாரமுடையவர்கள்; சிகிச்சை என்ற பெயரில் அதையும் தாண்டி தனது சொந்தப் பகை தீர்த்துக் கொண்டவர்கள்; தவறான சிகிச்சைகளில் உடல் - உயிர் தொலைத்துப் போனவர்கள்; பணம், வானொலி என்று இலவசங்கள் கிடைக்கும் ஆவலில் தானே முன்வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இன்னொரு புறம். Midnight's Children புத்தகத்தில் பாலினம் மாறும் சக்தி படைத்த ஒரு மனிதனுக்கு, 352 காலத்தில் இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். இப்புத்தகத்திலும் கணக்கு காண்பிப்பதற்காக ஒருவனுக்கு இரண்டுமுறை செய்யப்படும்.

கதைமாந்தர்களின் பின்புலமும் எடுத்துக்கொண்ட களமும் தைரியம் + அருமை + பொருத்தம். தாழ்த்தப்பட்ட தொழில்களாக இந்தியாவில் கருதப்படும் தொழில்களில் ஒன்றைச் செய்யும் ஒரு கிராமம். ஜமின்தாரின் மகன்முன் குனிந்து வேலை செய்ய மறுத்த பெண்ணை மொட்டையடித்து நிர்வாணமாக ஊர்வலம்; உரிமைக்குரல் கொடுத்தவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு வாயில் மூத்திரம்; திண்ணியம் போல மலம் தின்ன வைக்கும் நிகழ்ச்சி; கீழ்வெம்மணி போல ஊரையே கொளுத்தும் சம்பவம்; பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி போல ஓட்டுரிமைக்காகப் போராடும் சமுகம்; அழுத்தமான களங்கள். ஒரு தாழ்த்தப்பட்டவளின் வயிற்றுப் பசிக்குக் கொய்யாப்பழம் திருடிய குற்றத்திற்கு உடல்சுகத்தைத் திருடிப்போகும் ஒரு கிளைக்கதை கொஞ்சம் சீரணிக்கக் கடினம்.

மாநகரின் சேரி இன்னொரு களம். சேரிவாழ் மனிதர்களின் சின்னச்சின்ன சந்தோசங்கள், பெருத்த சோகங்கள், கழைக்கூத்தாடி - முடி சேகரிப்பவன் - பிச்சைக்காரன் - தையல்காரன் என்ற அவர்களின் நிரந்தரமற்ற தொழில்கள். புதிதாய்ச் சேரிக்குள் வருபவன் ஒருவனுக்கு அனுபவசாலி ஒருவன், தண்டவாளத்தில் மலம் கழிக்கக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. இரயில்களின் கால அட்டவணை தெரிந்து கொண்டு, தண்டவாளத்தில் எங்கு - எப்படி - எந்த நேரம் உட்கார வேண்டும் என்று வரும் பகுதி நகைச்சுவையாக இருந்தாலும், அடிப்படைக் கழிப்பிட வசதிகள் எல்லாருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை என்பது உண்மை!

புதினத்தில் சிறிது நேரமே வந்து போனாலும் அவினாஷ் என்ற மாணவத் தலைவனும் வாலிமிகி என்ற பிழைத்திருத்துபவரும் மனதில் பதிந்துவிடுகிறார்கள். ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உறவு, இப்புத்தினத்தில் மிகவும் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளில் ஒன்று. இவர்களுக்கிடையே இருக்கும் வெறுப்பிற்குக் காரணம் பாலியல் சம்மந்தப்பட்டதாக இருப்பதும், ஒரு சகோதரி மீது ஆண் காட்டும் வன்செயல்களும் கசப்பான நிஜம். இந்து முஸ்லீம் கலவரங்கள், சீக்கியப் படுகொலைகள் என வரலாற்றின் மற்ற சில அத்தியாயங்களையும் தொட்டுச் செல்லும் இப்புதினத்தின் சில கதைகளின் சாரம், அங்காடித் தெரு - நான் கடவுள் போன்ற படைப்புகளின் மூலம் நமக்கும் சிறிது பரிச்சயப்பட்டிருக்கலாம். திக்கற்ற மக்கள் தங்கள் வாழ்கையை நகர்த்திக் கொண்டுபோக சந்தோசங்களுக்கும் சோகங்களுக்கும் இடையே காட்டும் ஒரு Fine Balance இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் படித்து முடித்த அந்த இரவில் நான் தாமதமாகத் தூங்கினேன். அக்காட்சியாவது:

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மயக்கம் தெளியும்வரை ஓய்வெடுக்கும் அறையது. நீண்ட நேரமாக மயக்கம் தெளியாமல் இருக்கும் தனது பக்கத்தில் உள்ளவனுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் பதறுகிறான் ஒருவன். இருவரின் காற்சட்டையையும் நீக்கி, ஒவ்வொரு இடமாக கட்டுகளின் மேலேயே தொட்டுத் தொட்டு, தனக்கு செய்தது போலவே அவனுக்கும் செய்யப்பட்டிருக்கிறதா என்று சோதிக்கிறான்.......

போதும். ஆணுறுப்பை நீக்கும் புத்தகம் ஒன்றுடன் அடுத்து சந்திக்கிறேன்.


அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1) முன்னாள் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஒன்பது குழந்தைகள். அவசரநிலைப் பிரகடன காலத்தில் செய்யப்பட்ட கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை எதிர்த்துதான் அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக சொல்வார். அவரின் மூத்த மகளின் பெயர் மிசா (MISA)!

2) ஜூலை 2, 2010 அன்று கேரள சட்டசபை நாள் முழுவதும் முடக்கம்.

3) டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பம்பாய் நகரில் நலிவடைத்து வந்த காலத்தில் கதை பயணிப்பதால், அதன் சாரத்தைக் கதையோட்டம் கொஞ்சம் தொட்டுச் சென்றது. ஒரு புதிய திரைப்படம் இப்பிரச்சனையை மையப்படுத்தி வெளிவந்திருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. நானும் மொழிபெயர்ப்பாளன் ஒருவனுடன் சென்று பார்த்தேன்; இரண்டு வித்தியாசமான படுக்கையறைக் காட்சிகள் தவிர வேறொன்றுமில்லை. இன்றைய பிரச்சினைகள் நாளைய வியாபாரங்கள்!

4) ஆடும்கூத்து தவிர வேறு எந்தத் தமிழ்த்திரைப்படத்திலும், அவசரநிலைப் பிரகடனம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

The lives of the poor were rich in symbols.

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/

Monday, June 28, 2010

64. எண்ணும் மனிதன்

------------------------------------------------
புத்தகம் : எண்ணும் மனிதன்
ஆசிரியர் : மல்பா தஹான்
மொழி பெயர்ப்பாளர் : கயல்விழி
வெளியீடு : அகல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ.120

------------------------------------------------

பள்ளி நினைவுகளை அசை போடும்போது, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எத்தனை பேருக்கு கணக்கு பிடித்தமான பாடமாக இருந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் சொற்பமான ஓர் எண்ணாகவே இருக்கக் கூடும். ஆனால் இன்று கணக்கையும் நம் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க இயலும் என்று தோன்றுகிறதா? பணியிலோ, தொழிலிலோ, அன்றாட கொடுக்கல் வாங்கல் செயல்களிலோ, வியாபாரத்திலோ, மேலும் குடும்ப விஷயங்களிலோ கூட பள்ளிக்கூடக் கணக்கின் பயன்பாடு சிறிதளவேனும் இருந்தே விடுகிறது. என்றால், கணக்கில்லாது இயங்கும் வாழ்க்கைமுறை இங்கு சாத்தியமில்லை என்பது புரிகிறது.

கணக்கை ஒரு பாடம் என்பதையும் தாண்டி, எண்களைக் கொண்டதொரு மொழியாகவும், நிர்ணயிக்கப்பட்ட விதிகளைக் கொண்ட சூட்சும விளையாட்டாகவும், தர்க்கங்களின் தொகுப்பாகவும், நோக்கும் பார்வை அதன் மீதான ஓர் ஈர்ப்பைத்தோற்றுவிக்கலாம். எண்களைக் கொண்டு கட்டுவிக்கப்பட்டிருக்கும் மாபெரும் புதிர் மாளிகை கணக்கு. அதன் ஒவ்வொரு மர்ம முடிச்சையும் அவிழ்த்து வெளியேறும் அனுபவம் நிச்சயம் சுவாரசியமானதாகவே இருக்கும் என்று பேசுகிறது இந்த 'எண்ணும் மனிதன்' புத்தகம்.

புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான். கணக்கின் அடிப்படை மற்றும் அழகுகளைக் கற்றுக்கொள்கிறான். பாக்தாத் செல்லும் வழிப் பாலைவனப் பயணத்தில் இப்புத்தகத்தின் ஆசிரியருடன் அறிமுகமேற்பட்டு பின் இருவருமாக பாக்தாத்தை நோக்கிச்செல்கின்றனர். இருவரும் சந்திக்கும் மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள், கணிதப் புதிர்கள், சவால்கள், எண்ணும் மனிதன் அடையும் உயர்வு, என்பதாக விரிகிறது இப்புத்தகம். சிந்துபாத்தின் சாகசப் பயணம் போலும் பெரமிஸ் சமீரின் கணித சாகசங்களை அடுக்குகிறது இப்புத்தகம்.

தன் எண்ணும் திறமையால் பாக்தாத் வணிகர் ஒருவரைக் கவர்ந்து அதன் மூலம் கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை பெற்றுத் தரும் எண்ணும் மனிதனின் சொல் இப்படியாக அமைகிறது. 'ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம் அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம் . கடவுளின் இந்த நூலகத்தை திருடவோ, அல்லது அழிக்கவோ முயற்சிப்பது மிக அசிங்கமான குற்றம்.' எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை!

பாக்தாத்தின் பழங்கால வாழ்வு, அரசு, நாகரிகம் என்பதைக் கொஞ்சமாகக் கோடிட்டு, ஏறத்தாழ அத்தியாயத்துக்கொரு புதிரைக் கொண்டு சிந்திக்கச் செய்கிறது இப்புத்தகம். நான்கு 4களையும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளையும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) பயன்படுத்தி 1 முதல் 10 வரையிலான எண்களைக் கொண்டு வரும் புதிர், என்னை மிகவும் கவர்ந்தது. நான் முயன்று ஏழு எண்களைக் கண்டுபிடித்தேன். மற்றவற்றுக்கு எண்ணும் மனிதன் உதவி செய்தான். உதாரணத்துக்கு ஒன்று இங்கே. மற்றவற்றை நீங்கள் முயன்று பாருங்களேன்.

5 = (4+(4*4))/4

எண்களைப் பற்றிப் பெரமிஸ் சமீர் பேசும் ஒவ்வொரு தருணமும் எண்களின் மீதான அவனின் காதலை உணர்த்துவதோடு, எண்களின் வேறொரு பரிமாணத்தை நமக்கும் அறிமுகம் செய்துவைக்கிறது. எண்ணும் மனிதன் இடையிடையே இசுலாமியத் தத்துவங்களையும் பேசுகிறான். இறுதியில் பெரமிஸை அறிஞர்கள் சோதிக்கும் அத்தியாயங்கள், கணக்கு என்பது வெறும் தர்க்கம் சார்ந்த அறிவியல் மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகின்றன.

கணக்கின் வரலாறு சொல்லும்போது, கணக்கில் இந்தியாவின் பங்கு பற்றிய செய்திகள் வருகின்றன. திருமணம் செய்து வாழும் பேறற்ற தன் மகள் லீலாவதியின் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்ய விரும்பிய கணிதவியலாளர் பாஸ்கராவின் கதை இடம்பெற்றிருக்கிறது.

'உன்னுடைய மோசமான திருமணத்தினால் பிறக்கும் குழந்தைகளின் வாழ்நாளைவிட அதிக காலம் மனிதர்களின் நினைவில் நீ இருக்கும் வகையில் உன்னுடைய பெயரில் ஒரு புத்தகத்தை எழுதப்போகிறேன்' என்றபடி 'லீலாவதி'யைப் படைத்திருக்கிறார் பாஸ்கரா.

சற்றே சலிப்பூட்டும் நடை புத்தகத்தின் மீதான நம் ஈர்ப்பைக் குறைக்கலாம். அதை மீட்டெடுப்பது, விடுகதை போலும் நம் முன்னால் வைக்கப்படும் கணிதப்புதிர்கள்தான். ஆங்கிலத்தில் Mathematical Aptitude, Mathematics trivia, என்று பல வகையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இம்மாதிரியான ஒரு புத்தகம் தமிழில் நான் பார்ப்பது இதுவே முதன்முறை.

கணக்கின் மீது ஆர்வமுள்ளவர்களை விட, கணக்கின் மீது ஆர்வமில்லாதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

'எண்ணும் மனிதன்' பற்றி மேலும் அறிந்துகொள்ள எஸ்ராவின் பதிவு இங்கே...
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=397&page=

- சேரல்
http://seralathan.blogspot.com/

Friday, June 18, 2010

63. அபிதா

பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!

இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்
என் இருகண்ணில் தெரிகின்ற ஒருகாட்சி நீதான்
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்

-வைரமுத்து

------------------------------------------
புத்தகம் : அபிதா
ஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ75
பக்கங்கள் : 118

------------------------------------------

நான் படிக்கும் லா.ச.ராவின் முதல் படைப்பு இது. முதல் சில பக்கங்களிலேயே தெரிந்து விட்டது இவரது நடை எனக்கு ரொம்பப் புதியது. இது வரை நான் பழகாத ஒன்று. ஒரு கடினமான சிக்குக் கோலம் போல கோட்டினூடே பயணிக்கையில் வார்த்தை ஜாலங்களாக மயக்கம் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் எட்ட நின்று பார்க்கையில் அதற்கேயுரிய அழகுடன் அமைதியாய் வீற்றிருக்கிறது இவரது எழுத்து.



அபிதாவைச் சுருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், கதைச்சுருக்கம் என்று ஒன்று சொல்வதானால் இப்படிச்சொல்லலாம்.

கருவேல நாதர் வீற்றிருக்கும் கரடி மலை. அதன் அடிவாரத்தில் வயலும் குளிர்நீர் நிறைந்த கன்னிகுளமுமாக அழகியதொரு கிராமத்தின் அக்ரஹாரம். இங்குதான் அம்பியின் பால்யம் கழிகிறது. அம்பியின் மனம் சகுந்தலையிடம் நாட்டம் கொள்கிறது. ஆனால், வேறுசில நிகழ்வுகளால் ஊரைவிட்டோடி, நகரத்தில் ஒரு முதலாளியிடம் தஞ்சம் புகுகிறான். வேலையில் மென்மேலும் சிறந்து அவரது மகளையே கரம்பிடித்தாலும், சகுந்தலையின் நினைவுள் உழலும் அவன், பல ஆண்டுகளுக்குப் பின் கரடி மலைக்கு தன் மனைவியுடன் விஜயம் செய்வதில்தான் கதை தொடங்குகிறது. மிச்ச முன்கதைகள் அனைத்தும் இடையிடையே நினைவின் அசைபோடல்களாக வந்துசெல்கின்றன. இப்போது சகுந்தலை உயிருடன் இல்லை. கரடிமலையில் சகுந்தலையின் மறு உருவாக அவளின் மகள் அபிதாவைக் காண்கிறான். அபிதா மீது அம்பி கொள்ளும் ப்ரியத்தை வகைப்படுத்த முடியாமல் தடுமாறுகிறான். அபிதாவின் முறைமாமனான இளைஞன் மீது பொறாமை கொள்கிறான். தன் மனைவி மீது கோபம் கொள்கிறான்.



அபிதா என்கிற பெயருக்கு கடைசிவரை தொடமுடியாதவள் என்று பொருள் சொல்கிறார் லாசரா. அப்படியே அம்பிக்கும் அபிதா தொடமுடியாதவளாக, நூல் முடிவடைகிறது.

நாம் பழகிய மனிதர்கள் வசிக்கும் அக்ரஹாரத்துக்குள் திடீரென நுழைந்துவிட்ட மாதிரி புத்தகம் முழுவதும் பச்சைக்கற்பபூர மணம் கமழ்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகமும், சுய புலம்பல்கள் நிறைந்த உரையாடல்களாலேயே அப்பாத்திரங்களை வரையறுத்திருப்பதும் எனக்கு மிகவும் பிடித்தது. மொத்த வாசிப்புமே ஒரு மெல்லிய போதை போன்ற அனுபவம்தான்.

கடைசிவரை அபிதா என்கிற பிம்பம் முழுமையடையாமலேயே முடிகிறது. அந்த முழுமையைத் தேடிய பயணம்தான் கடைசி வரை நம்மை இட்டுச்செல்கிறது எனலாம். இது ஓரளவுக்கு ஆணாதிக்க மனப்போக்கோ என்ற எண்ணமும் இடையிடையே வந்துபோனது. இப்படி ஒரு சில இடங்களில் ஆசிரியருடன் ஒத்துப்போகமுடியாவிட்டாலும், தனித்துவமான வாசிப்பனுபவம் இது.

மனித மனதின் விசித்திரங்களின் ஆழம், அபிதா.

1982 ல் அபிதா நாடகமாக அரங்கேறியிருக்கிறாள். இந்த செய்தியே எனக்கு பெரிய ஆச்சரியமாகப் படுகிறது. அபிதா, ஒரு அனுபவம். அல்லது ஒரு பெரும் ஓவியத்தில் நாம் ரசிக்கும் ஒரு பகுதி மாதிரி நம் பிடிக்குள் அடங்க மறுத்து திமிறி நிற்பவள். அவளை மனதினுள் பிம்பமாக காட்சிப்படுத்துவதே எனக்கு சிரமமாக இருந்தது. அபிதாவை எப்படி மேடையில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். எப்படி ஒரு பிரம்மப்பிரயத்தனம் அது. அந்நாடகத்தின் ஒளிப்பதிவுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருந்தாலும் அது தொடர்பாக ருத்ரன் அவர்களின் அனுபவம் இங்கே

http://rudhrantamil.blogspot.com/2009/11/blog-post_25.html

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Wednesday, May 26, 2010

62. ஊர்க்கதைகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

------------------------------------------------------------------------------
புத்தகம் : ஊர்க்கதைகள்
ஆசிரியர் : வெ.நீலகண்டன் (குங்குமம் இதழில் உதவி ஆசிரியர்)
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2009
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 199 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

------------------------------------------------------------------------------

சில சமயங்களில் சில ஊர்கள் மர்மங்களைச் சுமந்துகொண்டோ, கலாச்சாரத்தில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, இயற்கையின் கோலங்களில் மாட்டிக்கொண்டு பரிதாபமாகவோ மற்ற ஊர்களால் அறியப்படுகின்றன. அப்படியொரு ஊரைப்பற்றி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். கேரளமாநிலத்தில் ஒரு கிராமம். ஊர் முழுக்க முந்நூறுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு சோடி; ஆணும் ஆணும்; பெண்ணும் பெண்ணும்; ஆணும் பெண்ணும் கூட. வாக்கப்பட்டுப் வெளியூர் போகிற பெண்களுக்கெல்லாம் இரட்டையர்கள் பிறப்பதில்லை; வாக்கப்பட்டு இவ்வூருக்கு வருகிற பெண்களில் பலர் இரட்டையர்களைப் பெறுகிறார்கள்.விஞ்ஞானிகளின் மண்டையைக் குழப்பும் அக்கிராமம் மனிதனின் அறிவெல்லைக்கே சவால்விட்டுக் கொண்டிருக்கிறது.

இராமநாதபுரம் - சிவகங்கை மாவட்டங்களில் சென்ற மாதம் நான் சுற்றித் திரிந்தபோது 'நெற்குப்பை' என்றொரு ஊரின் பெயரைப் பார்த்தேன். அதன் பெயர்க்காரணம் பற்றி அதிகம் யோசித்ததாலோ என்னவோ, திருச்சி ஒடிசியில் இப்படியொரு புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். பொருளடக்கத்தில் மிலிட்டரியூர், தீர்க்கசுமங்கலியூர், தத்தங்கியூர் என ஊர்களின் பெயர்கள் இருந்தன. சரி இதுமாதிரி வித்தியாசமான பெயர்கொண்ட 35 ஊர்களின் பெயர்க்காரணம் சொல்லும் புத்தகம் என நம்பி வாங்கினேன். ரொட்டி தின்ன வந்தவனுக்குப் பெனிசிலினின் அறிமுகம் கிடைத்ததுபோல், நான் ஒன்றை எதிர்பார்க்க நான் தேடும் அரிய வேறொன்றைத் தந்துபோனது இப்புத்தகம்.

கிராமம் / நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். கிராமம் என்ற மிஞ்சியிருக்கும் ஒரு பொருளில் எஞ்சியிருக்கும் வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் - சடங்குகளையும், சில நகரங்களின் பழமைச் சிறப்புகளையும் தளமாகக்கொண்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர். எல்லா ஊர்களிலும் ஆசிரியர் தங்கி வாழ்வியல் சூழலை உள்வாங்கி எழுதியிருப்பதும், ஊர்களை வாசகனுக்குப் படைத்திருக்கும் விதமும் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.

பெண்களை ஒடுக்கும் சடங்குகளை இன்னும் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் வாழும் ஊர்களைப் பற்றி பேசுகிறது முதல் கட்டுரை. அந்நிய மனிதர்களை அனுமதிக்காத அக்கிராமங்கள் ஒன்றினுள் ஆசிரியர், ஓர் அரசதிகாரியெனப் பொய்சொல்லி அவர்களைப் பேட்டிகண்டதும், உண்மை தெரிந்த பிறகு கிராமத்தில் இருந்து வெளிவர பெரும்பாடுபட்டதையும் கூறுகிறார்.

கதாநாயகர்கள் பெயரையே காவியத்திற்குப் பெயராக வைப்பதுபோல் இல்லாமல், ஒவ்வோர் ஊருக்கும் / கட்டுரைக்கும் தலைப்பாக ஆசிரியரே பெயர் வைத்துள்ளார். இசையூர் என்ற தலைப்பில் நாதஸ்வரம் செய்யும் ஊர்; சுயபிரசவமூர் என்ற தலைப்பில் உயிரிழப்பில்லாமல் சுயபிரசவங்கள் நடக்கும் ஓர் ஊர். இப்படித்தான் 35 ஊர்களுக்கான தலைப்புகளும். ஒவ்வொரு தலைப்பையும் பார்த்துவிட்டு எதுமாதிரியான ஊராயிருக்கும் என்று கற்பனை செய்துசெய்து படித்தேன்.

மொய்விருந்து விழா எடுத்து மொய் வசூலிக்கும் ஓரூர்; மனிதர்களே இல்லாத ஓரூர்; தீபாவளிக்குப் பட்டாசுகளைத் தவிர்க்கும் ஓரூர்; ஏழு ரூபாய்க்குச் சாப்பாடு தரும் ஓரூர்; மின்சாரம் இல்லாத பணக்கார ஊர். இதுபோன்ற தகவல்களில் ஆச்சரியப்படவைக்கும் ஊர்கள் பல இருந்தாலும், மனதைப் பதறவைக்கும் சில ஊர்களும் உண்டு. புற்றுநோயாளிகளை உண்டாக்கும் ஓரூர்; வாய்பேச முடியாதவர்களும், காதுகேளாதவர்களும் பிறக்கும் ஓரூர்.

இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் குறிப்பிடப்படாமல் இருப்பது சிறுகுறையாகப்படுகிறது. மின்சாரம் இல்லாத ஊரைப் பற்றி விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் மின்னிணைப்பு பெற்றதாக அறிந்தேன். தெருக்களில் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்படுவதில்லை என்ற தகவலும் கிடைத்தது. குடிசை வீடுகள் மட்டுமே புத்தகம் சொல்லும் இடங்களில் இன்னும் கான்கிரீட் கூரைகளும் இருப்பதாக அறிந்தேன்.

தமிழ்நாட்டிலுள்ள அந்த 35 ஊர்களில் சென்னைக்குட்பட்டவை 6. சிற்பியூரையும் பட்டுச்சேலையூரையும் தவிர, எனக்குப் பரிச்சயமானவை 11; ஆனால் ஆசிரியர் சொல்லும் விசயங்களில் நான் அந்த ஊர்களை அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. 35ல் 3 ஊர்களை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறேன், நேரடியாகச் சென்றுபார்க்க.

பெரும்பாலும் ஆசிரியர் பணிநிமித்தம் இருந்த இடங்களுக்கு அருகிலுள்ள ஊர்களையே ஆவணப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் ஒரு நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் இப்புத்தகம் தொடாத பகுதிகள் ஏராளம். ஒரு நல்ல வாசகனின் தேடுதலுக்கு ஒரு தூண்டுகோலாக கண்டிப்பாக இப்புத்தகம் அமையும். கழுவூர், செம்மண்ணூர், ஜல்லிக்கட்டூர் என நான் கூட சில தலைப்புகள் தயார்ப்படுத்திவிட்டேன்.

குடுகுடுப்பை குமரியில் பிடிப்பவனை S.T.(Scheduled Tribes) பிரிவிலும், ஆரணியில் பிடிப்பவனை S.T. அல்லாத பிரிவிலும் வைத்திருக்கும் இந்த வித்தியாசமான இந்தியாவின் உண்மை முகம், கிராமங்களில் உள்ள உணர்வு பூர்வமான மனிதர்களிடம்தான் உள்ளது. காந்தி சொன்னதுபோல் அதைத் தேடிப்பாருங்கள்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Wednesday, April 28, 2010

61. கிருஷ்ணன் வைத்த வீடு

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது
-கவிஞர் சுகுமாரன்


---------------------------------------------------
புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடு
ஆசிரியர் : வண்ணதாசன்
வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2000
விலை : ரூ 75
பக்கங்கள் : 136

---------------------------------------------------

சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் 'கிருஷ்ணன் வைத்த வீடு'. இந்தத் தொகுப்பும், குறிப்பாக இதில் இப்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் சிறுகதையும் பெரும்பாலான வாசகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

சென்னையில் பணிபுரிந்த போதும், சென்னை வாழ்க்கையிலிருந்து விலகிய மனநிலையில், அவ்வாழ்க்கையின் மீதான நினைவுகளை மையமாகக் கொண்டும் எழுதிய சிறுகதைகளை இதில் தொகுத்திருப்பதாக வண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். பிழைப்பிட வாழ்வின் சாயல் பெரிதும் படியாமல் வழக்கமான வேறுமாதிரியான வண்ணதாசன் நடையில் அமைந்த சிறுகதைகள் இத்தொகுப்பை நிறைத்திருக்கின்றன.

வெகு இயல்பான நிகழ்வுகள், இரு மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல், ஒரு தனிமனிதனின் மனவோட்டம் இவை மட்டுமே ஒரு சிறுகதையாகிவிடும் அற்புதத்தை இவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. வண்ணதாசன் எனும் மாயவித்தைக் காரர் நமக்குத் தெரியாமலேயே நம் நினைவுகளை, அசைவுகளை, பைத்தியக்காரத்தனங்களை, கோபங்களை, அங்க சேட்டைகளை, வினோதமான பழக்கங்களை, சொல்லாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவை கதையாகக் கூடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றன இக்கதைகள்.



இக்கதைகளினூடே பயணிக்கும்போது ஏற்படும் அனுபவமும், கடந்த கால நினைவுகளும் இவற்றுக்கும் நமக்குமான ஆழ்ந்த சிநேகத்தை உணர்த்தலாம். அதே அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறுமாதிரியானதாக அமையலாம்.

இத்தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் 'நான்' சொல்லும் கதைகளாகவே இருக்கின்றன. இந்த 'நான்' வண்ணதாசனாகவோ அல்லது அவர் தன்னைப் பொருத்திப் பார்க்க விரும்பும் ஒரு பிம்பமாகவோ இருக்கலாம் என்பதென் எண்ணம்.

தொகுப்பின் முதல் கதை 'கிருஷ்ணன் வைத்த வீடு'. ஏதேனும் ஒரு நாளில் நினைத்துப் பார்ப்பதற்கென்று ஒவ்வொரு மனிதனுக்கும் சில பழைய நினைவுகள் இருப்பது மிகவும் இயல்பானதே! அப்படியான ஒரு தனிமனிதனின் மனப்பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கிருஷ்ணன் வைத்த வீட்டின்' நினைவுகளைப் பால்ய நண்பன் ஒருவன் கிளற, அதைத் தொடர்ந்த நினைவு ரேகைகளைப் பின்தொடர்கிறது இக்கதை. இது போன்றதொரு கதையை யாரும் எழுதிவிட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு, கிட்டத்தட்ட இது போன்றதொரு அனுபவம் எல்லோருக்கும் கூட வாய்த்திருப்பதற்கான நிகழ்தகவும் அதிகம். ஆனாலும், இவரின் நடையும், அந்த அனுபவத்தை விவரிக்கும் தன்மையும், ஆழ்ந்த எழுத்து முதிர்வின் அடையாளமாக நிற்கின்றன.

வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரும்பாலான சமயங்களில் நமக்கு நிறைவேறுவதில்லை. சொந்த வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடே நிலையற்றதாக இருக்கும் நாம், சக மனிதனின் வாழ்க்கையின் மீதான நம் எதிர்பார்ப்புகளை என்ன செய்வது? ஏமாற்றம் ஏற்படும் பொழுதுகளில் எந்த வழியே தப்பித்தோடுவது? வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஒரு அசாதாரணமான மனநிலைதானே! வாழ்வின் சாதாரணமான நியதிகளையும், சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நாம் அசாதாரணமானவற்றைப் பார்க்கும்போது எப்படி எதிர்வினை புரிகிறோம்? ஐந்து விரல்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத நமக்கு ஆறாவது விரல் புரியாது போவதில் ஆச்சரியமில்லை அல்லவா? 'ஆறாவது விரல்' சிறுகதையும் அசாதாரணமான ஒரு நிலையை சாதாரணமானவர்களின் பார்வையில் அணுகுகிறது.

'உள்புறம் வழியும் துளிகளில்' இருக்கும் பாத்திரங்களின் ரசனையை நம்மால் ரசிக்காமல் இருக்கவியலாது.

இருவேறு மனநிலைகளில், இருவேறு சூழ்நிலைகளில் வாழும் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறது 'ஒரு நிலைக்கண்ணாடி...சில இட வல மாற்றங்கள்' சிறுகதை. பறவைகளின் ஒலியும், மரங்கள் உரசும் ஒலியும் மட்டுமே நிறைந்திருக்கும் வெயில் கால வனத்தின் சிற்றோடையின் சலனத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது இக்கதையின் ஓட்டம்.

'உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே, அது இன்னமுன் இருக்கா அக்கா?'

என்ற கேள்வியில் தொடங்கி,

'இன்னமும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே, எங்கள் வீட்டு மச்சில் இருக்கிற நிலைக்கண்ணாடி பற்றி.....அதில் பார்த்தால் ஒருவேளை தெரியுமோ என்னவோ!'

என்று முடிந்து, தடவிப்பார்த்து உணர்ந்து மகிழுமொரு ரகசிய முடிச்சைப் போட்டுச் செல்கிறது.

தொகுப்பின் கடைசியில் 'சின்னு முதல் சின்னு வரை' எனும் குறுநாவல் இடம்பெற்றிருக்கிறது. நமக்கு இணக்கமானவர்களின் வாழ்வில் ஏற்படும் நிலைமாறுபாடுகள், அதன் மீதான சமூகப்பார்வை, மனிதாபிமானம் என்கிற கோட்டுக்குள் கண்ணுக்குப் புலப்படாமல் வரையப்பட்டிருக்கும் தன்னலம் என்கிற பாதுகாப்புவட்டம், என்று உளவியல் ஆய்வு செய்கிறது இக்குறுநாவல்.

எல்லாக் கதைகளுமே உணர்வுகளை ஆராயும் போக்கிலேயே அமைந்திருப்பதாகப்படுகிறது. வண்ணதாசன் எழுத்தின் வீரியத்தை இத்தொகுப்பிலும் காணமுடிகிறது. நெகிழ்ச்சியடைவது வாழ்வில் எப்பொழுதாவது நிகழ்வதுண்டு. வண்ணதாசனின் எழுத்து வாசிப்பில் இது எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது, இப்புத்தகத்திலும் கூட.

- சேரல்
http://seralathan.blogspot.com/

Friday, April 16, 2010

60. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
- வள்ளுவம்

God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .
- Thomas Loren Friedman (The Lexus and the Olive Tree)


-------------------------------------------------
புத்தகம் : இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2006
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 192 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------



ஆசிரியர் தாராபுரத்துக்காரர். தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களில் ஆசிரியர் எழுதியிருந்த 32 சுற்றுச்சூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள், காட்டுயிர்கள் அழிவின் மீதான எச்சரிக்கைகள், இயற்கையின் பேரன்பிலிருக்கும் அறம் குறித்தன மனிதனின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

ஆசிரியரை இரண்டு விசயங்களில் பாராட்டியே ஆக வேண்டும்.

1. பெரும்பாலும் நேரடி அனுபவங்களைத் தொகுத்திருப்பதாலும், ஒத்த சிந்தனை உடையவர்களை மொழி வேறுபாடு பாராமல் அடையாளம் காட்டியிருப்பதாலும், அதிகம் மெனக்கெட்டிருப்பதாலும், புத்தகத்தின் தரம் கொஞ்சம் அதிகம்!

2. புத்தகம் முழுவதும் பரவியிருக்கும் தகவல்களும், வார்த்தை உபயோகங்களும், இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்களில் ஆசிரியர் காட்டியிருக்கும் நிதானமான - ஒழுங்குபடுத்தப்பட்ட கோபமும், நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்களும்.

விவேக் மாதிரியே காமெடி பண்றார்னு எம்.ஆர்.ராதா அவர்களைக் காட்டுகிறான் ஒரு தமிழ்ப்பையன். இளவேனில் - முதுவேனில் - கார் - கூதிர் - முன்பனி - பின்பனி என்று பருவங்களைப் பி+படித்திருந்த வம்சத்தில் பிறந்த நாம், மழை வருமா என செய்திவாசிப்பாளரைக் கேட்கிறோம். முடங்களை - கோனரி - கேசரி - சீயம் - வயமா - அரி - மடங்கல் - கண்டீவரம் - ஏறு என பல சொற்களால் வலம்வந்த 'சிங்கம்' என்ற ஒன்றை, தமிழ் - சாமி - கோவில் - அருள் என்ற ஹரியின் வரிசைகளில் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைவிட்டு நீண்ட தூரம் ஓடிப்போய்விட்ட இப்போதைய மனிதனுக்கு இப்படியொரு புத்தகம் கண்டிப்பாகத் தேவைதான்.

புலி (வேங்கை), காட்டெருது, யானை (வேழம்), சிங்கம், காண்டாமிருகம், குறிஞ்சிமலர் எனக் காட்டுயிர்கள் பற்றித் தனித்தனி கட்டுரைகளில் விவாதிக்கிறது புத்தகம். வண்டலூர், பெரியாறு, காசிரங்கா, கிர், பந்திப்பூர், முண்டந்துறை, அடையாறு கழிமுகம் என்று சில இடங்களும் தேவைப்படும் இடங்களில் வந்து போகின்றன. இவற்றிற்கெல்லாம் எப்படி கேடுகாலம் ஆரம்பித்தது எனவும், அவற்றின் அழிவைக் கொண்டாடியவர்கள் பற்றியும், அவற்றைக் காப்பாற்றப் போராடிய + போராடுபவர்களைப் பற்றியும் பேசுகிறது புத்தகம்.

மெட்ராஸ் சமஸ்தானத்தில் இருந்து கொண்டுபோன மரங்களால்தான் வாட்டர்லூ போரில் நெப்போலியனைப் பிரிட்டிஷ் படைகள் வெல்ல முடிந்ததென ராமச்சந்திர குஹா (Ramachandra Guha) சொல்லியிருக்கும் கருத்தும், வேட்டை இலக்கியம் முதல் இரயில்பாதை வரை பிரிட்டிஷ்காரர்கள் தனது காலனியின் காட்டுயிர்களைக் காவு வாங்கிய கதைகளும் அருமையான தொகுப்புகள். புலியையும் யானையையும் கொன்று பாடம் செய்வது பிரிட்டிசையும், பிகரையும் குஷிப்படுத்தும் வீரதீர செயல்களாகக் கருதிய நம்மவர்களும் அதையே கொஞ்சம் மறைமுகமாக இன்னும் தொடர்வதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். மதம், அரசியல், பணம் என்று எல்லாவறையும் போட்டுக் குழப்பிக் கொண்டு நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரம் என எல்லாத் திட்டங்களிலும் சட்டுபுட்டென்று முடிவுகள் எடுக்கப்படுவதால்தான், ஒரு கத்திரிக்காயைக் (Bacillus thuringiensis Brinjal) கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கத்திரிக்காயில் அரசியல் செய்யவிடுகிறோம்.

இதுபோன்ற 'அறியாமை'களைத்தான், இப்போதைக்குச் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் மிகப்பெரிய தடை என்கிறார் ஆசிரியர். பல்லி விழுந்த உணவு நஞ்சு என்பதும், பாம்பின் விசத்திற்கு மருந்தே பாம்புதான் என்று தெரியாமல் பாம்புகளைக் கொல்வதும், மறைந்திருக்கும் மருத்துவக்குணங்கள் தெரியாமலேயே கண்மூடித்தனமாகக் காட்டுயிர்களை மனிதக்கருபோல அழிப்பதும், சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட எந்தவொரு அரசுத்திட்டத்தையும் எதுவும் ஆராயாமல் ஆதரிப்பதும் / எதிர்ப்பதும் போன்ற பல அறியாமைகள். இந்த அறியாமை எல்லா நிலைகளிலும் இருக்கிறது. Listening to Grasshoppers புத்தக முன்னுரையில் நதிநீர் இணைப்பு பற்றி அருந்ததி ராய் அவர்கள் வருத்தப்பட்டு சொல்லும் மேற்கோளும் ஓர் உதாரணம். செய்தித்தாள்கள் அடிக்கடி காட்டும் எறும்புத்தின்னி எனும் விலங்கின் பெயர் அலங்கு என்கிறார் ஆசிரியர். அலங்கு என்ற வார்த்தை தமிழில் எரும்பையுண்ணும் ஓர் ஊர்வனயினத்தைம், ஒரு நாயினத்தையும் குறிக்கிறதாம்.



தி.ஜானகிராமன் அவர்கள் மோகமுள்ளில் சொன்னதுபோல், கேவலம் சோற்றுக்காக நாயை வாலைக் குழைத்து நிற்க வைக்கிறோம். நம்மைவிட அளவிலும் பலத்திலும் ஞாபகசக்தியிலும் பெரிய யானையைவைத்து யாசகம் செய்கிறோம். கள்ளக்காதல் முதல் குழாயடி சண்டைவரை நடக்கும் கொலைகள் சிலவற்றில் நஞ்சு இல்லாத பல்லியின்மேல் பழி சுமத்துகிறோம். ஒன்றைப் பற்றி புரியாத அல்லது தெரியாத பொழுதுதான் பயமே உருவாகிறது; அல்லது நமது குற்றங்களை மறைத்துக் கொள்ள இன்னொன்றைக் குற்றப்படுத்துகிறோம். கமலஹாசன் தெளிவாய்ச் சொல்வார்:
'நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவோர் தூற்றினும்
நச்சதற்குக் கேடயம் போல்
தற்காப்பு ஆயுதமே.
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்'.

இயற்கைக்கு மனிதன் உட்பட ஒவ்வோர் உயிரும் ஓர் அங்கமே எனும் அறிவு வந்தால்தான் பயம் போய் பாதுகாக்க + மதிக்க வேண்டும் என்ற அக்கறை வரும். அவ்வக்கறை பாம்பை அடிப்பதாக நினைக்கும்போது கூட நம்மைத் துரத்திவர வேண்டும்!

புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் மாறுபடும் நியதிக்குட்பட்டு, புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். காட்டுத் தர்பார், நரிபுத்தி, ஆமை புகுந்த வீடு, கொடிய விலங்குகள், வினோத மிருகம் போன்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டு காட்டுயிர்கள் பற்றிய ஆரோக்கியமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார். ஏற்காடருகே இரு யானைகள் காப்பித் தோட்டத்தருகே வந்ததை, 'யானையின் அட்டகாசம்' என்று ஓர் இதழும் 'வாழிடம் தேடும் யானைகள்' என்று இன்னோர் இதழும் செய்திகள் வெளியிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். டால்பினுக்கான தமிழ்ச்சொல்லையும், உள்ளினப்பெருக்கம் என்ற தமிழ்ச்சொல்லையும் ஆசிரியர் குறிப்பிட்டபோது புதிய சொற்கள் மேலும் மொழியை மெருகூட்டுவதை உணரமுடிந்தது.

ஒரு குறும்படத்தைப் பார்த்தவர்கள் சிலர், 'யானைகள் பங்கேற்கும் எந்த விழாவிற்கும் செல்லமாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம். அதுபோன்ற ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையும், சுற்றுச்சூழல் பற்றிய பதங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் அமைப்பதும், இயற்கைக்கு எல்லாரும் ஒருநாள் பதில்சொல்ல வேண்டும் என்ற பொறுப்பும் போதும்!

'மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருக்கக் கூடாது; அப்படியொன்று இருக்குமானால் மனிதர்கள் கற்களால் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். தண்ணீர் என்ற பொருளுக்காக அணுவாயுதங்களுடன் கோலாகலமாகக் கொலைக்களங்களை அப்போர் உருவாக்கப் போவதின் தாக்கத்தை, இக்கோடையின் தாகத்தில் நாமெல்லாம் உணரமுடிகிறது. ஒரு சாமானியனுக்கு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போனாலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' புத்தகத்தில் இடம்பெறும் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' என்ற சிறுகதைபோல், தனது வயிற்று வாரிசுகளைத் தூக்கிக்கொண்டு இயற்கையைத் தேடி வீதிவீதியாகத் திரியப்போகும் ஒரு தலைமுறை உருவாகாமல் தடுக்க என்னால் - உங்களால் - எல்லாராலும் முடியும்.

அரசுத் திட்டங்கள், சுற்றுலா, தேனிலவு என்ற பெயரில் இயற்கையை மிகநெருங்கும் திட்டங்களுக்குத் தீர ஆராய்வோம்! கவிதைகள்,புதினங்கள் தவிர இதுபோன்ற சமூக நோக்குள்ள புத்தகங்களையும் நண்பர்களுக்குப் பரிசளிப்போம்! வாங்கும் பொருளின் மூலம் தெரிந்து பல்லுயிர்ப் பாதுகாப்போம்!

பூமி இழந்திடேல்!

அனுபந்தம்:

1. பிராணிநலம் பேணும் பேர்வழி என்று ஒரு கூட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இறைச்சி சாப்பிடும் சமூகத்தினரைப் புறக்கணிக்கும் ஒரு மேல்தட்டு கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. Corporate vegetarians! அப்படியொரு கூட்டம் ஆழிப்பேரலை புனர் சீரமைப்பில், மீனவர்களுக்கு வலைகளைத் தவிர என்ன வேண்டுமாலும் தருவதாகச் சொன்னதாம். வலையில்லாத மீனவன் வாழ வழி? Structural genocide செய்யும் இப்படியொரு கூட்டத்தை நம்பி நம்மில் எத்தனை பேர் பொருள் கொடுத்திருந்தோமோ? கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ?

2. ஏப்ரல் முதல் வாரம் தனுஷ்கோடி சென்றிருந்தேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் நீதிமன்ற உத்தரவுப்படி,சேது சமுத்திரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னார்கள்.

3. கொங்கு நாடுகளில் நானும் சேரலாதனும் சுற்றித்திரிந்த இரண்டு நாட்களில், டாப்ஸ்லிப் என்ற இடத்தின் பெயரைக் கேட்டு, சுகபோக விரும்பிகள் கூடுமிடமென நினைத்து, அவ்விடத்திற்குச் செல்லவில்லை. இப்புத்தகம் படித்த பிறகுதான் அவ்விடத்தின் பெயர்க்காரணமும் பிரிட்டிஷ் வரலாற்றில் பெற்றிருந்த அதிமுக்கிய பங்கும் தெரிந்தது. அழாத குறையாக, போச்சே போச்சே போச்சே என்று சேரலாதனுக்குப் போன் போட்டுக் கதை சொன்னேன். தம்பி அசந்து போனார்! அவ்விடத்திற்குச் சென்ற ஆசிரியர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அப்பகுதியை அழிக்கப்படாமல் காத்த ஓர் ஆங்கில அதிகாரியின் கல்லறை வாசகத்துடன் இப்புத்தகத்தை முடிக்கிறார்; நானும் அதையே வழிமொழிந்து விடைபெறுகிறேன்.

"நினைவுச் சின்னத்தைக் காண வேண்டுமென்றால் உங்களைச் சுற்றிப் பாருங்கள்".

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/