Wednesday, April 28, 2010

61. கிருஷ்ணன் வைத்த வீடு

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது
-கவிஞர் சுகுமாரன்


---------------------------------------------------
புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடு
ஆசிரியர் : வண்ணதாசன்
வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2000
விலை : ரூ 75
பக்கங்கள் : 136

---------------------------------------------------

சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் 'கிருஷ்ணன் வைத்த வீடு'. இந்தத் தொகுப்பும், குறிப்பாக இதில் இப்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் சிறுகதையும் பெரும்பாலான வாசகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

சென்னையில் பணிபுரிந்த போதும், சென்னை வாழ்க்கையிலிருந்து விலகிய மனநிலையில், அவ்வாழ்க்கையின் மீதான நினைவுகளை மையமாகக் கொண்டும் எழுதிய சிறுகதைகளை இதில் தொகுத்திருப்பதாக வண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். பிழைப்பிட வாழ்வின் சாயல் பெரிதும் படியாமல் வழக்கமான வேறுமாதிரியான வண்ணதாசன் நடையில் அமைந்த சிறுகதைகள் இத்தொகுப்பை நிறைத்திருக்கின்றன.

வெகு இயல்பான நிகழ்வுகள், இரு மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல், ஒரு தனிமனிதனின் மனவோட்டம் இவை மட்டுமே ஒரு சிறுகதையாகிவிடும் அற்புதத்தை இவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. வண்ணதாசன் எனும் மாயவித்தைக் காரர் நமக்குத் தெரியாமலேயே நம் நினைவுகளை, அசைவுகளை, பைத்தியக்காரத்தனங்களை, கோபங்களை, அங்க சேட்டைகளை, வினோதமான பழக்கங்களை, சொல்லாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவை கதையாகக் கூடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றன இக்கதைகள்.



இக்கதைகளினூடே பயணிக்கும்போது ஏற்படும் அனுபவமும், கடந்த கால நினைவுகளும் இவற்றுக்கும் நமக்குமான ஆழ்ந்த சிநேகத்தை உணர்த்தலாம். அதே அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறுமாதிரியானதாக அமையலாம்.

இத்தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் 'நான்' சொல்லும் கதைகளாகவே இருக்கின்றன. இந்த 'நான்' வண்ணதாசனாகவோ அல்லது அவர் தன்னைப் பொருத்திப் பார்க்க விரும்பும் ஒரு பிம்பமாகவோ இருக்கலாம் என்பதென் எண்ணம்.

தொகுப்பின் முதல் கதை 'கிருஷ்ணன் வைத்த வீடு'. ஏதேனும் ஒரு நாளில் நினைத்துப் பார்ப்பதற்கென்று ஒவ்வொரு மனிதனுக்கும் சில பழைய நினைவுகள் இருப்பது மிகவும் இயல்பானதே! அப்படியான ஒரு தனிமனிதனின் மனப்பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கிருஷ்ணன் வைத்த வீட்டின்' நினைவுகளைப் பால்ய நண்பன் ஒருவன் கிளற, அதைத் தொடர்ந்த நினைவு ரேகைகளைப் பின்தொடர்கிறது இக்கதை. இது போன்றதொரு கதையை யாரும் எழுதிவிட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு, கிட்டத்தட்ட இது போன்றதொரு அனுபவம் எல்லோருக்கும் கூட வாய்த்திருப்பதற்கான நிகழ்தகவும் அதிகம். ஆனாலும், இவரின் நடையும், அந்த அனுபவத்தை விவரிக்கும் தன்மையும், ஆழ்ந்த எழுத்து முதிர்வின் அடையாளமாக நிற்கின்றன.

வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரும்பாலான சமயங்களில் நமக்கு நிறைவேறுவதில்லை. சொந்த வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடே நிலையற்றதாக இருக்கும் நாம், சக மனிதனின் வாழ்க்கையின் மீதான நம் எதிர்பார்ப்புகளை என்ன செய்வது? ஏமாற்றம் ஏற்படும் பொழுதுகளில் எந்த வழியே தப்பித்தோடுவது? வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஒரு அசாதாரணமான மனநிலைதானே! வாழ்வின் சாதாரணமான நியதிகளையும், சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நாம் அசாதாரணமானவற்றைப் பார்க்கும்போது எப்படி எதிர்வினை புரிகிறோம்? ஐந்து விரல்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத நமக்கு ஆறாவது விரல் புரியாது போவதில் ஆச்சரியமில்லை அல்லவா? 'ஆறாவது விரல்' சிறுகதையும் அசாதாரணமான ஒரு நிலையை சாதாரணமானவர்களின் பார்வையில் அணுகுகிறது.

'உள்புறம் வழியும் துளிகளில்' இருக்கும் பாத்திரங்களின் ரசனையை நம்மால் ரசிக்காமல் இருக்கவியலாது.

இருவேறு மனநிலைகளில், இருவேறு சூழ்நிலைகளில் வாழும் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறது 'ஒரு நிலைக்கண்ணாடி...சில இட வல மாற்றங்கள்' சிறுகதை. பறவைகளின் ஒலியும், மரங்கள் உரசும் ஒலியும் மட்டுமே நிறைந்திருக்கும் வெயில் கால வனத்தின் சிற்றோடையின் சலனத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது இக்கதையின் ஓட்டம்.

'உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே, அது இன்னமுன் இருக்கா அக்கா?'

என்ற கேள்வியில் தொடங்கி,

'இன்னமும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே, எங்கள் வீட்டு மச்சில் இருக்கிற நிலைக்கண்ணாடி பற்றி.....அதில் பார்த்தால் ஒருவேளை தெரியுமோ என்னவோ!'

என்று முடிந்து, தடவிப்பார்த்து உணர்ந்து மகிழுமொரு ரகசிய முடிச்சைப் போட்டுச் செல்கிறது.

தொகுப்பின் கடைசியில் 'சின்னு முதல் சின்னு வரை' எனும் குறுநாவல் இடம்பெற்றிருக்கிறது. நமக்கு இணக்கமானவர்களின் வாழ்வில் ஏற்படும் நிலைமாறுபாடுகள், அதன் மீதான சமூகப்பார்வை, மனிதாபிமானம் என்கிற கோட்டுக்குள் கண்ணுக்குப் புலப்படாமல் வரையப்பட்டிருக்கும் தன்னலம் என்கிற பாதுகாப்புவட்டம், என்று உளவியல் ஆய்வு செய்கிறது இக்குறுநாவல்.

எல்லாக் கதைகளுமே உணர்வுகளை ஆராயும் போக்கிலேயே அமைந்திருப்பதாகப்படுகிறது. வண்ணதாசன் எழுத்தின் வீரியத்தை இத்தொகுப்பிலும் காணமுடிகிறது. நெகிழ்ச்சியடைவது வாழ்வில் எப்பொழுதாவது நிகழ்வதுண்டு. வண்ணதாசனின் எழுத்து வாசிப்பில் இது எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது, இப்புத்தகத்திலும் கூட.

- சேரல்
http://seralathan.blogspot.com/

Friday, April 16, 2010

60. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
- வள்ளுவம்

God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .
- Thomas Loren Friedman (The Lexus and the Olive Tree)


-------------------------------------------------
புத்தகம் : இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2006
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 192 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------



ஆசிரியர் தாராபுரத்துக்காரர். தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களில் ஆசிரியர் எழுதியிருந்த 32 சுற்றுச்சூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள், காட்டுயிர்கள் அழிவின் மீதான எச்சரிக்கைகள், இயற்கையின் பேரன்பிலிருக்கும் அறம் குறித்தன மனிதனின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

ஆசிரியரை இரண்டு விசயங்களில் பாராட்டியே ஆக வேண்டும்.

1. பெரும்பாலும் நேரடி அனுபவங்களைத் தொகுத்திருப்பதாலும், ஒத்த சிந்தனை உடையவர்களை மொழி வேறுபாடு பாராமல் அடையாளம் காட்டியிருப்பதாலும், அதிகம் மெனக்கெட்டிருப்பதாலும், புத்தகத்தின் தரம் கொஞ்சம் அதிகம்!

2. புத்தகம் முழுவதும் பரவியிருக்கும் தகவல்களும், வார்த்தை உபயோகங்களும், இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்களில் ஆசிரியர் காட்டியிருக்கும் நிதானமான - ஒழுங்குபடுத்தப்பட்ட கோபமும், நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்களும்.

விவேக் மாதிரியே காமெடி பண்றார்னு எம்.ஆர்.ராதா அவர்களைக் காட்டுகிறான் ஒரு தமிழ்ப்பையன். இளவேனில் - முதுவேனில் - கார் - கூதிர் - முன்பனி - பின்பனி என்று பருவங்களைப் பி+படித்திருந்த வம்சத்தில் பிறந்த நாம், மழை வருமா என செய்திவாசிப்பாளரைக் கேட்கிறோம். முடங்களை - கோனரி - கேசரி - சீயம் - வயமா - அரி - மடங்கல் - கண்டீவரம் - ஏறு என பல சொற்களால் வலம்வந்த 'சிங்கம்' என்ற ஒன்றை, தமிழ் - சாமி - கோவில் - அருள் என்ற ஹரியின் வரிசைகளில் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைவிட்டு நீண்ட தூரம் ஓடிப்போய்விட்ட இப்போதைய மனிதனுக்கு இப்படியொரு புத்தகம் கண்டிப்பாகத் தேவைதான்.

புலி (வேங்கை), காட்டெருது, யானை (வேழம்), சிங்கம், காண்டாமிருகம், குறிஞ்சிமலர் எனக் காட்டுயிர்கள் பற்றித் தனித்தனி கட்டுரைகளில் விவாதிக்கிறது புத்தகம். வண்டலூர், பெரியாறு, காசிரங்கா, கிர், பந்திப்பூர், முண்டந்துறை, அடையாறு கழிமுகம் என்று சில இடங்களும் தேவைப்படும் இடங்களில் வந்து போகின்றன. இவற்றிற்கெல்லாம் எப்படி கேடுகாலம் ஆரம்பித்தது எனவும், அவற்றின் அழிவைக் கொண்டாடியவர்கள் பற்றியும், அவற்றைக் காப்பாற்றப் போராடிய + போராடுபவர்களைப் பற்றியும் பேசுகிறது புத்தகம்.

மெட்ராஸ் சமஸ்தானத்தில் இருந்து கொண்டுபோன மரங்களால்தான் வாட்டர்லூ போரில் நெப்போலியனைப் பிரிட்டிஷ் படைகள் வெல்ல முடிந்ததென ராமச்சந்திர குஹா (Ramachandra Guha) சொல்லியிருக்கும் கருத்தும், வேட்டை இலக்கியம் முதல் இரயில்பாதை வரை பிரிட்டிஷ்காரர்கள் தனது காலனியின் காட்டுயிர்களைக் காவு வாங்கிய கதைகளும் அருமையான தொகுப்புகள். புலியையும் யானையையும் கொன்று பாடம் செய்வது பிரிட்டிசையும், பிகரையும் குஷிப்படுத்தும் வீரதீர செயல்களாகக் கருதிய நம்மவர்களும் அதையே கொஞ்சம் மறைமுகமாக இன்னும் தொடர்வதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். மதம், அரசியல், பணம் என்று எல்லாவறையும் போட்டுக் குழப்பிக் கொண்டு நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரம் என எல்லாத் திட்டங்களிலும் சட்டுபுட்டென்று முடிவுகள் எடுக்கப்படுவதால்தான், ஒரு கத்திரிக்காயைக் (Bacillus thuringiensis Brinjal) கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கத்திரிக்காயில் அரசியல் செய்யவிடுகிறோம்.

இதுபோன்ற 'அறியாமை'களைத்தான், இப்போதைக்குச் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் மிகப்பெரிய தடை என்கிறார் ஆசிரியர். பல்லி விழுந்த உணவு நஞ்சு என்பதும், பாம்பின் விசத்திற்கு மருந்தே பாம்புதான் என்று தெரியாமல் பாம்புகளைக் கொல்வதும், மறைந்திருக்கும் மருத்துவக்குணங்கள் தெரியாமலேயே கண்மூடித்தனமாகக் காட்டுயிர்களை மனிதக்கருபோல அழிப்பதும், சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட எந்தவொரு அரசுத்திட்டத்தையும் எதுவும் ஆராயாமல் ஆதரிப்பதும் / எதிர்ப்பதும் போன்ற பல அறியாமைகள். இந்த அறியாமை எல்லா நிலைகளிலும் இருக்கிறது. Listening to Grasshoppers புத்தக முன்னுரையில் நதிநீர் இணைப்பு பற்றி அருந்ததி ராய் அவர்கள் வருத்தப்பட்டு சொல்லும் மேற்கோளும் ஓர் உதாரணம். செய்தித்தாள்கள் அடிக்கடி காட்டும் எறும்புத்தின்னி எனும் விலங்கின் பெயர் அலங்கு என்கிறார் ஆசிரியர். அலங்கு என்ற வார்த்தை தமிழில் எரும்பையுண்ணும் ஓர் ஊர்வனயினத்தைம், ஒரு நாயினத்தையும் குறிக்கிறதாம்.



தி.ஜானகிராமன் அவர்கள் மோகமுள்ளில் சொன்னதுபோல், கேவலம் சோற்றுக்காக நாயை வாலைக் குழைத்து நிற்க வைக்கிறோம். நம்மைவிட அளவிலும் பலத்திலும் ஞாபகசக்தியிலும் பெரிய யானையைவைத்து யாசகம் செய்கிறோம். கள்ளக்காதல் முதல் குழாயடி சண்டைவரை நடக்கும் கொலைகள் சிலவற்றில் நஞ்சு இல்லாத பல்லியின்மேல் பழி சுமத்துகிறோம். ஒன்றைப் பற்றி புரியாத அல்லது தெரியாத பொழுதுதான் பயமே உருவாகிறது; அல்லது நமது குற்றங்களை மறைத்துக் கொள்ள இன்னொன்றைக் குற்றப்படுத்துகிறோம். கமலஹாசன் தெளிவாய்ச் சொல்வார்:
'நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவோர் தூற்றினும்
நச்சதற்குக் கேடயம் போல்
தற்காப்பு ஆயுதமே.
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்'.

இயற்கைக்கு மனிதன் உட்பட ஒவ்வோர் உயிரும் ஓர் அங்கமே எனும் அறிவு வந்தால்தான் பயம் போய் பாதுகாக்க + மதிக்க வேண்டும் என்ற அக்கறை வரும். அவ்வக்கறை பாம்பை அடிப்பதாக நினைக்கும்போது கூட நம்மைத் துரத்திவர வேண்டும்!

புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் மாறுபடும் நியதிக்குட்பட்டு, புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். காட்டுத் தர்பார், நரிபுத்தி, ஆமை புகுந்த வீடு, கொடிய விலங்குகள், வினோத மிருகம் போன்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டு காட்டுயிர்கள் பற்றிய ஆரோக்கியமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார். ஏற்காடருகே இரு யானைகள் காப்பித் தோட்டத்தருகே வந்ததை, 'யானையின் அட்டகாசம்' என்று ஓர் இதழும் 'வாழிடம் தேடும் யானைகள்' என்று இன்னோர் இதழும் செய்திகள் வெளியிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். டால்பினுக்கான தமிழ்ச்சொல்லையும், உள்ளினப்பெருக்கம் என்ற தமிழ்ச்சொல்லையும் ஆசிரியர் குறிப்பிட்டபோது புதிய சொற்கள் மேலும் மொழியை மெருகூட்டுவதை உணரமுடிந்தது.

ஒரு குறும்படத்தைப் பார்த்தவர்கள் சிலர், 'யானைகள் பங்கேற்கும் எந்த விழாவிற்கும் செல்லமாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம். அதுபோன்ற ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையும், சுற்றுச்சூழல் பற்றிய பதங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் அமைப்பதும், இயற்கைக்கு எல்லாரும் ஒருநாள் பதில்சொல்ல வேண்டும் என்ற பொறுப்பும் போதும்!

'மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருக்கக் கூடாது; அப்படியொன்று இருக்குமானால் மனிதர்கள் கற்களால் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். தண்ணீர் என்ற பொருளுக்காக அணுவாயுதங்களுடன் கோலாகலமாகக் கொலைக்களங்களை அப்போர் உருவாக்கப் போவதின் தாக்கத்தை, இக்கோடையின் தாகத்தில் நாமெல்லாம் உணரமுடிகிறது. ஒரு சாமானியனுக்கு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போனாலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' புத்தகத்தில் இடம்பெறும் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' என்ற சிறுகதைபோல், தனது வயிற்று வாரிசுகளைத் தூக்கிக்கொண்டு இயற்கையைத் தேடி வீதிவீதியாகத் திரியப்போகும் ஒரு தலைமுறை உருவாகாமல் தடுக்க என்னால் - உங்களால் - எல்லாராலும் முடியும்.

அரசுத் திட்டங்கள், சுற்றுலா, தேனிலவு என்ற பெயரில் இயற்கையை மிகநெருங்கும் திட்டங்களுக்குத் தீர ஆராய்வோம்! கவிதைகள்,புதினங்கள் தவிர இதுபோன்ற சமூக நோக்குள்ள புத்தகங்களையும் நண்பர்களுக்குப் பரிசளிப்போம்! வாங்கும் பொருளின் மூலம் தெரிந்து பல்லுயிர்ப் பாதுகாப்போம்!

பூமி இழந்திடேல்!

அனுபந்தம்:

1. பிராணிநலம் பேணும் பேர்வழி என்று ஒரு கூட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இறைச்சி சாப்பிடும் சமூகத்தினரைப் புறக்கணிக்கும் ஒரு மேல்தட்டு கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. Corporate vegetarians! அப்படியொரு கூட்டம் ஆழிப்பேரலை புனர் சீரமைப்பில், மீனவர்களுக்கு வலைகளைத் தவிர என்ன வேண்டுமாலும் தருவதாகச் சொன்னதாம். வலையில்லாத மீனவன் வாழ வழி? Structural genocide செய்யும் இப்படியொரு கூட்டத்தை நம்பி நம்மில் எத்தனை பேர் பொருள் கொடுத்திருந்தோமோ? கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ?

2. ஏப்ரல் முதல் வாரம் தனுஷ்கோடி சென்றிருந்தேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் நீதிமன்ற உத்தரவுப்படி,சேது சமுத்திரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னார்கள்.

3. கொங்கு நாடுகளில் நானும் சேரலாதனும் சுற்றித்திரிந்த இரண்டு நாட்களில், டாப்ஸ்லிப் என்ற இடத்தின் பெயரைக் கேட்டு, சுகபோக விரும்பிகள் கூடுமிடமென நினைத்து, அவ்விடத்திற்குச் செல்லவில்லை. இப்புத்தகம் படித்த பிறகுதான் அவ்விடத்தின் பெயர்க்காரணமும் பிரிட்டிஷ் வரலாற்றில் பெற்றிருந்த அதிமுக்கிய பங்கும் தெரிந்தது. அழாத குறையாக, போச்சே போச்சே போச்சே என்று சேரலாதனுக்குப் போன் போட்டுக் கதை சொன்னேன். தம்பி அசந்து போனார்! அவ்விடத்திற்குச் சென்ற ஆசிரியர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அப்பகுதியை அழிக்கப்படாமல் காத்த ஓர் ஆங்கில அதிகாரியின் கல்லறை வாசகத்துடன் இப்புத்தகத்தை முடிக்கிறார்; நானும் அதையே வழிமொழிந்து விடைபெறுகிறேன்.

"நினைவுச் சின்னத்தைக் காண வேண்டுமென்றால் உங்களைச் சுற்றிப் பாருங்கள்".

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/

Tuesday, April 06, 2010

59. கோபல்ல கிராமம்

பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!

---------------------------------------------
புத்தகம் : கோபல்ல கிராமம்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூ100
பக்கங்கள் : 200
முதற்பதிப்பு : 1976
கிடைத்த இடம் : பெங்களுரு புத்தகக்கண்காட்சி

---------------------------------------------

சிறு வயதில் ஆள் அரவமற்றுப் போன மதிய வேளைகளிலோ, விளக்கு வைத்த பின்பான இரவு வேளைகளிலோ திண்ணையில் அமர்ந்து கொண்டு தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்ட அனுபவம் இருப்பவர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டெடுத்துக்கொள்ளுங்கள்.

”ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்...”

எத்தனை முறை நாம் கேட்டுப் பழகிய முதல் வரி இது. எல்லாக் கதையுமே அந்த “ஒரு ஊரில்” தான் தொடங்குகிறது. எந்த ஊரின் கதை? அதுதான் கோபல்ல கிராமம். தான் வளர்ந்த கிராமத்தின் கதையை, தானே கதைசொல்லியாகவும், பாட்டியிடம் கதைகேட்கும் சிறுவனாகவும் இரு வேறு நிலைகளில் நம்மிடம் படைக்கிறார் கி.ரா.



காலம் பற்றிய வெளிப்டையான குறிப்புகள் இல்லையாதலால், ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. செழிப்புடன் வாழ்ந்த பல குடும்பங்கள் ஒரு துலுக்க ராஜாவுக்கு பயந்து தெலுங்குதேசத்திலிருந்து தப்பி தெற்கு நோக்கி வந்து கோபல்ல கிராமத்தை அமைக்கின்றனர். தற்போது கிராமத்தில் ஒரு கொலை நிகழ்கிறது. கொலையாளி பஞ்சாயத்துக்கு வந்து கழுவேற்றும்படி தீர்ப்பைப் பெறும் இடைப்பட்ட இடைவெளியில் பாட்டியிடம் கதைகேட்கும் சூட்சுமத்தில் கோபல்ல கிராமத்தின்
பூர்வீகத்தையும் வாசகனுக்குக் காட்டியபடி கும்பெனிக் காரர்களின் வரவோடு கதை முடிவடைகிறது.

ஒரு கிராமத்தின் கதை என்பது அங்கு வாழ்ந்த, வாழும் மனிதர்களின் கதையே. அந்த வகையில் புத்தகம் முழுக்க ஏராளமாய் மனிதர்கள். விதவிதமாய் மனிதர்கள். விசித்திரமான மனிதர்கள். அதிலும் குறிப்பாக, எனக்குப் பிடித்த, பஞ்சாயத்துக் காட்சியின் தொடக்கத்தில் பஞ்சாயத்தில் கூடியிருக்கும் ஒவ்வொரு நபரும் அவருக்குரிய அடைமொழியுடனும் அந்த அடைமொழிக்கான காரணக் கதையுடனும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இந்தக் காட்சி மட்டுமே ஐந்து அத்தியாயங்களுக்கு மேல் நீள்கிறது. கடைசியில பஞ்சாயத்து தொடங்கும் போது கூடியிருக்கும் அனைவருமே நம் பக்கத்து வீட்டுக்காரர்களாக உருக்கொள்கின்றனர். மண்ணுதிண்ணி ரெங்கநாயக்கர், நல்லமனசு திரவத்தி நாயக்கர், பெத்த கொந்து கோட்டையா, பொடிக்கார கெங்கா நாயக்கர், காரவீட்டு லெச்சுமண நாயக்கர், படுபாவி செங்கன்னா என்று அனைவருமே கடைசிப்பக்கத்துக்கு அப்பாலும் நம்மை தொடர்நது வருகின்றனர். இதுவே ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.

ஒரு பிடி மண்ணெடுத்து பக்கங்கள் தோறும் வாரியிறைத்த மாதிரி மண்மணம் கமழ்கிறது கோபல்ல கிராமத்தில். எழுத்துக்காக தனியொரு வழக்கெல்லாம் கொள்ளாமல், தோள்மேல் கை போட்டு நண்பனிடம் பேசும் தொனியிலேயே கதை அவிழ்கிறது. கதையின் போக்கோடேயே செல்லும் போது, சுவாரஸ்யமான வேறொரு கிளையைப் பற்றியபடி கதை அந்த கிளைக்கதைக்குள் நுழைந்து விடுகிறது. அதன் போக்கிலேயே கொஞ்சம் போனபின்தான் மீண்டு வந்து முதல்கதையைச் சேர்கிறது. இதனாலோ என்னவோ, பாட்டியிடம் கதைகேட்பது போன்ற உணர்வு அடிக்கடி எழுவதைத் தவிர்ககமுடியவில்லை.

அங்கங்கே பல சுவாரஸ்யமான விவரணைகள் படிக்கப் படிக்க ஆச்சரியமூட்டுகின்றன. இடையில் தீவட்டிக்கொள்ளைக்காரர்கள் வருகிறார்கள். அக்கையாவின் போர்த்தந்திரத்தில் அகப்பட்டுத் தப்பியோடுகிறார்கள். ஆங்.. அக்கையா.. கிராமத்தின் விகடகவி கதாபாத்திரம். குறும்பு மிளிரும் கண்களுடன், அனைவரையும் சிரிக்கவும் வைக்கிறார், கொள்ளைக்காரர்களின் தாக்குதலின் போது சாமர்த்தியமாக பதிலடியும் கொடுக்கிறார். கிட்டத்தட்ட பீர்பாலை நினைவு படுத்தும் கதாபாத்திரம். நிச்சயம் அனைவரையும் கவர்பவர் இவர். அப்புறம், கன்றை இழந்த பசுவையும், தாய்ப்பசுவை இழந்த கன்றையும் இணைத்து வைக்கிறார் வாகடம் புல்லையா. இதன் பெயர் “தழையிறது“ என்கிறார். ஆச்சரியப்பட வைக்கும் சுவாரஸ்யாமான வர்ணனை இது.

தெற்கு நோக்கிப் பயணப்படும் அந்த மக்கள் கூட்டம், ஓரிடத்தில் காட்டைத் திருத்தி கிராமம் அமைத்துக் கொள்ள முடிவெடுக்கிறது. சரி செய்ய கடினமான காடு என்பதான அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிய காட்டிலிருந்து பிரித்து, தீவுக் காட்டை அமைத்து அதனை தீயிட்டு எரிக்கின்றனர். இதே போன்றதொரு வன எரிப்பு நிகழ்வு “உப பாண்டவத்“திலும் இடம் பெறும். ஆனால் உபபாண்டவத்தின் வீரியமும் வீச்சும் வேறொரு தளத்தில் நம்மை திகைக்கச் செய்தால், கோபல்ல கிராமத்தின் வன எரிப்பு, கிராம மக்களின் பார்வையில், அதன் தேவையின் முக்கியத்தோடு நம் முன் புகைகிறது. இடையிடையே தேவதைக்கதைக்கான கூறுகளும் கடந்து செல்கின்றன.

ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வருணனை, புறத்தோற்றங்களின் வழி தொடங்காமல், அவர்களின் குணநலன்களோடேயே தொடங்குகிறது. அந்த வருணனை முடிவதற்குள்ளாகவே, ஒவ்வொருவரும் அவர்களின் குணநலன்களுக்கேற்ப நம் மனக்கண்ணில் உருக்கொண்டுவிடுகின்றனர். அதைவிட முக்கியமாக, தொடர்ந்து வரும் கதைச்சரடும் நம் மனக்கண்ணில் கொண்ட உருவிற்கு வலுசேர்த்தவாறே செல்கிறது. அந்த வகையில் வாசகனை ஒவ்வொரு நிலையிலும், அவரவர்க்கேற்ற கற்பனை கிராமத்தை உருவாக்கிக்கொள்ள உற்சாகமளித்தவாறே பயணப்படுகிறது கதை. ஒரு சில இடங்களில், பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வழக்குச்சொற்களுக்கும், வழக்கொழிந்த சொற்களுக்கும் அவற்றின் சரியான பொருள் தெரியாவிட்டாலும் கூட நம் மனதுக்கு பொருத்தமான ஒரு பொருளை வரித்துக்கொள்வதில் கஷ்டமிருக்கவில்லை.

உண்மையில், அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது இந்நூல். உதாரணத்துக்கு குறிப்புகள் கொடுக்கப்பட்ட சில சொற்கள் உங்களின் பார்வைக்கு

ருசிக்கல்
குத்துத்தரம்
தைப்பாறுதல்
செல்லீ
ஏணி நாற்காலி
அகப்பத்தியம்

ஒரு கதைசொல்லியின் நெருக்கத்துடன் கதை கேட்க விரும்புபவர்கள் கண்டிப்பாய் கோபல்ல கிராமத்திற்கு வரலாம்.

கிராமத்தின் முகவரி, இணையத்தில்:

-Bee'morgan
http://beemorgan.blogspot.com/