Sunday, January 26, 2014

119. விலங்குப் பண்ணை

உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனை குணம் 

காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் 
கெடுப்பதுவே குரங்கு குணம் 
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம்
ஆனால் இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா!

- பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: விலங்குப் பண்ணை (புதினம்)
ஆங்கிலத்தில்: Animal Farm
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: சனவரி 2012
பக்கங்கள்: 141
விலை: ரூபாய் 85
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓநாயும் ஆட்டுக்குட்டியும். முடியும் முன். தங்கமீங்கள். ஹரிதாஸ். திரையரங்குகளில் மட்டுமே புதிய திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் உடைய நான், இத்திரைப்படங்களைத் தான் சென்றாண்டில் நான் பார்த்த சிறந்த தமிழ்ப்படங்களாக ஞாபகம் வைத்திருக்கிறேன். ஆளவந்தான் அழகி என நீண்ட இடைவெளிக்குப் பின் அதிகமுறை திரையில் நான் பார்த்தது, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மிருகக் குணங்கள் மனிதக் கதாப்பாத்திரங்களாக திரைக்காட்டில் உலவும் கதையது. கிட்டத்தட்ட அதன் நேரெதிரான கதைக்களம் உடைய புத்தகத்துடன் இம்முறை வந்திருக்கிறேன். அதாவது, மனிதக் குணங்கள் மிருகக் கதாப்பாத்திரங்களாக உலவும் புதினமிது. விலங்குப் பண்ணை. 1947ல் இங்கிலாந்தில் ஜார்ஜ் ஆர்வெல் வெளியிட்ட இப்புதினம், டைம் இதழ் தேந்தெடுத்த சென்ற நூற்றான்டின் சிறந்த 100 புதினங்களில் ஒன்று.

இங்கிலாந்தில் உள்ள பல பண்ணைகளில் ஒன்று, மேனார் பண்ணை. அப்பண்ணையில் உள்ள, பாலூட்டிகளிலேயே அதிக எடையுள்ள மூளையுடைய வெண்பன்றி ஒன்றிக்குப் புரட்சிகரமான சிந்தனை ஒன்று தோன்றுகிறது. விலங்குகளிலேயே இன்னொரு விலங்கின் பாலைக் குடிப்பது மனிதன் மட்டும்தானே! (தவிர கள்ளிப்பால் விஞ்ஞானம் தெரிந்தவனும் மனிதம் மட்டும் தானே) மனிதர்கள் விலங்குகளின் உழைப்பை உறிஞ்சி கொத்தடிமைகளாக நடத்துவதை உணர்ந்த அவ்வெண்பன்றி, அப்பண்ணையில் உள்ள மற்ற விலங்குகளை ஒன்று கூட்டி, மனிதர்களுக்கு எதிராக வலிமை, புத்தி பேதங்கள் நீங்கி விலங்குகள் எல்லாம் ஒன்று திரள வேண்டுமென பேருரையாற்றுகிறது. அவ்வுரையின் ஒரு பகுதி இதோ: 

மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான எதிரி. இப்போதுள்ள காட்சியிலிருந்து மனிதனை மட்டும் விலக்கி விட்டுப் பாருங்கள். நம்முடைய மிகக் கடுமையான அதீத உழைப்புக்கும் கொடிய பசிக்கும் மூலகாரணம் முழுவதுமாக ஒழிந்துவிடும். இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மனிதகுலம் மட்டுமே எதையுமே உண்டாக்காமல் எல்லாவற்றையுமே உட்கொள்கிறது. மனிதன் பால் சுரப்பதோ கொடுப்பதோ கிடையாது. அவன் முட்டையிடுவது கிடையாது. நிலத்தை ஆழ உழுவதற்கு அவன் உடம்பில் தெம்பு கிடையாது. அட, வேகமாக ஓடி ஒரு முயலைக் கூட அவனால் பிடிக்க முடியாது. ஆனால், அவன் நமக்கெல்லாம் எசமான். அவன் நம்மை வேலை செய்ய வைப்பான். வரும் விளைச்சலிலிருந்து குறைந்த தீனியைக் கொடுத்துவிட்டு, அதுவும் நம்மிடையே பட்டினிச் சாவு நடப்பதைத் தடுக்கத் தேவையான அளவில் மட்டுமே கொடுத்து விட்டு, மிச்சம் முழுவதையும் தானே வைத்துக் கொள்கிறான்..... இந்த மனிதனை மட்டும் நீக்கிவிடுங்கள். நம் உழைப்பின் பலன்கள் முழுவதும் நமக்கே சொந்தமாகிவிடும். ஓரிரு நாட்களில்
 நாம் சுதந்திரம் பெற்றுப் பணக்காரர்கள் ஆகிவிடுவோம். எனவே, இரவும் பகலும் உடலாலும் உள்ளத்தாலும் இந்த மானுட இனத்தை விரட்டியடிக்க உழைப்போம். கிளர்ச்சி செய்வோம்.
(http://www.badriseshadri.in/)
ஆரம்பத்தில் சில விலங்குகள் மற்ற‌ விலங்குகளுக்கு இரையாகிவிடும் பயத்தில் வெளிவராமல் இருந்தாலும், சில விலங்குகளுக்கு அவ்வுரையைப் புரிந்துகொள்ளும் அளவிற்குப் புத்தி இல்லாமல் இருந்தாலும் வெண்பன்றி சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து எல்லா விலங்குகளும் சமமாகின்றன. முயல் எலி பூனை நாய் வாத்து என எதிரிகளின் பயமில்லாமல் எல்லா விலங்குகளும் சமமாக அமர்ந்து வெண்பன்றியின் உரையைக் கேட்கின்றன. அக்கூட்டத்திலேயே அவைகளுக்கான புரட்சிப் பாடல் ஒன்று தயாராகிறது. குளம்பு கொம்புடன் கொடி (புத்தகத்தின் முன்னட்டையில் சிவப்பு நிறத்தில்) தயாராகிறது. இப்புதிய சித்தாந்தத்திற்கு விலங்கியம் எனப் பெயரிடப்படுகிறது. மூன்று இரவுகளுக்குப் பின் அவ்வெண்பன்றி இறந்து போக, புத்திசாலிகள் என்று பரவலாக அறியப்பட்ட இரண்டு காட்டுப்பன்றிகள் புரட்சிக்குத் தலைமை ஏற்கின்றன. திட்டமிட்டபடி பண்ணையின் உரிமையாளரான மனிதனைத் தாக்கி விரட்டிவிட்டு, பண்ணையைக் கைப்பற்றுகின்றன. விலங்குப் பண்ணை என பெயர் மாறுகிறது மேனார் பண்ணை. அவைகளுக்கென ஏழு கட்டளைகள் உருவாக்கப்படுகின்றன.
1. எதெல்லாம் இரண்டு கால்களால் போகிறதோ, அதெல்லாம் எதிரி.
2. எதெல்லாம் நான்கு கால்களாலோ அல்லது இறக்கைகளாலோ போகிறதோ, அது நண்பன்.
3. எந்த விலங்கும் உடை உடுத்திக்கொள்ளக் கூடாது.
4. எந்த விலங்கும் படுக்கையில் உறங்காது.
5. எந்த விலங்கும் சாராய வகைகள் குடிக்காது.
6. எந்த விலங்கும் வேறொரு விலங்கைக் கொல்லாது.
7. எல்லா விலங்குகளும் சமமே.
மனிதர்களை எதிர்த்து உருவான இவ்விலங்குப் பண்ணையால் நிலைக்க முடிந்ததா? தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற முடிந்ததா? அதுதான் மீதிக்கதை.

எல்லா மனிதர்களும் சமம் என கடவுளுக்குப் போட்டியாக மனிதர்கள் பாபிலோனில் கோபுரம் கட்டியது போல, எல்லா விலங்குகளும் சமம் என மனிதர்களுக்குப் போட்டியாக‌ விலங்குகள் காற்றாலை கட்டுகின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் ஓய்வு வயது, ஓய்வூதியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. புதினத்தின் ஆரம்பப் பக்கங்களை மனித வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால் சில விடயங்கள், ஆசிரியர் மறைமுகமாக ஏதோ உருவகம் செய்கிறார் என யோசிக்க வைத்தன. எல்லா விலங்குகளின் சொத்துரிமைப் பத்திரங்களும் வெண்பன்றிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. விலங்குப் பண்ணையைச் சுற்றி வேலிகளே இல்லாமல் இருந்தாலும், உள்ளே நடப்பது வெளி உலகிற்குத் தெரியாது. சமீபத்தில் டெல்லி அரசு தனது முதல் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு, பிறகு நிரந்தரமாக நிறுத்தியது போல, விலங்குகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திவந்த காலைநேரக் கூட்டங்கள் திடீரென நிறுத்தப்படுகின்றன. புரட்சிப் பாடல் இனி தேவையில்லை என நிறுத்தப்படுகிறது. விலங்குகள் தங்களைச் சரிசமமாகத் தோழரே என அழைத்துக் கொள்வது மடத்தனம் எனக் காலப்போக்கில் சொல்லப்படுகிறது. ஆம், ஆசிரியர் உருவகப்படுத்தியது இரும்புக் கோட்டையான‌ கம்யூனிச இரஷ்யாவைத் தான். குறிப்பாக 1910 முதல் 1940 வரையான கால கட்டத்தில் ரஷ்ய புரட்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சிந்தனை மாற்றங்களைச் சித்தரிக்கிறார். ஒரு மிகப் பெரிய புரட்சி, கடைசியில் தனிமனிதத் துதியாக முடிந்து போன துயரத்தை ஒரு கோழியின் வார்த்தைகளில் அழகாக உணர்த்துகிறார் ஆசிரியர்: 'நமது நேசமிகு தலைவரின் வழிகாட்டுதலால் நான் கடந்த ஆறு நாளில் ஐந்து முட்டை இட்டேன்'.

எனக்குள்ள அரைகுறை வரலாற்று அறிவின்படி எனக்கு ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதனால் மேற்கொண்டு எழுதாமல், உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Wednesday, January 15, 2014

118. ISTANBUL - MEMORIES AND THE CITY

தூங்காத நகரங்கள்
விடிகிற பொழுதின்
எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை
அதற்குத் தன் செயல்களை
எங்கே நிறுத்தி
எங்கே தொடங்க வேண்டுமென‌
புரிவதேயில்லை
- மனுஷ்யபுத்திரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Istanbul - Memories and the City
ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/)
ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely
வெளியீடு: faber and faber
முதல் ஈடு: 2005
பக்கங்கள்: 336
விலை: ரூபாய் 450 
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக 500 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் கடல் புகுந்து பல நாடுகளைக் கண்டுபிடித்ததை, 10ம் வகுப்பிற்கு முன் வரலாற்றுப் பாடத்தில் படித்தேன். இந்தியாவிற்குக் கடல்வழி தேடப் புறப்பட்டது தான் அடிப்படை காரணம் என்றும் படித்தேன். ஒட்டாமன் அரசர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியதால், இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டதாகவும் படித்தேன். இந்தியாவிற்கு வெளியே வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாம், ஐரோப்பிய வல்லரசுகள் வரலாறு என்பதால் ஒட்டாமன் யாதென்றும், கான்ஸ்டான்டிநோபிள் எதென்றும், அப்போதைய இந்தியாவிற்கு என்ன தொடர்பு என்றும் வரலாற்றுப் பாடங்கள் சொல்லவில்லை. விஜயநகர, மொகலாயப் பேரரசுகள் உடைந்த காரணங்களை அடுக்கியடுக்கிச் சொன்ன பாடங்கள், ஒட்டாமன் பேரரசு உடைந்து போனதென்று முதல் உலகப் போரின் விளைவுகளாகக் கடைசி ஒருவரியில் முடிந்து போயின. மதிப்பெண் வாங்க மட்டுமே 10ம் வகுப்பு இருந்ததாலும், ஐரோப்பிய வல்லரசுகளுடன் இந்திய ஆளுங்கட்சிகளின் தாக்கமும் இருந்ததாலும், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியும் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டமும் கசடறக் கற்கப்போய், ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் ஆசியமைனர் துருக்கி என்று படித்திருந்த பதங்கள் கற்றபின் அதற்குத்தக நிற்காமல் போயின. ஐரோப்பாவின் நோயாளி யாரென்றால், பெரும்பாலும் துருக்கி என்று சரியான பதில் கிடைக்கும். துருக்கியின் தலைநகர் யாதென்றால், பெரும்பாலும் இஸ்தான்புல் என்று தவறான பதில் கிடைக்கும். இங்ங‌னம் என்னைப் போலவே அல்லது என்னைவிட சோகமான வரலாறு, வரலாறு படித்த என் சக இந்தியத் தமிழர்களுக்கு உண்டென்பதால் வழக்கம்போல் கொஞ்சம் வரலாறு சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் போன்ற சொற்கள் ஏதோ முழுமை அடையாமல் தொக்கிப் போய் என் ஆழ்மனதில் பதிந்து கிடந்தன. வெகுகாலம் மண்ணில் புதைந்து கிடக்கும் கிழங்குகள் ஒரு தருணத்தில் முட்டி முளைப்பது போல என் ஒட்டாமனை வெளிக்கொணர்ந்தது, நோபல் பரிசு பெற்ற முதல் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பமூக் (Orhan Pamuk) அவர்களின் 'என் பெயர் சிவப்பு' (My name is Red) என்ற‌ புதினம். எந்த அறிமுகமும் இல்லாமல் நானாகவே தேர்ந்தெடுத்து படித்த பல நல்ல புத்தகங்களில் அதுவும் ஒன்று. அடுத்த மாதம் ஒரு திருமணத்தில் பரிசளிக்க வேண்டும். இஸ்ரேல்‍-அரபு பிரச்சனை படிக்க ஆரம்பித்து, ஜெருசலேம் நகரம் படித்தேன். கான்ஸ்டான்டிநோபிள் படிக்கச் சொல்லி ஜெருசலேம் தான் சொன்னது. ஜெருசலேமுடன் ஒப்பிட நம் சமகாலத்து அம்சங்கள் நிறைய உண்டு. உதாரணமாக, 8 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து சமீபத்தில் இறந்து போன இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் சரோனுடன் ஒப்பிட இந்திய மண்ணில் தலைவர்கள் இன்றும் உண்டு; நாளையும் வருவார்கள். ஆனால் ஜெருசலேம் சம்மந்தப்பட்ட எந்தவொரு ஒப்பிடலும் மதங்களைக் குறிக்கும் என்பதால், நான் என்றுமே எனது கருத்துகளை வெளிப்படையாக‌ எழுதியதில்லை. ஈழத்தமிழர்களை யூதர்களுடன் பலர் ஒப்பிடுவது பற்றி கூட நான் ஒன்றும் சொல்ல‌வில்லை. ஆனால் கான்ஸ்டான்டிநோபிள் அப்படியில்லை. அதனுடன் ஒப்பிட நிறைய விடயங்கள் நம்மில் உண்டு. மதங்களின் தடையில்லை. புத்தகத்திற்குள் நுழையும் முன் கான்ஸ்டான்டிநோபிள் முதல் இஸ்தான்புல் வரை ஒரு சுருக்கமான வரலாறு இதோ!
(http://www.worldatlas.com)
ரோம் நகரைத் தலைமையாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), எதிர்பாரா வகையில் கிழக்கே ஒரு போரில் வென்று ஆசியக் கண்டத்தில் கால்பதித்த போது, அவ்வெற்றிக்குக் காரணம் இயேசு கிறித்து தான் என்று அவனுக்குத் தோன்றுகிறது. இயேசு கிறித்து முதல் அந்நாள் வரையிலான அனைத்துக் கிறித்தவர்களையும் கொன்று கொண்டிருந்த தன் முந்தைய பேரரசர்களில் இருந்து விலகி கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. மன்னனே கடவுள் என்று மன்னர்களின் மற்றும் அவர்களின் ஒருபால் காதலர்களின் நிர்வாணச் சிலைகளை வழிபட்டு வந்த ரோமானிய மக்கள் கிறித்தவர்கள் ஆனார்கள். தான் அப்படி வென்ற பைசாந்திய (கிரேக்க‌) நாடுகளில், தன் பெயரிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் என்ற புதிய தலைநகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம். ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. மேற்கத்திய கிழக்கத்திய நாடுகள் என்ற நமது அன்றாட சொல்லாடல்களில் இப்படித்தான் மறைமுகமாக இருக்கிறது கான்ஸ்டான்டிநோபிள். 

ரோமில் அப்போதிருந்த குழப்பங்களால் அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் கான்ஸ்டான்டிநோபிளையே அதிகம் வளர்த்தனர். ஒரு காலத்தில் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் சாலமன் தேவாலயத்திற்குப் போட்டியாக ஹேகியா சோபியா (Hagia Sophia) என்ற கிறித்தவ தேவாலயத்தை ரோமானியர்கள் கட்டினர். இப்படி 1000 ஆண்டுகளாக மிக முக்கிய நகரமாக நீடித்து வந்த கான்ஸ்டான்டிநோபிளை, 1453ல் துருக்கிய சுல்தான்களான ஒட்டாமன்கள் கைப்பற்றுகிறார்கள். கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனது. ஹேகியா சோபியா மசூதி ஆனது. இந்த ஒட்டாமன் பேரரசுதான் முதல் உலகப் போரில் உடைந்து, பாலஸ்தீன் தவிர மற்ற‌ அரபு நாடுகளை உண்டாக்கப் போகிறது. ஹேகியா சோபியா அருங்காட்சியம் ஆகப்போகிறது.

புவியியல் ரீதியில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் துருக்கி. இரு கண்டங்களில் பரவியிருக்கும் இஸ்தான்புல் நகரம். இஸ்தான்புலை இரு துண்டுகளாக்கி கருங்கடலை மற்ற கடல்களுடன் இணைக்கும் போஸ்பொரஸ் நீரிணை. ஹேகியா சோபியா. இந்நிலப்பரப்பின் ஆழமான வரலாறு. இவைதான் இஸ்தான்புல் பற்றி என்னைப் படிக்கத் தூண்டியவை. ஓரன் பமூக் எழுதி இருப்பதால் வாங்கிவிட்டேன். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://www.faber.co.uk)
உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்துதான் துவங்குகிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன்

Istanbul - Memories and the city. இஸ்தான்புல் நகரமும் அதன் நினைவுகளும். ஆசிரியரின் 16 வயது வரையிலான வாழ்க்கையில் இஸ்தான்புல் நகருடன் கொண்டிருந்த சிநேகிதமே இப்புத்தகம். எவ்வயதில் இஸ்தான்புல் என்னில் தங்கியதோ அதுவரை புத்தகம் பேசுவதால், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். பரம்பரைச் சொத்துகளைப் படிப்படியாக இழந்து வரும் தன் குடும்பம், மேற்கத்தியவர்கள் போல் பழகச் சொல்லும் பாட்டி, முதல் காதல், ஓவியத்திறமை என தன் சொந்தக் கதை கொஞ்சம் பேசுகிறார். எல்லாக் கதைகளும் அவர் வாழ்ந்த வீடுகளையும், வீதிகளையும், போஸ்பரஸ் நீரிணையையும் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஓவியம் என்ற திறமையை வைத்துக் கொண்டு பணம் செய்ய முடியாதென்றும், கல்யாணம் கட்டிக் கொண்டால், பணம் இல்லாக் காலத்தில் மனைவியை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் முத்தமெல்லாம் கொடுத்த முதல் காதல் நிராகரித்துவிடுகிறது. காதலைத் துறந்து தன் மனம் சொல்லும் வழியைத் தொடர்ந்த ஆசிரியர் தனியனாய் உணர்ந்த பொழுதுகளிலும், திறமைகள் நிராகரிக்கப்பட்ட சமயங்களிலும், இருண்ட இஸ்தான்புல் தெருக்களில் இறங்கி சுற்றித் திரிந்ததையும், போஸ்பரஸ் வழியே கடந்து போகும் கப்பல்களையும் அதன் கரைகளை ஆக்கிரமித்திருக்கும் யாலி (yali) என்ற குடியிருப்புகளையும் வீட்டு மாடியில் இருந்து மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்ததையும் சொல்கிறார். Life can't be that much bad; Whatever happens, I can always take a walk along the Bosphorus என்கிறார். ஆசிரியரின் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் இப்படி ஆங்காங்கே சொல்லப்பட்டாலும், 'என் பெயர் சிவப்பு' புதினத்தின் கடைசிப் பக்கங்கள் போல மனதில் நிற்கும்படி அழகாக முடிக்கிறார். 

நான் ஆரம்பத்தில் சொன்ன வரலாறு எல்லாம், இப்புத்தகத்திற்கு முன்னரே நான் அறிந்தவை. நான் இப்புத்தகம் படித்த காலத்தில், புத்தகம் தவிர வேறெதும் இணையத்தில் தேடி அறிந்து கொள்ளவில்லை. அதாவது இப்புத்தகம் இஸ்தான்புல் நகரின் வரலாற்றைக் காலக்கோடு போட்டு விளக்கவில்லை. அரசியல் புத்தகமும் அல்ல. பிறகு என்னதான் சொல்கிறது இப்புராதன நகரம் பற்றி இப்புத்தகம்?

The beauty of a landscape resides in its melancholy.
- Ahmed Rasim

ஆசிரியர் இஸ்தான்புலில் பிறந்த வருடம் 1952; ஒட்டாமன் வெற்றி பெற்ற 500வது வருடம்; ஒட்டாமன் சிதறிப் போய் 30 ஆண்டுகள் கழித்து. தனது ஒட்டாமன் பாரம்பரியத்தைப் படிப்படியாக இழந்து, நவீன உலகத்தோடு ஒட்டிக் கொள்ள இஸ்தான்புல் தடுமாறிக் கொண்டிருந்த காலம். தோற்றுப்போன, சிதிலமடைந்த, துயரமிக்க இடமாக இஸ்தான்புல் இருந்த காலம். பாஷாக்களின் மேன்சன்கள், ஒட்டாமன் பிரத்யேகக் காவலர்கள் (Janissary), அடிமைச் சந்தைகள், சுஃபி சாதுக்கள் (Dervish), ஒட்டாமன் காலத்து ஆடைகள், அந்தப்புரம் போன்றவை மேற்கத்திய ஒழுக்கத்திற்கு எதிரானவை என முற்றிலும் ஒழிக்கப்பட்ட காலம். துருக்கிய மொழி தேசிய மொழியானபின் அரபு வனப்பெழுத்து (Calligraphy) முறையும், நகர்மயமாக்கல் என்ற பெயரில் தோட்டங்களும் கல்லறைகளும் மயானங்களும் அழிக்கப்பட்ட காலம். யாராவது கிரேக்கம் அல்லது ஆர்மேனியம் அல்லது அரபு அல்லது குர்திஷ் மொழியில் பேசினால், 'தயவு செய்து நமது தேசிய மொழியான துருக்கியில் பேசுங்கள் குடிமக்களே' என திடீரென ஒருவர் கூட்டத்தில் இருந்து கத்திய காலம். தெருநாய்கள் தவிர மற்ற எல்லா விசயங்களையும் அவசரமாக மேற்கத்தியமயமாக்கிக் கொண்டிருந்த ethnic cleansing காலம். அடிக்கடி தீ விபத்துகள், போஸ்பரஸ் கடக்கும் கப்பல்களில் சேதங்கள், நகரெங்கும் பரவிக் கிடக்கும் வறுமை. இஃதுதான் கரு என்று ஓரெல்லைக்குள் அடங்கி இல்லாமல், இஸ்தான்புல் நகருக்குள் இருக்கும் எண்ணற்ற கதைகளில் ஒன்றாக தன்னையும் உணரும் ஆசிரியரின் கதையிது. அக்காலத்தைய இஸ்தான்புல் நகரின் நிசப்தமான துயரமே இப்புத்தகம். Nothing good can come out a place like this என்று உணரப்படும் ஒரு நகரத்தில் இருந்து வந்த நல்ல புத்தகம் இது.
(http://www.faber.co.uk)
ஆசிரியர் இஸ்தான்புல் இருவருக்கும் தனிப்பட்ட சோகங்கள் இருந்தாலும், அந்நகரை நேசிப்பதன் மூலம் தன் சோகம் மறக்கிறார் ஆசிரியர்.  To be unhappy is to hate oneself and one's city. இஸ்தான்புல் பற்றி தபால்தலைகளையும், சொற்களஞ்சியங்களையும் (encyclopedia), ஓவியங்களையும் தேடித் தேடி சேகரிக்கிறார். தான் சேகரித்த பல அரிய புகைப்படங்களையும் ஓவியங்களையும் புத்தகம் முழுவதும் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் உணர்ந்த இஸ்தான்புல் நகரத்தின் துயரை ஏற்கனவே தங்கள் எழுத்துக்களில் பதிவு செய்த நான்கு துயரமிகு எழுத்தாளர்களைப் பற்றி விவரிக்கிறார். அந்நால்வரின் எழுத்துகளும் வாழ்ந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் கடைசி வரை எப்புத்தகத்தையும் அச்சிட்டு வெளியிட முன்வராத துயரத்தையும் பதிவு செய்கிறார். இஸ்தான்புல் பற்றி 130 ஆண்டுகளில் செய்தித்தாள்களில் பத்திகளைப் படித்து, ஆவண‌ப்படுத்திய சில நல்ல பத்திரிக்கையாளர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அப்போது அவருக்குத் தென்பட்ட சில வேடிக்கையான பத்திகளில் ஒன்று இது:
It is our hope that both drivers and passengers will make full use of the new taxi meters installed by the military authorities and that our city will never again see the sort of haggling, arguments, and trips to the police station that plagued our city twenty years ago, when the last taxi meters were installed and our city's drivers took to saying, 'Brother, give us as much as you can' - 1983
Whenever a contagious disease breaks out in any part of the city, our council throws lime here and there but piles of filth are everywhere ... - 1910
இன்று நம்மூர் நிலைமை உங்களுக்கே தெரியும்!

நவீனமயமாகும் அவசரத்தில் ஒரு நகரம் எப்படி விளம்பரம் மற்றும் அறிவிப்புப் பலகைகளின் குப்பையாகிறது எனப் பேசுகிறது ஒரு கட்டுரை. நம்மூர் கூவம் போல் ஆகிப் போன தங்க முகடு (Golden Horn) பற்றி பேசுகிறது. இஸ்தான்புல் நகரைக் கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்கும் ஆசிரியரின் உருவகம், அவன் அவள் அது இது என்ற நான்கு பொருள்களுக்கும் ஒரே வார்த்தை கொண்ட துருக்கிய மொழியில் கடவுளைப் பெண்ணாக (She) விளிப்பது என அழகான பல விசயங்கள் புத்தகத்தில் நிறைய உள்ளன. மிடுக்காக வலம்வரும் மேல்தட்டு மக்கள் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. நம்மூரில் உள்ளது போலவே, அவர்களுக்கென பிரத்யேகமாக‌ கிசுகிசுக்கள் சொல்லும் செய்தித்தாள் பத்திகளில் ஒன்று: Her Bebek house has been robbed, but no one seems to know what's missing. Let's see if the police manage to solve this riddle. அவர்களைப் பற்றி ஆசிரியர், An interest in society gossip is a sign of personal weakness என்கிறார்.
(Hagia Sophia - http://www.wikipedia.org)
All civilisations are as transitory as the people now in cemeteries. And just as we must die, so too must we accept that there is no return to a civilisation whose time has come and gone.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல், எல்லா நகரங்களும் வாழத் தகுதி இழக்கும் வரை, மனிதனின் நுகர்வுப் பசி தீர்வதேயில்லை. இந்த வேட்டையில் மனிதன் தன் வாழுமிடத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறானா? இன்னொருவன் நகரை மதிக்கிறானா? என் சொந்த அனுபவங்கள் சொல்கிறேன். நான் சென்னை வந்த புதிதில், பிரபலமான ஒருவர் கோட்டூர்புரம் அருகில் ஆற்றில் குதித்து மாண்டார். பெரும்பாலான பத்திரிக்கைகள் கூவம் ஆறு என்று எழுதின. சென்னை நகரில் கூவம், அடையாறு என்ற இரு தனித்தனி ஆறுகளைக் கூவம் என்ற ஒரே ஆறாகச் சொல்லும் பலர் இருப்பதை அன்றுதான் அறிந்தேன். தமிழ்த்தாய்க் கோயில் என்று பலரிடம் வழிகேட்டு, யாருக்கும் தெரியாமல், கடைசியில் தமிழன்னைக் கோயில் என்று ஒரேயொரு முறை கேட்டு வழிபெற்ற அனுபவம் காரைக்குடியில் கிடைத்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், குமரி விவேகானந்தர் பாறை பற்றி அவ்வூர் அடித்தட்டு மக்களிடம் விசாரித்து இருக்கிறீர்களா? எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் சித்தன்னவாசல் பற்றி அறிவிப்புப் பலகை இருக்கும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் சில ஊர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. இவை பற்றி ஏதொன்றும் எம்மக்கள் அறியிலர். வழக்கம் போல எங்கள் புத்தகங்கள் எங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தரவில்லை!

ஊரறிய உலகறிய படித்தறிவோம்!

அனுபந்தம்:
-------------------
1. சமீபத்தில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் ஆர்மீனியா நாடு பற்றி ஒரு செய்தித் தொகுப்பு பார்த்தேன். முதல் உலகப் போரில் ஒட்டாமன்கள் கை ஓங்கி இருந்த காலத்தில் அவர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட ஆர்மேனியர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மனுஷ்யபுத்திரன் சொல்வ‌து போல், வரலாறு ஈழத்திற்கு முன்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Saturday, January 11, 2014

117. THE STORY OF A SHIPWRECKED SAILOR

வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்; தோல்வி ஓர் அநாதை.
‍- மேலை நாட்டுப் பழமொழி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Story of a Shipwrecked Sailor (புதினம்)
ஆசிரியர்: Gabriel Garcia Marquez
ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Randolph Hogan
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 1970
பக்கங்கள்: 106
விலை: 199 ரூபாய்
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1955 பிப்ரவரியில் கொலம்பிய நாட்டுக் கப்பல் ஒன்றில் பயணம் செய்த 8 மாலுமிகள், கரீபியக் கடலில் புயலில் சிக்கிக் காணாமல் போகிறார்கள். சில நாட்களுக்குப் பின், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகச் சொல்லி தேடுதலை நிறுத்துகிறார்கள். 10 நாட்களுக்குக் பிறகு, கொலம்பியக் கடற்கரைப் பகுதி ஒன்றில், கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் அவர்களில் ஒரு மாலுமி கரை ஒதுங்குகிறார். அந்தப் 10 நாட்கள் கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் பிழைத்து வந்த அம்மாலுமியின் உயிர்ப் போராட்டக் கதைதான் இப்புதினம். 'நீ எத்தனை புயல்களைக் கடந்தாய்? அது பற்றி இவ்வுலகிற்குக் கவலை இல்லை. கப்பலைப் பத்திரமாகக் கரை சேர்த்தாயா?' என்றொரு சொல்லாடல் மேலை நாடுகளில் உண்டு. புயலைக் கடந்து கப்பலை இழந்து தன்னைக் கரை சேர்த்த ஒரு ஹீரோவின் கதையிது. தேசிய ஹீரோவாகப் புகழப்பட்டு, அழகு நங்கையர்களால் முத்தமிடப்பட்டு, பிரபலம் என்ற முத்திரையுடன் பொருள் திரட்டி, அதன்பிறகு அரசால் கைவிடப்பட்டு, எப்போதைக்கும் மறக்கப்பட்ட ஒரு முன்னாள் மாலுமியின் கதையிது.
(http://www.penguin.com.au)
சக மாலுமிகள் 7 பேரும் தன் கண்முன்னேயே காணாமல் போனபின், ஒரு தெப்பத்துடனும் இரு துடுப்புகளுடனும் நடுக்கடலில் அம்மாலுமி. நீர்வழிப் படூவும் தெப்பம் கரை நோக்கி நகர்கிறதா, நடுக்கடலை நோக்கி நகர்கிறதா, செங்குத்துப்பாறை நோக்கி நகரும் நீரோட்டத்தில் பயணிக்கிறதா, இவ்வழி கப்பல்கள் போகும் வழியா என்று திக்குத் தெரியாமல் தன் உயிரைப் பயணப்பட வைக்கிறார். அவர் சட்டையைக் காற்றில் அசைத்துக் காட்டுவது தெரியாமல், தூரத்தில் விமானம் ஒன்று கடந்து போய்விடுகிறது. வெகு தூரத்தில் கப்பல் ஒன்றும் கடந்து போய்விடுகிறது. வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது. அவர் கனவிலும் நனவிலும் சந்திக்கும் ஒவ்வொரு பொருளும் கரைசேரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் தருகின்றன. நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வாழும் விசித்திர தீவுகள் பற்றி கேள்விப்பட்டிருந்த‌ கதைகள் ஞாபகத்தில் வந்து அச்சமூட்டுகின்றன. சக மாலுமிகளுடன் பிரமையில் பேசுகிறார். மஞ்சளாக 4 மீட்டர் நீளத்தில் தான் பார்த்த இராட்சத ஆமை, உண்மையா பிரமையா என்று அவருக்கே தெரியவில்லை. உப்புத் தன்மையால் காயங்கள் உறுத்தவில்லை.

கைக்கடிகாரம் மட்டும் எந்தப் பிரச்சனை இல்லாமல் சரியான நேரத்திற்கு வேலை செய்கிறது. சட்டைப் பையில் இருந்த ஒன்றிரண்டு காகிதங்களை உண்கிறார். காலணிகளை உண்ண முற்பட்டால் கிழிக்க முடியவில்லை. பத்தையும் பறந்து போகச் செய்யும் பசி, அவ்வழியே பறந்து போகும் நீர்ப்பறவைகளைக் கவரச் செய்கிறது. கரையில் இருந்து கப்பல்களைத் துரத்திக் கொண்டே வரும் பழக்கமுடைய நீர்ப்பறவைகள், கரைகள் பக்கம் என்று அர்த்தம் சொல்வதால் எந்த மாலுமியும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. பக்கத்தில் கரை என்ற மகிழ்ச்சியிலும், பசியாலும் மாலுமிகளின் தர்மம் மீறுகிறார். கரை வரவில்லை. நீர்ப்பறவைகள் மட்டும் வந்து போகின்றன. கரை காட்ட கப்பல்களைத் தேடும் வழிதவறிய பறவைகளோ, நீண்ட தூரம் வந்துவிட்ட இளஞ்சிட்டுகளோ என்ற சந்தேகம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த கதையாய், நீர்ப்பறவைகளின் இரத்த வாடைக்குச் சுறாக்கள் சுற்றிவிடுகின்றன!

பெரும் பிரளயக் காலத்தில், கப்பலில் இருந்து பக்கத்தில் நிலம் இருக்கிறாதவென அறிய நோவா தனது புறாவை அனுப்பினார். ஆலிவ் இலையுடன் திரும்பி வந்து அருகில் நிலம் இருப்பதைச் சொன்னது அப்புறா. அதே போல் காலில் மாட்டிய ஏதோவொரு செடியின் வேரைப் பார்த்து, பக்கத்தில் கரை என்ற சந்தோசப் படுகிறார், உடைந்து போன கப்பலின் மாலுமி. நீல நிறத்தில் இருக்கும் கடலில் இருந்து பச்சை நிறத்தில் இருக்கும் கடலுக்குள் நுழைகிறார். கரை பக்கம் என ஆறுதல் படுத்திக் கொள்கிறார். 10 நாட்கள் கடல் வாழ்வுக்குப் பிறகு ஏதோவொரு கரையொதுங்கும் அவருக்கு மருத்துவரின் மேற்பார்வை இல்லாமல் உணவு தர மறுக்கிறார்கள். 600 மனிதர்கள் புடைசூழ‌ அவரை மருத்துவரிடம் தூக்கிச் செல்கிறார்கள்.

10 நாட்கள் உணவும் குடிநீரும் இல்லாமல் உயிருடன் இருந்த அவரைத் தன் தேசத்தின் நாயகனாக கொலம்பியா கொண்டாடுகிறது. சர்வாதிகார ஆட்சியில் இருந்த கொலம்பிய அரசு, அவர் என்ன பேச வேண்டுமென நிர்ணயிக்கிறது. அவரைப் பேட்டி கண்ட ஆசிரியர், 15 ஆண்டுகளுக்குப் பின் புத்தகமாக்கியதே இப்புதினம். புயலிலும் சரியான நேரத்தைக் காட்டிய கைக்காடிகாரக் கம்பெனிக்காரர்கள், அவரை மாடலாக வைத்து விளம்பரப் படுத்தினார்கள். 10 நாட்கள் கடலில் ஊறிக்கிடந்தும் கிழிபடாத காலணியின் கம்பெனிக்காரர்களும் கூட. அலங்கரிக்கப்பட்டு வானொலியில் வீர உரையாற்றுகிறார். வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆட்டோகிராப்கள். முத்தங்கள். எல்லாம் கரை சேர்ந்த 14 நாட்கள் வரைதான். அதன்பிறகு தான் உண்மைகள் வெளிவருகின்றன. 

பக்கத்து ஊரில் ஒருவன் முதலமைச்சரிடம் வீரதீர செயல்களுக்காக பணப்பரிசு பெற்றதைப் பார்த்து, குடிநீர்க் கிணற்றில் தானே விசம் கலந்துவிட்டு, விசம் இருப்பதாக ஊருக்குச் சொல்லி, பலபேர் உயிரைக் காப்பாற்றியமைக்குச் சமீபத்தில் முதலமைச்சரிடம் பணப்பரிசு வாங்கிய ஒருவன் கதையைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். 1955 பிப்ரவரியில் அவர்கள் பயணித்த நாளில் கரீபியன் கடலில் புயல் வரவேயில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் அடித்துச் சொல்கிறது. அதுமட்டுமில்லாமல் அக்கப்பலில் விதிமுறைகளை மீறி அதிக எடையுள்ள அனுமதியில்லாத பொருட்கள் ஏற்றப்பட்டு இருக்கின்றன. கொலம்பிய கதாநாயகனாகப் போற்றப்பட்ட அவரின் கருத்துகளை அரசு மறுக்கிறது. அதன்பிறகு அவர் என்னவானார் என்றே தெரியவில்லை.

ஆசிரியர் எழுதிய One Hundred Years of Solitude, Love in the time of cholera, Of love and other demons போன்ற புத்தகங்கள் பற்றி ஏற்கனெவே இதே தளத்தில் எழுதி இருக்கிறேன். மற்ற புதினங்கள் போலவே இதற்கும், இக்கதை தோன்றிய கதையைத் தன் முன்னுரையிலேயே ஆசிரியர் சொல்லிவிடுகிறார். அதனால் தான் நானும் முழுதாகச் சொன்னேன். அம்மாலுமி சொன்னவை உண்மையா பொய்யா என்பதையும் தாண்டி, அந்தப் 10 நாட்கள் அவர் கடலில் தனியாக என்னதான் செய்தார் என்பதற்காகவேனும் இப்புதினம் படிக்கலாம்.

அனுபந்தம்:
------------------
1. சுறாவின் வாயை உடலுக்குக் கீழ் ஏன் இயற்கை செய்திருக்கிறது?
2. நுரையீரலைப் பாதுகாக்க வேண்டுமென முதுகுப்புறத்தைச் சூரியனுக்குக் காட்டாமலே அலைகிறார். நுரையீரல்-முதுகு தொடர்பு எனக்குப் புரியவில்லை? தெரிந்தால் சொல்லுங்கள்.

- ஞானசேகர்