Monday, February 19, 2007

15. மறைவாய் சொன்ன கதைகள்

வெகு நாட்களுக்குப் பிறகு, விமர்சனம் செய்கிறவர் சேரல்.
-------------------------------------------------------
புத்தகம் : மறைவாய் சொன்ன கதைகள்
ஆசிரியர்கள் : கி.ராஜநாராயணன், கழனியூரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2005
விலை : ரூ230

-------------------------------------------------------
திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசிக்கு அருகில் இருக்கும் கழுநீர்க்குளம் என்னும் ஊரில் பிறந்தவர் கழனியூரன். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கி.ரா வைப் பற்றி பெரும்பாலான தமிழ்வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.






இனி புத்தகத்தைப்பற்றி,

100 நாட்டுப்புறப் பாலியல் கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இது! இதில் இடம்பெற்றுள்ள கதைகள், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'(1992, நீலக்குயில் பதிப்பகம், கி.ரா), 'நாட்டுப்புறப் பாலியல் கதைகள்' (1994, நீலக்குயில் பதிப்பகம், கழனியூரன்) ஆகிய புத்தகங்களிலிருந்தும், 'இறக்கை' மற்றும் 'வாசுகி' இதழ்களில் கழனியூரன் எழுதிய பாலியல் கதைகளில் இருந்தும் தொகுக்கப்பட்டவை.

இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

சில கதைகள் நாம் ஏற்கனவே அறிந்தவையாகவும் இருக்கின்றன. இன்றும் கூட பாலியல் விஷயங்களை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்பவை இது போன்ற பாலியல் கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற கதைகளும், கதை சொல்லிகளும் எல்லா கிராமங்களிலும் பரவிக்கிடக்கின்றனர்.('அர்' விகுதி இந்த இடத்திற்குச் சரியானதா?)

இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். 'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்' என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.

அடிமனக்கூறுகளில் ஆக்ரமித்திருக்கும் அதீதமான பாலியல் கற்பனைகள், சில கதைகளாக உருவெடுத்திருக்கின்றன. மனித உறவுமுறைகள் ஒழுங்கு படுத்தப்படாத காலத்தில் புனையப்பட்ட கதைகள் சிலவும் இடம்பெற்றிருக்கின்றன. 'அபூர்வ ராகங்களை' நினைவுபடுத்தும் ஒரு கதை, வெற்றிலை வந்த கதை, கடல் தொன்றியதற்கான கதை, ஆணுக்குப் பிரசவ வலி வேண்டிய பெண்கள் கதை என சில கதைகள் வேறு வடிவத்தில் நம்மை ஏற்கனவே வந்தடைந்தவையாக இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் சிலவற்றில், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மேல் சேலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இருந்திருக்கிறது. அன்று நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவமும் இங்கே கதையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் பகுதியை ஆளும் ராஜாவை வரவேற்கும் கூட்டத்தில், ஒரு பெண் தன் பிறப்புறுப்பைக் காட்டி வரவேற்கிறாள். அதற்கு அவள் தரும் விளக்கம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜாவும் மனம் மாறி அவர்கள் விருப்பப்பட்டால் மேலாடை அணியலாம் எனச் சலுகை அளிக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே அந்தப் பகுதிகள் முழுவதும் 'தோள் சீலைப் போராட்டம்' நடத்தப்பட்டிருக்கலாம்.

மொத்தத்தில் இது பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட புத்தகம் இல்லை. கொஞ்சம் தெளிவு, பழையன தேடும் ஓர் ஆர்வம், கதை சொல்வதின், கேட்பதின் சுகம், கிராமத்து பழக்கங்கள் இவற்றைப் பெறுவது என்கிற அடிப்படியிலேயே இக்கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள் கி.ராவும் கழனியூரனும். தொகுக்கும்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும், ஏற்பட்ட சங்கடங்களையும், எதிர்ப்புகளயும் பின் இணைப்பில் விளக்கி இருக்கிறார் கழனியூரன்.

சில பின் குறிப்புகள்:

1. அழகான கிராமிய நடை, புத்தகம் முழுவதும் கையாளப்பட்டிருக்கிறது
2. இந்தப் புத்தகத்தின் எந்தவொரு இடத்திலும், வழக்கத்தில் இருக்கும் 'கெட்ட' வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.
3. தமிழின் கெட்ட வார்த்தைகளையும், அவற்றின் ஆதி, வழங்குமுறை இவற்றைத் தொகுத்து வெளியிடுவதே தன் அடுத்தத் திட்டம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் கி.ரா.

Monday, January 29, 2007

14. THE LEXUS AND THE OLIVE TREE

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------------
புத்தகம ்: The Lexus and the Olive Tree (Understanding Globalization)
ஆசிரியர் : Thomas Loren Friedman
பக்கங்கள் : 512
சிறப்பு : ஆசிரியர், மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர்; இப்புத்தகம் தயாராக அவர் எடுத்துக் கொண்ட காலம் 4 ஆண்டுகள்.
விலை: 7.99 USD
---------------------------------------------------------












தடித்த எழுத்துகளில் சொல்லப்பட்டவை எல்லாம், இப்புத்தகத்தோடு தொடர்புடைய எனது கருத்துகள். சாய்ந்த எழுத்துகளில் சொல்லப்பட்டவை எல்லாம், புத்தகத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட கருத்துகள்.















Globalization (தாராளமயமாக்கல், உலகமயமாக்கல்) பற்றி ஒரு நல்ல புத்தகம் தேடி அலைந்து, கடைசியாக நான் படித்த உருப்படியான புத்தகம் இது. ஆசிரியர், ஏறக்குறைய எல்லா உலக நாடுகளுக்கும் பயணம் செய்து இருப்பதால், Globalization ன் தாக்கம் பற்றி சில நாடுகளையும், சில நிகழ்ச்சிகளையும், சில கற்பனை கதைகளையும் சொல்லி விளக்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய கண்டத்தைப் பற்றி எதுவும் ஆசிரியர் கூறியதாக ஞாபகம் இல்லை. மற்ற கண்டங்கள் எல்லாம் முடிந்த அளவு இப்புத்தகத்தில் அடக்கப்பட்டுள்ளன.

"இவ்வுலகத்திற்குப் பத்து வயதுதான் ஆகிறது. பெர்லின் சுவர் இடிந்தது; உலகம் பிறந்தது" என புத்தகம் ஆரம்பிக்கிறது. கம்யூனிஸத்தின் வீழ்ச்சியால், உலகநாடுகள் தாரளமயமாக ஆரம்பித்தன; எந்த நாடு வேண்டுமானாலும், எந்த நாட்டிலும் வியாபாரம் செய்யலாம்; இனி நாடுகள் தனித்தனி இல்லை; எல்லாம் உலகமயம் என்ற நிலை உருவாகிக்கொண்டு இருக்கிறது. தனது சொந்த வீட்டின் தொலைபேசி எண்கூட யாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை; எல்லோரும் லேப்டாப்பை அண்டி வாழ்கிறோம். அமெரிக்காவில் ஒருவனுக்குக் குழந்தை அழுகிறது என்றால், அவனுக்கு நேரெதிரான காலமண்டலத்தில் உள்ள இந்தியாவின் ஒரு கால் சென்டருக்குத் தொடர்பு கொண்டு, ஆலோசனை கேட்கிறான். இதுதான் Globalization நம்மை வழிநடத்தும் பாதை. இது நீடித்தால், தான் யார் என்பதே ஒரு கேள்வி எழும் ஒருநிலை உருவாகக்கூடும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது புத்தகம். ( என்னைப் பொறுத்தவரை, 1951ல் Paris ஒப்பந்தத்தில் 6 நாடுகள் கையெழுத்திட்ட பொழுதே, Globalization பிறந்துவிட்டது)

சரி இப்போது புத்தகத்தின் பெயருக்கு வருவோம். புத்தகத்தின் பெயரில் இருந்து, ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பு (eg: DOScapital) வைத்தது, ஒரு விஷயத்தை விளக்கும்விதம் எல்லாம் அருமை. புத்தகத்தின் பெயர்காரணம் புரிந்து கொள்ளவே 40 பக்கங்கள் படிக்க வேண்டும். சுருக்கமாக Lexus என்றால், தொழில்நுட்ப வளர்ச்சி (மறைமுகமாக Globalization ), Olive Tree என்றால் பாரம்பரியம் (தனக்கென ஒரு அடையாளம்). Globalization - பாரம்பரியம் இரண்டிற்கும் நடக்கும் போட்டியே இப்புத்தகம்.

உலகம் பிறந்தது முதலே, தனது அடையாளம் தொலையாமல் இருக்க மனிதன், என்ன வேண்டுமானாலும் செய்வான். ஆதாமின் மூத்தமகன் (Cain), இளையமகனைக் (Abel) கொன்றதில் இருந்து இன்று நடக்கும் பல யுத்தங்கள் வரை எல்லோருக்கும் பாரம்பரியம்தான் முக்கியம். ஆனால் Globalization ஐ ஆதரித்தால் சில நேரங்களில் தனிமனித அடையாளமே இல்லாமல் போகும் . (In this Cyber world, your identity is less important than the data that is stored about you)

Globalization க்கு சிறந்த உதாரணம் ஐரோப்பிய யூனியன். ஆனால், அதில் இணைந்துவிட்டால், நார்வே என்ற தனது பெயர், தனித்தன்மை, கரன்ஸி எல்லாம் போய்விடும் என நார்வே சேரவில்லை. இங்கு Lexus ஐ Olive Tree வென்றுவிட்டது. (இந்தியாவில், ஹர்பஜன் சிங் விளம்பரத்திற்காக தனது தலைப்பாகையைக் கழற்றி, பின் மன்னிப்பு கேட்டது ஓர் உதாரணம்; கர்நாடாகாவில் அந்நிய மொழித் திரைப்படங்கள் தடைவிதிக்கப்பட்டது ஓர் உதாரணம்)

இஸ்ரேலியர்களால் படுகொலை செய்யப்பட்ட, யாஸர் அராபத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகன், இன்று WTC, Gaza ல் MD ஆக இருக்கிறார். இங்கு Olive Tree ஐ Lexus வென்றுவிட்டது. (இந்தியாவில், தமிழப்பேராசிரியரின் மகனுக்குத் தமிழ் தெரியாமல் இருப்பது ஓர் உதாரணம். ஹிந்தி எதிர்ப்பாளரின் மகன், ஹிந்தியால் மத்தி அரசுக்குள் இருப்பது ஓர் உதாரணம்)

ஒரு ரஷ்ய நிருபர், Coke இயந்திரத்திற்கு அருகில், CNN திரைக்குக் கீழே நின்றுகொண்டு, Cellphoneல் ரஷ்ய மொழியில் பேசிக்கொண்டு, NATO தலைமையகத்தில் நின்றுகொண்டு, ரஷ்யபடைகள் Kosovo ல் அத்துமீறி நுழைவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருகாட்சி. இங்கு Lexus ஆ, Olive Tree ஆ? எது முக்கியம் என்ற போராட்டம். (இந்தியாவில் இட ஒதுக்கீடு பிரச்சனை முதல் இன்றைய சிங்கூர் - நந்திகிராம் பிரச்சனை வரை பல நிகழ்ச்சிகள் உதாரணம்; இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சொந்த மண்ணில் நடப்பதுகூட)

Lexus மட்டுமே இருந்தால், நீ யார் என்று யாருக்கும் தெரியாது. Olive Tree மட்டும் இருந்தால், உன்னை உனக்கு மட்டும்தான் தெரியும். இரண்டும் வேண்டுமா வேண்டாமா என்ற போராட்டம் வளர்ச்சிக்குத் தடை. இதுபோன்ற மேற்கூறிய மூன்று நிகழ்ச்சிகளும், முட்டுக்கட்டைகள். இரண்டையும் சமப்படுத்தத் தெரிந்த ஒரு சமூகமே வெற்றி பெறுகிறது. உதாரணமாக, Gulf நாடு ஒன்றில் இருந்து, லண்டன் செல்லும் விமானம் ஒன்றில், பயணிகள் தொழுகை செய்ய வசதியாக, மெக்காவின் திசைகாட்ட GPS உண்டு. இந்தியாவில், பொக்ரான் சோதனையும், அந்நிய நிறுவனங்களை அனுமதித்ததும் இன்னொரு உதாரணம்.

எது எடுத்தாலும் Internet என்ற இக்காலத்தில், E or Be Eaten என்னும் இக்காலத்தில், ரஷ்ய போன்ற நாட்டுமக்களை மனரீதியாக உலகமயமாக்கலுக்குத் தயார் செய்வது கஷ்டமான காரியம் என்கிறார் ஆசிரியர்.

Globalization க்குப் பெயர் போன அமெரிக்காவின் Secretary of State ஒருவரும், பாரம்பரியத்தைவிட்டு வெளிவராத சிரியா (Fax machine அறிமுகப்படுத்த 4 ஆண்டுகள் ஆனதாம்) போன்ற நாட்டின் அதிபர் ஒருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை உரையாடலை அற்புதமாகச் சித்தரித்து இருந்தார் ஆசிரியர்.

McDonald's உள்ள எந்த ஒரு நாடும் சண்டை போட்டுக் கொள்வதில்லை என்று ஒரு புதிய கருத்தை முன்வைத்து, அதற்கு The Golden Arches Theory of Conflict Prevention என்று பெயரும் வைக்கிறார் ஆசிரியர். உதாரணங்களுடன் அதை விளக்கியும் உள்ளார். ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வியாபார ரீதியில் தொடர்பு வைத்துக்கொண்டு, ஒன்றையொன்று சார்ந்து இருக்கும்போது அவை அடித்துக் கொள்வதில்லை என்பதே அதன் சாரம்.

பாரம்பரியத்தை இழக்காமல், உலக நாடுகள் சந்தையைத் திறந்து வைக்க வேண்டும் என்பதே ஆசிரியர் சொல்ல வரும் மையக் கருத்து. அப்படி மற்ற நாடுகளைத் தன்னுள் அனுமதிக்கும்போது, பல filter கள் கண்டிப்பாக வேண்டும் என்கிறார் ஆசிரியர். இல்லையேல் பாங்காங்கிற்கு நேர்ந்ததுபோல், போக்குவரத்து நெரிசல் முதல் பல தொல்லைகள் வரும்.

உலகமயமாக்கலால் சமாளிக்க முடியாத பல கேள்விகள்:

Is God in Cyberspace? கடவுளும் ஓரினத்தை அடையாளம் காட்டும் பாரம்பரிய சின்னமே. ஆனால், உலகமயமானால், தன்னையே அடையாளம் தெரியாத மனிதன் கடவுளை நினைக்க நேரம்? வேகமான உலகத்தில் கடவுளை என்ன செய்வது?

No Editor, No Publisher, No Censor for Internet. 1999ல் அமெரிக்காவில் ஒரு மாணவன் ஒரு பள்ளிக்கூடத்தில் நுழைந்து, தாறுமாறாகச் சுட்டு பல பேரைக் கொன்றது நினைவிருக்கலாம். அவன் சுடுவதற்கு சில யோசனைகளை AOL (America Online) இருந்தே பெற்றானாம். உலகமயமாக்கல், குழந்தைகளைக் கெடுக்கிறதே?

புதிய தொழிற்சாலைகள் என்ற பெயரில் விவசாயிகளை விரட்டுவது; காடுகளைக் குடைந்து குழாய் போடுவது. இயற்கையை என்ன செய்யப் போகிறோம்? God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .

இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலாக சில வழிமுறைகள் சொல்கிறார் ஆசிரியர். இதுபோல உலக நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறி புத்தகத்தை அருமையாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். நான் சிலசில பத்திகளை விட்டுவிட்டுதான் படித்தேன். குறிப்புகள் எடுத்த காகிதங்களில் ஒன்று தொலைந்து போய்விட்டது வேறு. சொல்வதற்குப் பல நல்ல விஷயங்களும் (eg. உலகத்திற்கே தெரியாமல், உலகமயமான ஒரு கிராமம்), பல அற்புதமான கருத்துகளும் (eg. Globalization is not global), நிகழ்ச்சிகளும் இப்புத்தகத்தில் உள்ளன.

எல்லாமே அருமையாக சொன்ன ஆசிரியர், கடைசி ஒரு பக்கத்தில் சொதப்பிவிட்டார். வேறு ஒன்றுமில்லை, தாய்நாட்டுப் பற்றுதான். "தொழில்நுட்ப வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் சமன்செய்வதில் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் உதாரணமாக விளங்குகிறது - அமெரிக்கா". உதாரணமாக, ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சி. புத்தகம் முழுவதும், தான் அழுததாக எந்த இடத்திலும் ஆசிரியர் சொல்லவில்லை, கடைசிபக்கம் தவிர. நான் சிரித்துவிட்டேன்.

சரி முடிவுக்கு வருகிறேன். காயீன் - ஆபேலில் ஆரம்பித்த புத்தகத்தை பாபேல் கோபுரத்தில் (Tower of Babel) முடிக்கிறார் ஆசிரியர். சொர்க்கத்தை அடைவதற்காக, பாபேல் கோபுரம் பாபிலோனில் (பாக்தாத் : ஈராக்) கட்டப்பட்டபோது, அதில் வேலை செய்த மனிதர்கள் எல்லோரும் நீண்ட நாட்கள் பழகியதால், ஒரே மொழியில் பேசப் பழகி தனது சொந்த மொழிகளை மறந்து போயினர். கோபுரம் முழுவீச்சில் கட்டப்பட்டபோது, மனிதசக்தி தனக்குச் சவால்விட வருவதைக் கண்ட கடவுள், மனித சக்தியை உடைக்க ஒரு திட்டம் போட்டார். அவர் போர் மூட்டவில்லை; பூமியை அதிரச் செய்யவில்லை; தொற்றுநோய் பரப்பவில்லை; கோபுரத்தை இடிக்கவில்லை. அவர் செய்த எளிய காரியம், அம்மனிதர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு மொழிகளில் பேச வைத்தார். அவ்வளவுதான், பாபேல் கோபுரம் தகர்ந்து போனது.

இப்போது ஆசிரியர் நம்முன் வைக்கும் கேள்வி: Internet என்பது பாபேல் கோபுரத்தின் இன்னொரு அவதாரமா? Internet ல் எல்லோரும் யாரென்றெ தெரியாமல், ஒரே மொழியில் பேசுகிறோம். ஆசிரியரைப் பார்க்காமலேயே பாடம் படிக்கிறோம். ஒருநாள் அந்தக் கடவுள், பாபேல் கோபுரத்திற்குச் செய்ததுபோல், Internet crash ஆனால்?

அதனால்தான் ஆசிரியர் சொல்கிறார்: "Lexus யையும், Olive Tree யையும் சமப்படுத்த பழக வேண்டும்". ஏனெனில், (குஜ்ரால் அவர்களை உதாரணமாக வைத்து) தாத்தாவுக்கு இங்க்லீஷ் தெரியாதா என்று கேட்கும் பேரப்பிள்ளைகளைத் தாத்தாக்கள் விரும்புவதில்லை; தன் நிழலில் தன் வம்சம் இருக்க வேண்டும்; பரம்பரை கவுரவம் காக்கப்பட வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் விரும்ப வேண்டும். (ஷாங்காய் நகர் தொழில் அதிபர் ஒருவரை உதாரணமாக வைத்து) Internet ல் இருந்து, எவ்வளவுதான் உன்னதமான கருத்தாக இருந்தாலும், மகன் புத்தி சொல்வது எந்த தந்தைக்கும் பிடிப்பதில்லை (அதுக்கெல்லாம் கடவுளா இருக்கணும்).

என்னை மிகவும் கவர்ந்த ஒரு வாசகத்துடன் முடித்துக் கொள்கிறேன்: "There are two ways to make a person feel homeless; one is to destroy his home and the other is to make his home look and feel like everybody else's home ". இதைப் படித்தவுடன், "சந்தோசமா இருக்குறப்ப மனுஷனுக்கு அது தெரியுறது இல்ல" என்ற விருமாண்டி வசனம் ஞாபகத்திற்கு வந்தது. (உலகமயம் சந்தோஷமாய்த் தெரிகிறது. அப்ப....?)

கொசுறு 1: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை பற்றி From Beirut to Jerusalem என்ற இவரின் முதல் புத்தகத்தைப் படிப்பதற்காகத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
கொசுறு 2: இவரின் இரண்டாவது புத்தகமான Longitudes and Attitudes என்பது The New York Times பத்திரிக்கையில் பல்வேறு காலக்கட்டங்களில், தீவிரவாதத்தைப் பற்றி இவர் எழுதிய Column களின் தொகுப்பு. அமெரிக்க துதிபாடல், ரஷ்யா, இந்தியா, இஸ்லாமிய நாடுகளைக் கிண்டல் செய்வது அதிகம் இருந்ததால், பாதிக்குமேல் பிடிக்கவில்லை; படிக்கவில்லை.
கொசுறு 3: இவருடைய சமீபத்திய புத்தகம் The World is Flat. இதுவும் உலகமயமாக்கல் பற்றியது. முதல் 50 பக்கங்கள் கண்டிப்பாகப் படிக்கலாம். அதற்குப் பிறகு, அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

- ஞானசேகர்

Wednesday, December 20, 2006

13. IN THE LINE OF FIRE

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
----------------------------------------------------------
புத்தகம்: In the line of fire
ஆசிரியர்: Pervez Musharraf
விலை: ரூ.950/-

வெளியிட்டோர்: Free Press
வெளியிட்டவர்: Kofi Annan
----------------------------------------------------------












நான் 'Company of women' படித்தபோதுகூட அட்டையை மறைத்துப் படித்ததில்லை. ஆனால், இப்புத்தகத்தை..... புத்தகம் வாங்கினது முதலே, என்னைச் சிலபேர் ஒருமாதிரி பார்த்தார்கள். எனவே, இப்பதிவை இட்டதற்காக சேரலாதனிடம் முகம் சுழிக்காதவர்களும், வரலாறு - இலக்கியம் - அரசியல் போன்ற வார்த்தைகளுக்கு முகம் சுழிக்காதவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.

பொதுவாகவே நான் சுயசரிதங்கள் படிப்பதில்லை. ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி சொன்னதுபோல், என்னைப் பொருத்தவரை, "சுயசரிதம் என்பது தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு". இதற்கு எந்தச் சுயசரிதமும் விதிவிலக்கில்லை. இருந்தாலும் நான் படித்த நான்காவது சரிதம் இது. நான் படித்த சரிதங்களில் தற்புகழ்ச்சி கொஞ்சம் குறைவாக இருந்த புத்தகமும் இதுதான்.














ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. டெல்லியில் பிறந்து, Train to Pakistan வழியாக கராச்சியில் குடியேறி, நாட்டின் தலைமகனாக உயர்ந்த ஒரு சாதாரண மனிதன். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்சியாளர். ஆசிரியர், இராணுவத்தில் பணிபுரிந்து இருந்ததினாலும், ஒன்பது முறை கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து இருத்ததினாலும்தான், இப்புத்தகத்திற்கு இப்பெயர் என நான் நினைக்கிறேன்.

சுயசரிதங்கள், வம்சாவழியின் பெருமைகளுடன் ஆரம்பிக்கும் என்பதற்கு இப்புத்தகம் விதிவிலக்கு. தனது நான்கு வயதில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயரும் குடும்பங்களில் ஒருவனாக ஆரம்பிக்கிறது புத்தகம், Train to Pakistan என்று. "அப்பயணம் மேற்கொண்ட எவனும் உயிரோடு இருந்தால், அவனுக்கு என்று சொல்ல ஒரு கதை வைத்திருப்பான்" என்கிறார் ஆசிரியர். அந்நாளில் அந்த Trainல் இருந்து உயிர் தப்பித்ததாலும், பின்னாளில் ஒரு Planeல் இருந்து உயிர் தப்பித்தாலும், அவர் சொல்வதற்காக வைத்திருக்கும் ஒரு (தொடர்)கதைதான் இப்புத்தகம்.

ஆறு பகுதிகள் கொண்ட இப்புத்தகத்தில், முதல் பகுதி இளமைப் பருவம்; Train to Pakistan முதல் இராணுவத்தில் சேருவதுவரை. தன் பாட்டியின் பர்தா வழியாக, தனது முதல் காதலிக்குத் தூது அனுப்பியது; ஜனாதிபதி ஆன பின்பு, தன்னைச் சிறு வயதில் அடித்த பாதிரியாரிடம், "ஜனாதிபதி seatல அடிகிறோம்னு அப்போதைக்கு ஒங்களுக்குத் தெரியலையா Father?" என ஒரு பழைய நண்பன் கேட்டது; இதுபோன்று சீராகப் போகிறது இப்பாகம். ஆனால், இவருடைய மாமா, சிறந்த நகைச்சுவையாளர் என்பதற்காக, அவர் செய்த ஒரு காரியத்தைச் சொன்னார். அது வேறு ஒன்றுமில்லை, பொல்லாதவன் படத்தில், ரஜினியிடம் முதல் சந்திப்பில் ப்ரியா செய்யும் காமெடி. யாரு யாருகிட்ட சுட்டாங்கன்னு யாருக்குத்தான் தெரியும்?

கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே பனிசரிவு நிகழும் மலைபிரதேசத்தில் இராணுவப் பயிற்சி, இரணுவத்தில் வகித்த பதவிகள், கார்கில் யுத்தம் - இவையெல்லாம் இரண்டாம் பாகம். ஆசிரியர் சொல்கிறார்: "இந்தியாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புதான், கார்கில் யுத்தத்திற்குக் காரணம்".

புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது, இந்த மூன்றாம் பாகம்தான். Plane to Pakistan என்று தனது இலங்கையில் இருந்து திரும்பும் பயணத்தில் ஆரம்பித்து, அது தரை இறங்க அனுமதிக்கப்படாதபோது, இந்தியாவில் (மும்பை) தரை இறங்குவதைவிட சாவதே மேல் என கடைசியில் பாகிஸ்தானில் தரையிறங்கி, நவாப் செரீபை விரட்டிவிட்டு ஆட்சிபிடித்த முக்கிய நிகழ்ச்சிகள் இப்பாகத்தில்தான் வருகின்றன. ஆசிரியரே சொல்கிறார்: "இராணுவத்தில் அதிஉயர் பதவியில் இருக்கிறேன். இனிமேல் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என நினைத்து இருந்தேன். ஆனால், இனிமேல்தான் வாழ்க்கையே..".

Never democratic, often autocratic, usually plutocratic and lately kleptocratic ஆய் இருந்த பாகிஸ்தானைத் தனது ஆட்சிக்காலத்தில் எப்படி மாற்றிவருகிறார் என்பதே நான்காம் பாகம். பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை இப்பாகத்தில் விளக்கி இருக்கிறார். இப்பாகத்தின் பாதியில் இழந்த சுவாரஸ்யம் கடைசி பாகம்வரை தொடர்கிறது. ஐந்தாம் பாகத்தில் பயங்கரவாதம் பற்றி விளக்குகிறார். செப்டம்பர் 11, ஒசாமா பின் லேடன், முல்லா ஓமர், Daniel Pearl, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வைத்த எழுதப்படாத 7 கோரிக்கைகள் என பல கதைகள். கடைசி பாகத்தில் பாகிஸ்தானைப் பற்றிப் பொதுவான கருத்துகளைக் கூறியுள்ளார். 2005 நிலநடுக்கம் இதில்தான் விளக்கப்பட்டு இருக்கிறது. புத்தகத்தின் ஆரம்பத்தில், அவர் மீது நடத்தப்பட்ட 9 கொலை முயற்சிகளையும் விளக்கியுள்ளார்.

புத்தகம் முழுவதும் தன்னைவிட, தனது நாட்டை அதிகம் புகழ்ந்திருக்கும் ஆசிரியரைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். பாகிஸ்தான் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் தவறான கருத்துகளுக்கு என்றே, தனியாக ஒரு பெரிய விளக்கமும் கொடுத்திருக்கிறார். தனது பக்கத்து எதிரியான இந்தியாவையும் அவர் கிண்டல் செய்யத் தவறவில்லை. சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமருக்குக் கைகுலுக்கியது ஓர் உதாரணம்.

புத்தகத்தின் இரண்டாம் பாதி முழுவதும் தற்புகழ்ச்சி அதிகம் இருந்தாலும், அவர் ஆட்சியில் அமரும்வரை உள்ள முதல் பாதி கண்டிப்பாக வரலாறுவிரும்பிகள் படிக்கலாம்.

கொசுறு 1: அமெரிக்க அதிபரைக் கொலை செய்ய நடக்கும் முயற்சிகளைப் பற்றி, In the line of fire என்ற ஓர் ஆங்கிலப் படம் உள்ளது.
கொசுறு 2: இப்புத்தகத்தின் முதல் பதிப்பில் சிலபல எழுத்துப் பிழைகள். (eg: Manmoham Singh). உடனடியாக அவை திருத்தப்பட்டு, மறுபதிவு வெளிவந்தது.
கொசுறு 3: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும், அதற்காக பாகிஸ்தான், CIA விடம் இருந்து கணிசமான தொகையைப் பெற்றது எனவும் ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார். இதைச் சொல்லும் பத்திதான், புத்தகத்தின் பின்புற அட்டையை அலங்கரிக்கிறது. ஆனால், இது தவறான கருத்து என்று ஆசிரியர் பின்னர் வருத்தம் தெரிவித்தார்.
Pervez Musharraf says, "History judges leaders by results". History says, "Judge by results is injustice".

-ஞானசேகர்