Monday, September 06, 2010

67. வெட்டுப்புலி

------------------------------------------
புத்தகம் : வெட்டுப்புலி
ஆசிரியர் : தமிழ்மகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ 220

------------------------------------------

தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கும். சிவன் கோயில் தெருவின் முனையில் எங்கள் வீடு. அப்போது பண்ணைக்காரர்களிடம் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தார் தர்மராஜ். தீவிரமான தி.மு.க காரர். போதையில் இல்லாத தர்மராஜை ஊரில் யாரும் பார்த்ததில்லை. பண்ணைக்காரர்களும் அப்போது தி.மு.கவில் இருந்ததால் அவருக்குக் கொஞ்சம் சலுகையாக இருந்தது. கலைஞரைக் கருணாநிதி என்று அழைப்பதில் அவருக்கு அலாதி ப்ரியம்; கொஞ்சம் கர்வமும் கூட. திருக்குவளையில் கலைஞரைச் சிறுவயதிலேயே பார்த்துப் பழகியவர் என்றும் சொல்லிக் கொண்டார்கள். எந்தப் புள்ளியில் மனிதர் இவ்வளவு தி.மு.க. அபிமானியாக மாறியிருப்பார் என்பது தெரிந்தும் தெரியாமலும் இருந்தது.

மனிதன் நிதானத்தில் இருக்கும் வரை இருக்கும் வேகம், நிதானம் இழந்தபிறகு இன்னும் கூட அதிகமாகிவிடும். அதுவே எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த கோபமாகவும் மாறும். எம்.ஜி.ஆர் என்று அறிமுகமாகியிருந்தவரை, எம்.ஜி.ராமச்சந்திரன் என்று எனக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் கேட்ட முதல் மிமிக்ரி குரல் அவருடையதுதான். கலைஞரின் குரலில் பேசுவதில் வல்லவராக இருந்தார். சிவன் கோயில் பின்புறத்திலிருந்த திடலில் இங்குமங்கும் நடந்தபடி ஏகவசனத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தாக்குவார். பள்ளிக்கூடத்தில் பையன்களிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் அவர் பேச்சில் கேட்க முடிந்தது. போட்டு விளாசிவிடுவார்.

எம்.ஜி.ஆர் இறந்த நாளில் தெருப்பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்த கையோடு, அன்றிரவே அ.தி.மு.க கட்சிக்காரர்களிடம் வகையாக வாங்கியும் கட்டிக்கொண்டார். 1991ல் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது முதல் தடவையாக விஷம் குடித்தார் தர்மராஜ். அவரின் மனைவி கலைஞரின் வம்சத்தைச் சாபமிட்டுப் பழித்தபடி தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடினாள். நான்கு நாட்களில் சக்கையாகத் திரும்பிவந்த மனிதனைத் தெருவிலேயே போட்டு மிதித்தான் அவர் மகன். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பிறகு தர்மராஜின் நடமாட்டம் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அடுத்து வை.கோ வெளியேறிய போது பண்ணைக்காரர்கள் அவரோடு போய்விட, தர்மராஜ் தனியே விடப்பட்டார். வேலையும் பறிபோனது. வீட்டிலும் மரியாதை இல்லை. மகன் வேலை செய்து கொண்டுவரும் பணத்தில் குடிக்கப் பணம் கேட்கத் திண்டாட்டமாகப் போகவே, போதையில்லாமலே கண்ணில் பட்டோரை எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் நினைத்து வசை பாட ஆரம்பித்தார். கலைஞர் தன் துயர் துடைக்க வருவார் என்பது அவரது அசையாத நம்பிக்கையாக இருந்தது. குடும்பத்தலைவன் என்ற பெயருக்காக வீட்டில் சாப்பாடு போட்டுவந்தார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சி வந்தும் அவர் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. மனநிலையில் சின்ன தடுமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

மீண்டும் திமுகவின் ஆட்சி முடிந்து, அ.தி.மு.க வென்ற போது விஷம் என்று நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்து இரண்டாவது முறையாகக் காப்பாற்றப்பட்டார். இந்த முறை மகன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்க்கவில்லை. பிராணனைப் பிடித்து வைத்திருக்கும் ஆசையில் தர்மராஜின் மனைவி மகன் பேச்சுக்கு அடங்கிப்போனாள். தர்மராஜ் ஊருக்குள் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்தார். அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒன்றரை மாதங்களுக்குள் ஒரு நாள் அதிகாலையில் ஊரே பதட்டமடைந்து கிடக்க, தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஒரு காட்சி. கலைஞர் தன் வீட்டிலேயே கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் இழுத்து வரப்பட்டார். பதட்டத்தோடு பதட்டமாக நடந்தேறிய எல்லா அரசியல் நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக்காட்சி. மதியம் 'பராசக்தி' திரைப்படம் போட்டார்கள். தர்மராஜ் எங்கள் வீட்டு வெளித்தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பயிர்களுக்கென்று வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தர்மராஜ் இறந்து போனதாக ஊரே மீண்டும் பரபரப்பானது.

திராவிட இயக்கங்களைப் பற்றிய எந்தக் கடந்தகாலச் செய்தியும் எனக்கு தர்மராஜைத் தவிர்த்ததாக நினைவுக்கு வருவதேயில்லை. எங்கள் ஊரின் பதினைந்தாண்டுகால அரசியல் நிகழ்வுகள் எல்லாமும் எனக்கு அவரைத் தொடர்பு படுத்தியே நினைவில் இருந்தன. மாபெரும் அரசியலின் சிறு படிமமாக வாழ்ந்து மறைந்து போனார் தர்மராஜ் டிரைவர். பெரும் அரசியல் நிகழ்வுகளை, பெரும் வரலாறுகளை, பெரும் சமுதாய மாற்றங்களை நாம் இப்படி நினைவுகொள்வது மிக இயல்பானதுதான் இல்லையா? இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது நான் ஐந்து மாதக் குழந்தை என்று என் அம்மா சொல்லுவார். இதுவும் கூட அரசியல் நிகழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இழையோடிப்போகும் ஒரு தருணம்தான் என்று தோன்றுகிறது. தர்மராஜின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்தால், நமக்கு நம் வாழ்க்கை சார்ந்த ஒரு பேரியக்கத்தின் வரலாறு கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும். அதுபோன்றதொரு பதிவுதான் இந்த வெட்டுப்புலி. புனைவும், வரலாறும் கலந்ததொரு கலவை.



வெட்டுப்புலி தீப்பெட்டி, தமிழகத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள், தமிழ்த்திரையுலகம் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வேரூன்றியவை. இந்த யதேச்சையான ஒற்றுமையை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, இம்மூன்றையும் சுற்றிச் சுற்றிக் கோலமிட்டிருக்கிறார் தமிழ்மகன். தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஊடகத்துறையில் இல்லாத ஒருவர் இதை எழுதியிருப்பதற்குச் சாத்தியம் மிக மிகக் குறைவு என்று தோன்றியது. இத்தனை செய்திகளை ஒரு தனிமனிதன் தொகுப்பது இயலாதது. இந்த உழைப்புக்காகவே தமிழ்மகனைப் பாராட்டலாம். ஓர் எளிய, எழுத்து வசீகரம் இவரிடம் இருக்கிறது. அது நம்மை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பணியை நிறைவாகச் செய்கிறது.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் சிறுத்தையை வெட்டுவது போன்ற படம் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதன் தன் தாத்தாவின் பெரியப்பா என்று அறிந்து, அது பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தன் அமெரிக்க நண்பகளுடன் தேடலைத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். கதை அங்கிருந்து 1940களுக்குப் பயணித்து, பின் 1930, 1940 என்று தொடர்ந்து இரண்டாயிரத்துப் பத்துவரை தொடர்கிறது. கதை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்கிறது.

தாம் பார்த்துப் பழகிய இடங்களின் வரலாறு தெரிந்துகொள்வதில் யாருக்கும் ஆர்வமிருக்கும். எங்கள் ஊரின் வயோதிகர்கள், என் கிராமத்திற்கு முதல் முதலாக இரயில் வந்த கதையையும், ஆற்றுப்பாலம் வந்த வரலாற்றையும் சொல்லும்போது சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் எழும் இன்பம் அலாதியானது. பாலம் இல்லாத, இரயில் இல்லாத என் கிராமத்தின் பிம்பம் என்னுள் விரியும். மக்கள் போக்குவரத்து எப்படி நிகழ்ந்திருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதாக எண்ணவோட்டம் நீளும். வெட்டுப்புலியின் ஒவ்வொரு அத்தியாயமும் என்னுள் அப்படியான ஒரு எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியது. சென்னையின் நிகழ்கால பிம்பத்தைப் பார்த்தவனுக்கு, நூற்றாண்டுகால நகரின் வளர்ச்சி குறித்த செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. சென்னையைச் சுற்றிலும் கதை வலம் வரும் இடங்களிலும் பெரும்பாலானவற்றை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கொசஸ்தலையாறு, பூந்தமல்லி, திருவள்ளூர், அம்பத்தூர் என்று புறநகர்ப்பகுதிகளின் கடந்தகால பிம்பத்தை அழுத்தமாகப் பதியவைக்கிறது இப்புதினம். இவற்றின் அருகிருக்கும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்தாம் கதை மாந்தர்கள்.

மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான பருவம் இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லலாம். அதுவரை நிகழ்ந்திருந்த பல அதிசயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முன் நிரூபணமாகியிருந்த பல கோட்பாடுகளைப் பொய்யாக்கி, அசுர வேகத்தில் தொழில்துறையிலும், அறிவியலிலும் வளர்ச்சி கண்டனர் மனிதர்கள். இவ்வளர்ச்சி உலகெங்கிலும் இருந்த மக்களின் வாழ்க்கையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்தது. வாழ்க்கையைப் பற்றிய பார்வை வெகுவாக மாறிப்போனது. தமிழகத்தைப் பொறுத்தவரை பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வும், திரைப்படங்களின் ஆதிக்கமும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தின. சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கும் மக்களிடம் இவை பிறப்பித்த மாற்றங்களை மிக நுண்மையாக ஆராய்கிறார் தமிழ்மகன்.

வெறும் பாத்திரங்களாக இல்லாமல் அவர்கள் கருத்துகளாக வலம் வருகிறார்கள். திராவிடத்தைப் பற்றியும், திரைப்படத்தைப் பற்றியும் எத்தனை விதமான கருத்துகள் நிலவியிருக்குமோ, அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பாத்திரமாகியிருகின்றன. எது சரி எது தவறென்று நிறுவுவது ஒரு படைப்பாளியின் வேலையன்று. சமகால வரலாற்று நிகழ்வுகள், அது கதையில் வரும் பாத்திரத்தை, ஒரு சூழலை எப்படிப் பாதிக்கிறது, அது குறித்த கதைமாந்தர்களின் நிலைப்பாடு என்ன, என்பதை மட்டுமே கதையின் போக்கில் சொல்லிச்செல்கிறார். பொது நிகழ்வுகளின் எதிரொலி ஒருவனின் அந்தரங்கம் வரை கேட்கக்கூடியதாக இருக்கிறது. பாத்திரங்கள் தங்களுக்கிடையேயான முரண்பாட்டை, தங்கள் கொள்கைகளின் வேறுபாட்டோடு கலந்து அதன்மூலம் தங்கள் வன்மத்துக்கு வடிகால் தேடுகிறார்கள்.

ஒவ்வொரு பத்தாண்டுகளாகப் பிரித்துக் கதை சொன்ன உத்தி இந்தப் புதினத்தின் சிறப்பம்சம். கால மாற்றத்தில் மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய இது உதவியிருக்கிறது. ஒரு பாத்திரம் தன் அடிப்படை இயல்புக்கு முழுவதும் எதிரான, தான் வாழ்ந்துவந்த நெறிக்கு எதிரான, ஒரு கருத்தைத் தன் அடிநாதமாக மாற்றிக்கொள்ள இந்த அவகாசம் போதுமானதாகயிருக்கிறது. தனி மனிதனானாலும், இயக்கமானாலும் இது இயல்பாக நடந்துவிடுகிற விஷயம்தானே!

தன் காதல் சாதிப்பிரிவினையால் அழிக்கப்படும்போது யோசிக்கத் தொடங்கி பெரியாரைப் பின்பற்றத் தொடங்கும் இளைஞன், பெண் சுகத்துக்காகத் திரைப்படம் தயாரிக்க முற்படும் ஒரு பணக்கார இளைஞன், தரிசு நிலங்களைத் தங்கள் உழைப்பால் விளைநிலங்களாக மாற்றி அதைப் பராமரிக்கும் சிந்தனையற்று, பணக்காரர்களிடம் கொடுத்து, வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பதே பெரிய பகுத்தறிவுச் சீர்திருத்தம் எனத் தொடங்கிப் பின் அனுபவத்தால் மனம் மாறும் இளைஞன், என்று விதவிதமான பாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாங்களுடன் கதையோடு பரிணமிக்கிறார்கள்.



ஒவ்வொரு பத்து வருடத்தையும் அறிமுகப்படுத்தும் அத்தியாயங்கள் தமிழ்மகன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவனவாக இருக்கின்றன. குறிப்பாக ஐம்பதுகளின் அறிமுக அத்தியாயத்தைச் சொல்லலாம்.

'காங்கிரஸ் பேரியக்கம் ஓட்டுப்பெட்டியில் ஒடுங்க வேண்டாம் என்ற காந்தியாரின் சிந்தனை புறக்கணிக்கப்பட்டது. காந்தியைக் கொல்லச் சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கர் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டன. முரண்பாடுகள் இயல்பாகின. சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்காத இந்தியச் சுதந்திரம் கறுப்புதினமாக இருந்தது பெரியாருக்கு. தி.மு.க.வினர் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டுமென்றனர். ஒருவனே தேவன் என்ற சுருதி பேதம்'

அத்தியாயங்களின் முடிவையும் அனாயாசமான முத்தாய்ப்புடன் அமைத்திருக்கிறார் தமிழ்மகன். ஒவ்வொரு முடிவும் ஏற்படுத்தும் அதிர்வு சில நிமிடங்களுக்கேனும் நம்மை இயக்கமின்றி கட்டிப்போடும் திறனுடையதாகவிருக்கிறது. அரசியல் சார்ந்த செயல்களால் தன் சொந்த வாழ்க்கையை முற்றிலுமாக இழந்த ஓர் ஆணுக்கும் அவன் மனைவிக்குமான உறவைப் பற்றிப்பேசும் அத்தியாயம் இப்படி முடிகிறது. அவனுக்கும், மனைவிக்கும் நீண்ட காலமாக உறவே இல்லை என்றாகியிருந்தது. 'எப்பவாவது ஒரு தரம் வீட்டுக்குப்போவான். அழுக்கு வேட்டி, சட்டையைத் துவைத்துப் போட்டுவிட்டு வேறு துணி மாற்றிக்கொண்டு வருவான். அவளும் ஏன் வந்தாய் என்று கேட்பதில்லை. அவள் முழுகாமல் இருந்ததால் அவன் அப்படி வந்து போவதை எதிர்பார்க்கவும் செய்தாள்....'

அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் நிறைய காட்டமான அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை கற்பனையான வசனங்கள் என்று எண்ண முடியவில்லை. ஆசிரியர் சிறுவனாக இருந்த பருவத்தில் கேட்டு வளர்ந்த வார்த்தைகளையே இங்கே பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தோற்றம், தி.மு.கவின் மலர்ச்சி, கல்லூரிகளில் மாணவர்கள் மிக விரும்பிப் படித்த திராவிடப் பாடம், தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்து பின் வீழ்ந்தே போனது, தமிழ்நாட்டு அரசியலும் திரைத்துறையும் இரண்டறக் கலந்தது, இல்லாத கடவுள் ஒருவனே தேவனானது, ஒற்றைச் சூரியனை இரட்டை இலைகள் வீழ்த்தியது, இனமானம் காக்க வேண்டி ஒரு தலைவனை உருவாக்கிப் பின் மறந்தே போனது, எனத் தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் நிகழ்வுகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

டெண்டுகள் அமைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், சக்கரவர்த்தித் திருமகளுக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய எம்.ஜி.ஆர், திரைப்படம் எடுப்பதற்காக அரசுப்பணியைத் துறந்த பாலச்சந்தர், உடலை மூலதனமாகக் கொண்டு உழைக்க முன்வந்த நடிகைகள், எம்.ஜி.ஆரின் காலில் விழாமல் கைகொடுத்த ரஜினிகாந்த், பின் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலையிலிருந்து மீட்ட அதே ரஜினிகாந்த், திடீரென தேசிய இயக்குனராகத் தன்னை நிறுவிக்கொண்ட மணிரத்னம், கோட்டைக் கனாக்களுடன் களமிறங்கி கொண்டிருக்கும் இன்றைய நாயகர்கள் என்று தமிழ் சினிமாவின் பரிமாணங்களைக் கதாப்பாத்திரங்களின் கருத்துகளாக முன்வைப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனம்.

எழுத்தின் முக்கிய பணி வாசகனையும் தன்னோடு உள்ளிழுத்துச் சேர்த்துக்கொள்வது. அவனுக்கான கற்பனைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளாதிருப்பதும் கூட. தசரத ரெட்டிக்கு முத்தம்மா மீதிருந்த ஈர்ப்பு, சின்னா ரெட்டி சிறுத்தையை அடித்தது பற்றி வேறு வேறு கதைகள் உலவுவது என்று சில தகவல்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விட்டார்.

காலத்தையும், அது விட்டுச் செல்லும் சுவடுகளையும், சமகால நிகழ்வுகளையும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியை இன்றைய சூழலில் மிகச்சில படைப்புகளே செய்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 'வெட்டுப்புலி' மிக முக்கியமான படைப்பு.

பின் குறிப்பு :

1. இந்தப் புத்ததகத்தை நண்பர் ஞானசேகர் வாசித்துவிட்டு என்னிடம் சிலாகித்ததோடு தன் புத்தகத்தையே எனக்களித்து வாசிக்கவும் செய்தார். அவருக்கு என் நன்றி!

2. சென்னையைப் பிடித்தவர்களுக்கும், சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கும், இப்புத்தகத்தில் ரசித்துச் சுவைக்க நிறைய பகுதிகள் உண்டு

3. நான் வாழும் மைலாப்பூர் பகுதியைக் குறித்தச் செய்திகளை மிகவும் விரும்பி வாசித்தேன்

4. நிறைய எழுத்துப்பிழைகள் கண்ணில் பட்டன. பெரும்பாலும் அவை அச்சுப்பிழைகளே! அவசரமாக எதுவும் தேவைப்படும், அவசரமாக எதுவும் செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களும் அவசரகதியிலேயே தயாராகின்றன போலும்.

5. சிறுத்தையை வெட்டியதைப் பற்றிய தேடலில், தினமணி அலுவலகத்தில் 1934 ஜூன் எட்டாம் தேதி செய்தித்தாளை கேட்பான் இளைஞனின் நண்பன். அதில் அவர்கள் தேடி வந்த செய்தி இருக்கும். அது பற்றிய தகவல்கள் முன்பகுதிகளில் ஏதும் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. வாசித்தவர்கள் எவருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!

6. 'மதராசப்பட்டினம் திரைப்படம் தவறவிட்ட ஒரு வேலையை இப்புத்தகம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. உருவ அமைப்பில் அறுபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையைக் கொண்டுவந்தவர்கள், அக்கால மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்யவில்லை. அது இப்புதினத்தில் நிறைவேறியிருக்கிறது.' என்று நண்பர் ஞானசேகர் சொன்னார். நானும் அதையே உணர்ந்தேன்.

7. வரலாற்று நிகழ்வுகள் எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு பிணைந்திருப்பது இப்புதினத்தின் பலம்.

8. ஆசிரியர் தமிழ்மகனின் வலைத்தளம் : http://www.tamilmagan.in/

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Thursday, August 26, 2010

66. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

---------------------------------------------------------------------
புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1995
விலை : ரூ 175
---------------------------------------------------------------------

தொடர்ந்த வாசிப்பினிடையே பல தருணங்களில் நமக்கே கூட இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும். அல்லது எவர் மூலமாவது இதே கேள்விகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கும். 'ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எனக்கு எதைத் தருகிறது? இலக்கிய வாசிப்பின் தேவை என்ன? இலக்கியம் என்கிற கலையின் அவசியம் என்ன? இது வெறும் போழுதுபோக்குதானா? அல்லது அதைத்தாண்டிய ஏதாவது அற்புதம் இதன் மூலம் நிகழ்கிறதா?' இப்படியாக நீளும் கேள்விகளுக்கு இதுதான் பதில் என்று சொல்லிவிட முடிவதில்லை. இதே போல இலக்கியம் தொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட பல கேள்விகளுக்கு, தான் பதிலாக உணர்ந்தவற்றை அரங்கில் வைக்கிறார் ஜெயமோகன்.

இப்புத்தகத்துக்குள் போவதற்கு முன்பாக நாம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. நமக்கும் இலக்கியம் குறித்த சிற்றறிவேனும் இருக்கிறது. இலக்கியப்புரிதல் நமக்கும் வசப்படக்கூடிய ஒன்றுதான். அறிமுகம் என்றவுடனே, ஏதோ நமக்குச் சற்றும் தொடர்பற்ற ஒரு புதிய செய்தியை விளக்கப்போகிறார் என்று எண்ணிவிடவேண்டாம். இது முற்றிலுமாக, நீண்ட காலம் ஆழ்ந்த வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட - வாசிப்புக்காக வெகுவாக உழைத்த ஒரு வாசகனும், செறிவுள்ள எழுத்தைப் படைக்கும் திறன் கொண்ட - எழுத்தைத் தன் எண்ணத்தின் முழு வெளிப்பாடாக்கும் எழுத்தாளுமை கொண்ட ஒரு படைப்பாளியுமான ஒரு மனிதன், தன் அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டவற்றை, தொடக்கநிலையில் இருப்பவர்களுக்குக் கடத்தும் ஒரு சீரிய முயற்சி என்றுகொள்ளலாம்.



நீங்கள் எந்த வயதில் வாசிக்கத் தொடங்கினீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் என்ன சொல்லத் தோன்றும்? எப்பொழுது ஒரு மொழியின் எழுத்துகள் நம் அறிவுக்கு அறிமுகமாகின்றனவோ அப்போதே வாசிப்பைத் தொடங்கிவிடுகிறோம் அல்லவா? பேச்சு வழக்கில் ஏற்கனவே நமக்கு அறிமுகமாகிவிட்ட மொழியை எழுத்து மூலம் அறிந்துகொள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பின் அதன் மூலம் வேறு பல செய்திகளை அறிந்துகொள்ளத் தொடங்குகிறோம். இது இன்றைய சூழ்நிலையில் பள்ளிகளில், பாடத்திட்டங்களின் மூலமே சாத்தியமாகிறது. அதைத் தொடர்ந்து பாடமல்லாத எழுத்துகளைத் தேடி வாசிப்பு விரியும் வாய்ப்பு ஒரு சிறு சதவீத பேர்களுக்கே வாய்க்கிறது. பலருக்கு அதில் ஆர்வமிருப்பதில்லை என்பதும் இன்னொரு யதார்த்தம். அந்த வாசிப்பு எனக்குப் 'படக்கதைகள்' என்பதாகத் தொடங்கியது. நிறைய பேருக்கு அப்படியே தொடங்கியிருக்கும் என்பதை ஊகிக்கவும் முடியும். ராணி காமிக்ஸும், பூந்தளிரும், அம்புலி மாமாவும், கோகுலமும் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். படக்கதையைத் தொடர்ந்த சிறுவர் கதைகளுக்குள் என்னை இட்டுச் சென்றவை கோகுலமும், தினசரிகளில் வாராந்தரி இணைப்பாக வரும் சிறுவர் இதழ்களும்தாம். இப்படித் தொடங்கிய வாசிப்பு, இதழ்களல்லாத தனிப்புத்தகங்கள் வாசிப்பாகத் தொடர்ந்து, இராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வளர்ந்து, பின் சுஜாதா, வைரமுத்து என்று பல்வேறு தளங்களில் நீண்டு இன்னும் தீராத தேடல்களோடு புதிது புதிதாக எதையாவது நாடிச் சென்றவண்ணமே இருக்கிறது.

இந்த வாசிப்பின் படிநிலைகளைத் தான் முதலில் விளக்க வருகிறார் ஜெயமோகன். குழந்தையிலக்கியம், சாகசக்கதைகள், மெல்லுணர்ச்சிக்கதைகள், குற்றக்கதைகள், இலட்சியவாத எழுத்துகள், என்கிற பல படிகளைத் தாண்டியே ஒருவன் தீவிர இலக்கியத்துக்குள் நுழைகிறான் என்பது ஜெயமோகனின் கோட்பாடாக இருக்கிறது. இதை ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளவும் முடியும். சிலர் ஏதேனும் ஒரு படியில் தேங்கிவிடுவதும் உண்டு.

இலக்கியத்தை எதிர்கொள்வதைப்பற்றியும் விவரிக்கிறார். எழுத்தாளர்களும், கவிஞர்களும் அடிக்கடி 'ஏன் புரிவது போல் எழுத மறுக்கிறீர்கள்' என்ற கேள்வியை எதிர்கொள்ள நேர்கிறது. இந்தக் கேள்வியை இவர் அணுகும் விதம் வித்தியாசமாகவே தோன்றுகிறது. வாசிப்பிலும் சில படிநிலைகளை வாசகன் கடக்க வேண்டியிருக்கிறது. எப்படி ஒரு மாணவன் ஒவ்வொரு வகுப்பாகப் பள்ளிப்படிப்பைக் கடக்க வேண்டியிருக்கிறதோ அதே போன்று இது நிகழ்கிறது. எப்படி ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன், பத்தாம் வகுப்புப் புத்தகம் புரியவில்லை என்பதில் நியாயம் இல்லையோ, அதே போல ஒரு படைப்பு புரியவில்லை என்று ஒரு வாசகன் சொல்வதிலும் இல்லை. படைப்பு புரிதலுக்காகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் கட்டாயம் ஒரு வாசகனுக்குள்ளது.



வாசிப்புக்காக உழைக்க வேண்டும் என்கிறார் ஜெயமோகன். எழுதுவதற்கு படைப்பாளி செய்யும் உழைப்புக்கு இணையான உழைப்பு வாசிப்புக்கும் தேவைப்படுகிறது என்பது எத்தனை வியப்புக்குரிய செய்தி! இப்புத்தகத்தில் முழுவதுமாக வலியுறுத்தப்படும் செய்தியாக நான் இதைப்பார்க்கிறேன்.

ஓர் அற்புதமான இலக்கியம் எப்படி நிகழ்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து சொல்லுகிறார். ஒரு படைப்பாளி ஒரு படைப்பின் ஒரு பரிமாணத்தையே பார்க்கிறான். அதன் எஞ்சிய எத்தனையோ பரிமாணங்களை வாசகன் உணர்கிறான் என்கிறார். ஆழ்மனத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவின் அமைப்பை விளக்குகிறார். படிமங்களின் தோற்றமும், அதன் பல்வேறு வடிவங்களும், அது பரிமாறப்படும் விதங்களையும் விவரிக்கிறார்.

செவ்வியல் இலக்கியம், நாட்டார் இலக்கியம், இலக்கிய அரசியல் என்று தொடர்கிற நூலின் மிக சுவாரசியமான பகுதி 'இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்'. இலக்கிய வட்டாரத்தில் உலவுபவர்களிடம் மிகச் சாதாரணமாக இருக்கக்கூடிய போலியான குணங்களைப் பற்றிய பட்டியலிது. எழுத்துலகில் புதிதாக நுழைபவர்களை எளிதாகக் கவர்ந்துவிடக்கூடிய, எளிதாக ஆட்கொள்ளக்கூடிய போலி பாவனைகளைப் பற்றிய பதிவு, அவை தவிர்க்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவசியப்படுகிறதென்கிறார் ஆசிரியர்.

1. புரியாத படைப்பை எப்படி எதிர்கொள்வது?
2. இலக்கியம் வாழ்க்கையைப் பதிவு செய்வதுதானே?
3. இலக்கியத்தில் உள்ள சிந்தனைகள் முக்கியமா அல்லவா?
4. இலக்கியச் சண்டைகளினால் என்ன பயன்? பலசமயம் இவை வெற்றுச் சண்டைகளாக உள்ளனவே?
5. இலக்கிய விமரிசனம் என்பது தேவையா? அது இல்லாமலேயே இலக்கியத்தை வாசிக்க முடியாதா?
6. உலக இலக்கியம் என்றால் என்ன? உலகத்தரத்துக்கு நம்மிடம் படைப்புகள் உண்டா?
7. அதிகமாகப் படித்தால் சிறப்பாக எழுதமுடியாது என்பது உண்மையா?
8. நம்முடைய படைப்புகள் ஏன் உலக அளவில் புகழ்பெறவில்லை?
9. இலக்கியம் சாதி இன மத அடையாளம் கொண்ட ஒன்றுதானே?
10. இன்றுள்ள புதுவகை இலக்கியம் முன்புள்ள இலக்கியங்களைக் காலாவதியாக்கிவிடுமா?
11. குறைவாக எழுதப்பட்டால்தான் நல்ல இலக்கியமா?
12. சிற்றிதழ்களில் மட்டும்தான் நல்ல இலக்கியம் வர முடியுமா?

மேலுள்ள கேள்விகளைத் தானே கேட்டுக்கொண்டு, தன் அனுபவத்தின் அடிப்படையில் பதிலும் தருகிறார் ஆசிரியர். இந்தக் கேள்விகளில் பல நம்மிடத்திலும் இருக்கக்கூடும். அவற்றுக்கான பதில் தேடும் ஒரு செயலில் இவரது பதில்களை ஒரு தொடக்கப்புள்ளியாக நாம் அமைத்துக்கொள்ளலாம்.

நூலின் பின்பாதி நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றையும், அதன் வளர்ச்சிக் காலகட்டங்களையும் தலைமுறை வாரியாக விவரிக்கிறது; நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக பாரதியை நிறுத்துகிறது; அவரின் பங்களிப்பையும் அவரைத் தொடர்ந்து தமிழிலக்கியத்தின் போக்கையும், அது இயங்கிய தளங்களையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய படைப்பாளிகளையும், ஒவ்வொரு தலைமுறையிலும் இலக்கியத்தின் ஆதாரமாக விளங்கிய கூறுகளையும், இலக்கியம் எதை நோக்கிப் பயணித்தது என்பதையும் ஒரு வாசகன் மற்றும் விமரிசகனின் பார்வையில் முன்வைக்கிறது.

தமிழிலக்கிய உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சும் பல ஆதர்சங்களின் பிம்பத்தை உடைக்கவில்லையென்றாலும், அதன் அடித்தளத்தையாவது அசைத்துவிடும் வல்லமையுடையனவாகவிருக்கின்றன இக்கட்டுரைகள்.

இந்த வரலாற்றுக் கட்டுரைகள், இறுதிப்பகுதிகளில் நான் மேற்சொன்ன செய்திகளைப் பற்றிய சிறு குறிப்புகளாக மாறியிருந்தது ஏமாற்றத்தை உருவாக்கியது; இப்பகுதிகள் அவசரகதியில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

வரலாறு, பின் இலக்கியக் குழுக்கள் மற்றும் அமைப்புகளின் மீது கவனம் செலுத்துகிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம், மீயதார்த்தவாதம் என்று அழகியல் இலக்கியம் சார்ந்தகூறுகளைத் தொடக்க நிலை வாசகனுக்கு விளக்கும் கட்டுரைகள் நிச்சயம் பயன்படும்.

தீவிர இலக்கியத்துக்கு சிற்றிதழ்களே தீனி போடுகின்றன என்பது யதார்த்தம். இன்று என்றில்லாமல், தீவிர இலக்கியத்துக்கான தேடல் தொடங்கிய காலம் முதலே இருக்கும் நிலைதான் இது. சிற்றிதழ் என்ற அமைப்பே பிரபல பத்திரிகைகளால் தீவிர இலக்கியம் புறக்கணிக்கப்பட்டு, பொழுதுபோக்கு வணிகஎழுத்து முன்னிறுத்தப்பட்டதன் காரணமாகத் தோன்றியதே! முதல் சிற்றிதழ் சி.சு.செல்லப்பாவால் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அவை தமிழிலக்கியத்துக்கு அளித்துவரும் பங்களிப்பு நன்றிக்குரியதாகவே கொள்ளப்படவேண்டும். ஜெயமோகன், சிற்றிதழ்களின் இப்பங்களிப்பை தேவையான தகவல்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நவீனத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய சாதனையாகச் சிறுகதைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சொல்லலாம். வணிக எழுத்தும், தீவிர எழுத்தும் சேர்ந்தே இவ்வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. கவிதைகள் வடிவத்திலும், பாடு பொருள்களின் தன்மையிலும் பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு இன்னும் வளர்ந்தவண்ணமுள்ளன. இது போக, புதினங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளும் வாசகனின் வாசிப்பு தாகத்தைத் தணிக்கத் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலும் அந்த வரிசையிலேயே சேரும்.

எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்கவேண்டும் என்ற தெளிவு தேவைப்படும் வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆசிரியரின் மீதுள்ள இலக்கிய அரசியலைப் புறந்தள்ளிவிட்டு இதைப் படிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.

பின் குறிப்பு :

இலக்கியக் கலைச்சொற்களையும், தமிழிலக்கியத்தில் தானறிந்த சிறந்த சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் குறித்த தன் சிபாரிசையும் பின்னிணைப்பில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Wednesday, July 07, 2010

65. A Fine Balance

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
- வள்ளுவம்

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாருமே
அனாதையில்லை!
- ரா.பார்த்திபன்

---------------------------------------------------------
புத்தகம் : A Fine Balance (புதினம்)
ஆசிரியர் : ரோஹின்டன் மிஸ்ட்ரி (Rohinton Mistry)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : McClelland and Stewart (Thorndile Press in large font)
முதற்பதிப்பு : 1995
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 948 (தோராயமாக 36 வரிகள் / பக்கம்)
---------------------------------------------------------




அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அதிகாரவர்க்கத்தவர்களால் ஆடப்படும் விளையாட்டுகள். இப்படி நினைத்துக் கொண்டு தனக்கும் அவற்றிற்கும் சம்மந்தமே இல்லாததுபோல் வாங்கின பணத்திற்கும் சாப்பிட்ட பிரியாணிக்கும் நன்றியுணர்வுடன் யாருக்கோ ஓட்டுப்போடும் சாமானியன். சில சமயங்களில் அரசாங்கம் எடுக்கும் சில தவறான முடிவுகள் சில தவறான கைகளுக்குப் போகும்போது, அரசாங்கத்தில் தானும் ஓர் அங்கமென்றுகூடத் தெரியாமல் வாழ்ந்துவரும் அப்பாவிகள் பலர் அடையாளம் தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையை ஆணித்தரமாகப் பதிவுசெய்யும் புத்தகம். A Fine Balance.

குலத்தொழிலை விட்டுவிட்டு வேறுதொழில் செய்யப்போய், தங்கள் கிராமத்தில் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தில் இருந்து தப்பித்து, தலைமறைந்து, என்றாவது ஒருநாள் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு மாநகரத்திற்குள் புகும் இரு ஆண்கள். தகப்பன் தொழில் நலிந்துவரும் காலத்தில், அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தன் தாய்மண் அழிந்துவரும் நிலையில், பணம் கொடுக்கும் வாய்ப்புள்ள ஏதோவொரு படிப்பைக் கற்கும் நோக்குடன் அதே நகருக்குள் வருகிறான் இன்னொரு மலைவாழ் ஆண். அண்ணன் குடும்பம் மட்டுமே ஒரே சொந்தமெனக் கொண்ட ஒரு கைம்பெண், சொந்தக் காலில் நிற்கும் வைராக்கியத்தில் தனியே வாழ்ந்து வருகிறாள். அந்த மூன்று ஆண்களும் இவளின் வீட்டில், வெளிமனிதர்களுக்குத் தெரியாமல் வாழ்வதுதான் பின்னட்டை கதைச்சுருக்கம்.

இந்த நால்வரும் ஒரே வீட்டிற்குள் ஏன் தத்தம் அடையாளங்களை மறைத்துக் கொண்டு வாழ வேண்டும்? அந்த மூன்று ஆண்களும் வெளிமனிதர்களுக்கு ஏன் தெரியப்படுத்தப்படவில்லை? அந்நால்வரின் வாழ்க்கைகளும் அவ்வீட்டிற்கு வெளியே எப்படி இருந்ததன? அவ்வீட்டைவிட்டு வெளியேறியபின் அவர்களின் உறவு என்ன ஆனது? தத்தம் நோக்கங்களை அவர்கள் வென்றார்களா இல்லையா? இக்கதை சொல்வதற்கு ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் களம்தான், நான் இப்புத்தகத்தைப் படிக்கக் காரணம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352 - அவரநிலைப் பிரகடனம் - Emergency.

352 காலத்தில் அதிகாரம் தவறாக உபயோகிக்கப்பட்டதை இந்த நால்வர் வசிக்கும் ஒரு வீடு, ஒரு சேரி (slum) என்ற இரண்டு இடங்களிலுள்ள மாந்தர்களை வைத்துக் கதை சொல்கிறார் ஆசிரியர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைத் திட்டம், சேரி ஒழிப்புத் திட்டம், எதிர்ப்பாளர்களையும், மாணவ - யூனியன் தலைவர்களையும் அரசியல் கைதிகளாக்கியது, எந்தக் கேள்வியும் முன்னறிவிப்பும் இல்லாமல் யாரையும் கைதுசெய்வது, காணாமல் போனவர்களும், சாலையோரம் வாழ்க்கையைத் தொலைத்துப் போனவர்களும் நகர்த்திப் போகும் கதைக்களம்.

மருத்துவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கெடுவை (quota) முடிப்பதற்காக வயது, பாலினம், உடல்நிலை ஏதும் பாராமல் கண்மூடித்தனமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயப்படுத்தி செய்தது ஒருபுறம்; அதற்கு ஆட்கள் பிடித்துத்தந்து கமிஷன் பெற்றவர்கள்; தனக்கு வேண்டப்படதாவர்களைச் சிகிச்சைக்குக் கட்டாயப்படுத்திய அதிகாரமுடையவர்கள்; சிகிச்சை என்ற பெயரில் அதையும் தாண்டி தனது சொந்தப் பகை தீர்த்துக் கொண்டவர்கள்; தவறான சிகிச்சைகளில் உடல் - உயிர் தொலைத்துப் போனவர்கள்; பணம், வானொலி என்று இலவசங்கள் கிடைக்கும் ஆவலில் தானே முன்வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இன்னொரு புறம். Midnight's Children புத்தகத்தில் பாலினம் மாறும் சக்தி படைத்த ஒரு மனிதனுக்கு, 352 காலத்தில் இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். இப்புத்தகத்திலும் கணக்கு காண்பிப்பதற்காக ஒருவனுக்கு இரண்டுமுறை செய்யப்படும்.

கதைமாந்தர்களின் பின்புலமும் எடுத்துக்கொண்ட களமும் தைரியம் + அருமை + பொருத்தம். தாழ்த்தப்பட்ட தொழில்களாக இந்தியாவில் கருதப்படும் தொழில்களில் ஒன்றைச் செய்யும் ஒரு கிராமம். ஜமின்தாரின் மகன்முன் குனிந்து வேலை செய்ய மறுத்த பெண்ணை மொட்டையடித்து நிர்வாணமாக ஊர்வலம்; உரிமைக்குரல் கொடுத்தவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு வாயில் மூத்திரம்; திண்ணியம் போல மலம் தின்ன வைக்கும் நிகழ்ச்சி; கீழ்வெம்மணி போல ஊரையே கொளுத்தும் சம்பவம்; பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி போல ஓட்டுரிமைக்காகப் போராடும் சமுகம்; அழுத்தமான களங்கள். ஒரு தாழ்த்தப்பட்டவளின் வயிற்றுப் பசிக்குக் கொய்யாப்பழம் திருடிய குற்றத்திற்கு உடல்சுகத்தைத் திருடிப்போகும் ஒரு கிளைக்கதை கொஞ்சம் சீரணிக்கக் கடினம்.

மாநகரின் சேரி இன்னொரு களம். சேரிவாழ் மனிதர்களின் சின்னச்சின்ன சந்தோசங்கள், பெருத்த சோகங்கள், கழைக்கூத்தாடி - முடி சேகரிப்பவன் - பிச்சைக்காரன் - தையல்காரன் என்ற அவர்களின் நிரந்தரமற்ற தொழில்கள். புதிதாய்ச் சேரிக்குள் வருபவன் ஒருவனுக்கு அனுபவசாலி ஒருவன், தண்டவாளத்தில் மலம் கழிக்கக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. இரயில்களின் கால அட்டவணை தெரிந்து கொண்டு, தண்டவாளத்தில் எங்கு - எப்படி - எந்த நேரம் உட்கார வேண்டும் என்று வரும் பகுதி நகைச்சுவையாக இருந்தாலும், அடிப்படைக் கழிப்பிட வசதிகள் எல்லாருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை என்பது உண்மை!

புதினத்தில் சிறிது நேரமே வந்து போனாலும் அவினாஷ் என்ற மாணவத் தலைவனும் வாலிமிகி என்ற பிழைத்திருத்துபவரும் மனதில் பதிந்துவிடுகிறார்கள். ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உறவு, இப்புத்தினத்தில் மிகவும் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளில் ஒன்று. இவர்களுக்கிடையே இருக்கும் வெறுப்பிற்குக் காரணம் பாலியல் சம்மந்தப்பட்டதாக இருப்பதும், ஒரு சகோதரி மீது ஆண் காட்டும் வன்செயல்களும் கசப்பான நிஜம். இந்து முஸ்லீம் கலவரங்கள், சீக்கியப் படுகொலைகள் என வரலாற்றின் மற்ற சில அத்தியாயங்களையும் தொட்டுச் செல்லும் இப்புதினத்தின் சில கதைகளின் சாரம், அங்காடித் தெரு - நான் கடவுள் போன்ற படைப்புகளின் மூலம் நமக்கும் சிறிது பரிச்சயப்பட்டிருக்கலாம். திக்கற்ற மக்கள் தங்கள் வாழ்கையை நகர்த்திக் கொண்டுபோக சந்தோசங்களுக்கும் சோகங்களுக்கும் இடையே காட்டும் ஒரு Fine Balance இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் படித்து முடித்த அந்த இரவில் நான் தாமதமாகத் தூங்கினேன். அக்காட்சியாவது:

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மயக்கம் தெளியும்வரை ஓய்வெடுக்கும் அறையது. நீண்ட நேரமாக மயக்கம் தெளியாமல் இருக்கும் தனது பக்கத்தில் உள்ளவனுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் பதறுகிறான் ஒருவன். இருவரின் காற்சட்டையையும் நீக்கி, ஒவ்வொரு இடமாக கட்டுகளின் மேலேயே தொட்டுத் தொட்டு, தனக்கு செய்தது போலவே அவனுக்கும் செய்யப்பட்டிருக்கிறதா என்று சோதிக்கிறான்.......

போதும். ஆணுறுப்பை நீக்கும் புத்தகம் ஒன்றுடன் அடுத்து சந்திக்கிறேன்.


அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1) முன்னாள் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஒன்பது குழந்தைகள். அவசரநிலைப் பிரகடன காலத்தில் செய்யப்பட்ட கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை எதிர்த்துதான் அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக சொல்வார். அவரின் மூத்த மகளின் பெயர் மிசா (MISA)!

2) ஜூலை 2, 2010 அன்று கேரள சட்டசபை நாள் முழுவதும் முடக்கம்.

3) டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பம்பாய் நகரில் நலிவடைத்து வந்த காலத்தில் கதை பயணிப்பதால், அதன் சாரத்தைக் கதையோட்டம் கொஞ்சம் தொட்டுச் சென்றது. ஒரு புதிய திரைப்படம் இப்பிரச்சனையை மையப்படுத்தி வெளிவந்திருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. நானும் மொழிபெயர்ப்பாளன் ஒருவனுடன் சென்று பார்த்தேன்; இரண்டு வித்தியாசமான படுக்கையறைக் காட்சிகள் தவிர வேறொன்றுமில்லை. இன்றைய பிரச்சினைகள் நாளைய வியாபாரங்கள்!

4) ஆடும்கூத்து தவிர வேறு எந்தத் தமிழ்த்திரைப்படத்திலும், அவசரநிலைப் பிரகடனம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

The lives of the poor were rich in symbols.

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/