Wednesday, November 02, 2011

77. ஏழாம் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இம்மைக்குச் செய்வது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வாணிகன் ஆய் அல்லன்
- மோசிகீரனார்


No tips taken here; just because a man has to make his living waiting on table is no reason to insult him by offering him a tip.
- ஓர் உணவக வாயில் செய்திப்பலகை (Ten days that shook the world - John Reed)

-------------------------------------------------------------
புத்தகம் : ஏழாம் உலகம் (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜெயமோகன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : ஏப்ரல் 2010
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 274 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------------

'இப்பத்தான் ஏழாம் உலகமே படிக்கிறியா?' என்று உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. எங்கள் தலைமுறைக்கு இலக்கியம் என்று படிப்பிக்கப்படுபவை அப்படி. நான் கடவுள் என்று பாலா சார் படம் எடுத்திராவிட்டால் இப்படியொரு புதினம் எனக்கு அறிமுகமாகியிருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் புதினத்தைத் தழுவித்தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது பலருக்குப் பரிச்சயம் என்றாலும் புத்தகத்தைப் பற்றி முதலில் பேசிவிட்டு பிறகு திரைப்படத்திற்கும் போவோம்.



பிச்சைக்காரர்களை வாங்கும் - விற்கும் - உற்பத்தியாக்கும் தொழில் நடத்தும் ஒருவனின் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் நடக்கும் சம்பவங்களே இப்புதினம். மலையாளம் கலந்த தமிழ்பேசும் கதைமாந்தர்கள். நமது கருணை - இரக்க குணங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவும், சுகமான மறுபிறப்பிற்குச் சேர்த்துவைக்கும் புண்ணியமாகவும், சபிக்கப்பட்ட பிறப்புகளாகவும் மட்டுமே நமக்குத் தெரியும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை மிக அருகில்போய் புதினப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். பிறவியிலேயே ஊனமாகவும் விகாரமாகவும் பிறந்தவர்கள் அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்தான் கதையின் முக்கிய மாந்தர்கள். அவர்களை வைத்துக் காசுபண்ணும் முதலாளியைச் சுற்றித்தான் மொத்த புதினமும் பின்னப்பட்டிருக்கிறது. முதலாளியின் குடும்பமும் பிச்சைக்காரர்களை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் சிலரும்கூட கதைமாந்தர்கள்.

தொழிலாளி என்று நம்பவைத்து ஓர் அடிமையைக் கட்டுப்படுத்தலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால் பிச்சைக்காரர்களுக்கு அவர்களின் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர்கூட‌ உருப்படி. உருப்படிகளைத் தன் விருப்பப்படி வாங்கி விற்று ஊனப்படுத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளையும் தரகர்களையும் அறிமுகப்படுத்தி மனத்தைக் கனப்படுத்துகிறது புத்தகம். திக்கற்ற உருப்படிகள் தங்கள் இயலாமையைத் தங்களுக்குள் நக்கலாகப் பேசிக்கொள்ளும் உரையாடல்களில் மறைத்துக் கொள்வதும், உருப்படிகள் தங்களுக்குள் ஒருகுடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்வதும், சிலர் விற்கப்படும்போது மற்றவர்கள் கலங்குவதும், இலைச்சோறு சாப்பிட முதலாளியின் வீட்டு விசேசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உருப்படிகளும், முதலாளி தன் தொழிலைக் கடவுளிடம் நியாயப்படுத்துவதும், தன் தொழில் மறைத்து வாழும் முதலாளியின் சொந்தக் குடும்ப வாழ்க்கையும் நாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திராத எதார்த்தங்கள்.

ஆட்சியாளர்களை உருப்படிகள் நேரடியாகவே கெட்டவார்த்தைகளில் திட்டுவதும், ஹாலிவுட் அர்னால்ட் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல நல்ல உதாரணங்கள் உருப்படிகளின் உரையாடல்களில் இயல்பாக‌ வருவதும், கம்யூனிசம் முதல் சாதிச்சங்கங்கள்வரை உருப்படிகள் பேசும் அரசியலும், கருவறைக்குள்ளேயே மூத்திரம்போகும் பூசாரிகள் அதை நியாயப்படுத்துவதும் போன்று பல இடங்களில் தனது உரையாடல் நடையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர். அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரின் பெயர் போடப்படும்போது வரும் அதே நக்கல்.

கதை நடக்கும் காலம் எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படாமல், மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை. பாதிப்புத்தகம் தாண்டிய பிறகுதான் என்னால் காலம் கண்டுபிடிக்க முடிந்தது. ஒன்பது வருடங்களாக கோயில் வாசலில் பிச்சையெடுத்துவரும் ஒருத்தியை, அக்கோயில் பூசாரி வெற்றுடம்பாக பார்க்க கோரிக்கை விடுப்பதற்குச் சற்றுமுன் தனது புத்தகத்தின் பெயர்க்காரணத்தைப் பூசாரி மூலமே சொல்லியிருப்பது ஜெயமோகன் அவர்களுக்கு நானே சொல்லிக்கொண்ட பல 'சூப்பர்'களில் ஒன்று. போத்திவேலுப் பண்டாரமும், பெற்ற பிள்ளைகளின் கணக்கு தெரியாத முத்தம்மையும், கைகால்கள் இல்லாத மாங்காண்டி சாமியும், அகமதுகுட்டியும் மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள்.

சில நச் வசனங்கள் உங்களின் ரசிப்பிற்கும்:

"அவனுக்கு அண்ணன், பெண்ணு கெட்டல்ல இல்லியா? ஒரு ஆறுமாசம் அவன் சோலி பாக்கட்டுன்னு இங்க வந்திருப்பான். இங்க பிடிச்சு சாமியாக்கிபிட்டானுக..."

"ஓட்டு உள்ளவன் செத்தாத்தான் அது கொலக் கேசு. மத்ததெல்லாம் முனிசிப்பாலிட்டி கேசு. அதுதான் இந்தியன் பீனல்கோடு சட்டம்"

"மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?"

புத்தகத்தின் கடைசி மூன்று பக்கங்களுக்கு இருக்கும் வட்டார வழக்கு அகரமுதலி இல்லாவிட்டால், எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. வெப்ராளம் எரப்பாளி கச்சவடம் என்று பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து புத்தியில் ஏறிவிட்டன. தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களின் ஒருபுதினம் உட்பட பல புத்தகங்களுக்கு இந்த அகரமுதலி பயனுள்ளதாக உள்ளது.

பாலாவின் திரைப்படம் புதினத்தைவிட வீரியம் குறைவென்று பெரும்பாலான இணையப்பதிவுகள் சொல்வதால் அதை நான் மறுப்பதற்கான காரணங்கள்:
1. பாலாவின் படத்தின் பெயர் 'நான் கடவுள்'. ஓர் அகோரிதான் கதைநாயகன். ஏழாம் உலகப் பாத்திரங்கள் பாலாவின் க‌தைக்க‌ள‌ம் ம‌ட்டுமே.
2. இந்த வீரியத்திற்கே பலபேர் இப்படத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
3. காகிதமும் திரையும் வெவ்வேறு தளங்கள். அகமதுகுட்டி மீனாட்சியம்மை போன்ற பாத்திரங்கள் திரையில் காட்ட அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!
4. முத்தம்மை முடிவில்லாமல் ஏழாம் உலகம் முழுமையடைவதில்லை என்பது படித்தவர்களுக்குத் தெரியும். அக்காட்சியை நம்மூர் திரையில் வைக்கமுடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சமகாலத்தையும் ஒதுக்கப்படும் சக மனிதனையும் ஆவணப்படுத்துவதுதான் புதினங்களின் மிகப்பெரிய பணி என்று நம்புபவன் நான். 'நுனியளவு செல்' என்ற மகாகவியின் வார்த்தைகளை இப்புத்தகத்தில் செயலாகப் பார்த்தேன். அரசியல் ஆன்மீகம் கருணை இரக்கம் என்ற நமது சித்தாந்தங்களுக்குள் அடைபடாம‌ல் ஆசிரியர் சொல்வதுபோல் Being and nothingness என்றொரு சமூகம் நம்முடனேயே இருந்து பாதாளலோக‌க் கொடுமைகளில் அமுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களையும் கவனிப்போம்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, September 08, 2011

76. TEA - THE DRINK THAT CHANGED THE WORLD

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

The greatest service which can be rendered to any country is to add a useful plant to its custom.
- Thomas Jefferson

------------------------------------------------
புத்தகம் : Tea - The drink that changed the world
ஆசிரியர் : John Griffiths
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : André Deutsch
முதற்பதிப்பு : 2007
விலை : 395 ரூபாய்
பக்கங்கள் : 373 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------

டீ என்றால் நமக்கு என்னென்ன நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும்? சாதிக் கொடுமைகளுக்கு அடையாளமாக பள்ளிப்பாடங்களில் வரும் இரட்டைத் தம்ளர் முறை. பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party). தேநீர் வாங்கித்தந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவதாகச் சிலர் சொல்லும் வீரவசனங்கள். தேயிலை அறிமுகமான காலத்தில் வடிகட்டியபின் சக்கையைச் சாப்பிட்ட ஏதோவொரு நாட்டுமக்கள், என்று சிறுவயதில் எங்கோபடித்த விசயம். வாழ்நாளில் டீயே குடிக்காமல் இருந்த‌ ஒரு பிரதமர். இன்னும் கொஞ்சநேரம் யோசித்தால் அதிகபட்சமாக என்னால் இன்னும் இரண்டு விச‌யங்கள்தான் சொல்லியிருக்க முடியும். ஆனால் உலகத்தையே மாற்றியமைத்த பானமென்று கம்பீரமாக தேநீரை அடையாளப்படுத்தி நின்றுகொண்டிருந்தது இப்புத்தகம். உப்பைப்பற்றிய ஒரு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். 19 கட்டுரைகளின் தொகுப்பு. அட்டைப்படத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து.

தேயிலை என்ற கண்டுபிடிப்பிற்குச் சொந்தமானவர்கள் யார் எனவும் அதைத் தனது காலனிகளில் விளைவிக்க பிரிட்டிஷார்கள் மேற்கொண்ட முயற்சிகளும்தான் முதலிரண்டு கட்டுரைக‌ள். தேயிலையை இங்கிலாந்தில் பயிர்செய்ய வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) 20 முறை முயற்சித்து தோற்றுப்போகிறார். மின்சார பல்புக்குள் வைப்பதற்குத் தகுந்த இழையைத் தேடி உலகின் பல இடங்களுக்கு ஆட்களை அனுப்பிய ஆல்வா தாமஸ் எடிசன் போல், தேயிலைச் செடியை உயிருடன் கொண்டுவர தனது ஆட்களை அனுப்புகிறார் கார்ல் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஒருகரையில் சேகரிக்கப்பட்ட தேயிலை மறுகரை சேரவில்லை. கப்பல் புறப்பட்டபோது வழியனுப்புதலுக்காக வெடிக்கப்பட்ட குண்டில் தேயிலை பொசுங்கிப்போகிறது. இல்லை, வழியில் கப்பலில் எலி தின்றுவிடுகிறது. நம்பிக்கையுடன் அவ்வளவுதூரம் வந்துவிட்டு, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கடந்தவுடன் எதிர்பாராத புய‌ற்காற்றில் பறந்துபோகிறது. தனது தோட்டத்தில் பயிரிடும் ஆசை நிறைவேறாமலேயே இறந்துபோகிறார் கார்ல் லின்னேயஸ்.



தப்பித்தவறி தனக்குக் கிடைத்த செடிகளில் எது உண்மையான‌ தேயிலை எனத் தெரியாமல் குழம்பிப்போகிறார் கார்ல் லின்னேயஸ். தேயிலை என்பது ஒரு தனிப்பட்ட தாவரம்தானா என்ற கேள்விக்கு விடை 180 ஆண்டுகள் கழித்துத்தான் தாவரவியலாளர்களுக்குக் கிடைக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதிவரை அயல்மண்ணில் விளைவிக்கப்பட முடியாமல் சீனாவிலேயே தங்கிவிடுகிறது தேயிலை. நமெக்கெல்லாம் மிகவும் பரிச்சயப்பட்ட டீ (tea), சாயா / சாய் / சா (cha) என்ற வார்த்தைகளின் பெயர்க்காரணமும், கிரீன் டீ (green tea) மற்றும் பிளாக் டீ (black tea)க்களுக்கான வித்தியாசங்களையும் அருமையான தகவல்களாகத் தந்துபோகின்றன இவ்விரண்டு கட்டுரைகள்.

மூன்றாம் கட்டுரையில் இருந்து சீரியஸாகிறது புத்தகம். தேநீரின் தீமைகளாகவும் அக்காலத்தில் அதைப்பற்றிய நிலவிய அறியாமையையும் அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது அக்கட்டுரை. ஒருகாலக்கட்டத்தில் தேநீரின் மருத்துவக் குணங்களை ஆய்வுசெய்ய பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி (Louis XIV) உத்தரவிடும் அளவிற்குத் தேயிலை பயங்காட்டியிருக்கிறது. காஃபிக்கும் தேநீருக்கும் இடையில் இருக்கும் நன்மை தீமைகளை அறிவியல் ரீதியாகப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.

அடுத்த இரண்டு கட்டுரைகளும் எனக்கும் மிகவும் பிடித்த வரலாற்றுச் சம்பவங்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே அமெரிக்காவில் அழித்து, அமெரிக்கர்களின் தேநீர் பழக்கத்தையே கிட்டத்தட்ட மறக்கடித்துப்போன பாஸ்டன் தேநீர் விருந்தை இருமுறை படித்தேன். உலகின் தலைசிறந்த போராட்டங்களாக டைம் (Time) இதழ் தேர்ந்தெடுத்திருந்த நிகழ்வுகளில் 10வது இடம் பாஸ்டன் தேநீர் விருந்து. தண்டியில் உப்புக்காய்ச்சியபின் தனது உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை மோகன்தாஸ் காந்தி இந்நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டதாக வரலாற்றுச் செய்திகள் உண்டு. தண்டிப்போராட்டம் அதே டைம் பட்டியலில் பத்துக்குள் இருக்கிறது.

வீட்டைக் குத்தகைக்குவிடலாம், காட்டைக் குத்தகைக்கு விடலாம், ஒரு நாட்டையே குத்தகைக்கு விடலாமா? விடலாம் என்கிறது விநோத வரலாறு. அபினிப்போரில் (Opium war) பிரிட்டிஷாரிடம் தோற்றுப்போன சீனா, தனது நாட்டின் ஒருபகுதியான ஹாங்காங்கை 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுகிறது. இந்த விநோதத்தின் மூலத்தைத் தேடினால், அபினி வெள்ளி என்று இதுவும் தேயிலையில்தான் போய்முடிகிறது. அபினிக்கென்று தனித்துறை இந்திய ஆட்சிப்பணியில் 1930ல் இருந்திருக்கிறது.

தேயிலைத் தோட்ட முதலாளிகள், கூலிகள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். முதலாளிகள் கூலிகளை நாடுவிட்டுநாடு கொண்டுவருவதில் பட்ட இன்னல்கள், கூலிகளை நிர்வகிக்கும் கங்கானிகள், கூலிகள் தங்கள் உரிமைகளுக்காகத் தோற்றுவித்த தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். 1920களில் தமிழகத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுத்து, சுதந்திரத்திற்குப்பின் வாழ்வுரிமையையும் மறுத்த இலங்கையின் மாபெரும் வரலாற்றுக் குற்றங்களையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.

1600ன் கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகாதிபத்தியத்தின் பின்னாலும், இரண்டு வருடங்களுக்குப் பின் போட்டிக்காக‌ தோன்றிய டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பின்னாலும் தேயிலை இருந்திருக்கிறது. தேயிலையைப் பானமாக உபயோகிக்காமல் ஊறுகாயாக உபயோகித்திருக்கிறார்கள் பர்மியர்க‌ளும் சில தென்கிழக்கு ஆசியர்களும். மற்றபடி தேயிலைத்தூள் தயாரிப்பு முறைகள் பற்றியும், நிறம் சுவை திடம் பற்றியும், அதன்மேல் வரலாறு விதித்திருந்த வரிகள் பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. லிப்டன், டைபோ (Typhoo), புரூக் பான்ட் (Brooke Bond) என்ற‌ பிரபல டீ பிராண்டுகளின் ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் தொட்டுச் செல்கிறது புத்தகம். தனது முதல் டீக்கடையின் விளம்பரத்திற்காக பன்றி ஒன்றுடன் வீதியில் ஊர்வலம் போயிருக்கிறார் டாம்மி லிப்டன் (Tommy Lipton). குரங்கைவிட்டு அறுவடை செய்ததென்று கவர்ச்சி விளம்பரமெல்லாம் சிலபேர் செய்திருக்கிறார்கள்.

ஆசிரியரின் தந்தை பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்தாக யூகிக்கமுடிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த‌ ஆங்கில அதிகாரிகளாலும், தேயிலை சம்மந்த‌ப்பட்ட பிரிட்டிஷ்-சீன-டச்சுக்காரர்களாலும் எழுதப்பட்ட நேரடிக் குறிப்புகளே பெரும்பாலான இடங்களில் மேற்கோளாகப் புத்தகத்தில் வருகின்றன. இவை செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகக்கூடச் சொல்லலாம்.

டீயைப் பற்றி எல்லா விசயங்களையும் இங்கேயே சொல்லிவிட முடியாது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பல நூற்றாண்டுகளை ஒரே நிமிடத்தில் உறிஞ்சிவிட்டதாக ஒருதிருப்தி. 'கொஞ்சம் தேநீர் நிறைய‌ வானம்' புத்தகத்தில் 'ஆளுக்கொரு கோப்பை' கவிதையில் வைரமுத்து சொல்வதுபோல், கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வமான இத்தேநீரின் வரலாற்றிலும்கூட நிறம் சுவை திடமுண்டு!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, August 25, 2011

75. வாடாம‌ல்லி

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ - என்ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ... நானும்
அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய்
செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன்
கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன்
நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே சேர்ந்திருப்பேன்
இரண்டாய்ப் பிறந்ததாலே துண்டுபட்டு நிக்கேனே!
- கூவாகத் திருவிழா ஒப்பாரிப்பாடல்

-------------------------------------------------
புத்தகம் : வாடாம‌ல்லி
ஆசிரிய‌ர் : சு.ச‌முத்திர‌ம்
வெளியீடு : அருவி
முதற்பதிப்பு : ஆக‌ஸ்ட் 2009
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 304 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------
இராமநாதபுர மாவட்டம் பேரையூரில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பிறந்த நூர் முகம்மது, தன் ஆணுடம்பில் இருக்கும் பெண்தன்மையைச் சமுதாயம் ஏற்க மறுத்தபோது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையின் இறுதி ஊர்வலத்திற்குச் செல்பவர்களுடன் கும்பலோடு கும்பலாக இரயிலேறி சென்னைபோய் பம்பாய்போய் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து நூரி என்ற பெண்ணாகி திருமணம் செய்து கணவனை இழந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மூன்றாவது எய்ட்ஸ் நோயாளியாகக் கண்டறியப்பட்டு தற்போது சென்னையில் SIP memorial home நடத்தி சுமார் 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். பால் சுயம்பு அவர்களின் 'திருநங்கைகள் உலகம்' புத்தகத்தில் மனதை மிகவும் பாதித்தவர் நூரி. அப்புத்தகத்தில்தான் நூரி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'வாடாமல்லி' என்ற தொடரை மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதியிருப்பதாகப் படித்தேன். புத்தகமாகவே கிடைத்துவிட்டது!

'அரவாணிகள் பற்றிய தமிழின் முதல் நாவல்' என்று முன்னட்டை சொல்கிறது. சுயம்பு என்ற ஆண், தனது கல்லூரிப் பருவத்தில் பெண்தன்மையை உணரும்போது பெண்களாலேயே அவமானப்படுத்தப்படுவதுடன் ஆரம்பமாகிறது புதினம். கல்லூரி குடும்பம் சமூகம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகி ஒருசமயத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு ஜீவனாக வீட்டைவிட்டு வெளியேறி அவன் சந்திக்கும் திருநங்கைகள் மூலமாக அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள்மேல் சமூகம் திணிக்கும் கொடுமைகளையும் எதிர்கொள்வதுதான் கதைச்சுருக்கம்.

தமிழகத்தின் ஒரு கிராமம், ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் சேரிப்பகுதி, டெல்லி, சில காவல் நிலையங்கள், கூவாகம் என்ற பயணிக்கிறது கதைக்களம். சமையற்காரர்களாகவும் ஒப்பாரிக்கலைஞர்களாகவும் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கில் அதிர்ஷ்டக்காரர்களாக வீட்டு விசேசங்களில் சிறப்பிக்கப்படுவதும், நம்மூரில் பேய்ப்பிடித்திருப்பதாக அடிவாங்குவதுமாக பால்பிறழ்வுகளின் சமூகநிலையை அழகாக விவரிக்கிறது புத்தகம்.

முர்கேவாலி மாதா கதையையும் அரவான் கதையையும் கதை மாந்தர்களே சொல்கிறார்கள். அரவான் கதை பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' புத்த‌க‌த்திலும் உண்டு. ஆசிரியர்கூட ஆசிரியராகவே கதையின் போக்கில் ஒரு வரியில் வந்துபோகிறார். திருநங்கைகளைத் தாசிகள்போலவும் ஆண்களுக்கு அலைவதுபோலவும் சித்தரிக்கும் சில பத்திரிக்கைகள் பற்றியும், அவர்களை அதற்காகவே பயன்படுத்த நினைக்கும் சில காவல்துறை அதிகாரிகள் பற்றியும் தொட்டுச்செல்கிறது புத்தகம்.

தவிர்க்க முடியாதபடி கூவாகம் இப்புத்தகத்திலும் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'தேசாந்திரி' கூவாகத்திருவிழா பற்றி பேசுகிறது. பிரியாபாபு அவர்களின் 'மூன்றாம் பாலின் முகம்' கூவாக லாட்ஜ்களைப் பற்றியும் பேசியது. பிள்ளையார்குப்பம் மஞ்சக்குப்பம் என்று அருகிலுள்ள அரவான்கோவில்களை ஓரங்கட்டிவிட்டு கூவாகம் அகில இந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும் சில திருநங்கைகளுக்கே பிடிக்காத கூவாகம் பற்றி வாடாமல்லி சொல்கிறது.

புத்தகத்தில் இரண்டு இடங்களில் நான் மிகவும் ரசித்த உரையாடல்கள் உங்களின் வாசிப்பிற்கும்.

அரவான் கதையின் முடிவில் வருகிறது முதல் உரையாடல்.
"கிருஷ்ணன் கிடைக்கான் விடு. அவனுக்கென்ன பழையபடியும் ஆணாய் மாறிட்டான்"

ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் உரையாடல்.
"அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க... பக்கத்துல எதையும் வைக்காதீங்க... தூக்குப் போட்டு சாகப் போறவன்மாதிரி முழிக்கான் பாருங்க... அப்புறம்... சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப வெலைக்கு வாங்காதீங்க..."
ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார்.
"கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து... மாத்திச் சொல்றீங்க..."
"ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க..."

சமீபத்திய ஆனந்த விகடன் இதழொன்றில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, நூரி இவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் செய்திக்கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்தபிறகுதான் பால்பிறழ்வுகளில் இருவகையென்று எனக்குத் தெரியும். பெண்மை குறைந்து ஆண்தன்மை மிக்கதைத் திருநம்பி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்மை மிக்கதைத் திருந‌ங்கை என்ற சொல்லாலும் குறிப்பதாகப் படித்தேன். இவர்களை முறையே பேடி அலி என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதாக‌ இப்புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் ஆய்வுரையில் பேராசிரியர் இராம. குருநாதன் குறிப்பிடுகிறார். இதுவரை நான் படித்திருந்த புத்தகங்களில் திருநம்பிகள் பற்றி பார்த்ததாக நினைவில்லை. திருநம்பிகளின் சமுகநிலை திருந‌ங்கைகளைவிட பரிதாபமென அக்கட்டுரை சொன்னதாக நினைவிருக்கிறது.

மேகலை மாதாஜியிடம் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்குப் புரியவேயில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டமிடவும்.
"பூப்பு நீராட சவுக்குக் கம்புல உட்கார்ந்த‌துகூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்".

நூரியாக மாறியபிறகு வாழ்க்கை எப்படி அமைந்தது என்று தெரிந்துகொள்ள எதிர்பார்த்துத்தான் புத்தகம் வாங்கினேன். ஆனால் அதற்கு முந்தைய பகுதிதான் பெரும்பாலும் புதினப்படுத்தப்பட்டிருக்கிறது. சுபமான முடிவை மட்டுமே விரும்பும் தொடர்கதை அல்லது திரைப்பட ரசிகர்களுக்காக எழுதப்பட்டதுபோல் ஒரு சின்ன ஏமாற்றம். நண்பர் கிருஷ்ண பிரபு அவர்கள் பாலபாரதியின் 'அவன்-அது=அவள்' புத்தக விமர்சனத்தில் சொன்னதுபோல வாடாமல்லியின் இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருப்பதும் உண்மையே.

சுயம்புவிற்குப் பேய்விரட்டும் பகுதியும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியும், சென்னையின் சேரி அனுபவமும், கூவாக நிகழ்வுகளும் கதையின் பலம். வாசிக்கும் வேகத்திற்குத் தடைபோடும் எழுத்துப் பிழைகளும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் தலைகாட்டும் ஹீரோயிஸமும், காட்சிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும்படி வந்துபோகும் சில செயற்கைத்தனமான வசனங்களும் புத்தகத்தின் சில குறைகள். அச்சிறுகுறைகளையும் தாண்டி, திருநங்கைக‌ளுக்கான முன்னோடி படைப்பு என்று தனித்து நிற்கிறது வாடாமல்லி.

தமிழில் பால்பிறழ்வுகள் பற்றி நீங்கள் படிக்கவேண்டுமெனில் உங்களின் முதலடியை வாடாமல்லியில் ஆரம்பிக்கலாம்!

அனுபந்தம்:

புதினம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக ஏழாண்டுகளுக்குமுன் நூலகமொன்றில் நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகம் - பாலைப்புறா. எய்ட்ஸ் நோய் கதைக்களம். ஆசிரியர் சு.சமுத்திரம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)