Sunday, July 21, 2013

106. ஆளண்டாப் பட்சி

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆளண்டாப் பட்சி (புதினம்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன் (http://www.perumalmurugan.com/)
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2012
விலை :  195 ரூபாய்
பக்கங்கள் : 247 (தமிழ் எழுத்துகள் போல‌)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
தூரத்து உறவினர் ஒருவரின் திருமணம் எனக்குப் பக்கத்தில் நடந்ததால் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரத்திற்குச் சென்றிருந்தேன். தமிழகத்துத் தென் மாவட்டம் ஒன்றில் பிறந்து, வாலிப வயதில் வசதியான வீட்டை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியேறி, 50 வருடங்களுக்கு மேலாக மராட்டிய மாநிலத்துக் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வரும் முதியவர் ஒருவரைச் சந்தித்தேன். தாய்ப்பூமியை விட்டு வைராக்கியத்துடன் விலகிக் கிடக்கும் அம்மனிதன் தாய்மொழி பேசுபவர்களுடன் பேசவே விரும்பவில்லை. சுத்த சிங்க மராட்டியராக மாறிப் போய் இருந்த அவரிடம், சுத்தத் தமிழில் பேசினேன். எனது பேச்சுத் திறமை அத்தனையும் உபயோகப்படுத்தியும் அந்த 50 வருடத்து இறுக்கம் தளர்ந்து வளையவே இல்லை. தாய்ப்பூமி நினைவுகளை எந்தவொரு நிலையிலும் திரும்பிப் பார்க்க அவர் விரும்பவில்லை. பேச்சினிடையே தாய்மொழியில் ஒரு பழமொழி சொன்னார்: 'வாழ்ந்து கெட்டவனை வழியில் சேர்க்க மாட்டார்கள்; சாதி கெட்டவனைச் சனத்தோடு சேர்க்க மாட்டார்கள்'. துளி கண்ணீர் கூட வர விரும்பாத அவர் கண்களை நோக்கும் திறனற்று பேச்சை முடித்துக் கொண்டேன். கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்!

பிறந்த பூமியில் இருந்து வேரோடு பிடுங்கிக் கொண்டு போய், திரும்பவே விரும்பாத தூரத்தில் கால் ஊன்றிக் கொள்ளும் யாவருக்கும் பின்னாலும் அசை போடக் கூட அனுமதிக்காத மர்மம் இருக்கத்தான் செய்கிறது. வறுமையின் பிடியில் துர்மரணம் கண்டு, புலம் பெயரும் ஒரு குடும்பத்தைப் பற்றி பேசும் பதேர் பாஞ்சாலி பற்றி இதே தளத்தில் பேசி இருக்கிறோம். சொந்த பந்தம் எட்டிப் பார்க்காத தூரதேசமாய், ஒடக்கான் மொட்டிடாத அனாதிக்காடா இருந்தாலும் பரவாயில்லை எனப் புலம் பெயரும் குடும்பங்களுக்குப் பின் வறுமை துர்மரணம் அவமானங்கள் அடக்குமுறைகள் குற்றங்கள் என காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
(http://www.noolulagam.com)

சேலம் ஜில்லா திருச்செங்கோடு தாலுகா காட்டுப்பட்டி மணக்காட்டில் வசிக்கும் ராமசாமி மகன் முத்தண்ணன் குடும்பம் இடம்பெயரும் கதைதான் ஆளண்டாப் பட்சி. ஆள் + அண்டா + பட்சி. உம்மைத்தொகை அல்ல. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நாட்டுப்புறக் கதைகளில் வரும் பிரம்மாண்ட பறவை ஒன்றின், நாமக்கல் வட்டார சொல்வழக்கு. அப்பறவையின் சில பண்புகள் கதைமாந்தர்கள் பலரின் செயல்களுடன் ஒத்திருப்பதால், இப்பெயர் வைத்ததாக முன்னுரையில் சொல்கிறார் ஆசிரியர். சமீபத்தில் நான் மிகவும் ரசித்த தலைப்பு இது.

முத்தண்ணன் பொழங்குகிற சாதி. பொழங்காத சாதியைச் சேர்ந்த குப்பனைக் கூட்டிக் கொண்டு, தன் பூர்வீகச் சொத்தைக் காசாக்கி மடியில் கட்டிக் கொண்டு, மாட்டு வண்டியில் பயணமாகிறார்கள். ஏதாவது ஒரு தூரத்து மண்ணில் சொந்தமாக‌ இடம் வாங்கி, குடும்பத்தையும் கூட்டி வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணிக்கிறார்கள். திக்கற்ற ஏழைக்கிங்கு அந்தச் சாமியை விட்டால் கஷ்டத்தில் கைகொடுக்க யாரிருக்கா? அந்தச் சாமி மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, பிழைக்க இடத்தைச் சாமியே காட்டும் என்று சகுனங்களை எதிர்பார்த்து பயணிக்கிறார்கள். ராசிபுரம் குருசாமிப்பாளையம் திருச்செங்கோடு கொல்லிமலை என நாட்கணக்கில் நீள்கிற‌து பயணம். தங்கள் பிற‌ப்பில் ஒட்டிக் கொண்ட சாதிகளை மறந்த இவ்விரு மனிதர்கள் பிழைக்க இடம் தேடும் நீண்ட பயணமும், அதற்குக் காரணமான கசப்பான குடும்பத்துச் சம்பவங்களும், புதிய மனிதர்களிடையே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சாயாவனம் போல புதிய இடத்தைத் திருத்துவதும், சில கிளைக்கதைகளும் தான் இப்புதினம்.
(http://www.perumalmurugan.com/)
நீர் விளையாட்டு, பீக்கதைகள், வேப்பெண்ணெய்க் கலயம் போன்ற ஆசிரியரின் சிறுகதைத் தொகுப்புகளைப் படித்திருக்கிறேன். பெரும்பாலும் முடிவு என்று ஏதொன்றையும் முடிவு செய்ய முடியாமல் முடியும் அவரின் நடை எனக்குப் பிடிக்கும். எக்கதையிலும் காலம் தெளிவாக இருக்காது. ஆளண்டாப் பட்சியும் அப்படித்தான். ஒரு ரூபாய்க்கும் குறைவாக கூடையும், 17 ரூபாய்க்கு ஒரு குழி நிலமும் விற்ற காலத்தில் கதை நடக்கிறது. இவர் கதைகளில், கிராமத்து மக்களின் வாழ்வோடு தொடர்புடைய சில பாரம்பரிய தகவல்களும், சில வித்தியாசமான வழக்குச் சொற்கள் பயன்படுத்துவதையும் அதிகம் காணலாம். இப்புதினத்தில் செந்தேள், கள் பற்றி வரும் தகவ‌ல்கள் ஓர் உதாரணம்.

நான் ரசித்தவை:
பிடித்த மனிதர்கள்:
1) கணவனுக்கும் காட்டாமல் கன்றிப் போன மார்களுடன் வலம் வரும் முத்தண்ணன் மனைவி பெருமா
2) கதையில் எங்குமே தலை காட்டாமல் பூச்சாண்டி காட்டும் சுப்புக் குறவன்
3) பொன்னாயாப் பாட்டி

பிடித்த பகுதிகள்:
1) பெரியாரின் பேச்சு கொடுத்த உத்வேகத்தில், சாமியும் இல்லை பேயும் இல்லை என, கோடாங்கியைக் குப்பன் பயம் காட்டும் பகுதி.
2) நாயுடன் நல்லபாம்பு சண்டை.
3) சானார் தெருவில் சாதி மறைத்து, பனையேறிக் கள்ளெடுக்கும் வித்தை கற்று, சாதிக் கட்டுப்பாட்டிற்காக அதை உபயோகிக்காமல் இருக்கும் முத்தண்ணன்.

ஒரு டரியலான வசனம்: "..... எங்காலத்துல எல்லாம் தாலிதான் ஒருத்தனுக்கு. அண்ணந்தம்பி ஆரா இருந்தாலும் புருசந்தான். ஆறு புள்ளப் பெத்தேனே ஆறும் உங்கப்பனுக்கேவா பொறந்தது? அதாருக்குத் தெரியும். மேல போறவன் கொடுத்த பொறப்பு. எதோ ஆசப்பட்டு வந்தான்னா அமுக்கமா உள்ள கூட்டிட்டுப் போயி எல போடறத உட்டுட்டு ஏறிக்கிட்டு வந்துட்டா. எல்லாம் நாகரீகம் பெருத்துப் போன காலமாயிருச்சப்பா. அடி ஆ
யா, இன்னமே உம்புருசன்..... போ, தங்கத்துல அடிச்சு வெச்சத மூடிப் பத்தரமாப் பாத்துக்காயா".

இடப்பெயர்வு என்ற பயணநிலைதான் இப்புதினம். பயணித்துப் பாருங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Saturday, July 20, 2013

105. சாபம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாபம் (சிறுகதைகள்)
ஆசிரிய‌ர் : சல்மா
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2012
விலை : 110 ரூபாய்
பக்கங்கள் : 142
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
(http://www.wikipedia.org)

சிறுகதைகள் பற்றியோ, கவிதைத் தொகுப்புகள் பற்றியோ பெரும்பாலும் நான் இங்கு எழுதுவதில்லை; எழுதவும் தெரியாது. சமீபத்தில் ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பற்றி எழுதலாம் என முனைந்தால், தம்பி சேரல் ஏற்கனவே எழுதிவிட்டார். மனதுக்கு மிக அருகில் நெருங்கும், சில சமய‌ங்களில் எதார்த்தத்தை உட்கிரகிக்கத் தடுமாற வைக்கும் சில சிறுகதைகளைப் படிக்கும் போது, அவற்றைப் பற்றி ஏதாவது எழுதிவிடத் தோன்றும். சமீபத்தில் படித்த, சல்மா அவர்களின் சாபம் என்ற சிறுகதைகள் தொகுப்பும் அப்படித்தான்.

மொத்தம் 11 சிறுகதைகள். 5 கதைகளைப் பிடித்த வரிசையில் குறித்து வைத்திருக்கிறேன். எல்லாக் கதைகளும் ஓர் இஸ்லாமியப் பெண் பார்வையில் சொல்லப்படுகின்றன. இரயிலில் முகம் தெரியாத ஆண்களுக்கு இடையே இரவுப் பயணம், கணவன் இல்லாத நாட்களில் அடிக்கடி சிணுங்கி பேச மறுக்கும் தொலைபேசி அழைப்பு, முதிர்கன்னி நிலைக்குச் சற்று முன் திருமணம் செய்து பித்தாகிப் போக வைக்கும் முதலிரவுகள், குழந்தைப்பேறு இல்லையென மருத்துவத்தால் கைவிடப்பவள் சந்திக்கும் இரவுகள், மொட்டைக் கடுதாசிகள் என முழுக்க முழுக்க பெண்ணுலகில் சஞ்சரித்து வந்த அனுபவத்தைத் தருகின்றன இக்கதைகள்.
(http://www.noolulagam.com)
அக்கதை சாதியைச் சவுக்கால் அடித்தது என்றோ, இக்கதை பெண்ணியப் பெருமை பேசியது என்றோ, ஒரு சொட்டுக் க‌ண்ணீர் தந்தது ஒரு கதை என்றோ, தூக்கம் தூக்கிப் போட்டது இன்னொரு கதை என்றோ எனக்கு எழுதத் தெரியாது என ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் எழுதினால், கதைகளைத் தான் எழுத வேண்டும் என்பதால், ஒரு சோறு பதம் பார்க்க, நான் ரசித்த ஒரு பத்தியை உங்கள் வாசிப்பிற்கும் தருகிறேன்.

உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும் மறைந்த மேலான சுதந்திரத்தை அடைந்திருந்தாள். பயத்தின் கரங்களிடமிருந்து விடுபட்டுப் பரவசத்தின் எல்லைகளுக்குள் பயணிக்க ஆரம்பித்தாள். பயத்தில் வெறுத்து ஒதுக்கிய இரவுகள், விருப்பமானவையாக மாறித் தன்னைத் தவிக்கவைக்கும் அதிசயத்தை அதீத வியப்புடன் யோசித்தாள். இன்றைய இரவுக்காகவும் தன் உடலைப் புணர வரும் அந்த உருவத்திற்காகவும் விரகத்தில் தகிக்கும் உடலைப் படுக்கையில் கிடத்துவதற்காகவும் இரவு ஒரு பறவைபோலக் கதவுக்கு மேலாகப் பறந்து வரும் அதிசயத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

நான் அதிகம் ரசித்த கதைகள்: சாபம், இருள்
நான் ரசித்த குறியீடு: 'சாபம்' கதையில் தெருத் தெருவாகப் போய் மோர் கேட்கும் பெண்கள்

- ஞானசேகர்  
 (http://jssekar.blogspot.in/)

Sunday, April 07, 2013

104. ஆழி சூழ் உலகு


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்களுக்காக‌)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆழி சூழ் உலகு (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜோ டி குருஸ்
வெளியீடு : தமிழினி
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 430 ரூபாய்
பக்கங்கள் : 551 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் சொன்னது போல், சென்னை வந்தபின் சென்ற வருடம் ஜூலையில் நான் முதன்முதலில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா. மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, லயோலா கல்லூரியில் இரண்டாவது பொது நிகழ்ச்சி. பூவுலகின் நண்பர்கள் நடத்திய ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழா. நம்மாழ்வார் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பசுமைப் புரட்சியின் வன்முறை, மணல் கோட்டைகள் போன்ற சுற்றுச்சூழல் பற்றிய சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இரண்டு நாட்கள் நடந்த விழாவில், நான் சென்ற நாளில் பாலையும் நெய்தலும் விவாதத் திணைகள். அதுவரை புத்தகங்களில் மட்டுமே நான் படித்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்கள் பாலைத்திணை பற்றி பேசினார். நெய்தற்திணை பற்றி பேசிய பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் மற்றும் ஜோ டி குருஸ் இருவரும் எனக்கு அன்றுதான் அறிமுகம். அவர்களிடம் இருந்து இரு புத்தகங்கள் குறித்துக் கொண்டேன். வறீதையா அவர்களின் 'என்னைத் தீண்டிய கடல்' தம்பி சேரல் தந்தார். ஜோ டி குருஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' கேட்கப்பட்ட கடைகளில் எல்லாம் அச்சில் தற்போது வருவதில்லை என்றார்கள். 4 மாதங்களுக்குப் பின் கிடைத்தது.
(https://www.nhm.in)
ஆழி சூழ் உலகு. ஆழி என்றால் கடல் என்று என்னைப் போல் பலர் தவறாகப் புரிந்திருக்க வாய்ப்புண்டு; முழுக் கடல் அல்ல; கடலின் ஒரு பகுதி. கடலில் நுரை பொங்கும் பகுதிக்கு ஆழி என்று பெயர். மன்னார் வ‌ளைகுடாவில் மண‌ப்பாடு மற்றும் கூடங்குளத்திற்கு இடையே இருக்கும் ஆமந்துறை என்ற பரதவர்களின் துறைதான் கதைக்களம். ஆமைகள் கடலில் இருந்து கரைக்கு வந்து கூட்டங்கூட்டமாக முட்டையிடும் பகுதி என்பதால் ஆம‌ந்துறை என்ற பெயர். இருட்டில் கடலில் இருந்து கரை தெரிவதற்காக மின்சாரம் இல்லாத காலத்தில் ஆமை ஓட்டில் ஆமை நெய்யை உருக்கி திரி போட்டு எரிப்பதாலும் ஆமந்துறை என்ற பெயர். கடற்கரையில் இருந்து பார்த்தால் கிழக்கே மணப்பாடு துறையும் தென்மேற்கே கூத்தன்துறையும் கடலுக்குள் தெரியும். இவ்விரு ஊர்களுக்கும் இடையே கடற்கரை உள்நோக்கி வளைந்து இருப்பதால் புயல் காலங்களில் அதிக சேதம் ஏற்படாத பகுதி. இப்பகுதியில் ஒரு மைல் தூரம் வரை பாறைகளால் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஆழியாக இருப்பதால் இயந்திரப் படகுகள் இயக்க முடியாது; கட்டுமரம் மட்டும்தான். ஆமந்துறை பரதவர்களின் வாழ்க்கையைக் கடலிலும் கரையிலும் பேசுகிறது புதினம்; 1933 முதல் 1985 வரை 6 அத்தியாயங்களில் வருடாவாரியாக‌ கிட்டத்தட்ட 4 தலைமுறைகளின் கதை.

கவுரு துளவை மாசா தாமான் மறுக்கு கோடா பருமல் அணியம் மையாவடி போன்ற நெய்தல் வார்த்தைகளால் ஆரம்பப் பக்கங்களை மெதுவாகப் படிக்க நேர்ந்தாலும், அவை பரிட்சய‌மான பின், ஆமந்துறையின் மக்கள் அறிமுகமான பின், வாசிப்பின் வேகத்திற்கு எவ்வித தடையும் கொடுக்காத கதைக்களம். இதுதான் ஆரம்பம், இதுதான் இலக்கு, இதுதான் கதை என்று சுருக்கிச் சொல்ல எதுவுமில்லை. புதினத்தின் ஓட்டத்தில் சிறுகதைகளை வெட்டி எடுத்து கோர்த்துக் கொள்ளும் பொறுப்பை வாசகனுக்கே விட்டுவிட்டார் ஆசிரியர். புதினத்தின் சுவாரசிய‌த்திற்கு அதுவும் ஒரு காரணம். முழுக்க முழுக்க பரதவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் புதினம் என்பதால், கடல், அரசு, சாதி, மதம், மூட நம்பிக்கைகள், பக்கத்துத் துறைகள் என்று பல தளங்களில் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறது. சர்வதேசக் கடல் எல்லை என்று மாயக் கோடு போட்டுக் கொண்டு, ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களை அனுமதித்து கடல்வளம் சுரண்டப் படுவதையும் சொல்கிறது.

மண‌ப்பாடு தூத்துக்குடி திருவைகுண்டம் சோதிக்காவிளை தச்சன்விளை காவல்கிணறு இடிந்தகரை கூடங்குளம் இடையன்குடி குலசேகரப்பட்டணம் மற்றும் நாரோயில் (நாகர்கோயில்) போன்ற ஊர்களுக்கும், கச்சத்தீவுக்கும், கன்னியாக்குமரியில் இருந்து 15கிமீ தொலைவில் ஆழ்கடலில் தனியே உயர்ந்து நிற்கும் சுறாப்பாறைக்கும் கதை கூட்டிச் செல்கிறது. நம்ம வள்ளியூர் கோழிச்சண்டை முதல் இலங்கை இனக்கலவரம் வரை பேசுகிறது புதினம். நாடார் பரதவர் சாதிச்சன்டைகள், பரதவத் துறைகளுக்கு இடையேயான சண்டைகள் பற்றியும் பேசுகிறது. சணல்வலை, பருத்தி நூல் வலை, டிஸ்கோ வலை என்று காலத்தால் மாறிப்போன பொருட்களையும், காலத்திற்கு ஏற்றாற் போல் கிடைக்கும் மீன்களையும் சொல்கிறது.

கடலிலும் காற்றிலும் போராட்டமே வாழ்க்கை என்று கொண்டு இயல்பிலேயே அசாத்திய துணிச்சலுடன் இருக்கும் பரதவர்களுடன், நம்மையும் கடலுக்குள் கூட்டிச் செல்கிறது புதினம். சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெரிய மீன்கள், தலைப் பகுதியில் ஒரு பகுதியில் ஒளி வீசும் மின்சார மீன்கள், இலட்சக்கணக்கில் சாளை மீன்கள், ஆயிரக்கணக்கில் கடற்குதிரைகள், ஒரு பூந்தோட்டமே மலர்ந்தது போல பல வண்ணங்களில் பல வடிவங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அழகில் பற்பல மீன்கள், கிரீச்சிட்டுப் பறக்கும் இனம் புரியாத பறவைகளின் விநோத ஒலிகள் என அடுத்தடுத்து காட்டுகிறது புதினம், பக்கத்திலேயே மரணத்தையும் வைத்துக் கொண்டு!
(http://www.uyirmmai.com)
'முத்துக் குளித்துறைப் பரதவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிநடத்திய புனித பிரான்சிஸ் சவேரியாருக்கும் அவர் வழிவந்த சேசு சபைக் குருக்களுக்கும் இந்நூல் காணிக்கை' என்கிறது ஆரம்பப் பக்கம். மொத்த புதினத்திலும் ஒரே ஒரு நல்ல பாதிரியார் தான் இருக்கிறார். எதார்த்தம் அதுதான். மீதி பாதிரியார்களுக்கு இடையே இருக்கும் கள்ளக்காதல்களையும் பொருள்வெறியையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். சேற்றுக்குள் முளைக்கும் இதுபோல செந்தாமரைப் பாதிரியார்களை மட்டுமே நம்பி தங்கள் ஆன்மீகத்தைத் தொடரும் மக்களின் எண்ணத்தை அற்புதமாகச் சித்தரித்து இருக்கிறார். ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழாவில் நெய்தலில் பேசிய மூன்றாமவர் கூட, கத்தோலிக்க லயோலா கல்லூரியில் தைரியமாக பரதவக் கிறித்தவர்கள் பாதிரியார்களால் ஏமாற்றப் படுவதைப் பற்றி பேசினார்.

பல வித்தியாசமான உயிரினங்களும், அவற்றின் வித்தியாசமான பண்புகளும் புதினத்தில் நிறைய உள்ளன. உதாரணமாக, நமக்கெல்லாம் தெரிந்த டால்ஃபின் என்ற ஓங்கல். ஓங்கல்கள் (Dolphin) காந்தி போல மிகவும் சாதுவானவை. கடலில் யாராவது தவறி விழுந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓங்கல்கள் பாய்ந்து வருமாம். இந்த ஓங்கல்கள் எல்லாம் முற்பிறவியில் மனிதர்களாய் இருந்தவை என்று கதைகதையாகச் சொல்வார்கள். இதனால்தானே என்னவோ பரதவர்கள் ஓங்கல்களைச் சாப்பிடுவதில்லை. அவற்றைப் பிடிப்பதும் இல்லை. சில நேரங்களில் இவை வலைகளைக் கிழிப்பதுண்டு. இருந்தாலும் பரதவர்களுக்கு இந்த மீன்கள் மேல் பாசம்தான். கடலில் ஆள் விழுங்கி சுறாக்களை எதிர்க்கும் வலுவுள்ளவை இந்த ஓங்கல்கள் மட்டும்தான். எனது உப தகவல் ஒன்று; ஓங்கலுக்கும் மனிதனுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உண்டு. உடலுறவு என்ற விசயத்தை ரசித்து இன்பத்திற்காக செய்யும் இரண்டே உயிரினங்கள்! ஓங்கல்களை அழகான துள்ளலுடன் மழலைத் தனத்துடன் பார்த்திருப்பீர்கள். இறந்த  ஓங்கல் ஒன்றின் அழுகிய உடலை, நான் சென்னை மீனவக் கிராமம் ஒன்றில் இருந்து ஒரு பின்னிரவில் நான் எடுத்த புகைப்படம் இது:

பஞ்சாமையின் இறைச்சி பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும். கடலில் மாட்டிக் கொண்டவர்கள் பசி போக்க‌ அதன் கழுத்தைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதாக‌வும், இறைச்சியைத் தின்பதாகவும் புதினத்தில் வருகிறது. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் சொன்னேன். அதில் ஒரு தகவல், புதினத்தில் படித்த‌ பஞ்சாமை பற்றியது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் அந்த வாழ்வியல் எதார்த்தத்தை யாருமே நம்பவில்லை. கொலம்பஸ் தன் கடற்பயணத்தில் ஆமைகளை எடுத்துப் போய் சமைத்துச் சாப்பிட்டதாக இன்னொருவர் சொன்ன தகவலுக்கு அனைவரும் கைத்தட்டினார்கள். பெனிசிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் தீவிர சைவ உணவுக்காரராக இருந்து அசைவ உணவிற்கு மாறிய சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி வாதத்திற்கு வலு சேர்க்கலாம் என நினைத்தேன்; செய்யவில்லை. குஜராத், ஈழப் படுகொலைப் படங்களைப் பார்த்து விட்டு, இக்காலத்தில் இதுமாதிரி யாராவது செய்வார்களா என்று விலகிப் போகும் சாராரும் உள்ள சமூகம் இது!

1964ம் ஆண்டு வரும்போது யார் சாகப் போகிறார்களோ என பயந்து கொண்டே படித்தேன். தனுஷ்கோடியில் 1964 புயலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலருடன் நேரடியாகப் பேசி இருக்கிறோம். நீச்சல் காளி என்ற முதியவர் தான் அதிக தகவல்கள் தந்தார். அவ்விபத்து நடந்த பகுதிகளை நானும் நண்பர் பிரேம்குமாரும் நடந்தே பார்த்திருக்கிறோம். அந்நிகழ்வுகளை அற்புதமாக விளக்குகிறது இப்புதினம்.

பின்னிணைப்பாக இருக்கும் வட்டார வழக்குச் சொல் அகராதியும், பெயர் மரூஉக்களும் அருமை. ஒஸ்தி என்ற வார்த்தைக்குக் கிறித்தவ மதத்தில் பொருள் இருக்கிறது! ஆனால் அகராதி போதாது. உதாரணமாக, கெபி மேற்றாசனம் போன்ற கிறித்தவ வார்த்தைகளின் பொருள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதினத்தில் உள்ள தேரி ஆராளி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.

எனக்கு 3 விசயங்கள் புதினத்தில் புரியவில்லை. படித்தவர்கள் யாராவது சொல்லவும். 1) பேச்சிக்கு மணிமேகலை எனப் பெயர் மாற்றம் செய்வதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா? 2) வசந்தா எதற்காக சிறைக்குப் போகிறாள்? அவனின் பிளந்திருந்த நெஞ்சில் மண்ணள்ளிப் போட்டு வெறியோடு அதே நெஞ்சில் அவள் மிதித்ததாகத் தான் புதினம் சொல்கிறது. அவள் கொன்றதுபோல் படித்ததாக ஞாபகம் இல்லை. 3) சிவகாசி கொள்ளை என்று சொல்லப்படும் வரலாற்றுச் சம்பவம் என்ன?

நான் ரசித்தவை:
பாத்திரங்கள் ‍-> 1) தொம்மந்திரை 2) காகு சாமியார் 3) முதல் பக்கத்தில் அறிமுகமாகி இரண்டாம் பக்கத்தில் செத்துப் போய் மூன்றாம் பக்கத்தில் தாயையும் எடுத்துக் கொண்டு ஒரு சிறுகவிதை போல் வந்து போகும் பரதேசி என்ற குழந்தை 4) சோடி வரிப்புலியன் சுறாக்களில் ஒன்று மட்டும் தூண்டிலில் மாட்டி கட்டுமரத்தோடு இழுத்துச் செல்லப்பட கூடவே இரவு முழுக்க நீந்திப் போகும் இன்னொரு மீன் 5) சூசையார், சிலுவை, கோத்ராப் பிள்ளை, செலஸ்டின்
உரையாடல்கள் -> நிறைய இருக்கின்றன. நான் ரசித்து சிரித்த ஒன்று இது: கண்டாரஓளி கலிஸ்டா ஒரு பொண்ணப் பெத்திருக்கா. அடடடடா... அவளுக்கு குஞ்சி மட்டுந்தாம் இல்ல‌
ப‌குதிகள் ‍-> 1) சூசையாருக்கும் சிலுவைக்கும் உள்ள உறவு 2) 1975ல் நாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 300கிமீ தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த புயல் தென்மேற்காக நகர ஆரம்பிக்கும்போது, ஊரைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குப் போகச் சொல்லி மீன்துறை அதிகாரிகள் பரதவத் துறைகளில் ஜீப்பில் ஒலிபெருக்கியில் அறிவித்து செல்லும் போது, அரசு மீனவர்கள் உயிரை எந்த அளவிற்கு மதிக்கிறது எனப் புரிய வைக்கும் அதிகாரிகளுக்கு இடையேயான‌ பேச்சு. 3) பேருந்திற்குப் பணம் இல்லாமல் மணப்பாடு கடற்கரையில் சேகர் சுற்றித் திரியும் பகுதி. 4) காகு சாமியார் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் சம்பவம் 5) புதினத்தின் கதையோடு சேராத கடைசி இரண்டு பக்கங்கள். கெழுகடல் செல்வி கரை நின்றாங்கு....

அனுபந்தம்:
‍‍‍‍----------------
1) சென்ற வருடம் நாங்கள் பார்த்த சிறந்த திரைப்படமாக நானும் என் நண்பன் ஒருவனும் தேர்ந்தெடுத்தது, நீர்ப்பறவை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் சீனு ராமசாமியின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புதினத்தில் நபர்களையும் இடங்களையும் என்னால் எளிதாகக் கற்பனை செய்து கொள்ள நீர்ப்பறவைதான் காரணம்.
2) இப்புதினத்தில் சுந்தரி டீச்சர், மலையாள ஆபாசத் திரைப்பட நாயகி போல சித்தரிக்கப்பட்டு இருந்ததாக திட்டிய விமர்சனம் ஒன்று படித்தேன். எனக்கு எதிர்க் கருத்து ஏதுமில்லை. ஏனென்றால், அம்மாதிரி படங்களை நான் சத்தம் வைக்காமல் பார்ப்பதால் கதை தெரியாது. ஆனால் சுந்தரி டீச்சர் என்ற பாத்திரம் நிறைவு பெறும் விதம் புதினத்தில் உள்ள பல நல்ல கதையாடல்களில் ஒன்று.

மனிதன், மனிதவுருவம் எடுக்கும் முன் குரங்காக இருந்தான் என்கிறது அறிவியல். அதற்கும் முன் கடலில் நீந்தும் பாலூட்டி விலங்காகவும் இருந்தான் என்கிறது. மயிர்கள் அற்ற உடலை ஆதரமாகவும் சொல்கிறது. கடலில் இருந்து வெளிவந்த அப்பாலூட்டி குரங்காகி மனிதனான‌து என்றால், நெய்தல் தான் நமக்கெல்லாம் ஆதித்திணை. தேசங்களின் வரைபடங்களில் விளிம்புகளில் இருக்கும் ஆதித்திணைவாசிகளான மீனவ இனமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது. அப்படியொரு நிலையிலேயே அவர்கள் நீடிப்பது பலருக்குச் சவுகரியம் என்பது நான் சொல்லித் தமிழ் பேசும் நல்லுலகிற்குச் சொல்லத் தேவையில்லை. இப்புதினம் சொல்லும் சில கருத்துக்களுடன் நான் முடிக்கிறேன்; நாம் ஆரம்பிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன‌ !

கடற்கரையில் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டப்படி பணயக் கைதிகளாகப் பிடித்து வரப்படுபவர்களைக் கடலில் வைத்துத்தான் அடிக்க முடியும். அவர்களைக் கரை கொண்டுவந்து நிலத்தில் அவர்கள் கால் வைத்துவிட்டால் அடிப்பதற்கு அந்தச் சட்டம் இடம் கொடுப்பதில்லை. கரையில் இறங்கி நடந்தவுடன் அந்தப் பணயக் கைதிகள் விருந்தினராகக் கருதப்படுவர். ஊர்ச் செலவில் அவர்களுக்குப் புதுத்துணிகள் கொடுப்பார்கள். வழக்கு முடியும் வரை அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் ஊரில் இருப்பதாகத் தகவல் அனுப்புவார்கள்.

பரதவர்களுக்கிடையே மட்டுமல்ல; பிற சமூகத்தினருடன் மோதல்கள் வரும்போது காலங்காலமாக சில நியதிகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். எந்த அளவு உக்கிரமான சண்டையானாலும் இவர்கள் முதியவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஒருபோதும் தொட்டதில்லை. மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அடைக்கலம் என்று வந்துவிட்டாலும் தொடுவதில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)