Thursday, September 08, 2011

76. TEA - THE DRINK THAT CHANGED THE WORLD

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

The greatest service which can be rendered to any country is to add a useful plant to its custom.
- Thomas Jefferson

------------------------------------------------
புத்தகம் : Tea - The drink that changed the world
ஆசிரியர் : John Griffiths
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : André Deutsch
முதற்பதிப்பு : 2007
விலை : 395 ரூபாய்
பக்கங்கள் : 373 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------

டீ என்றால் நமக்கு என்னென்ன நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும்? சாதிக் கொடுமைகளுக்கு அடையாளமாக பள்ளிப்பாடங்களில் வரும் இரட்டைத் தம்ளர் முறை. பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party). தேநீர் வாங்கித்தந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவதாகச் சிலர் சொல்லும் வீரவசனங்கள். தேயிலை அறிமுகமான காலத்தில் வடிகட்டியபின் சக்கையைச் சாப்பிட்ட ஏதோவொரு நாட்டுமக்கள், என்று சிறுவயதில் எங்கோபடித்த விசயம். வாழ்நாளில் டீயே குடிக்காமல் இருந்த‌ ஒரு பிரதமர். இன்னும் கொஞ்சநேரம் யோசித்தால் அதிகபட்சமாக என்னால் இன்னும் இரண்டு விச‌யங்கள்தான் சொல்லியிருக்க முடியும். ஆனால் உலகத்தையே மாற்றியமைத்த பானமென்று கம்பீரமாக தேநீரை அடையாளப்படுத்தி நின்றுகொண்டிருந்தது இப்புத்தகம். உப்பைப்பற்றிய ஒரு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். 19 கட்டுரைகளின் தொகுப்பு. அட்டைப்படத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து.

தேயிலை என்ற கண்டுபிடிப்பிற்குச் சொந்தமானவர்கள் யார் எனவும் அதைத் தனது காலனிகளில் விளைவிக்க பிரிட்டிஷார்கள் மேற்கொண்ட முயற்சிகளும்தான் முதலிரண்டு கட்டுரைக‌ள். தேயிலையை இங்கிலாந்தில் பயிர்செய்ய வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) 20 முறை முயற்சித்து தோற்றுப்போகிறார். மின்சார பல்புக்குள் வைப்பதற்குத் தகுந்த இழையைத் தேடி உலகின் பல இடங்களுக்கு ஆட்களை அனுப்பிய ஆல்வா தாமஸ் எடிசன் போல், தேயிலைச் செடியை உயிருடன் கொண்டுவர தனது ஆட்களை அனுப்புகிறார் கார்ல் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஒருகரையில் சேகரிக்கப்பட்ட தேயிலை மறுகரை சேரவில்லை. கப்பல் புறப்பட்டபோது வழியனுப்புதலுக்காக வெடிக்கப்பட்ட குண்டில் தேயிலை பொசுங்கிப்போகிறது. இல்லை, வழியில் கப்பலில் எலி தின்றுவிடுகிறது. நம்பிக்கையுடன் அவ்வளவுதூரம் வந்துவிட்டு, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கடந்தவுடன் எதிர்பாராத புய‌ற்காற்றில் பறந்துபோகிறது. தனது தோட்டத்தில் பயிரிடும் ஆசை நிறைவேறாமலேயே இறந்துபோகிறார் கார்ல் லின்னேயஸ்.



தப்பித்தவறி தனக்குக் கிடைத்த செடிகளில் எது உண்மையான‌ தேயிலை எனத் தெரியாமல் குழம்பிப்போகிறார் கார்ல் லின்னேயஸ். தேயிலை என்பது ஒரு தனிப்பட்ட தாவரம்தானா என்ற கேள்விக்கு விடை 180 ஆண்டுகள் கழித்துத்தான் தாவரவியலாளர்களுக்குக் கிடைக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதிவரை அயல்மண்ணில் விளைவிக்கப்பட முடியாமல் சீனாவிலேயே தங்கிவிடுகிறது தேயிலை. நமெக்கெல்லாம் மிகவும் பரிச்சயப்பட்ட டீ (tea), சாயா / சாய் / சா (cha) என்ற வார்த்தைகளின் பெயர்க்காரணமும், கிரீன் டீ (green tea) மற்றும் பிளாக் டீ (black tea)க்களுக்கான வித்தியாசங்களையும் அருமையான தகவல்களாகத் தந்துபோகின்றன இவ்விரண்டு கட்டுரைகள்.

மூன்றாம் கட்டுரையில் இருந்து சீரியஸாகிறது புத்தகம். தேநீரின் தீமைகளாகவும் அக்காலத்தில் அதைப்பற்றிய நிலவிய அறியாமையையும் அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது அக்கட்டுரை. ஒருகாலக்கட்டத்தில் தேநீரின் மருத்துவக் குணங்களை ஆய்வுசெய்ய பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி (Louis XIV) உத்தரவிடும் அளவிற்குத் தேயிலை பயங்காட்டியிருக்கிறது. காஃபிக்கும் தேநீருக்கும் இடையில் இருக்கும் நன்மை தீமைகளை அறிவியல் ரீதியாகப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.

அடுத்த இரண்டு கட்டுரைகளும் எனக்கும் மிகவும் பிடித்த வரலாற்றுச் சம்பவங்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே அமெரிக்காவில் அழித்து, அமெரிக்கர்களின் தேநீர் பழக்கத்தையே கிட்டத்தட்ட மறக்கடித்துப்போன பாஸ்டன் தேநீர் விருந்தை இருமுறை படித்தேன். உலகின் தலைசிறந்த போராட்டங்களாக டைம் (Time) இதழ் தேர்ந்தெடுத்திருந்த நிகழ்வுகளில் 10வது இடம் பாஸ்டன் தேநீர் விருந்து. தண்டியில் உப்புக்காய்ச்சியபின் தனது உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை மோகன்தாஸ் காந்தி இந்நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டதாக வரலாற்றுச் செய்திகள் உண்டு. தண்டிப்போராட்டம் அதே டைம் பட்டியலில் பத்துக்குள் இருக்கிறது.

வீட்டைக் குத்தகைக்குவிடலாம், காட்டைக் குத்தகைக்கு விடலாம், ஒரு நாட்டையே குத்தகைக்கு விடலாமா? விடலாம் என்கிறது விநோத வரலாறு. அபினிப்போரில் (Opium war) பிரிட்டிஷாரிடம் தோற்றுப்போன சீனா, தனது நாட்டின் ஒருபகுதியான ஹாங்காங்கை 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுகிறது. இந்த விநோதத்தின் மூலத்தைத் தேடினால், அபினி வெள்ளி என்று இதுவும் தேயிலையில்தான் போய்முடிகிறது. அபினிக்கென்று தனித்துறை இந்திய ஆட்சிப்பணியில் 1930ல் இருந்திருக்கிறது.

தேயிலைத் தோட்ட முதலாளிகள், கூலிகள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். முதலாளிகள் கூலிகளை நாடுவிட்டுநாடு கொண்டுவருவதில் பட்ட இன்னல்கள், கூலிகளை நிர்வகிக்கும் கங்கானிகள், கூலிகள் தங்கள் உரிமைகளுக்காகத் தோற்றுவித்த தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். 1920களில் தமிழகத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுத்து, சுதந்திரத்திற்குப்பின் வாழ்வுரிமையையும் மறுத்த இலங்கையின் மாபெரும் வரலாற்றுக் குற்றங்களையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.

1600ன் கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகாதிபத்தியத்தின் பின்னாலும், இரண்டு வருடங்களுக்குப் பின் போட்டிக்காக‌ தோன்றிய டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பின்னாலும் தேயிலை இருந்திருக்கிறது. தேயிலையைப் பானமாக உபயோகிக்காமல் ஊறுகாயாக உபயோகித்திருக்கிறார்கள் பர்மியர்க‌ளும் சில தென்கிழக்கு ஆசியர்களும். மற்றபடி தேயிலைத்தூள் தயாரிப்பு முறைகள் பற்றியும், நிறம் சுவை திடம் பற்றியும், அதன்மேல் வரலாறு விதித்திருந்த வரிகள் பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. லிப்டன், டைபோ (Typhoo), புரூக் பான்ட் (Brooke Bond) என்ற‌ பிரபல டீ பிராண்டுகளின் ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் தொட்டுச் செல்கிறது புத்தகம். தனது முதல் டீக்கடையின் விளம்பரத்திற்காக பன்றி ஒன்றுடன் வீதியில் ஊர்வலம் போயிருக்கிறார் டாம்மி லிப்டன் (Tommy Lipton). குரங்கைவிட்டு அறுவடை செய்ததென்று கவர்ச்சி விளம்பரமெல்லாம் சிலபேர் செய்திருக்கிறார்கள்.

ஆசிரியரின் தந்தை பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்தாக யூகிக்கமுடிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த‌ ஆங்கில அதிகாரிகளாலும், தேயிலை சம்மந்த‌ப்பட்ட பிரிட்டிஷ்-சீன-டச்சுக்காரர்களாலும் எழுதப்பட்ட நேரடிக் குறிப்புகளே பெரும்பாலான இடங்களில் மேற்கோளாகப் புத்தகத்தில் வருகின்றன. இவை செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகக்கூடச் சொல்லலாம்.

டீயைப் பற்றி எல்லா விசயங்களையும் இங்கேயே சொல்லிவிட முடியாது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பல நூற்றாண்டுகளை ஒரே நிமிடத்தில் உறிஞ்சிவிட்டதாக ஒருதிருப்தி. 'கொஞ்சம் தேநீர் நிறைய‌ வானம்' புத்தகத்தில் 'ஆளுக்கொரு கோப்பை' கவிதையில் வைரமுத்து சொல்வதுபோல், கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வமான இத்தேநீரின் வரலாற்றிலும்கூட நிறம் சுவை திடமுண்டு!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, August 25, 2011

75. வாடாம‌ல்லி

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ - என்ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ... நானும்
அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய்
செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன்
கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன்
நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே சேர்ந்திருப்பேன்
இரண்டாய்ப் பிறந்ததாலே துண்டுபட்டு நிக்கேனே!
- கூவாகத் திருவிழா ஒப்பாரிப்பாடல்

-------------------------------------------------
புத்தகம் : வாடாம‌ல்லி
ஆசிரிய‌ர் : சு.ச‌முத்திர‌ம்
வெளியீடு : அருவி
முதற்பதிப்பு : ஆக‌ஸ்ட் 2009
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 304 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------
இராமநாதபுர மாவட்டம் பேரையூரில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பிறந்த நூர் முகம்மது, தன் ஆணுடம்பில் இருக்கும் பெண்தன்மையைச் சமுதாயம் ஏற்க மறுத்தபோது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையின் இறுதி ஊர்வலத்திற்குச் செல்பவர்களுடன் கும்பலோடு கும்பலாக இரயிலேறி சென்னைபோய் பம்பாய்போய் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து நூரி என்ற பெண்ணாகி திருமணம் செய்து கணவனை இழந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மூன்றாவது எய்ட்ஸ் நோயாளியாகக் கண்டறியப்பட்டு தற்போது சென்னையில் SIP memorial home நடத்தி சுமார் 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். பால் சுயம்பு அவர்களின் 'திருநங்கைகள் உலகம்' புத்தகத்தில் மனதை மிகவும் பாதித்தவர் நூரி. அப்புத்தகத்தில்தான் நூரி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'வாடாமல்லி' என்ற தொடரை மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதியிருப்பதாகப் படித்தேன். புத்தகமாகவே கிடைத்துவிட்டது!

'அரவாணிகள் பற்றிய தமிழின் முதல் நாவல்' என்று முன்னட்டை சொல்கிறது. சுயம்பு என்ற ஆண், தனது கல்லூரிப் பருவத்தில் பெண்தன்மையை உணரும்போது பெண்களாலேயே அவமானப்படுத்தப்படுவதுடன் ஆரம்பமாகிறது புதினம். கல்லூரி குடும்பம் சமூகம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகி ஒருசமயத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு ஜீவனாக வீட்டைவிட்டு வெளியேறி அவன் சந்திக்கும் திருநங்கைகள் மூலமாக அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள்மேல் சமூகம் திணிக்கும் கொடுமைகளையும் எதிர்கொள்வதுதான் கதைச்சுருக்கம்.

தமிழகத்தின் ஒரு கிராமம், ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் சேரிப்பகுதி, டெல்லி, சில காவல் நிலையங்கள், கூவாகம் என்ற பயணிக்கிறது கதைக்களம். சமையற்காரர்களாகவும் ஒப்பாரிக்கலைஞர்களாகவும் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கில் அதிர்ஷ்டக்காரர்களாக வீட்டு விசேசங்களில் சிறப்பிக்கப்படுவதும், நம்மூரில் பேய்ப்பிடித்திருப்பதாக அடிவாங்குவதுமாக பால்பிறழ்வுகளின் சமூகநிலையை அழகாக விவரிக்கிறது புத்தகம்.

முர்கேவாலி மாதா கதையையும் அரவான் கதையையும் கதை மாந்தர்களே சொல்கிறார்கள். அரவான் கதை பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' புத்த‌க‌த்திலும் உண்டு. ஆசிரியர்கூட ஆசிரியராகவே கதையின் போக்கில் ஒரு வரியில் வந்துபோகிறார். திருநங்கைகளைத் தாசிகள்போலவும் ஆண்களுக்கு அலைவதுபோலவும் சித்தரிக்கும் சில பத்திரிக்கைகள் பற்றியும், அவர்களை அதற்காகவே பயன்படுத்த நினைக்கும் சில காவல்துறை அதிகாரிகள் பற்றியும் தொட்டுச்செல்கிறது புத்தகம்.

தவிர்க்க முடியாதபடி கூவாகம் இப்புத்தகத்திலும் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'தேசாந்திரி' கூவாகத்திருவிழா பற்றி பேசுகிறது. பிரியாபாபு அவர்களின் 'மூன்றாம் பாலின் முகம்' கூவாக லாட்ஜ்களைப் பற்றியும் பேசியது. பிள்ளையார்குப்பம் மஞ்சக்குப்பம் என்று அருகிலுள்ள அரவான்கோவில்களை ஓரங்கட்டிவிட்டு கூவாகம் அகில இந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும் சில திருநங்கைகளுக்கே பிடிக்காத கூவாகம் பற்றி வாடாமல்லி சொல்கிறது.

புத்தகத்தில் இரண்டு இடங்களில் நான் மிகவும் ரசித்த உரையாடல்கள் உங்களின் வாசிப்பிற்கும்.

அரவான் கதையின் முடிவில் வருகிறது முதல் உரையாடல்.
"கிருஷ்ணன் கிடைக்கான் விடு. அவனுக்கென்ன பழையபடியும் ஆணாய் மாறிட்டான்"

ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் உரையாடல்.
"அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க... பக்கத்துல எதையும் வைக்காதீங்க... தூக்குப் போட்டு சாகப் போறவன்மாதிரி முழிக்கான் பாருங்க... அப்புறம்... சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப வெலைக்கு வாங்காதீங்க..."
ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார்.
"கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து... மாத்திச் சொல்றீங்க..."
"ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க..."

சமீபத்திய ஆனந்த விகடன் இதழொன்றில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, நூரி இவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் செய்திக்கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்தபிறகுதான் பால்பிறழ்வுகளில் இருவகையென்று எனக்குத் தெரியும். பெண்மை குறைந்து ஆண்தன்மை மிக்கதைத் திருநம்பி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்மை மிக்கதைத் திருந‌ங்கை என்ற சொல்லாலும் குறிப்பதாகப் படித்தேன். இவர்களை முறையே பேடி அலி என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதாக‌ இப்புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் ஆய்வுரையில் பேராசிரியர் இராம. குருநாதன் குறிப்பிடுகிறார். இதுவரை நான் படித்திருந்த புத்தகங்களில் திருநம்பிகள் பற்றி பார்த்ததாக நினைவில்லை. திருநம்பிகளின் சமுகநிலை திருந‌ங்கைகளைவிட பரிதாபமென அக்கட்டுரை சொன்னதாக நினைவிருக்கிறது.

மேகலை மாதாஜியிடம் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்குப் புரியவேயில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டமிடவும்.
"பூப்பு நீராட சவுக்குக் கம்புல உட்கார்ந்த‌துகூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்".

நூரியாக மாறியபிறகு வாழ்க்கை எப்படி அமைந்தது என்று தெரிந்துகொள்ள எதிர்பார்த்துத்தான் புத்தகம் வாங்கினேன். ஆனால் அதற்கு முந்தைய பகுதிதான் பெரும்பாலும் புதினப்படுத்தப்பட்டிருக்கிறது. சுபமான முடிவை மட்டுமே விரும்பும் தொடர்கதை அல்லது திரைப்பட ரசிகர்களுக்காக எழுதப்பட்டதுபோல் ஒரு சின்ன ஏமாற்றம். நண்பர் கிருஷ்ண பிரபு அவர்கள் பாலபாரதியின் 'அவன்-அது=அவள்' புத்தக விமர்சனத்தில் சொன்னதுபோல வாடாமல்லியின் இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருப்பதும் உண்மையே.

சுயம்புவிற்குப் பேய்விரட்டும் பகுதியும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியும், சென்னையின் சேரி அனுபவமும், கூவாக நிகழ்வுகளும் கதையின் பலம். வாசிக்கும் வேகத்திற்குத் தடைபோடும் எழுத்துப் பிழைகளும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் தலைகாட்டும் ஹீரோயிஸமும், காட்சிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும்படி வந்துபோகும் சில செயற்கைத்தனமான வசனங்களும் புத்தகத்தின் சில குறைகள். அச்சிறுகுறைகளையும் தாண்டி, திருநங்கைக‌ளுக்கான முன்னோடி படைப்பு என்று தனித்து நிற்கிறது வாடாமல்லி.

தமிழில் பால்பிறழ்வுகள் பற்றி நீங்கள் படிக்கவேண்டுமெனில் உங்களின் முதலடியை வாடாமல்லியில் ஆரம்பிக்கலாம்!

அனுபந்தம்:

புதினம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக ஏழாண்டுகளுக்குமுன் நூலகமொன்றில் நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகம் - பாலைப்புறா. எய்ட்ஸ் நோய் கதைக்களம். ஆசிரியர் சு.சமுத்திரம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, February 03, 2011

74. ஆழத்தை அறியும் பயணம்

-----------------------------------------------------------------------
புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியிட்டோர் : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2004
விலை : 140ரூ
பக்கங்கள் : 254

----------------------------------------------------------------------

ஒரு கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது ஒரு சிறுகதை, புதினம், குறுங்கதை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாசிப்பினூடே அதில் வரும் பாத்திரங்களுடன் பயணிக்கத் தொடங்குகிறீர்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உங்கள் மனதில் ஓர் உருவம் உண்டாகிறது. நீங்கள் பார்த்துப் பழகிய, கேள்வி ஞானத்தில் அறிந்த, வேறெங்கோ வாசித்த யாரோ ஒருவர் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமானவராக உங்களுக்குப் படுகிறார். ஏன்? உங்களையே கூட பாத்திரங்களில் ஒன்றாக பாவித்துக் கொள்கிறீர்கள். அப்பாத்திரத்தின் சூழ்நிலையோ, உடலமைப்போ, மனோநிலையோ ஏதோவொன்று உங்களுடன் அதிகமாக ஒத்துப்போகிறது. அது போலவே மற்றப் பாத்திரங்களுக்கும் நீங்கள் அறிந்திருந்த மனிதர்களின் உருவத்தையே பொருத்திப் பார்க்கிறீர்கள். இது கதையுடனான உங்கள் நெருக்கத்தைக் கூட்டி உங்களை மேலானதொரு அனுபவத்துக்கு ஆட்படுத்துகிறது.

வாழ்வின் ஒரு நாளில் நடக்கும் பலப்பல நிகழ்வுகள் உங்கள் நினைவுச் சங்கிலியை எப்போதோ நீங்கள் வாசித்திருக்கக்கூடிய ஒரு கதையுடன் பிணைக்க வல்லனவாகவிருக்கின்றன. வியாபார நிமித்தமாக நீங்கள் சந்திக்கும் நபர் தெனாலி ராமனை நினைவுறுத்துகிறார். முகவரி கேட்கும் யாரோ ஒரு பெண், குந்தி தேவிக்கு நீங்கள் கற்பனை செய்திருந்த உருவத்துக்குள் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறாள். பெரும்பாலான வாழ்வியல் சிக்கல்களுக்கு வாசித்த ஏதோ கதையின் யாரோ ஒரு பாத்திரம் உங்களுக்குத் தீர்வளிக்கிறது. விதவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள புனைவுச் சூழ்நிலைகள் உங்களைப் பயிற்றுவிக்கின்றன.

வாசிப்பின் பெரும்பாலான தருணங்களில் நிஜ வாழ்வில் எங்கோ சந்தித்த, பார்த்த, கேட்ட, உணர்ந்த, அனுபவித்த எதுவோ ஒன்று பற்றிய நினைவு எழுவது தடுக்க இயலாததாகி விடுகிறது. அது போலவே வாழ்வின் பல கட்டங்களில், எங்கோ எப்போதோ வாசித்த ஏதோவொன்று நினைவுக்கு வருவதும் இயல்பானதே! வாசிப்பும் வாழ்க்கையும் இணையும் இந்த இரு புள்ளிகள் வாழ்க்கை, வாசிப்பு இரண்டையுமே அர்த்தமுள்ளதாக்குகின்றன. இரண்டு விதமான அனுபவங்களில் நாம் முன்னேறிச் செல்கிறோம் என்பதும் உண்மைதான்.



இது மாதிரியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நூல்தான் இந்த ஆழத்தை அறியும் பயணம். ஆற்றுப்படை என்றொரு சிற்றிலக்கிய வகை தமிழில் உண்டு. புரவலனிடம் பரிசில் பெற்று வரும் புலவன், பாணன், கூத்தன் போன்றோர் தன் போன்ற மற்றவருக்கு புரவலனின் பெருமைகளைக் கூறி, செல்லும் வழி சொல்லி அனுப்புவதே ஆற்றுப்படை. இந்த நூலும் ஒரு வகையில் ஆற்றுப்படைதான். எழுத்தாளர் பாவண்ணன் தான் வாசித்த சிறுகதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்து மற்ற வாசகர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார். இப்புத்தகத்தில் 25 தமிழகச் சிறுகதைகளும், 8 அயல் தமிழ்ச் சிறுகதைகளும், 10 பிற மொழிச் சிறுகதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இப்புத்தகத்தைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' புத்தகத்துடனான இதன் ஒப்பீட்டையும் பதியும் கட்டாயம் நேர்கிறது. கதாவிலாசமும் இதேபோன்றதொரு முயற்சிதான் என்றாலும், இரு முக்கியமான அம்சங்களில் இது கதாவிலாசத்தினிடமிருந்து மாறுபடுகிறது. ஒன்று. கதாவிலாசம் சொல்லும் அனுபவங்கள் ஒரு முழுமையான புனைவாகி விடக்கூடிய நிறைய வாய்ப்புகளுடன் இருக்கின்றன. ஆனால் ஆழத்தை அறியும் பயணம் வெறும் அனுபவமாக மட்டுமே அனுபவத்தை முன்வைக்கிறது. எந்தக் கணத்தில், குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியரின் நினைவடுக்கில் வந்து போனதோ அந்தக் கணத்தில் அனுபவக் குறிப்பு நின்று விடுகிறது. இதை பலம், பலவீனம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கதையுடன் வாழ்க்கை சந்திக்கும் புள்ளியில் அனுபவம் நின்றுபோய், கதை மீதான இடம்பெயர்தல் நிகழ்கிறது. இரண்டு. கதாவிலாசத்தில் தொகுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளும், எழுத்தாளர்களும் முந்திய மூன்று தலைமுறைகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இப்புத்தகம் 1930களில் எழுதப்பட்ட கதைகளைக் குறித்தும் கூடப் பேசுகிறது. இன்றைய பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகமற்ற எழுத்தாளர்களைப் பரிட்சயப்படுத்துகிறது. இரு நூல்களுமே தீவிர வாசகத் தன்மையுடன் அமைந்திருப்பது பொதுவான அம்சம்!

ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் எழுத்தாளர் குறித்த குறிப்பும், இச்சிறுகதை எந்தத் தொகுப்பிலிருக்கிறது என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களை அடுத்து, எல்லாக் கட்டுரைகளும் ஓர் அனுபவத்தை விளக்கி, ஒரு புள்ளியில் நிறுத்தி, 'இந்தப் புள்ளியில் இன்ன கதை நினைவுக்கு வருகிறது' என்றபடி கதையைச் சொல்லி, பின் கதையின் மீதான மதிப்பீட்டைச் சொல்லி நிறைவு பெறுகின்றன. பின்பற்றப்பட்டிருக்கிற இந்த ஒரே மாதிரியான கட்டமைப்பு கொஞ்சம் சலிப்பேற்படுத்தத்தான் செய்கிறது.

என்றாலும் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களிடம், நல்ல இலக்கியத்தைத் தேடும் இன்றைய வாசகர்களை ஆற்றுப்படுத்தும் பாவண்ணனின் இந்நூல் கவனிக்கத்தக்க, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!

இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களும், சிறுகதைகளும்:

தமிழகச் சிறுகதைகள்

அ.மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்'
பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'
த.நா.குமாரசாமியின் 'சீமைப்பூ'
கல்கியின் 'கேதாரியின் தாயார்'
ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'சசாங்கனின் ஆவி'
து.ராமமூர்த்தியின் 'அஞ்ஞானம்'
கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு'
நா.பார்த்தசாரதியின் 'வேப்பம்பழம்'
ஆர்.சூடாமணியின் 'ரயில்'
விந்தனின் 'மாடும் மனிதனும்'
தி.சா.ராஜுவின் 'பட்டாளக்காரன்'
ந.முத்துசாமியின் 'இழப்பு'
கரிச்சான் குஞ்சுவின் 'நூறுகள்'
பிரபஞ்சனின் 'பிரும்மம்'
இந்திரா பார்த்தசாரதியின் 'நாசகாரக் கும்பல்'
ஜே.வி.நாதனின் 'விருந்து'
ஆர்.ராஜேந்திரசோழனின் 'கோணல் வடிவங்கள்'
நாஞ்சில் நாடனின் 'ஒரு இந்நாட்டு மன்னர்'
திலீப்குமாரின் 'மூங்கில் குருத்து'
மா.அரங்கநாதனின் 'சித்தி'
சிவசங்கரியின் 'வைராக்கியம்'
சி.ஆர்.ரவீந்திரனின் 'சராசரிகள்'
மலர்மன்னனின் 'அற்பஜீவிகள்'
ஜெயந்தனின் 'அவள்'
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்'

அயல் தமிழ்ச் சிறுகதைகள்

என்.எஸ்.எம்.ராமையாவின் 'ஒரு கூடைக் கொழுந்து'
என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்'
வ.அ.இராசரத்தினத்தின் 'தோணி'
அ.முத்துலிங்கத்தின் 'அக்கா'
எஸ்.பொன்னுத்துரையின் 'அணி'
சாந்தனின் 'முளைகள்'
மாத்தளை சோமுவின் 'தேனீக்கள்'
தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள்'

பிறமொழிச் சிறுகதைகள்

தாகூரின் 'காபூல்காரன்'
ஜயதேவனின் 'தில்லி'
கே.ஏ.அப்பாஸின் 'அதிசயம்'
சரத்சந்திரரின் 'ஞானதா'
காளிந்திசரண் பாணிக்கிரஹியின் 'நாய்தான் என்றாலும்'
தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'
எட்கர் ஆலன் போவின் 'இதயக்குரல்'
துர்கனேவின் 'முமூ'
வில்லியம் பாக்னரின் 'இரு சிப்பாய்கள்'
ஐல்ஸ் ஐக்கிங்கரின் 'ரகசியக் கடிதம்'

பின்குறிப்பு:

இப்புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்த நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கு நன்றி!

-சேரல்
(http://seralathan.blogspot.com/)