Sunday, April 07, 2013

104. ஆழி சூழ் உலகு


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்களுக்காக‌)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆழி சூழ் உலகு (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜோ டி குருஸ்
வெளியீடு : தமிழினி
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 430 ரூபாய்
பக்கங்கள் : 551 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் சொன்னது போல், சென்னை வந்தபின் சென்ற வருடம் ஜூலையில் நான் முதன்முதலில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா. மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, லயோலா கல்லூரியில் இரண்டாவது பொது நிகழ்ச்சி. பூவுலகின் நண்பர்கள் நடத்திய ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழா. நம்மாழ்வார் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பசுமைப் புரட்சியின் வன்முறை, மணல் கோட்டைகள் போன்ற சுற்றுச்சூழல் பற்றிய சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இரண்டு நாட்கள் நடந்த விழாவில், நான் சென்ற நாளில் பாலையும் நெய்தலும் விவாதத் திணைகள். அதுவரை புத்தகங்களில் மட்டுமே நான் படித்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்கள் பாலைத்திணை பற்றி பேசினார். நெய்தற்திணை பற்றி பேசிய பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் மற்றும் ஜோ டி குருஸ் இருவரும் எனக்கு அன்றுதான் அறிமுகம். அவர்களிடம் இருந்து இரு புத்தகங்கள் குறித்துக் கொண்டேன். வறீதையா அவர்களின் 'என்னைத் தீண்டிய கடல்' தம்பி சேரல் தந்தார். ஜோ டி குருஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' கேட்கப்பட்ட கடைகளில் எல்லாம் அச்சில் தற்போது வருவதில்லை என்றார்கள். 4 மாதங்களுக்குப் பின் கிடைத்தது.
(https://www.nhm.in)
ஆழி சூழ் உலகு. ஆழி என்றால் கடல் என்று என்னைப் போல் பலர் தவறாகப் புரிந்திருக்க வாய்ப்புண்டு; முழுக் கடல் அல்ல; கடலின் ஒரு பகுதி. கடலில் நுரை பொங்கும் பகுதிக்கு ஆழி என்று பெயர். மன்னார் வ‌ளைகுடாவில் மண‌ப்பாடு மற்றும் கூடங்குளத்திற்கு இடையே இருக்கும் ஆமந்துறை என்ற பரதவர்களின் துறைதான் கதைக்களம். ஆமைகள் கடலில் இருந்து கரைக்கு வந்து கூட்டங்கூட்டமாக முட்டையிடும் பகுதி என்பதால் ஆம‌ந்துறை என்ற பெயர். இருட்டில் கடலில் இருந்து கரை தெரிவதற்காக மின்சாரம் இல்லாத காலத்தில் ஆமை ஓட்டில் ஆமை நெய்யை உருக்கி திரி போட்டு எரிப்பதாலும் ஆமந்துறை என்ற பெயர். கடற்கரையில் இருந்து பார்த்தால் கிழக்கே மணப்பாடு துறையும் தென்மேற்கே கூத்தன்துறையும் கடலுக்குள் தெரியும். இவ்விரு ஊர்களுக்கும் இடையே கடற்கரை உள்நோக்கி வளைந்து இருப்பதால் புயல் காலங்களில் அதிக சேதம் ஏற்படாத பகுதி. இப்பகுதியில் ஒரு மைல் தூரம் வரை பாறைகளால் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஆழியாக இருப்பதால் இயந்திரப் படகுகள் இயக்க முடியாது; கட்டுமரம் மட்டும்தான். ஆமந்துறை பரதவர்களின் வாழ்க்கையைக் கடலிலும் கரையிலும் பேசுகிறது புதினம்; 1933 முதல் 1985 வரை 6 அத்தியாயங்களில் வருடாவாரியாக‌ கிட்டத்தட்ட 4 தலைமுறைகளின் கதை.

கவுரு துளவை மாசா தாமான் மறுக்கு கோடா பருமல் அணியம் மையாவடி போன்ற நெய்தல் வார்த்தைகளால் ஆரம்பப் பக்கங்களை மெதுவாகப் படிக்க நேர்ந்தாலும், அவை பரிட்சய‌மான பின், ஆமந்துறையின் மக்கள் அறிமுகமான பின், வாசிப்பின் வேகத்திற்கு எவ்வித தடையும் கொடுக்காத கதைக்களம். இதுதான் ஆரம்பம், இதுதான் இலக்கு, இதுதான் கதை என்று சுருக்கிச் சொல்ல எதுவுமில்லை. புதினத்தின் ஓட்டத்தில் சிறுகதைகளை வெட்டி எடுத்து கோர்த்துக் கொள்ளும் பொறுப்பை வாசகனுக்கே விட்டுவிட்டார் ஆசிரியர். புதினத்தின் சுவாரசிய‌த்திற்கு அதுவும் ஒரு காரணம். முழுக்க முழுக்க பரதவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் புதினம் என்பதால், கடல், அரசு, சாதி, மதம், மூட நம்பிக்கைகள், பக்கத்துத் துறைகள் என்று பல தளங்களில் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறது. சர்வதேசக் கடல் எல்லை என்று மாயக் கோடு போட்டுக் கொண்டு, ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களை அனுமதித்து கடல்வளம் சுரண்டப் படுவதையும் சொல்கிறது.

மண‌ப்பாடு தூத்துக்குடி திருவைகுண்டம் சோதிக்காவிளை தச்சன்விளை காவல்கிணறு இடிந்தகரை கூடங்குளம் இடையன்குடி குலசேகரப்பட்டணம் மற்றும் நாரோயில் (நாகர்கோயில்) போன்ற ஊர்களுக்கும், கச்சத்தீவுக்கும், கன்னியாக்குமரியில் இருந்து 15கிமீ தொலைவில் ஆழ்கடலில் தனியே உயர்ந்து நிற்கும் சுறாப்பாறைக்கும் கதை கூட்டிச் செல்கிறது. நம்ம வள்ளியூர் கோழிச்சண்டை முதல் இலங்கை இனக்கலவரம் வரை பேசுகிறது புதினம். நாடார் பரதவர் சாதிச்சன்டைகள், பரதவத் துறைகளுக்கு இடையேயான சண்டைகள் பற்றியும் பேசுகிறது. சணல்வலை, பருத்தி நூல் வலை, டிஸ்கோ வலை என்று காலத்தால் மாறிப்போன பொருட்களையும், காலத்திற்கு ஏற்றாற் போல் கிடைக்கும் மீன்களையும் சொல்கிறது.

கடலிலும் காற்றிலும் போராட்டமே வாழ்க்கை என்று கொண்டு இயல்பிலேயே அசாத்திய துணிச்சலுடன் இருக்கும் பரதவர்களுடன், நம்மையும் கடலுக்குள் கூட்டிச் செல்கிறது புதினம். சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெரிய மீன்கள், தலைப் பகுதியில் ஒரு பகுதியில் ஒளி வீசும் மின்சார மீன்கள், இலட்சக்கணக்கில் சாளை மீன்கள், ஆயிரக்கணக்கில் கடற்குதிரைகள், ஒரு பூந்தோட்டமே மலர்ந்தது போல பல வண்ணங்களில் பல வடிவங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அழகில் பற்பல மீன்கள், கிரீச்சிட்டுப் பறக்கும் இனம் புரியாத பறவைகளின் விநோத ஒலிகள் என அடுத்தடுத்து காட்டுகிறது புதினம், பக்கத்திலேயே மரணத்தையும் வைத்துக் கொண்டு!
(http://www.uyirmmai.com)
'முத்துக் குளித்துறைப் பரதவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிநடத்திய புனித பிரான்சிஸ் சவேரியாருக்கும் அவர் வழிவந்த சேசு சபைக் குருக்களுக்கும் இந்நூல் காணிக்கை' என்கிறது ஆரம்பப் பக்கம். மொத்த புதினத்திலும் ஒரே ஒரு நல்ல பாதிரியார் தான் இருக்கிறார். எதார்த்தம் அதுதான். மீதி பாதிரியார்களுக்கு இடையே இருக்கும் கள்ளக்காதல்களையும் பொருள்வெறியையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். சேற்றுக்குள் முளைக்கும் இதுபோல செந்தாமரைப் பாதிரியார்களை மட்டுமே நம்பி தங்கள் ஆன்மீகத்தைத் தொடரும் மக்களின் எண்ணத்தை அற்புதமாகச் சித்தரித்து இருக்கிறார். ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழாவில் நெய்தலில் பேசிய மூன்றாமவர் கூட, கத்தோலிக்க லயோலா கல்லூரியில் தைரியமாக பரதவக் கிறித்தவர்கள் பாதிரியார்களால் ஏமாற்றப் படுவதைப் பற்றி பேசினார்.

பல வித்தியாசமான உயிரினங்களும், அவற்றின் வித்தியாசமான பண்புகளும் புதினத்தில் நிறைய உள்ளன. உதாரணமாக, நமக்கெல்லாம் தெரிந்த டால்ஃபின் என்ற ஓங்கல். ஓங்கல்கள் (Dolphin) காந்தி போல மிகவும் சாதுவானவை. கடலில் யாராவது தவறி விழுந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓங்கல்கள் பாய்ந்து வருமாம். இந்த ஓங்கல்கள் எல்லாம் முற்பிறவியில் மனிதர்களாய் இருந்தவை என்று கதைகதையாகச் சொல்வார்கள். இதனால்தானே என்னவோ பரதவர்கள் ஓங்கல்களைச் சாப்பிடுவதில்லை. அவற்றைப் பிடிப்பதும் இல்லை. சில நேரங்களில் இவை வலைகளைக் கிழிப்பதுண்டு. இருந்தாலும் பரதவர்களுக்கு இந்த மீன்கள் மேல் பாசம்தான். கடலில் ஆள் விழுங்கி சுறாக்களை எதிர்க்கும் வலுவுள்ளவை இந்த ஓங்கல்கள் மட்டும்தான். எனது உப தகவல் ஒன்று; ஓங்கலுக்கும் மனிதனுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உண்டு. உடலுறவு என்ற விசயத்தை ரசித்து இன்பத்திற்காக செய்யும் இரண்டே உயிரினங்கள்! ஓங்கல்களை அழகான துள்ளலுடன் மழலைத் தனத்துடன் பார்த்திருப்பீர்கள். இறந்த  ஓங்கல் ஒன்றின் அழுகிய உடலை, நான் சென்னை மீனவக் கிராமம் ஒன்றில் இருந்து ஒரு பின்னிரவில் நான் எடுத்த புகைப்படம் இது:

பஞ்சாமையின் இறைச்சி பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும். கடலில் மாட்டிக் கொண்டவர்கள் பசி போக்க‌ அதன் கழுத்தைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதாக‌வும், இறைச்சியைத் தின்பதாகவும் புதினத்தில் வருகிறது. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் சொன்னேன். அதில் ஒரு தகவல், புதினத்தில் படித்த‌ பஞ்சாமை பற்றியது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் அந்த வாழ்வியல் எதார்த்தத்தை யாருமே நம்பவில்லை. கொலம்பஸ் தன் கடற்பயணத்தில் ஆமைகளை எடுத்துப் போய் சமைத்துச் சாப்பிட்டதாக இன்னொருவர் சொன்ன தகவலுக்கு அனைவரும் கைத்தட்டினார்கள். பெனிசிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் தீவிர சைவ உணவுக்காரராக இருந்து அசைவ உணவிற்கு மாறிய சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி வாதத்திற்கு வலு சேர்க்கலாம் என நினைத்தேன்; செய்யவில்லை. குஜராத், ஈழப் படுகொலைப் படங்களைப் பார்த்து விட்டு, இக்காலத்தில் இதுமாதிரி யாராவது செய்வார்களா என்று விலகிப் போகும் சாராரும் உள்ள சமூகம் இது!

1964ம் ஆண்டு வரும்போது யார் சாகப் போகிறார்களோ என பயந்து கொண்டே படித்தேன். தனுஷ்கோடியில் 1964 புயலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலருடன் நேரடியாகப் பேசி இருக்கிறோம். நீச்சல் காளி என்ற முதியவர் தான் அதிக தகவல்கள் தந்தார். அவ்விபத்து நடந்த பகுதிகளை நானும் நண்பர் பிரேம்குமாரும் நடந்தே பார்த்திருக்கிறோம். அந்நிகழ்வுகளை அற்புதமாக விளக்குகிறது இப்புதினம்.

பின்னிணைப்பாக இருக்கும் வட்டார வழக்குச் சொல் அகராதியும், பெயர் மரூஉக்களும் அருமை. ஒஸ்தி என்ற வார்த்தைக்குக் கிறித்தவ மதத்தில் பொருள் இருக்கிறது! ஆனால் அகராதி போதாது. உதாரணமாக, கெபி மேற்றாசனம் போன்ற கிறித்தவ வார்த்தைகளின் பொருள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதினத்தில் உள்ள தேரி ஆராளி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.

எனக்கு 3 விசயங்கள் புதினத்தில் புரியவில்லை. படித்தவர்கள் யாராவது சொல்லவும். 1) பேச்சிக்கு மணிமேகலை எனப் பெயர் மாற்றம் செய்வதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா? 2) வசந்தா எதற்காக சிறைக்குப் போகிறாள்? அவனின் பிளந்திருந்த நெஞ்சில் மண்ணள்ளிப் போட்டு வெறியோடு அதே நெஞ்சில் அவள் மிதித்ததாகத் தான் புதினம் சொல்கிறது. அவள் கொன்றதுபோல் படித்ததாக ஞாபகம் இல்லை. 3) சிவகாசி கொள்ளை என்று சொல்லப்படும் வரலாற்றுச் சம்பவம் என்ன?

நான் ரசித்தவை:
பாத்திரங்கள் ‍-> 1) தொம்மந்திரை 2) காகு சாமியார் 3) முதல் பக்கத்தில் அறிமுகமாகி இரண்டாம் பக்கத்தில் செத்துப் போய் மூன்றாம் பக்கத்தில் தாயையும் எடுத்துக் கொண்டு ஒரு சிறுகவிதை போல் வந்து போகும் பரதேசி என்ற குழந்தை 4) சோடி வரிப்புலியன் சுறாக்களில் ஒன்று மட்டும் தூண்டிலில் மாட்டி கட்டுமரத்தோடு இழுத்துச் செல்லப்பட கூடவே இரவு முழுக்க நீந்திப் போகும் இன்னொரு மீன் 5) சூசையார், சிலுவை, கோத்ராப் பிள்ளை, செலஸ்டின்
உரையாடல்கள் -> நிறைய இருக்கின்றன. நான் ரசித்து சிரித்த ஒன்று இது: கண்டாரஓளி கலிஸ்டா ஒரு பொண்ணப் பெத்திருக்கா. அடடடடா... அவளுக்கு குஞ்சி மட்டுந்தாம் இல்ல‌
ப‌குதிகள் ‍-> 1) சூசையாருக்கும் சிலுவைக்கும் உள்ள உறவு 2) 1975ல் நாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 300கிமீ தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த புயல் தென்மேற்காக நகர ஆரம்பிக்கும்போது, ஊரைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குப் போகச் சொல்லி மீன்துறை அதிகாரிகள் பரதவத் துறைகளில் ஜீப்பில் ஒலிபெருக்கியில் அறிவித்து செல்லும் போது, அரசு மீனவர்கள் உயிரை எந்த அளவிற்கு மதிக்கிறது எனப் புரிய வைக்கும் அதிகாரிகளுக்கு இடையேயான‌ பேச்சு. 3) பேருந்திற்குப் பணம் இல்லாமல் மணப்பாடு கடற்கரையில் சேகர் சுற்றித் திரியும் பகுதி. 4) காகு சாமியார் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் சம்பவம் 5) புதினத்தின் கதையோடு சேராத கடைசி இரண்டு பக்கங்கள். கெழுகடல் செல்வி கரை நின்றாங்கு....

அனுபந்தம்:
‍‍‍‍----------------
1) சென்ற வருடம் நாங்கள் பார்த்த சிறந்த திரைப்படமாக நானும் என் நண்பன் ஒருவனும் தேர்ந்தெடுத்தது, நீர்ப்பறவை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் சீனு ராமசாமியின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புதினத்தில் நபர்களையும் இடங்களையும் என்னால் எளிதாகக் கற்பனை செய்து கொள்ள நீர்ப்பறவைதான் காரணம்.
2) இப்புதினத்தில் சுந்தரி டீச்சர், மலையாள ஆபாசத் திரைப்பட நாயகி போல சித்தரிக்கப்பட்டு இருந்ததாக திட்டிய விமர்சனம் ஒன்று படித்தேன். எனக்கு எதிர்க் கருத்து ஏதுமில்லை. ஏனென்றால், அம்மாதிரி படங்களை நான் சத்தம் வைக்காமல் பார்ப்பதால் கதை தெரியாது. ஆனால் சுந்தரி டீச்சர் என்ற பாத்திரம் நிறைவு பெறும் விதம் புதினத்தில் உள்ள பல நல்ல கதையாடல்களில் ஒன்று.

மனிதன், மனிதவுருவம் எடுக்கும் முன் குரங்காக இருந்தான் என்கிறது அறிவியல். அதற்கும் முன் கடலில் நீந்தும் பாலூட்டி விலங்காகவும் இருந்தான் என்கிறது. மயிர்கள் அற்ற உடலை ஆதரமாகவும் சொல்கிறது. கடலில் இருந்து வெளிவந்த அப்பாலூட்டி குரங்காகி மனிதனான‌து என்றால், நெய்தல் தான் நமக்கெல்லாம் ஆதித்திணை. தேசங்களின் வரைபடங்களில் விளிம்புகளில் இருக்கும் ஆதித்திணைவாசிகளான மீனவ இனமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது. அப்படியொரு நிலையிலேயே அவர்கள் நீடிப்பது பலருக்குச் சவுகரியம் என்பது நான் சொல்லித் தமிழ் பேசும் நல்லுலகிற்குச் சொல்லத் தேவையில்லை. இப்புதினம் சொல்லும் சில கருத்துக்களுடன் நான் முடிக்கிறேன்; நாம் ஆரம்பிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன‌ !

கடற்கரையில் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டப்படி பணயக் கைதிகளாகப் பிடித்து வரப்படுபவர்களைக் கடலில் வைத்துத்தான் அடிக்க முடியும். அவர்களைக் கரை கொண்டுவந்து நிலத்தில் அவர்கள் கால் வைத்துவிட்டால் அடிப்பதற்கு அந்தச் சட்டம் இடம் கொடுப்பதில்லை. கரையில் இறங்கி நடந்தவுடன் அந்தப் பணயக் கைதிகள் விருந்தினராகக் கருதப்படுவர். ஊர்ச் செலவில் அவர்களுக்குப் புதுத்துணிகள் கொடுப்பார்கள். வழக்கு முடியும் வரை அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் ஊரில் இருப்பதாகத் தகவல் அனுப்புவார்கள்.

பரதவர்களுக்கிடையே மட்டுமல்ல; பிற சமூகத்தினருடன் மோதல்கள் வரும்போது காலங்காலமாக சில நியதிகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். எந்த அளவு உக்கிரமான சண்டையானாலும் இவர்கள் முதியவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஒருபோதும் தொட்டதில்லை. மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அடைக்கலம் என்று வந்துவிட்டாலும் தொடுவதில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)
 

Sunday, March 24, 2013

103. EHT DOG FO LLAMS SGNIHT

(குழந்தைப் பருவத்தில் அதைத் தொலைத்தவர்களுக்காக‌))))))))))
நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
‍- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)

You're not the Sinners. You're the Sinned against. You were only children. You had no control. You are the victims, not the perpetrators.
-------------------------------------------------------
புத்தகம்: The God of Small Things (புதினம்)
ஆசிரியர்: அருந்ததி ராய்
மொழி: ஆங்கிலம்
வெளியீடு: Penguin Books
முதற்பதிப்பு: 1997
விலை: தோராயமாக 300 ரூபாய்
பக்கங்கள்: 340 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்)
சிறப்பு: 1997ல் புக்கர் பரிசு
-------------------------------------------------------
இரட்டையர்களும் கட்டிடக்கலை ஆர்க்கிடெக்ட்களும் பாராட்டும் இப்புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கு முன், ஆசிரியரைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. அருந்ததி ராய். 1961ல் வங்காள‌ இந்துத் தந்தைக்கும், கேரளக் கிறித்தவத் தாய்க்கும் மேகாலயாவில் பிறந்து, குழந்தைப் பருவத்தைக் கேரளாவில் அய்மனம் கிராமத்தில் கழித்தவர். டெல்லியில் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர். காஷ்மீர் பிரிவினையாளர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஆதரவாக இவர் சொன்ன கருத்துகள் மூலம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு, வெறுக்கப்பட வேண்டிய நபர் என்று சமூகத்தின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டவர். சாகித்ய அகாதமி விருது மறுப்பு, பொக்ரான் இரண்டாம் அணுகுண்டுச் சோதனை (The End Of Imagination), நர்மதா சர்தார் சரோவர் அணை என்று அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர். பல பொறுப்புள்ளவர்கள் சொல்வதற்குப் பயப்படும் சில உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவதிலும், ஒவ்வொரு பிரச்சனையையும் பார்க்கும் கோணத்திலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.

அருந்ததி ராய். நான் சென்னை வந்தபின் முதன்முதலாகக் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இவரைப் பார்க்கத்தான். சென்ற வருடம் ஜீலையில் காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அது. 'சின்ன விஷயங்களின் கடவுள்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இவரின் புத்தகமும் அவற்றில் ஒன்று. அந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள், புதினம் மூலம் புக்கர் பரிசு வாங்கி பிரபலமாகும் முன்னரே இரண்டு விசயங்களில் அருந்ததி ராயின் பெயரைக் கவனத்தில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, பூலான் தேவியின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட‌ பாண்டிட் க்குயின் என்ற‌ திரைப்படத்துக்கு அருந்ததி ராய் எழுதிய விமர்சனம் (The Great Indian Rape Trick). வயதுக்கு வராத சிறுமிகளுக்குக் கதாநாயகி என்ற பெயரில் உதட்டு முத்தமும் படுக்கையறைக் காட்சிகளும் கலை என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சிப் பெட்டியில் கொண்டு சேர்க்கும் அரும்பணி செய்யும் கலை வித்தக‌ர்களை ஊக்குவிக்கும் இச்சமூகத்தில், அவ்விமர்சனத்திற்குப் பின் இருக்கும் தைரியம் என்னை ஆச்சரியப் படுத்தியது; சிந்திக்கவும் வைத்தது. சுகுமாரன் அவர்களின் முழு உரை கொண்ட காலச்சுவடின் சுட்டி இது: http://www.kalachuvadu.com/issue-153/page18.asp 
(http://en.wikipedia.org)



The God of Small Things. எஸ்தாவும் ராஹேலும் இரட்டையர்கள். எஸ்தா ஆண். ராஹேல் பெண். ஒரே நேரத்தில் தனித்தனியாகக் கருவுற்ற இரு கரு முட்டைகளில் இருந்து பிறந்தவர்கள். Dizygotic. ஆசிரியரைப் போலவே வங்காள இந்துத் தந்தைக்கும், கேரளக் கிறித்தவத் தாய்க்கும் மேகலயாவில் பிறந்தவர்கள். 18 நிமிட இடைவெளியில் பிறந்த இவ்விரட்டையர்களின் ஏழாம் வயதில், 23 வருடங்களுக்குப் பிரித்து வைப்பதற்காகக் காலம் செய்யும் சின்னச் சின்ன விசயங்களே கதைச்சுருக்கம்.

பெற்றோர்களை எதிர்த்து மதம்விட்டு மாநிலம்விட்டு திருமணம் செய்துபோய், கணவனைச் சகிக்க முடியாமல் தன் சொந்த ஊரான கேரளத்து அய்மனம் கிராமத்திற்கு இரட்டையர்களுடன் வந்து விடுகிறாள், அவர்களின் தாய் அம்மு. கணவன் அல்லது தகப்பன் என்று சமூகம் பெண்ணிற்குத் தந்திருக்கும் இரண்டே வாய்ப்புகளில் தனக்கான முதலெழுத்தைத் தேர்ந்தெடுக்கும் குழப்பத்திலேயே பிறந்த வீட்டில் வேண்டப்படாத ஆளாக தன் குழந்தைகளுடன் இருக்கிறாள் அம்மு. தன்னை அடக்கி ஆண்ட கணவன் இறந்த பின் தொலைக்காட்சிப் பெட்டியுடன் காலம் கழிக்கும் அம்முவின் தாய். ஒரு பாதிரியார் மேல் காதல் கொண்டு கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து, அவர்கள் கொடுமை தாங்க முடியாமல் வெளியேறி, கன்னியாகவே வாழ்ந்து வரும் அம்முவின் அத்தை. இந்த மூன்று பெண்களுக்கிடையே வாழ்ந்து வருகிறார்கள் இரட்டையர்கள்.

அம்முவின் ஓரே அண்ணனின் விவாகரத்தான வெளிநாட்டு மனைவிக்குச் சோஃபி மோல் என்ற மகள். இரட்டையர்களின் மாமன் மகளான‌ சோஃபி மோலின் மரணத்துடன் ஆரம்பமாகிறது புதினம். வெளிநாட்டில் இருந்து வரப்போகும் சோஃபி மோலை வரவேற்கத் தயாராவது முதல் அவள் இறப்பிற்குப் பின் இரட்டையர்கள் பிரிந்து போவது வரையிலான கிட்டதட்ட ஒருமாதச் சம்பவங்கள்தான் புதினம். ஒரே இரவில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக் காட்டும் கதை.

ஒரு போலீஸ்காரர் அம்முவின் முலைகளை லத்தியால் வருடிக் கொண்டே இரட்டையர்களை வேசியின் பிள்ளைகள் என திட்டும்போது, அழுது கொண்டிருக்கும் அம்முவிடம் வேசி என்றால் என்ன எனக் கேட்கத் தடுமாறுவது - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கையில் விந்துப் பிசுபிசுப்புடன் அதைச் சொல்வதா வேண்டாமா என எஸ்தா தடுமாறுவது - கடற்பயணத்தில் இறப்பவர்களைக் கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தள்ளுவார்கள் என்றால் கடற்பயணம் தொடங்கும் போது எத்தனை கற்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள் என கேட்பது - ராஹேல் மூக்குச் சிந்தி சளி எடுக்கும் போது, சிப்பியில் இருந்து முத்தெடுத்தது போல் சுற்றி இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமாகப் பார்ப்பது - பெண்கள் இடையே வளர்ந்து வரும் எஸ்தா முதன்முதலில் ஒரு பொது இடத்தில் ஆண்களுக்கான கழிவறையை எதிர்கொள்வது என்று புத்தகம் பெரும்பாலும் குழந்தைகளில் பார்வையில், குறிப்பாக ராஹேலில் பார்வையில் பேசுகிறது.

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மூலம், உலகிலேயே முதன்முறையாக ஜனநாயக முறையில் கேரளாவில் ஆட்சியைப் பிடித்த கம்யூனிச‌மும் புதினத்தினூடே பயணிக்கிறது. கேரளாவில் கம்யூனிசம் எளிதாக மக்களை ஈர்த்ததற்கான காரணங்களையும், காலப்போக்கில் போலி கம்யூனிஸ்டுகள் உருவாகி, மக்களையும் தொழிற்சங்கங்களையும் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் பதிவு செய்கிறது புதினம்.

'கடவுளின் சொந்த நாடு' என்று இன்று அழைக்கப்படும் கேரளாவைத் துறவி விவேகானந்தர் 'பைத்தியக்கார விடுதி' என்று அழைத்தார். அங்கு நிலவிய சாதீய கொடுமைகள் அப்படி. குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய கொடுமைகளின் தாக்கத்தை இன்றும் கூட தென்தமிழகத்தில் காணலாம். நான் முந்தைய புத்தகத்தில் சொன்னது போல, மதம் மாறி வந்தவர்களைக் கிறித்தவ மதத்தால் சாதியிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அரிசிக் கிறித்தவர்கள் என்று மற்றவர்களால் கிண்டல் செய்யப்பட்ட அவர்களின் நிலையைச் சுதந்திர இந்தியா இன்னும் கொடுமையாக்க, 'கொதிக்கும் கொப்பறையில் இருந்து தப்பிக்கப் போய் எரியும் கொள்ளிக்குள் விழுந்தது' போல் என்கிறார் ஆசிரியர். கம்யூனிசம் கிறித்தவம் சாதீயம், இவை தங்களுக்குள் செய்துகொண்ட சமரசங்களைத் தன் கதைமாந்தர்கள் மூலம் பேசுகிறது புதினம்.
(http://en.wikipedia.org)
கதை சொன்ன விதத்தில் நான் ரசித்த இரண்டு விசயங்கள் உண்டு. ஒரே சீராக செல்லாமல், முன்னும் பின்னும் மாறி மாறி செல்லும் கதையோட்டத்தில் (non-sequential), சில விசயங்களும் சில வாக்கியங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ஒரு கட்டடத்தை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட், சில வடிவமைப்புகளைத் (patterns) திரும்பத் திரும்ப அமைத்து ஓர் அழகான வீட்டை வாழப் போகிறவனுக்கு ஏதுவாக வடிவமைத்துக் கொடுப்பது போல், தனது புதினத்தையும் அமைத்து இருப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர். திரும்பத் திரும்ப இடம் பெறும் இவ்விசயங்கள், வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதுடன், கதையின் அதிர்ச்சிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் என்கிறார். இதே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் பார்த்து விட்டீர்களா? நான் ரசித்த இன்னொரு விசயம், ஆங்கிலம் என்ற மொழியை அதன் அழகியலுடன் கையாண்ட விதம். சில எழுத்துகளை மட்டும் பெரிய எழுத்துக்களில் (capital letters) சொல்வது, சில வார்த்தைகளைச் சேர்த்து சொல்வது, சில வார்த்தைகளைப் பிரித்து சொல்வது (Later = Lay Ter), திரும்பத் திரும்ப சொல்வது, சில வார்த்தைகளை அப்படியே திருப்பிப் படிப்பது (ECILOP), வார்த்தைகளின் அசைகளை அந்தாதியாகப் படிப்பது என்று பெரும்பாலும் இரட்டையர்களின் மனநிலையை விளக்கப் பயன்படுத்தி இருக்கிறார். உதாரணமாக‌ Cuff-link என்ற வார்த்தை. Cuff + link = Cuff - link. சேர்ப்பதற்குக் கணிதத்தில் +; ஆங்கிலத்தில் -. இந்த முரண்பாட்டைப் பார்த்து இரட்டையர்கள் ஆச்சரியப்படுவதும், ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கச் சொல்லி நச்சரிக்கும் கன்னி(யாஸ்திரி) பாட்டியைப் பற்றி பேசும் பகுதி ஒன்றில் Pronunciation என்பதை Prer NUN sea ayshun என்று சொல்வதும் சில உதாரணங்கள். மேலும் சில அழகான சொற்றொடர்கள்: Prepare to prepare to be prepared, In an unconscious gesture of television-enforced democracy, As permanent as a Government job, Room for the future breasts. இப்புதினம் இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என கேரளத்து நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது. 21 அத்தியாயங்களில் கதை சொல்லும் இப்புதினத்தின் கடைசி அத்தியாயத்தின் ஒன்பதேகால் பக்கங்களை மட்டும் நகலெடுத்து சாட்சியாக சமர்ப்பிக்கப்ப‌ட்டது. சமூகத்தின் குடைச்சல்களுக்கு ஆளாகாத பெண் எழுத்தாளர் இல்லை என்பதற்கு அருந்ததி ராயும் விதிவிலக்கல்ல. அவ்வழக்கையும் புக்கர் பரிசையும் இந்தியச் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தான் ஆசிரியர் எதிர்கொண்டார். எந்த ஒரு கலாச்சாரத்திற்கு ஆதரவாக வழக்கு தொடரப்பட்டதோ, அதே கலாச்சாரம் தான் நேற்று தர்மபுரியில் கலவரம் கொண்டுவந்தது. எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது, அப்சல் குரு தூக்கை எதிர்த்து ஆசிரியர் எழுதிய கட்டுரையின் தலைப்பு நினைவில் வந்து போனது - A perfect day for democracy. தமிழில்: சின்ன விஷயங்களின் கடவுள் ஆசிரியர்: ஜி. குப்புசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் நான் ரசித்தவை: பாத்திரம் ‍-> எஸ்தா ப‌குதி ‍-> 12வது அத்தியாயத்தில் இரட்டையர்களின் 23 வருடப் பிரிவைப் பிரதிபலிக்கும் கதகளியாட்டம். மற்றும் 11வது அத்தியாயத்தில் அம்முவின் கனவு. காலச்சுவடு நிகழ்ச்சியில் இப்பகுதியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆசிரியர்கள் இருவரும் வாசித்துக் காட்டினார்கள். காலச்சுவடின் சுட்டி இது: http://www.kalachuvadu.com/issue-151/page52.asp தாய் என்ற பாசம் தேவைப்பட்ட வயதில் தூக்கி எறிந்துவிட்டு, மற்ற மகன்களின் உயிரைக் காப்பாற்ற, வஞ்சகமாக கர்ணனிடம் வரம் வாங்க, பாசம் என்ற புராதன விதிகளைச் சுமந்து கொண்டு வருகிறாள் குந்தி தேவி. கர்ணவதம் நடத்தும் கதகளியாட்டம் இப்புதினத்தில் வருகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இருந்தாலும் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் மக்கள் கூட்டம் ஆர்வமாகப் பார்க்கிறது. முடிந்தவுடன் அவரவர் வேலைகளைப் பார்க்க கிளம்பி விடுகிறார்கள். பெண் வேடமிட்ட ஆண்கள் எல்லாம் முலைகளைக் கழட்டி வைத்துவிட்டு, தங்கள் வீடு திரும்பி வழக்கம்போல் தங்கள் மனைவிகளை அடித்துப் புரட்டி எடுத்து, உண்மை முலைகளைப் பிசைகிறார்கள். நாளைக்கும் கதகளியாட்டம் வரும்; அப்போதும் புதிதாகப் பார்க்கப் போவதுபோல் மக்கள் வருவார்கள். ஏதோவொரு வசீகரம் அக்கதைகளில் இருக்கிறது. இப்புதினத்தின் கதைக்கும் பொருந்தும் ஆசிரியர் சொல்லும் அவ்வசீகரம்: The secret of the Great Stories is that they have no secrets. The Great Stories are the ones that you have heard and want to hear again. The ones you can enter anywhere and inhabit confortably. They don't deceive you with thrills and trick endings. They don't surprise you with the unforeseen. They are as familiar as the house you live in. Or the smell of your lover's skin. You know how they end, yet you listen as though you don't. In the way that although you know that one day you will die, you live as though you won't. In the Great Stories you know who lives, who dies, who finds love, who doesn't. And yet you want to know again. That is their mystery and magic.  - ஞானசேகர் (http://jssekar.blogspot.in/)
 

Sunday, March 03, 2013

102. கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

இங்கிலாந்தில் நான் படித்தபோது என்னை ஒருவன் கேட்டான்: "Who are you?". நான் சொன்னேன்: "Khushwant". அவன் மீண்டும் கேட்டான்: "What are you?". நான் சொன்னேன்: "Khushwant, an Indian". இந்தியா வந்தபோது என்னை ஒருவன் கேட்டான்: "Tum kaun ho?". நான் சொன்னேன்: "குஷ்வந்த்". அவன் மீண்டும் கேட்டான்: "Thu kya ha?". நான் சொன்னேன்: "குஷ்வந்த் சிங்".
- குஷ்வந்த் சிங்
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : கருப்பாயி என்கிற நூர்ஜஹான் (புதினம்)
ஆசிரிய‌ர் : அன்வர் பாலசிங்கம்
வெளியீடு : கொற்றவை பதிப்பகம், காரைக்குடி
முதற்பதிப்பு : 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 98 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை பனியன் அணிந்த சிம்ரன் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டைப் படத்தை ஒரு தமிழ் வார இதழ் வெளியிட்டதாக வினவு தளத்தில் படித்தேன். அதன் பிறகு இலியானா இடை வெளியிடப்பட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. இப்படி இடையில் சொருகி இல்லாத இடை போல தீண்டாமையைக் காட்டும் ஊடகங்களுக்கு இடையே, இல்லாமல் இல்லை என்கிறது எதார்த்தம்.

சாதிப் பிரிவினைகளில் இருந்து, தீண்டாமையில் இருந்து தப்பிக்க இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது இந்தியாவில் ஒன்றும் அரிதான நிகழ்ச்சியல்ல. ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சியையே மாற்றி அமைக்கும் சக்தியாக‌ மதமாற்றம் இருந்திருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன அளவில் பணம் காதல் அரசியல் காரணங்களுக்காகக் கூட நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய மதமாற்றம் ஒன்றும் நிகழ்ந்தது. 1956ல் நாக்பூர் நகரில் தனது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேருடன் புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர். நான் மராட்டிய மாநிலத்தில் பார்த்தவரை, ஊடகங்களில் கேள்விப்பட்ட வரை அவர்களின் சமூக நிலையை அந்த மதமாற்றம் கண்டிப்பாக உயர்த்தி இருக்கிறது.

இந்நிகழ்ச்சி நடந்து பல வருடங்களுக்குப் பின் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு எந்தப் பாடப் புத்தகமும் சொல்லவில்லை. ஊடக‌ங்கள் அறிமுகப்படுத்தவும் இல்லை; ஞாபகப்படுத்தவும் இல்லை. இதே போல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இன்னொரு மதமாற்றம் நான் பிறந்ததற்குச் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில். போன வருடம்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். கிழக்குப் பதிப்பக வெளியீடான, பா.ராகவன் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தின் ஒன்பதாவது கட்டுரையில் சொல்லப்பட்ட சில‌ விசயங்கள்:

பிப்ரவரி 19, 1981. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் மீனாட்சிபுரம். 300 தலித் குடும்பங்கள். அதில் 210 குடும்பங்கள், சுமார் 1000 பேருக்கு மேல் சட்டென்று இஸ்லாத்துக்கு மாறினார்கள். இனி நாங்கள் ஹிந்துக்கள் இல்லை. எனவே தலித்துமில்லை. முஸ்லீம்கள். மீனாட்சிபுரம் ரஹ்மத் நகர் ஆகியது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் அது. இந்த மதமாற்றச் சம்பவத்தில் வளைகுடா பணத்தின் பெரும்பங்கு இருக்கிறதென விஷ்வ ஹிந்து பரிஷத்தும், இந்து முன்னணியும் குற்றம் சாட்டின. மதம் மாறியவர்களைத் திரும்ப மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ். மீனாட்சிபுரம் புறப்பட்டது. மதம் மாறியவர்களை நேரில் சந்திக்க திராவிடர் கழகமும் போனது. பல மடங்களின் ஆதீனங்களும், அப்போதைய பாரதீய ஜனதா தலைவர் வாஜ்பாயும் கூட போனார்கள். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இந்த மதமாற்றத்தைக் கண்டித்தார். இதனால் அதிருப்தி கொண்ட சில அதிமுக உறுப்பினர்கள் கட்சியைவிட்டு விலகினர். மீனாட்சிபுரம் போல முதுகுளத்தூரும் மதம் மாறத் திட்டமிட்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 

இச்சம்பவம் தெரிந்தவுடன் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த எனது நண்பர்களிடம் விசாரித்தேன். யாருக்குமே மீனாட்சிபுரம் தெரியவில்லை. ஒருமுறை புனேயில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது திருநெல்வேலி பக்கம் போகும் வயதானவர்களிடம் மீனாட்சிபுரம் பற்றி விசாரித்தேன். உடனே என் சாதி மதம் விசாரித்தார்கள். மேற்கொண்டு பேசவில்லை. 

மீனாட்சிபுரத்தில் 1960களிலேயே ஒரு முறை மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களின் சமூக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 'தாழ்த்தப்பட்டவன் கிறித்தவன் ஆனால், இன்னொரு தாழ்த்தப்பட்ட கிறித்தவர் தான் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார். ஒரு நாடார் கிறித்தவர், தாழ்த்தப்பட்ட கிறித்தவர் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் இம்முறை நாங்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தோம். தீண்டத்தகாதவன் என்ற வித்தியாசம் இல்லை பாருங்கள்' என்றார்கள்.

உண்மைதான். சாதியிடம் கிறித்தவ மதம் தோற்றுத்தான் போனது. நாட்டின் பிரதமரைக் கூட கைம்பெண் என்பதற்காக இடையில் திரை கட்டி முகத்தைப் பார்க்காமல் பேசியது இந்து மதம். பாதிரியார் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கடவுளைக் கூட பார்க்காமல் கோவிலில் முதுகு திரும்பி உட்கார்ந்தது கிறித்தவ மதம்.

மினாட்சிபுரம் ரஹ்மத் நகராகி 32 ஆண்டுகள் கடந்துவிட்டன‌. அம்மக்களின் சமூக நிலையைக் காலம் என்ன செய்திருக்கிறது? புத்தகத்திற்குள் போகலாம்.
(http://www.kalachuvadu.com)
'பாபர் மசூதியும்
முதிர்கன்னியும் ஒன்றுதான்
இடிப்பதற்குப்
பலர் இருக்கிறார்கள்
கட்டுவதற்கு யாருமேயில்லை'
என்றொரு புதுக்கவிதை உண்டு. மசூதிக்குப் போகும் ஒரு கிராமத்து முதிர்கன்னிகளின் கதையிது.

கருப்பாயி என்கிற நூர்ஜஹான். மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் என ஆரம்பிக்கிறது புதினம். திருநெல்வேலி மாவட்டத்தில் காமாட்சிபுரமாய் இருந்த பிலால் நகர் தான் புதினத்தின் கதைக்களம். 30 ஆண்டுகளுக்கு முன் காமாட்சிபுரம் என்ற கிராமம் தீண்டாமைக்கு எதிராக பிலால் நகராக மாறுகிறது. வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாக தாடி. தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாக குல்லா. மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட நிலைக்குப் பதிலாக‌ தலைமூடி முக்காடு. கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜஹானானாள்.

பிலால் நகர் பிறந்தபோது சிறுமியாய் இருந்த நூர்ஜஹானின் தற்கொலையில் ஆரம்பித்து அவளின் தகனத்துடன் முடிகிறது புதினம். அந்த ஒரு நாளில் அம்மக்கள் இன்னும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். காமாட்சிபுரம் பிலால் நகர் மூலம் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகரைச் சொல்கிறாரா ஆசிரியர்? அல்லது அவை உண்மை ஊர்களின் பெயர்களா? ஆசிரியருக்கும் இவ்வூர்களுக்கும் சம்மந்தம் உண்டா? இது போன்ற பல கேள்விகளுக்கு என்னால் புத்தகத்தில் விடை காண முடியவில்லை.

எல்லா விசயங்களையும் சொல்லிவிட வேண்டிய அவசரத்தில் ஒரு புதினமாக உருப்பெறுவதில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும், புதினத்தின் சில விசயங்கள் எனக்குப் பரிட்சயம் இல்லாமல் போனாலும், காந்தி பற்றிய சில கருத்துகளில் சுத்தமாக எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எந்த ஒரு மதத்திற்கும் எதிராகவும் ஆதரவாகவும் இல்லாமல், உடனடியாகக் கவனிக்கப் படவேண்டிய ஒரு சமூகப் பிரச்சனையை ஆவணப்படுத்தும் குறிக்கோளோடு புதினத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். இப்பதிவின் குறிக்கோளும் அதுவே.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)