Sunday, November 04, 2007

25. எப்போதும் பெண்

----------------------------------------------------------
புத்தகம் : எப்போதும் பெண்
எழுதியவர் : சுஜாதா
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1984
விலை : 90
----------------------------------------------------------
'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்' - சுஜாதா.

இப்படி ஒரு சுயவிளக்கத்தை சுஜாதாவிடமிருந்து எதிர்பார்த்திராத எனக்கு, அதுவே இப்புத்தகத்தை வாங்கத் தூண்டுதலாய் அமைந்தது. இக்கதை மங்கையர் மலரில் தொடராக வெளிவந்திருக்கிறது. புத்தகத்துக்கான அறிமுக வரிகள் சுஜாதாவின் வார்த்தைகளில், "இந்தத் தொடரை நீங்கள் எளிதில் வகைப்படுத்த முடியாது. இதை ஒரு விதத்தில் பார்த்தால் கட்டுரை போல் இருக்கும். அதே சமயம் ஒரு கதையும் தென்படும். Philosophy கொஞ்சம் தெரியும். கொஞ்சம் கவிதை கூடத் தப்பித் தவறி வரும்."......"பாசாங்கு வெறுப்பு, குறும்பு எதுவும் இல்லாமல் எழுதியிருக்கிறேன்".

"இதை என் சிறந்த நாவல் என்று சொல்பவர்கள் உண்டு. ஆணாகிய நான் எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க விஷயங்களை அறிய முடிந்தது என்று ஆச்சரியப்பட்டவர்கள் உண்டு. இதற்கு பதில் எளிமையானது. Simon De Beauvoirன் The Second Sex என்கிற புத்தகம் எனக்கு மிகவும் பயன்பட்டது. மற்றபடி நான் பாத்ரூம்களிலும், படுக்கையறைகளிலும் எட்டிப்பார்க்கவோ, எந்தவித வாயரிஸமோ பழகவில்லை".

முதல் பதிப்பு வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ல் இரண்டாம் பதிப்பு வெளியாகி இருக்கிறது. வழக்கமான சுஜாதாவின் நடையில் அமைந்த நாவல். ஒரு பெண்கரு, ஒரு நடுவர்க்க, நடுவயது பிராமணப் பெண்ணின் வயிற்றில் தோன்றி, பிறந்து, வளர்ந்து, தானும் கரு சுமந்து இறந்து போவது வரையிலான பயணத்தை 190 பக்கங்களில் தீட்டியிருக்கிறார் ஆசிரியர்.

கதையை விட இப்புத்தகத்தில் பெறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கருவினுள்ளே இடப்பட்ட முட்டை உயிராக வளர்ந்து, குழந்தையாக வெளிவருவது வரை அழகாக விளக்கி இருக்கிறார்.
ஒரு பெண்ணின் மீதான உலகின் பார்வை, உலகின் மீதான ஒரு தனிப்பெண்ணின் பார்வை, ஆணைப் பற்றிய பெண்ணின் அபிப்ராயம், தன் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான அவளின் சந்தேகங்கள் மற்றும் பயங்கள், புறப் பொருட்களால் அவள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், பாலியல் பற்றிய அவளின் முதல் அறிவு, படிப்படியாக அவள் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்று பெண்ணுலகத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.

அடிப்படையில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படும் விதம் எப்படி ஆணுக்குள் ஓர் ஆதிக்க மனப்பான்மையையும், பெண்ணுக்குள் ஒரு சார்புத்தன்மையும், அச்சமும் கொண்ட மனப்பான்மையையும் வளர்க்கிறது என்று சொல்கிறார் சுஜாதா. திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, ஓர் ஆணைப் பொறுத்தவரையில் தன்னால் அடக்கி ஆளப்பட ஒரு பொருள் கிடைக்கப்போகிறது என்பதாகவும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் தன்னை அடக்கி ஆள ஒரு தலைவன் கிடைக்கப்போகிறான் என்பதாகவும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்கிறார்.

பெண்ணின் பார்வையில் ஆண் என்பவன் சகல விதமான சுதந்திரங்களோடு உலவுபவன்; தன்னை விடப் பல விதங்களில் உயர்ந்தவனாக மதிக்கப்படுபவன்; தவறுகள் செய்ய சுலபமாக அனுமதிக்கப்படுபவன்; எனவே பெண்ணுக்கு ஆணிடம் இருப்பது பயம், அன்பு, மரியாதை என்பதை விட ஒருவிதமான பொறாமை என்று சொல்லலாம் என்கிறார்.

மனித மனதின் பல வினோதமான எண்ணங்களை எழுதியிருக்கிறார். உதாரணமாக, பிறந்த குழந்தை ஆணாக இருப்பின் தன் தந்தையை அதிகம் நேசிப்பதையும், அவரின் நகலாக நடந்து கொள்வதையும், சில வயதுக்குப் பின் அதே தந்தையை அளவுக்கு மீறி வெறுப்பதையும் சொல்கிறார். இதேபோல்தான் பெண்ணுக்குத் தாய் மீதான ஈடுபாடும். இக்கதையின் நாயகி தன் பதின்வயதில் தன் ஆசிரியை ஒருத்தியின் மேல் அதிக ஈடுபாடு கொண்டு அவளுக்குக் கடிதம் கூட எழுதி இரகசியமாக வைத்திருக்கிறாள். இப்படி இன்னும் பல.

சுஜாதாவிடமிருந்து இன்னுமொரு வித்தியாசமான நாவல். சுஜாதாவின் வாசகர்கள் என்றில்லாமல் எழுத்தில் யதார்த்தத்தை விரும்பும் யாரும் படிக்கக்கூடிய ஒரு புத்தகம்.

பின்குறிப்பு : இதற்கு முன் நான் கேள்விப்பட்டிராத, மற்றப் புத்தகக் கடைகளில் என் கண்களில் இருந்து ஒளிந்துகொண்ட இப்புத்தகம், ஒரு மழை நாளில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் 'தி புக்பாய்ண்ட்'ல் கண்ணில்பட்டது. இது தவிர இப்போது நான் வரிசையாக படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் சுஜாதாவினுடையவையே! சுஜாதாவின் வாசகர்களுக்கு அப்புத்தகங்கள் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் என்பதால் அவற்றின் பெயர்களை சிறு குறிப்புடன் தரும் எண்ணம் உண்டு.

- சேரல்

1 comment:

கே.பாலமுருகன் said...

//இதற்கு முன் நான் கேள்விப்பட்டிராத, மற்றப் புத்தகக் கடைகளில் என் கண்களில் இருந்து ஒளிந்துகொண்ட இப்புத்தகம், ஒரு மழை நாளில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் 'தி புக்பாய்ண்ட்'ல் கண்ணில்பட்டது. //

உங்களிடம் புத்தகம் வந்து சேரும் தருணம்கூட ஒரு கவிதையைப் போல அழகாக் இருக்கிறது. தொடரட்டும்