Thursday, May 01, 2014

128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் (கட்டுரைகள்)
ஆசிரியர்: இரா.முருகவேள்
வெளியீடு: பிப்ரவரி 2012ல் பாரதி புத்தகாலயம் 
                   டிசம்பர் 2013ல் பொன்னுலகம் பதிப்பகம்
பக்கங்கள்: 67
விலை: ரூபாய் 50
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
'புலி வருது புலி வருது' என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி நடிகர்களும் அவ்விளம்பரங்களில் வதனம்காட்டி கவனம் ஈர்த்தனர். எனக்குப் புரியவில்லை. புனே நகரில் காத்ரேஜில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இருமுறை சென்றும் அங்குள்ள புலி/கள் எனக்கு முழு தரிசனம் காட்டும் கரிசனமற்று இருந்தன. சமீபத்தில் நரேந்திர மோடிக்கு முன் சென்னை வண்டலூரை மக்கள் வெள்ளத்தில் நிரப்பியவர் ஜெயலலிதா. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வெள்ளைப் புலிகளுக்கு அவரே பெயரிட்டதைத் தமிழ் ஊடகங்கள் எட்டுத் திக்கும் பரப்பின. அவைதான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த புலிகள். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்கள் போல வெண்புலிகளும். அவை புல்லைத் தின்றாலும் ஆச்சரியம் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இவ்வெண்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுண்டு. இன்று இந்து நாளிதழில் (The Hindu) வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை கூட, புலிகளுக்கு இடையே நாடு கடந்த, கண்டங்கள் கடந்த கலப்பின இனப்பெருக்கத்தையே ஊக்குவிக்கிறது. மதம் கடந்த, சாதி கலந்த கலப்பினம் மனிதர்களுக்கே எட்டாத கனவாக இருக்க, நான் மீண்டும் முதலில் ஆரம்பித்த விடயத்திற்கே வருகிறேன். சாம்பாருக்குப் பின் புளிக்குழம்பைத் தவிர்த்து விட்டு நேரடியாக இரசம் சாப்பிடும் என்னைப் போன்ற சாமானியனால் எப்படி புலிகளைக் காப்பாற்ற முடியும் என்று புரியவில்லை. புலியும் நானும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டால், நான் புலியைக் காப்பாற்றுவேனா? இல்லை நாலுகால் பாய்ச்சலில் ஓடி மரத்தில் ஏறிக் கொள்வேனா? கரப்பான் பூச்சியைக் காப்பாற்றுங்கள், கொசுவைக் காப்பாற்றுங்கள், கோழியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஏன் புலி? தேசிய விலங்கு என்பதாலா? எனக்குப் புரியவில்லை.

அரசியல் அமைப்புச் சாசனத்தின் மாதிரியை அமைக்க காங்கிரஸ் கட்சியின் காரிய குழு கூடியது. இந்தியைத் தேசிய மொழி ஆக்கலாமா என்று ஓட்டெடுப்பு. 78 ஆதரவு. 78 எதிர்ப்பு. மேட்ச் ட்ரா! நீண்ட விவாதம், நீண்ட மவுனங்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டெடுப்பு. 78 பேர் ஆதரவு. 77 பேர் எதிர்ப்பு. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டாரா, இல்லை NOTA போட்டாரா, இல்லை தேர்தலைப் புறக்கணித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்தியாவிற்குச் சட்டரீதியாக இந்தி தேசிய மொழி ஆகவில்லை என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்களும் நர்சரிப் பள்ளிகளில் இன்று இந்தி படிக்க அந்த ஓர் ஓட்டுதான் காரணம்! அதே போல தேசியப் ப‌றவை மயிலா, இல்லை இன்னொரு பறவையா என்று கடும் விவாதம். கிட்டத்தட்ட இன்னொரு பறவை தேர்வு செய்யப்பட்ட போது, அப்பறவையின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் ஒரு கெட்ட வார்த்தை வருகிறதென ஓர் உறுப்பினர் எதிர்க்க மயில் பாஸானது. இப்படி புலிக்கும் கூட ஒரு கதை இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி ஏதோ தனியாகப் பேசுவது போல, யாருக்கும் புரியாத ஓர் ஒளிக்காட்சியைச் சமூக வலைத்தளங்கள் ஆவலுடன் பார்த்து Like / Forward / Comment செய்துவிட்டு மறந்து போயின. அந்தமான் காடுகளில் பேசப்பட்ட ஏதோ ஒரு மொழியின் கடைசி ஆள் அவள். சமீபத்தில் அவளுடன் அம்மொழியும் புதைந்து போனது. சுதந்திர இந்தியாவில் சில நூற்றுக்கணக்கான மொழிகள் இதே முடிவைச் சந்தித்திருகின்றன. தேசியம் என்ற அடையாளத்துடன் ஒற்றை மொழிக்கு நிறுவனங்கள் அமைத்து, பிராந்திய மொழிகளைக் கைவிட்டது தான் முக்கிய காரணம். அந்த இன்னொரு பறவையையும் சில ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் பார்த்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன். ஏற்கனவே Tiger Cheetah Leopard என்ற வார்த்தைகளை இரும்புத்தோல் போர்த்திய வாகன‌ங்களாக மட்டுமே புரிந்து கொள்ளும் அடுத்த‌ தலைமுறையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படி என்றால் புலியை முன்னிலைப்படுத்தி மற்ற உயிரினங்களைக் கொன்றுகொண்டு இருக்கிறோமா? எனக்குப் புரியவில்லை.

புலிகளைக் காப்பாற்றச் சொன்ன அவ்வூடகங்கள் ஒரு வரைபடத்தையும் (graph) வெளியிட்டன. X அச்சில் புலிகளின் எண்ணிக்கை. Y அச்சில் ஆண்டு. முதல்வர் முன்னால் அதிகாரிகள் போல வளைந்து நெளிந்த கோடு, எம்.எல்.ஏ.க்கள் போல திடீரென கீழே விழுந்துவிட்டது. அதாவது புலிகளின் எண்ணிக்கை பாதாளத்துக்குக் குறைந்துவிட்டதாம். ஏன் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என அவ்விளம்பரங்களே ஒரு விளக்கம் கொடுத்தன. தாவரங்களைத் தாவர உண்ணிகள் தின்கின்றன. அவற்றை ஊன் உண்ணிகள் தின்கின்றன. எனவே ஓரிடத்தில் புலி ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அவ்விடத்தில் தாவர உண்ணிகளுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். மேலும் ஓரிடத்தில் தாவர உண்ணிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் அவ்விடத்தில் தாவரங்களுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். அதாவது உணவுச் சங்கிலியில் உச்சியில் இருக்கும் புலி நலமாய் இருந்தால், கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும் நலமாய் இருக்கின்றன என்று அர்த்தம். அதாவது ஒட்டுமொத்த வனமும் / காடும் நலமாய் இருக்கிறது என்று அர்த்தம். இதே விளக்கம் மற்ற ஊன் உண்ணிகளுக்கும் பொருந்தும் போது, அவற்றை ஏன் காப்பாற்ற முனையவில்லை? மன்னன் நலமானால் குடிமக்களும் நலம்தான் என்பது போல் அல்லவா இவ்விளக்கம் உள்ளது? ஏற்கனவே இப்பதிவு பெரிதாகப் போய்க் கொண்டு இருப்பதாலும், இன்னும் சில முக்கிய கேள்விகள் இருப்பதாலும் இவ்விரு கேள்விகளையும் தாண்டிச் செல்கின்றேன்.

அவ்வூடகங்களின் விளம்பரங்களில் இந்திப்பட நடிகர்கள் தோன்ற ஆரம்பித்தனர். அதில் ஒருவர் ஏற்கனவே ஒரு விடைதெரியாத பிரம்மாண்ட‌ ஊழலில் மாட்டியவர். இன்னொருவரின் மனைவி இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டில் இருந்ததாக வருமான வரி காட்டாமல் மாட்டியவர். அந்த இன்னொருவர் தனது பாக்கெட்டில் இருந்து சில இலட்சங்கள் கொடுத்ததாக அவ்விளம்பரத்தில் சொன்னார். Donate Now என்று விளம்பரம் முடிந்தது. புலியை நான் எப்படி காப்பது என்றே எனக்குப் புரியாத போது, எனது பணம் எப்படிக் காக்கும்? அவ்விளம்பரம் செய்பவர்கள் பற்றி பிறகுதான் கவனித்தேன். மிகப்பெரிய உலகு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விநியோகஸ்த உரிமை. இதுமாதிரி பொன்முட்டையிடும் வாத்துகளுக்கு இந்தி நடிகர்களோடு, இந்தக் கிரிக்கெட் வீரங்களும் வருவார்கள். அப்புலி விளம்பரங்களில் அவர்களைக் காண முடியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் வெளிநாடுகளில் ஆட்டம் போட்டாலும் அவர்களை வைத்துத்தானே தேசபக்தி அளக்கப்படுகிறது! மானைக் கொன்ற வழக்கில் இன்றும் கூட மாட்டிக் கொள்ளாமால் துள்ளி ஒடிக் கொண்டே இருக்கும் சில பிரபல இந்தி நடிகர்கள் இன்னும் உள்ளனர். அவர்கள் அப்புலி விளம்பரத்தில் வந்தார்களா என்று தெரியவில்லை.

தேசத்தின் மலைகளில் பெரும் பகுதிகளைப் பெரும் நிறுவனங்களும், டீ காபி ரப்பர் தேக்கு யூக்கலிப்டஸ் தோட்டங்களும், அணைகளும், சுரங்கங்களும் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தான் புலி உட்பட வனவிலங்குகள் வாழ்கின்றன. உண்மை இப்படி இருக்கும் போது, சமீபத்தில் புலிகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் அப்புறப்படுத்தப்பட உத்தரவிடப்பட்டதை அறிவீர்கள். புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல்? சுற்றுச்சூழல்வாதிகளும் அரசும் முன் வைக்கும் திட்டங்கள் ஏன் பழங்குடி ஏழை மக்களையே குறிவைக்கின்றன? மனிதனும் விலங்குகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று அவர்கள் சொல்வதில் உண்மை உண்டா? என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்? உங்களுக்கு அநேகமாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குப் புரிந்துவிட்டது. அதைச் செய்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசலாம்.
(http://udumalai.com/)
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும். ஆசிரியர் இரா.முருகவேள். பரதேசி திரைப்படத்தின் மூலக்கதையை 'எரியும் பனிக்காடு' என்று தமிழில் மொழிப் பெயர்த்தவர். 'சோளகர் தொட்டி'யின் ஆசிரியர் ச.பாலமுருகன் சிறந்த முன்னுரை கொடுத்திருக்கிறார். புத்தகத்தைப் பற்றி இனிமேலும் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு தான். சின்னப் புத்தகம். காடுகளைப் பற்றி பல விசயங்களைப் பேசுகின்றன. கியோட்டொ ஒப்பந்தம் (Kyoto Protocol) பற்றி எனக்கு முன்பே தெரியும். அதைப் புரியவைத்தது இப்புத்தகம்தான். காட்டில் ஒரு மரத்தை வெட்டிவிட்டு, நம் வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் 10 மரங்கள் நட்டு ஈடு செய்ய முடியாது என்று காட்டுமரங்களின் மதிப்பைப் புரியும்படி எழுதி இருக்கிறார். பழங்குடிகள் சுள்ளி பொறுக்குவதும் நெல்லிக்காய் பறிப்பதும் வனத்தின் உணவுச் சங்கிலியைப் பாதிப்பதாக கதைகள் சொல்லி, பழங்குடி மக்களை வெளியேற்றி தனியார்மயமாக காடுகள் மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கார்பன் வணிகம் பற்றியும், அதன்மூலம் வளர்ந்த நாடுகள் மற்றவர்களை விஞ்ஞான ரீதியாகச் சுரண்டுவதையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. அமெரிக்காவுக்குக் காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்குக் கொரில்லா, இந்தியாவுக்குப் புலி என்ற வரிகளை மறக்கவே முடியாது. இந்தியாவில் எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன தெரியுமா? அடேயப்பா! நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள். 

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1960ல் WWF (Worldwide Fund for Nature) க்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் ராபர்ட் மெக்னமாரா, டேனியல் லூட்விக் என்ற இருவர் முக்கியமானவர்கள். வியட்நாம் போரில் ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகறிந்தது. அப்போரில் அமெரிக்கா காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களின் இலைகளை உதிர்க்கச் செய்யும் அளவுக்கு ரசாயனங்களைப் பொழிந்தது. இதே போன்று டேனியல் லூட்விக்கின் நிறுவனங்கள்தான் அமேசான் காடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தின. வனங்களைப் பாதுகாக்க சரியான நபர்கள் இவர்கள்தானா!
2. புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியில் மக்கள் சீமாற்றுப்புல் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீமாற்றுப்புல் என்பது எந்த விலங்கும் உண்ணாத புல் ஆகும். இதனை மக்கள் கூரை அமைக்கவும், விளக்குமாறுகள் செய்யவும் பயன்படுத்துவார்கள். இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். எனவே வேனில் காலங்களில் இதை அறுக்க முடியாவிட்டால் மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். இப்போது இப்புல் அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டு உள்ளதால், புல்லில் அடிக்கடி காட்டுத்தீ பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொரு தீ பரவும் சம்பவத்திலும் 50, 60 ஏக்கர் காடுகள் அழிகின்றன.
3. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறைவைகள் சரணாலத்தில் நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதிமேதாவிக்கு இது உறுத்தியது. கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி பறவைகளுக்குக் கீழே நீர்நிலைகள் இருப்பது தெரியவில்லை. எனவே அவை வரவில்லை என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்குப் பரத்பூர்தான் சரியான உதாரணம்.
4. சுதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டையாட தனிப் பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இப்பகுதிகள் வனவிலங்கு சரணாலங்களாக மாற்றப்பட்டன. இப்போது அவர்களே எகோ டூரிஸ்டுகளாக திரும்பி வருகிறார்கள். இப்போதும் கூட வனவிலங்கு சரணாலங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.

வன உயிர்களைச் சுற்றுலா என்ற பெயரில் அதன் வாழிடம் வரை அணுகுவதைத் தவிர்ப்போம். அதற்காக என்னால் எப்படி புலியைக் காப்பாற்ற முடியும் என்று ஒட்டுமொத்தமாக விலகிப் போவதும் தவிர்ப்போம். இப்பிரபஞ்சத்தில் உணவுச் சங்கிலியில் ஓவ்வோர் உயிரும் இன்னொன்றுடன் கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளால் கட்டித்தான் வைத்திருக்கிறது இயற்கை. 'புலி வருது புலி வருது' என்று உங்களைப் பய‌ங்காட்ட ஒரு சமீபத்திய கதையை உதாரணமாகச் சொல்லி முடிக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்து பூமியின் மையம் வழியே துளையிட்டுக் கொண்டே போனால் இங்கிலாந்து வரும். அதாவது இவ்விரு தேசங்களும் புவியியல்படி இருவேறு துருவங்கள். இங்கு நள்ளிரவு என்றால், அங்கு நண்பகல். அங்கு கோடை ஆரம்பித்தால், இங்கு கோடை முடியும். ஆஸ்திரேலியா கண்டத்தைக் கால்நடைகளின் கண்டம் என்பார்கள். அந்த அளவிற்கு அங்கு மனிதர்களை விட கால்நடைகள் அதிகம். பெரும்பாலான கண்டம் வறண்ட பாலைநிலத்தால் ஆனது. ஆண்டாண்டு காலமாக அங்கு மனிதர்களுடன் கால்நடைகளும் உணவுப்பஞ்சம் இல்லாமல் வாழ்ந்துதான் வந்தனர். அங்கு காலனி பதித்த இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்குத் திடீரென ஒரு யோசனை வருகிறது. இங்கிலாந்து கால்நடைகள் விரும்பி உண்ணும் ஒரு தாவரத்தை ஆஸ்திரேலியாவுக்குக் கொணர்ந்து பயிரிட்டனர். கால்நடைகளும் அத்தாவரத்தை உண்ண ஆரம்பித்தன. பற்பல ஆண்டுகள் கழித்து, திடீரென பெண் கால்நடைகள் கர்ப்பம் தரிப்பது அரிதாகிக் கொண்டே வந்தது. அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும் அளவிற்குக் குட்டிகள் குறைந்து போனதும், விலங்கியல் வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். பெண் கால்நடைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. விஞ்ஞான உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஓட்டுமொத்த ஆண் கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை பரவலாக இருந்தது. அவை உண்ணும் தாவரங்களும் பல ஆண்டுகளாக உண்ணப்படுபவை தான். விஞ்ஞானம் தலையைப் பிய்த்துக் கொண்டது. ஒருவர் பதில் சொன்னார். சுற்றுச்சூழல் பற்றிய எனது அடுத்த பதிவில் அப்பதிலைச் சொல்கிறேன்.

அரசன் அன்றே கொல்வான், இயற்கை நின்று கொல்லும்! பணத்தால் அல்லால், புலி மட்டுமல்லால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

No comments: